Wednesday, January 13, 2010

பிலிப்பைன்ஸ் நாட்டு மார்க்கோஸ் வழியில் செல்கிறாரா ராஜபக்சே?

1965 முதல் 1986 வரை பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபராக இருந்த பெர்டினான்டு இமானுவேல் எட்ரலின் மார்க்கோஸ் வரலாறு ஒரு படிப்பினையாக இருக்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. மார்க்கோஸ் ஒரு வழக்கறிஞராக இருந்தார். பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக 1949 முதல் 1959 வரை இருந்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் செனட் உறுப்பினராக 1959 லிருந்து 1965 வரை இருந்தார். 1963ம் ஆண்டு செனட் தலைவரானார். அவர் தன்னைப்பற்றி பெருமையாக கூறிக்கொண்டவர். வடக்கு லூசான் பகுதியில் ஆங் மகார்லிகா என்ற கொரில்லா படையின் தலைவராக, 2ம் உலக யுத்த காலத்தில் இருந்ததாக அவர் கூறிக்கொள்வார். அவரது நிர்வாகம் கடுமையான சர்வாதிகார, ஊழல், லஞ்சம், அரசியல் ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றால் நிரம்பி வழிந்தது. தனது ஆட்சி காலத்தில் அவர் மிகப்பெரும் தனிப்பட்ட செல்வாக்கைப் பெற்றிருந்தார். 1983ம் ஆண்டு ஜுனியர் பெனிக்னோ, அகினோ என்ற எதிர் கட்சி அரசியல் தலைவரை படுகொலை செய்த வழக்கில் அவரது ஆட்சி குற்றவாளியாக்கப்பட்டது. அதையொட்டி ஒரு அதிபர் தேர்தல் நடந்தது. அதுவே 1986ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் அதிகாரத்திற்கான புரட்சி நடப்பதற்கு ஒரு கிரியா ஊக்கியாக இருந்தது. அதுவே அதிகாரத்திலிருந்து இவரை கீழே இறக்கியது. உடனடியாக இவர் ஹவாய் தீவில் அடைக்கலம் தேடி ஓடினார். மார்க்கோசும், அவரது மனைவி இமல்டா மார்க்கோசும் பல லட்சம் கோடி டாலர் பெருமான பொதுப்பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள் என்று பின்னால் தெரிந்தது. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, மற்ற நாடுகளில் பல்வேறு போலி பெயர்களில் இயங்கிய வர்த்தக குழுமங்களில் தான் ஆட்சியிலிருந்த 20 ஆண்டுகளிலும் சுருட்டிய பணத்தை போட்டு வைத்திருந்தார்கள் என்று அம்பலமானது.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, இப்போது அதிபர் தேர்தலை சந்திக்கிறார். அவரும், அவரது குடும்பத்தாரும் அதிகமான அளவில் பொதுப்பணத்தை கொள்ளை யடித்து விட்டார்கள் என்று இப்போது குற்றம் சாட்டப்படுகிறது. நேற்றைய பிலிப்பைன்ஸ், நாளைய இலங்கையாக இருக்குமா என்பதும், மார்க்கோஸ் சந்தித்த சூழலை, மகிந்த ராஜபக்சேவும் சந்திப்பாரா என்பதும் இப்போது விவாதிக்கப்படுகிறது.
தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, அதிபர் மார்க்கோஸ் படைபலம் திரட்டினார். பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைகள் மூலமாக, சாதாரண குடிமக்கள் செய்ய வேண்டிய உள்கட்டுமான பணிகள், பொருளாதார திட்டமிடல், திட்டங்களை அமுல்படுத்தல் ஆகியவற்றையும், தொழிற்சாலை பகுதிகளை திட்டமிடல் மற்றும் வளர்ச்சிப் பணிகளையும் செய்து வந்தார். தனது அமைச்சரவையை மற்றும் அதிகாரிகளை நியமிப்பதில் உயர் தொழில்நுட்ப மற்றும் உயர் கல்வி கற்ற மேட்டுக்குடிகளை நியமித்து வந்தார். வியட்நாம் போர் நடக்கும் போது, 1965ல், தென் வியட்நாமிற்கு 10,450 பிலிப்பைன் நாட்டு போர் வீரர்களை, மார்க்கோஸ் நிர்வாகம் அனுப்பி வைத்தது. 1969ல் 2வது முறையும் மார்க்கோஸ் வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சிக்கு வந்தார். அப்போது தனது தனி நபர் செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். அனைத்து சட்ட ரீதியான அதிகாரங்களையும், உள்கட்டுமான கட்டுப்பாடுகளையும் மார்க்கோஸ் தனது கையில் வைத்திருந்தார். முழு பிலிப்பைன்ஸ் நாடும் அவரை சுற்றியே எதிர்பார்ப்பிலிருந்தது. வணிக அங்காடி களிலும், பள்ளிக்கூடங்களிலும் கூட, நாடு தழுவிய அளவில் அதிபர் மார்க்கோசுடைய பெரிய படங்கள் தொங்க வேண்டும். இல்லாவிடில் அந்த கடைகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் இழுத்து மூடப்படும். இப்படிப்பட்ட ஒரு தனி நபர் புகழ் பாடுதலை மார்க்கோஸ் உருவாக்கியிருந்தார். 1986ம் ஆண்டு ஆட்சியை விட்டு, கீழே இறக்கப்படும் வரை, மார்க்கோஸ் தனது புகழ் பாடுதலை நிறுத்தவில்லை. அவரது 2வது கட்ட ஆட்சிகாலத்தில் பிலிப்பைன்ஸ் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்தது. நாட்டில் குற்றங்கள் கூடிக்கொண்டே இருந்தன. கம்யூனிஸ்டு இயக்கத்தின் ஆயுதம் தாங்கிய புரட்சிகரப் போராட்டம் எழுச்சி பெற்றிருந்தது. பணவீக்கம் அதிகரித்து வந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பீசோ என்ற பணத்தின் மதிப்பு குறைந்து வந்தது. ஊடகங்கள் மார்க்கோஸ் அரசியலில் நுழைந்த காலத்திலிருந்து, சேர்த்து குவித்த கோடிக்கணக்கான சொத்துக்களைப்பற்றி கணக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். பல்வேறு இடங்களில் தனது பணத்தை மூலதனமாக மார்க்கோஸ் போட்டிருந்தார் என்பதும் வெளியாகிக் கொண்டிருந்தது. இடது சாரி இயக்க போராட்டங்களால், பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லா பிராந்தியங்களிலும் ஒரு குழப்பமான சூழல் இருந்தது. எண்ணை உற்பத்தி செய்யும் அரபு நாடுகள், இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியை கண்டித்து, அமெரிக்க ஆதரவான பிலிப்பைன்ஸ் அரசை எதிர்ப்பதற்காக, எண்ணை உற்பத்தியை நிறுத்தி விட்டார்கள். இயற்கை பேரழிவுகளும் நாட்டின் உள்கட்டுமானம், விவசாய உற்பத்தி மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை அழித்தது. உள்நாட்டு, வெளிநாட்டு லாப நோக்க சக்திகளின் விளைவாக அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை உயர்வு கூடிக் கொண்டே இருந்தது. 1960ன் கடைசி ஆண்டுகளிலும், 1970ன் தொடக்க காலத்திலும் மாணவர் இயக்கங்கள், அரசுக்கு எதிராக பல்வேறு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பெரும் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தியது. 1970ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள், 50,000 மாணவர்களும், தொழிலாளர்களும், அதிபரின் மாளிகையை முற்றுகையிட்டு நெருப்பிட்டனர்.
ராணுவம் அவர்களை விரட்ட, துப்பாக்கி சண்டை நேரடியாக நடந்தது. 4 பேர் பலியானார்கள். இருபுறமும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் பல்கலைகழகத்தில் பயிலும் 18,000 மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மற்ற பள்ளிகளிலும், பாலி டெக்னிக் மற்றும் பல்கலைக்கழகங்களிலும், இடது சாரி இயக்கங்களின் செல்வாக்கில் மாணவர் போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன.
1972ம் ஆண்டு செப்டம் 21ம் நாள், மார்க்கோஸ் ராணுவ சட்டத்தை அறிவித்தார். அதன் மூலம் ஊடக சுதந்திரத்தை தடை செய்தார். சிவில் உரிமை அமைப்புகள் செயல்படவிடாமல் தடுக்கப்பட்டன. ஊடக நிறுவனங்கள் கட்டாயமாக மூடப்பட்டன. எதிர்கட்சி தலைவர்களை கைது செய்ய உத்தரவுகள் பறந்தன. பல எதிர்கட்சி தலைவர்கள் தலைமறைவானார்கள். அதிபர் ஆட்சி முறை 1973ல் மாற்றப்பட்டு, நாடாளுமன்ற ஆட்சி முறையாக ஆனது. அதிலும் மார்க்கோஸே பிரதமராக ஆகிவிட்டார். ஒரு புதிய சமூகத்தை தோற்றுவிக்க, ராணுவ சட்டம் அதன் தொடக்கம் என்று மார்க்கோஸ் விளக்கம் அளித்தார். இமால்டோ மார்க்கஸ் அதிகமான அளவுக்கு வைரங்களையும், வைடூரியங் களையும் சேர்த்திருந்தார் என்பது வெளியே தெரிந்தது. தொடக்கத்தில் ராணுவ சட்டம் வரவேற்கப்பட்டது. பிறகுதான் மக்கள் மத்தியில் எதிர்ப்பு தொடங்கியது. மார்க்கோசின் சுயசர்வாதிகார ஆட்சிமுறையை, எப்படித்தான் பிலிப்பைன்ஸ் மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ என்று, உலக சமூகம் ஆச்சரியப்பட்டது. தங்களது சுதந்திரத்தை அழிப்பவனை எதிர்த்து மக்கள் எழவில்லையா என்று உலகம் கேட்டது. அமெரிக்க அதிகாரிகள் பிலிப்பைன்ஸ் நாட்டைப் பற்றி வர்ணிக்கும் போது, 4 கோடி கோழைகளும், ஒரு பிசாசின் மகனும் இருக்கும் நாடு என்பதாக கூறினார்கள்.
மேற்கண்ட ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ராஜபக்சேயின் ஆட்சிமுறையையும், இலங்கைத் தீவின் மக்கள் நிலையையும் நினைவுக்கு கொண்டு வந்தால், அதற்கு நாம் பொறுப்பல்ல.
பிலிப்பைன்சில் ஆயிரக்கணக்கான காட்டு மிரண்டித்தனமான மனிதர்கள், ராணுவத்தில் மார்க்கோஸ் ஆட்சியில் இருந்தார்கள். ஆயுதப்படையின் முக்கிய தளபதிகள்தான் 1972 முதல் 1981 வரை ராணுவ சட்டத்தின் நிர்வாகிகளாக கோலோச்சினார்கள். பிலிப்பைன்சின் அன்றைய 3 முக்கிய நிர்வாகிகள், இன்று நமக்கு மகிந்தாவையும், பசிலையும், கோத்தபாயாவையும் நினைவு படுத்துகிறார்கள். 1981ல் மார்க்கோஸ் ஆட்சியை பாராட்டிய அமெரிக்க துணை ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், மார்க்கோசின் ஜனநாயக கொள்கைகளை பகிரங்கமாக பாராட்டிவிட்டு, மார்க்கோஸ் தனிமைப்பட விடமாட்டோம் என்று சூளுரைத்தார். அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகனுக்கு, மார்க்கோஸ் கோடிக்கணக்காக நிதி கொடுத்ததாகவும் கூறுவார்கள். 1986ல் தேர்தலில் கொலை செய்யப்பட்ட அகினோவின் மனைவி கோரசான், சுதந்திர தேர்தலுக்கான தேசிய இயக்கம் சார்பாக 8 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனாலும் அரசாங்க பட்டியல் 16 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மார்க்கோஸ் வென்றதாக காட்டியது. தேர்தல் தில்லு முல்லு அம்பலமானது. மக்கள் போர் வெடித்தது. 1983 ஆகஸ்டில் அகினோ படுகொலை செய்யப்பட்டார். மக்கள் எழுச்சி பலமடங்கானது. மார்க்கோஸ் அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவுக்கு ஓடினார். 1989ல் ஹோனலாலுவில் உடல் நலக்குறைவால் இறந்து போனார். அவரது மறைத்து வைக்கப்பட்ட சொத்துக்கள் எல்லாம் மக்களால், தேடி எடுக்கப்பட்டது.
மேற்கண்ட நிலைமைதான் ஜனவரி 26ம் நாள், இலங்கை அதிபர் தேர்தலுக்கு பிறகு மகிந்த ராஜபக்சே குடும்பத்திற்கு வரும் என்ற விவாதம் இப்போது எங்கெனும் தொடங்கியுள்ளது. சர்வாதிகாரிகள் விரட்டப்படுவார்கள் என்பது சரித்திரமாகட்டும்.

Tuesday, January 12, 2010

ஜார்கண்ட் வாசிகள் பண்பாடு அழிக்கப்படுகிறது.

சமீபத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா என்று அழைக்கப்படும் ஜார்கண்ட் விடுதலை முன்னணி என்ற கட்சியின் தலைவரான சிபுசோரன் முதலமைச்சராக, ஜார்கண்ட் மாநிலத்தில் பதவியேற்றார். சென்ற முறை காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் சிபுசோரன் முதல்வரானார். இந்த முறை பா.ஜ.க.வின் ஆதரவில் அவரே முதல்வராகியுள்ளார். யாருடைய ஆதரவு என்பது கேள்வி இல்லை. சிபுசோரன் முதல்வராக ஆக வேண்டும் என்பதே அங்குள்ள கணக்கு. இந்த கணக்கு சிபுசோரன் என்ற தனிமனிதனுடைய விருப்பக்கணக்கு மட்டுமா? ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற கட்சியின் விருப்பம் மாத்திரமா? காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க. கட்சிக்கும், ஜார்கண்ட் மாநிலத்தில் வேறு வழியே இல்லையா? காங்கிரசும், பா.ஜ.க.வும் தங்களை அகில இந்திய கட்சிகளாக நம்பிக் கொண்டிருப்பவர்கள், ஜார்கண்டில் மட்டும் ஏன் மாறி, மாறி ஒரு பிரபல ஜார்கண்டியை, அதாவது ஆதிவாசி தலைவரை முதல்வராக்க முயலவேண்டும்? அப்படிப்பட்ட சூழல் ஜார்கண்ட் மக்களிடையே நிலவுகிறது என்று அவர்கள் அனுமானித்திருக்கிறார்களா? ஜார்கண்ட் வாசி என்ற மனோபாவம் அங்குள்ள மக்கள் மத்தியில், உள்நீரோட்டமாக இருக்கிறது என இந்த அகில இந்திய கட்சிகள் உணர்ந்திருக்கிறார்களா? தங்களது இருத்தல் பாதிக்கப்படுவதாக உணரக்கூடிய இனம் தான், அதிகமாக தங்களது நேரடி பிரதிநிதித்துவத்தை விரும்பிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட உணர்வு ஜார்கண்ட் வாசிகளுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ஜார்கண்ட் வாசிகளின் இருத்தல் என்ற உரிமை பறிக்கப்படுவதாகவோ, மறுக்கப்படுவதாகவோ அவர்கள் உணரத் தலைபட்டு விட்டார்களா?
மேற்கண்ட கேள்விகளெல்லாம், சிபுசோரன் முதல்வராக மீண்டும் நியமிக்கப்படும் போது உருவாவது நியாயம் தானே? அதையொட்டி சிபுசோரன் மாவோயிஸ்ட் தலைவருடன் பேசுவதற்கு, தனது உதவியாளரை அனுப்பியதாக செய்திகள் வந்திருக்கின்றன. மாவோயிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட இயக்கம். அதன் தலைவராக அந்த வட்டாரத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்ற கிஷன் ஜி, அரசாங்கங்கள் தேடிக் கொண்டிருக்கின்ற ஒரு நபர். முதலமைச்சராக சிபுசோரன் பொறுப்பெடுத்த பிற்பாடு, இப்படிப்பட்ட ஒரு ரகசிய சந்திப்பு நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு ரகசிய சந்திப்புக்கு அவசியம் என்ன? பொதுத்தேர்தலில் பதினெட்டு இடங்களில் வெற்றிபெற்ற, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, அதில் ஆறு இடங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதரவில் தான் வெற்றி பெற்றது என்பதாகவும், அதனால் தான் ரகசிய சந்திப்புகள் என்பதாகவும் சில ஏடுகள் அங்கலாயிக்கின்றன. இதுதான் உண்மையான காரணமா? அல்லது ஜார்கண்ட் வாசிகளின் இருத்தல் கேள்விக்குறியாயிருக்கும் நேரத்தில், அத்தகைய ஆதிவாசிகளின் அடையாளத்தை உயிர்ப்பிக்க, ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகளுடன் பேச வேண்டிய நிர்ப்பந்தம் முதல்வர் சிபுசோரனுக்கு ஏற்பட்டுள்ளதா? இத்தகைய ஆழமான கேள்வி நமக்கு எழுகிறது.
ஜார்கண்ட் வாசிகள் என்ற அடையாளம் பல்வேறு ஆதிவாசிகள் இனங்களின் ஒட்டுமொத்த அடையாளமாக அந்த வட்டாரத்தில் இருக்கிறது. அந்த வட்டாரத்தில் இறக்கப்படும் பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் மூலமாக, ஆதிவாசிகளின் பாரம்பரிய உரிமையான கனிமவளங்கள் களவாடப்படுகின்றன. மலைகளும், காடுகளும் லாபநோக்க சிந்தனையுள்ள தனியார் மூலம் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆதிவாசிகளுடைய உழைப்பும் கூட கடுமையாக சுரண்டப்படுகிறது. இவையெல்லாம் பொருளாதார ரீதியாக ஆதிவாசிகளது பாரம்பரிய சொத்துக்களை அழித்தல் என்று நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இப்போது புதியதொரு பிரச்சனையும் தெரியவருகிறது. அது ஜார்கண்ட வாசிகளின் பண்பாடு அழிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு.
மேற்கண்ட குற்றச்சாட்டை எழுப்புபவர் ஏ.கே.ராய் என்ற ஆதிவாசி தலைவர். அவர் ஜார்கண்ட முக்தி மோர்ச்சா ஒரு அரசியல் கட்சியாக, தேர்தல் பாதைக்கு வருவதற்கு முன்னால், அந்த இயக்கத்தை தொடங்கியவர்களில் ஒருவர். 1982ம் ஆண்டு, அதாவது ஏறத்தாழ 28 ஆண்டுகளுக்கு முன்னால், முதன் முதலில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை, ஏ.கே.ராய் எழுப்புகிறார். அப்போது ஜார்கண்ட் என்ற தனி மாநிலம் உருவாக்கப்படவில்லை. அந்த வட்டாரம் பீகார் மாநிலத்தில் அப்போது இருந்தது. மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி அதை ஏ.கே.ராய் தலைமை தாங்கி வருகிறார். அவர் பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக அந்த வட்டாரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது கட்சி 4 சட்டமன்ற உறுப்பினர்களை பலமுறை தேர்தலில் வெற்றி பெற வைத்து அனுப்பியுள்ளது. அப்படிப்பட்ட அனுபவம் கொண்ட எம்.சி.சி. என்ற தொழிற்சங்கத்தின் தலைவரான ஏ.கே.ராய் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைப்பதால், அதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது.
ஜார்கண்ட் மக்களின் பண்பாடு என்பது குறிப்பாக ஆதிவாசிகளின் பண்பாடு. அது அடிப்படையில் சமத்துவ பண்பாடு. அதை சோசலிச பண்பாடு என்று ஏ.கே.ராய் அழைக்கிறார். மேல், கீழ் என்ற பாரபட்சம் அந்த பண்பாட்டில் கிடையாது. வரதட்சணை, பர்தா, சடங்குகள், மதவாதம் ஆகியவை அவர்கள் மத்தியில் இல்லை. சமத்துவமும், உழைப்பை பெருமையாக மதிப்பதும் பாரம்பரியமாக அங்குள்ள ஆதிவாசிகள் கொண்டுள்ள குணங்கள். அவர்களில் கல்வி கற்றோர் இப்போது முதலாளித்துவ பண்பாடுகளில் பழகி விட்டனர். அதனால் தங்கள் மக்களின் பாரம்பரிய பண்பாட்டிலிருந்து, அன்னியப்பட்டு வருகின்றனர். அவர்களின் பாரம்பரிய பண்பாடு சிறிது, சிறிதாக அழிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் பகுதிகளில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அதில் அந்த ஆதிவாசிகளுக்கு பணியாற்ற உரிமையில்லை. அவர்கள் சுரங்க தொழில் வேலைகளை முன்பு பெற்று வந்தார்கள். அதையும் இப்போது இயந்திரங்கள் செய்யத் தொடங்கிவிட்டன. ஆகவே சுரங்க தொழில் துறையிலிருந்தும் அந்த ஆதிவாசிகள் நீக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் காடுகளில் வாழ்கிறார்கள். ஆனால் வனயிலாகா என்ற அரசாங்கத் துறையில், அவர்களில் யாரும் பணியில் இல்லை. மரங்களை காடு முழுக்க, ஒப்பந்தக்காரர்களும், வனயிலாகா அதிகாரிகளும் இணைந்து வெட்டுகிறார்கள். பழியை ஆதிவாசிகள் மீது போட்டு விடுகிறார்கள். சோட்டா நகர் வனங்களை அழித்தது யார்? வனயிலாகாவும், ஒப்பந்த காரர்களும் தானே. அந்த இருகும்பலும் தங்களது வீடுகளை, பங்களாக்களாக கட்டியிருப்பதிலிருந்தே தெரியவில்லையா?
தன்பாத், ஹசாரிபக், ராஞ்சி, பாட்னா ஆகிய இடங்களிலுள்ள ஆதிவாசிகள் அல்லாத ஒப்பந்தக்காரர்கள் காடுகளை அழிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆதிவாசி மக்களுக்கு இடம் இல்லாமல் போனது போல, அவர்கள் வளர்த்த மரங்களுக்கும் இடம் இல்லாமல் போய்விட்டது. ஆதிவாசிகளின் பாரம்பரிய கருவிகளான வில்லையும், அம்பையும் எடுத்துச் செல்ல இப்போது அனுமதி மறுப்பு வரத்தொடங்கியுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் ரவீந்திர நாத் தாகூர் சீனா பற்றி ஒரு செய்தியைக் கூறினார். ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு சீனாவில், ஹாங்காங் மூலமாக பீரங்கிகளுடன் போதை மருந்தை பரப்பினார்கள் என்று கூறினார். இப்போது அதேபோல, காவல்துறை உதவியோடு ஆதிவாசிகள் மத்தியில் போதை பரப்பப்படுகிறது. பாரம்பரிய பண்பாட்டில் ஜார்கண்ட் வாசிகள் போதை மருந்துகளை பயன்படுத்தாதவர்கள் தொழிற்சாலைகள் இந்த வட்டாரத்தின் வளங்களை கொள்ளையடித்துச் செல்கின்றன.
பிர்சா முண்டா சிலை ஜார்கண்ட் தலைநகரில் வைக்கப்பட்டுள்ளது. அந்த தலைவர் ஆங்கிலேயரை எதிர்த்து ஆதிவாசிகள் இயக்கத்தை பொருளாதார, அரசியல், பண்பாட்டு புரட்சியாக நடத்தினார். அவரது இயக்கத்தில் அனைத்து வகை ஆதிவாசிகளும் இணைந்து செயல்பட்டனர். தனி மாநிலமாக அறிவித்த பிறகு, அன்னிய சக்திகள் ஆதிவாசிகளின் பண்பாட்டை அழிப்பது என்ற நோக்கத்தை செயல்படுத்தி வருகிறார்கள். அங்கே எழுகின்ற எழுச்சியெல்லாம், அவர்களது பண்பாட்டை, அதன் அடையாளத்தை காப்பாற்றுவதற்கான எழுச்சிதான் என்பதை அனைத்து இந்திய மக்களும் புரிந்துகொள்ளும் காலம் வந்துவிட்டது.

Monday, January 11, 2010

தமிழர் கிழக்கு மாவட்டங்களை ஆக்கிரமிக்கும் சிங்களர்கள்.

இலங்கைத் தீவில் வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் ஈழத்தமிழர்களது தாயகமாக இருந்து வருகிறது. வடக்கு மாகாணத்தில் பல மாவட்டங்களும், கிழக்கு மாகாணத்தில் பல மாவட்டங்களும் இருக்கின்றன. வடக்கும், கிழக்கும் இணைந்து தான் தமிழர் தாயகம் என்பதாக, இலங்கைத் தீவை ஆண்ட ஜெயவர்தனே காலத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதனால் தான், அவர் 1987ல் இந்திய தலைமையமைச்சராக இருந்த ராஜிவ் காந்தியுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில், அந்த முறையிலேயே எழுதி கையெழுத்திட்டிருந்தார். இலங்கை ஆட்சியாளர்களாலேயே எழுதப்பட்ட கையெழுத்தின் தலையெழுத்தை மாற்றி எழுத ஒரு மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கு வந்தார். வந்த கையோடு உச்சநீதிமன்றம் மூலமாக, வடக்கையும், கிழக்கையும் தனித்தனியாக பிரித்தார். அன்று ராஜபக்சேக்கு ஆதரவாக வடக்கையும், கிழக்கையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்று தீர்ப்புக் கொடுத்த, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர், இப்போது வடக்கையும், கிழக்கையும் இணைத்து தமிழர்களுடைய வாழ்விடத்திற்கு சரியான அடையாளத்தை கொடுக்க வேண்டும் என்று தனது கருத்தை, தனது பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிற்பாடு கூறுகிறார். இப்போது அதே ஓய்வு பெற்ற தலைமை நீதியரசர், மகிந்த ராஜபக்சேக்கு எதிராக சரத்பொன்சேகாவை ஆதரிக்கும் அணியிலிருக்கிறார். இப்படி சில தனிநபர்கள் அணி மாறினாலும், தமிழர் தாயகத்தை இணைப்பதா, பிரிப்பதா என்பதில் தான் இரண்டு அணிகளுக்கும் மத்தியில் முக்கியமான வேறுபாடு இருப்பதாக சமீபத்திய விவாதங்கள் காட்டுகின்றன.
வடக்கையும், கிழக்கையும் ஒன்று சேர்க்க விடமாட்டேன் என்று பகிரங்கமாகவே, ராஜபக்சே கொக்கரித்துள்ளார். இரண்டு மாகாணங்களையும் பிரிப்பதின் மூலம் அவர் எதைச் சாதிக்க விரும்புகிறார் என்பதுதான் முக்கியமான விஷயம். தமிழர்களுக்கு என்று ஒரு தாயகம் இருக்கக் கூடாது என்ற எண்ணம் சிங்கள பேரினவாதிகளிடம் ஊறியிருக்கின்ற ஒரு சிந்தனை. சிங்கள மக்கள் அனைவருக்கும் இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான சிந்தனை இருப்பதாக தெரியவில்லை. பெருவாரியான சிங்கள மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் விவசாயிகளாக வாழ்கிறார்கள். விலைவாசி உயர்வை தாக்குப்பிடிக்க முடியாதவர்களாக, வறுமையில் வாடுகிறார்கள். அவர்கள் மத்தியில் தமிழர்கள் பற்றிய தவறான ஒரு காட்சி காட்டப்பட்டு வருகிறது. அதாவது தமிழர்கள் தனிநாடு கேட்டு, தங்களது நாட்டு ஒற்றுமையை உடைத்து விடுவார்கள் என்று பேரினவாதிகள் பரப்புரை செய்து வருகிறார்கள். தமிழர்களின் விடுதலைப் போராளிகள் என்று பிரபலமாக அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சிங்கள மக்கள் மத்தியில் இந்த பேரினவாதிகள் பரப்பியிருக்கிறார்கள். இந்தியாவிலிருக்கும் தமிழ் நாட்டைச் சுட்டிக்காட்டி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று ஏற்கனவே பரப்பியிருக்கிறார்கள். இந்தியா என்ற பெரியதொரு வரைபடத்தைக் காட்டி, அங்கேயிருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதுபோல ஒரு மாயையை ஏற்படுத்தி, பீதியை உருவாக்கியிருக்கிறார்கள்.
சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள், முதலில் பெருவாரியான சிங்கள மக்கள் மீது தான் தங்களது உளவியல் பரப்புரை போரை நடத்தியிருக்கிறார்கள். அதனால் பீதியடைந்த சிங்கள மக்கள், தமிழர்கள் என்றாலே பயம் கவ்வும் அளவிற்கு சென்றிருக்கிறார்கள். அந்த நேரத்தில் பயங்கரவாதத்தை எதிர்த்துத்தான் போர் நடத்துகிறோம் என்று இனவாத போரை நியாயப்படுத்தி பரப்பினார்கள். அதை நம்பிய சிங்கள மக்களும் புலிகள் மீதான போரை விரும்பினார்கள். அதனால் தான் போர் வெற்றியை சிங்கள மக்கள் கொண்டாடினார்கள். பட்டினிக் கிடக்கும் சிங்கள மக்கள் தங்கள் வீட்டு இளம் பிள்ளைகளை, நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ராணுவத்திற்கு அனுப்பினார்கள். ராணுவத்தில் சிங்கள இளைஞர்கள் பலியாவதன் எண்ணிக்கை அதிகமாகும் போது, துவண்டு போனார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ராணுவத்திற்குச் சென்ற சிங்கள வீரர்களின் பலி எண்ணிக்கை கூடியதைக் கண்டு விரக்தியடைந்தார்கள்.
இத்தகைய நிலைமையில் தான், இதுவரை ஏற்படாத அளவு போரை விரும்பிய சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியிலேயே, அதிபர் தேர்தலுக்கான இரண்டு முக்கிய வேட்பாளர்களின் போட்டியால், பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. போர் முடிந்த பிற்பாடு நாட்டை ஒற்றுமைப்படுத்த, தமிழ் மக்களையும் அணைத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் சிங்கள மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. அத்தகைய சூழலில் தான் வடக்கும், கிழக்கும் இணைப்பது அல்லது பிரிப்பது என்ற விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது.
கிழக்கு மாகாணத்தை தங்கள் கைக்குள் ராஜபக்சேயின் ராணுவம் கொண்டு வந்த பிற்பாடு, அங்கே தங்களது கைப்பொம்மை பிள்ளையானை முதலமைச்சராக்கியது. கருணாவை தங்களது கட்சியான ஐக்கியச் சுதந்திர முன்னணிக்குள் ராஜபக்சே சேர்த்துக் கொண்டார். அதனால் பிள்ளையான் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்ற கட்சி இயங்குகிறது. தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் பெருவாரியாக இருக்கின்ற கிழக்கு மாவட்டங்களில், இந்த இரண்டு சமூகங்களையும் நம்பி ஆட்சி நடத்த ராஜபக்சே விரும்பவில்லை. அதனால் கிழக்கு மாகாணத்தை சிங்களமயமாக்குவது என்பது அவர்களின் திட்டம். அதற்கு சிங்கள குடியேற்றத்தை கொண்டு வந்து, கிழக்கு மாகாணத்தில் திணிக்க வேண்டும். அதன் மூலம் தமிழர்களுடைய பாரம்பரிய பூமி என்ற பெயரை, கிழக்கு மாகாணம் இழக்க நேரிடும்.
வடக்கையும், கிழக்கையும் இணைப்பதற்கு ஒப்புதல் கொடுக்கும் பொன்சேகாவை, மீண்டும் தமிழீழத்தை உருவாக்க முயற்சிக்கிறார் என்பதாக ராஜபக்சே கட்சியினர் குற்றம் சாட்டியது இத்தகைய புரிதலில் தான். இப்போது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் மட்டகிளப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மட்டுநகர் நகராட்சிக்கு மேயராக, ராஜபக்சே கூட்டணியை தேர்வு செய்யப்பட்ட தமிழ் பெண்ணான சிவகீதா பிரபாகரன் கூட்டணி மாறிவிட்டார். இவர் பிள்ளையான் கும்பலுடன் இருந்தார். பிறகு ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சென்றுவிட்டார். நேற்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களிடம், தான் பொன்சேகாவை ஆதரிப்பதாக கூறிவிட்டார்.
இத்தகைய சூழலில் அவசர, அவசரமாக கிழக்கு மாகணத்திலுள்ள மாவட்டங்களை, சிங்கள குடியிருப்புகளாக மாற்றுவதற்கு ராஜபக்சே அரசு திட்டமிடுகிறது. அதில் ஒரு உதாரணம் தான், திரிகோண மலை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி. அங்கே குரான்ங்குப்பாங்சான் என்ற முஸ்லிம் கிராமத்தில் சிங்களர்களை நிர்பந்தமாக குடியேற்றும் செயல் நடைபெறுகிறது. இதை முன்னாள் எம்.பி.எம்.எஸ்.தௌபீக் புகாராக கூறியுள்ளார்.
அதேபோல மட்டகிளப்பு மாவட்டத்திலுள்ள, தமிழ்தேசிய கூட்டமைப்பபின் நாடாளுமன்ற உறுப்பினராக பி.அரியநேத்திரன் ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார். கடந்த 3 மாதங்களாக அரசாங்கம் பாரம்பரிய தமிழர் பகுதிகளில் 107 சிங்கள குடும்பங்களை, குடியேற்ற ஏற்பாடு செய்துள்ளது என்ற புகாரை கூறியுள்ளார். 2009ம் ஆண்டு டிசம்பர் 7ம் நாள், மட்டகிளப்பு அரசு செயலகத்தில் நடந்த வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், பட்டிப்பாழை என்ற பிராந்தியத்தில் கேவுலியாமடு என்ற இடத்தில், 107 சிங்கள குடும்பங்களை குடியேற்ற மண் குடிசைகளை கட்டி வருகிறார்கள் என்று அந்த எம்.பி. கூறுகிறார்.
அரசு ஏஜென்ட் மூலம் அந்த குடிசைகளை நீக்க முயற்சித்தும் முடியவில்லை என்கிறார். கேவுலியாமடுவிலிருந்து கச்சக்கோடி சுவாமிமலை வரை 230 சிங்கள குடும்பங்களை குடியேற்றியிருக்கிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். கேவுலியாமடுவில் உள்ள அரசு நிலத்தில் சில சிங்கள ஆக்ரமிப்பாளர்களுக்கு, நில உரிமை ஆவணத்தை, கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாரை மாவட்டத்தின் அரசு ஏஜென்ட் செய்துள்ளார் என்றும் அம்பலமாகியுள்ளது. அதிபர் தேர்தல் நேரத்திலும், ராஜபக்சேயின் சிங்கள குடியமர்த்தல் என்ற காலனிமயப்படுத்தல் என்ற கொடுமை நிகழத்தான் செய்கிறது. தேர்தல் நேரமானதால் இந்த உண்மைகள் வெளியே வந்துள்ளன. உலக சமூகம் இந்த உண்மைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கான தாயகத்திற்காக குரல் கொடுக்குமா என்பதை நாம் இப்போது கேட்போம்.

Sunday, January 10, 2010

மரபணு மாற்று கத்திரிக்காய் சரியா? தவறா?

தமிழக சட்டப்பேரவையில் மரபணு மாற்று கத்திரிக்காய் பற்றிய ஒரு விவாதம் வந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி எல்லைகளைத் தாண்டி, மரபணு மாற்ற கத்திரிக்காயால், அதை பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற தீமைகளை சுட்டிக் காட்டினார்கள். அவர்களுக்கு விவசாய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதில் கூறினார். மரபணு மாற்று விதைகளை வெளியில் இருந்து தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப் போவதில்லை என்றார். ஆனால் தமிழ்நாட்டிலேயே புதிய மரபணு கத்திரிக்காய்களை உற்பத்தி செய்ய இருப்பதாகவும், அவை மறுஉற்பத்திக்கு பயன்படும் என்றும் அமைச்சர் கூறினார். அதே சமயம் மத்திய அரசு மரபணு மாற்று கத்திரிக்காய்களுக்கு அனுமதி கொடுப்பதா? இல்லையா? என்பது பற்றி முடிவு செய்யும் என்றும், அதுவரை அது பயன்படுத்தப் படாது என்றும் கூடுதலாக கூறினார்.
மரபணு மாற்றுக் கத்திரிக்காயை, ஆங்கிலத்தில் பி.டி.பிரிஞ்சால் என்று அழைக்கிறார்கள். பாசிலஸ் துருஞ்சின்சிஸ் என்ற பாக்ட்டீரியாவிலிருந்து, மரபணுவை எடுத்து கத்திரிக்காய்க்குள் ஊசி மூலம் செலுத்தி, அதன் மரபணுவையே மாற்றக்கூடிய செயலால் உருவாவதுதான் இந்த பி.டி.பிரிஞ்சால். பிரிஞ்சால் பழம், ஷýட்போரர் போன்ற லெபிடாப் டெரன் பூச்சிகளை எதிர்த்து கத்திரிக்காய் செடி வளர்வதற்காக இந்த மரபணு மாற்று விதை எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்பதுதான் அதன் தயாரிப்பாளர்களது வாதம். பி.டி.பிரிஞ்சால் இந்தியாவில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. பி.டி.பிரிஞ்சால் சிறு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு புறம் பேசப்படுகிறது. அது பூச்சிகளை எதிர்க்கும் தன்மைக் கொண்டது என்பதாகவும் கூறப்படுகிறது. குறைந்த விலையிலான விதைகள் அதில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் அவற்றை பயன்படுத்தலாம் என்றும் அந்த விதைகள் பற்றி கூறுகிறார்கள். அதே சமயம் அதற்கு எதிரான பிரச்சாரமும் நாடுதழுவிய அளவில் தீவிரமாக இருக்கிறது.
இந்தியாவில் பொதுவாக மரபணு மாற்று தானியங்களை பற்றிய அனுபவங்களி லிருந்து பி.டி.பிரிஞ்சால் பற்றிய விமர்சனமும் எழுந்திருக்கிறது. மரபணு மாற்று மூலம் உருவாகும் உணவுகள் உடல் சுகவீனத்திற்கு வழி வகுக்கிறது என்பதும் விமர்சிக்கப் படுகிறது. ஒற்றைப்பண்பாட்டு தன்மையை உருவாக்கும் இத்தகைய மரபணு மாற்று கத்திரிக்காய் குறிப்பாக சுற்றுசூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாகவும், அந்த விமர்சனங்கள் கூறுகின்றன. கத்திரிக்காய் அன்றாடம் மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒரு காய்கறி. மற்ற நாடுகளைப்போல் எப்போதாவது பயன்படுத்தக்கூடிய ஒரு மரக்கறியாக இல்லாமல், மரபு ரீதியான பண்பாட்டு தொடர்பு கொண்டது அது என்பதனால், கத்திரிக்காய் பற்றிய விவாதம் கடைசி மக்கள் வரை தீவிரமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட மரபணு மாற்று கத்திரிக்காய் பற்றிய சோதனைகளும், ஆராய்ச்சிகளும், அன்றாடம் பயன்படுத்தப்படும் கத்திரிக்காயை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையில் அதிகமான கவனத்துடன் கவனிக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் இந்தியாவிலிருக்கின்ற கிராமப்புற மக்களும், நகர்புற மக்களும் அன்றாட பயன்பாட்டிற்கு கத்திரிக்காயை பயன்படுத்துகிறார்கள். மற்ற நாடுகளில் இந்த நிலை இல்லாததனால் வெளிநாட்டு நிறுவனங்கள் கூறுவதை ஏற்று அப்படியே இந்த மரபணு மாற்று கத்திரிக்காயை அனுமதிப்பது என்பது இயலாத காரியம்.
நாடாளுமன்றத்தில் மேற்கண்ட கேள்விகள் எழுப்பப்படுவதற்கு முன்னால், ஜெனடிக் இன்ஜினியரிங் அப்ரூவல் கமிட்டி என்ற இத்தகைய மரபணு மாற்றங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டிய குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே, மரபணு மாற்று கத்திரிக்காய்களை வணிக ரீதியாக பயிரிடுவதற்கு அனுமதி கொடுத்து விட்டது.
பாதுகாப்பு பற்றிய நியாயமான கேள்விகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப் பட்டன. அறிவியல் ரீதியான அடிப்படை களைக் கொண்டுதான், முறையான ஒழுங்கு படுத்தும் கட்டுப்பாடுகளை கொண்டு வரமுடியும் என்பதை ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் நிலைக்கு சுற்றுசூழல் அமைச்சர் தள்ளப்பட்டார். அப்போது அவர் இந்த சர்ச்சையின் மீது 6 முதலமைச்சரிகளிடம் கருத்து கேட்டிருப்பதாக தெரிவித்தார். அது தவிர இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 50 அறிவியலாளர்களிடம் இருந்து மரபணு மாற்று கத்திரிக்காய் பற்றி கருத்துக்களை கேட்டிருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் அப்போது அறிவித்தார். அதே சமயம் தான் 7 பெருநகர பயணத்தை மேற்கொண்டு, அதன் மூலம் இந்த கத்திரிக்காய் பற்றி கருத்துக்களை மக்களிடம் இருந்து கேட்டு வர இருப்பதாக கூறினார். நாடு தழுவிய அளவிலான கலந்தாலோசனைகளை நடத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை மனதில் வைத்தே, அப்படி அவர் கூறியுள்ளார். அந்த பொது விசாரணைகள் இந்த மரபணு மாற்று கத்திரிக்காய்களை தயார் செய்பவர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோருடைய பங்களிப்பில் நடத்தப் படும். பொதுக்கலந்துரையாடல்களுக்கு முன்பே வணிக ரீதியான உற்பத்தியாளர்கள் கலந்தாலோசிக்கப்பட்டு அவர்களது கருத்துக்கள் கேட்கப்படும். கலந்துரை யாடல்கள் வட்டார மொழிகளிலேயே நடத்தப்படும். கூடுதலாக இந்தி மொழியிலும், ஆங்கில மொழியிலும் பொது விசாரணையின் பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துக்களை கூறலாம். இது மட்டுமே அதிகபட்ச பங்களிப்பாளர்களை சேர்த்துக் கொடுக்கும். ஒவ்வொரு பொது விசாரணைக்கும் விவசாய சமூகம், அறிவியலாளர்கள், விவசாய நிபுணர்கள், விவசாய சங்கங்கள், நுகர்வோர் குழுக்கள், குடிமக்கள் அமைப்புகள், அரசு சார நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள், அரசாங்க அதிகாரிகள், ஊடகங்கள், விதை விநியோகஸ்தர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு பிரிவினருடன் சேர்த்து, 250 பங்களிப்பாளருடன் நடத்தப்படவேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம்.
மேற்கண்ட பொது கலந்துரையாடல்கள் அழைப்பு விடுக்கப்படும் மக்களுக்கே தவிர, பொதுமக்களுக்கல்ல. அத்தகைய பொது கலந்துரையாடல்களை இந்த ஆண்டு ஜனவரி மாதமே 7 நகரங்களில் நடத்துவார்கள். சி.ஈ.ஈ. என்ற அரசு சாரா நிறுவனம் அதை நடத்தும்.
மேற்கண்ட பொது கலந்துரையாடல்கள் ஜனவரி 13ம் நாள் கொல்கத்தாவிலும், ஜனவரி 16ம் நாள் புவனேஸ்வரத்திலும், ஜனவரி 19ம் நாள் அகமதாபாத்திலும், ஜனவரி 22ம் நாள் ஐதராபாத்திலும், ஜனவரி 23ம் நாள் பெங்களூருவிலும், ஜனவரி 27ம் நாள் நாகபுரியிலும், ஜனவரி 30ம் நாள் சண்டிகரிலும் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள். அப்படியானால் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இந்த பொது கலந்துரையாடலை மத்திய அரசு நடத்தவில்லை என்று பொருள். இதில் கிடைக்கும் கருத்துக்களை தொகுத்து பிப்ரவரி முதல் வாரத்தில் பிரதமரிடம் இறுதி முடிவு எடுப்பதற்காக அறிவிப்பேன் என ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார்.
இத்தகைய மறுசிந்தனையே பிரதமரின் தலையீட்டால் நடந்துள்ளது. அதாவது பாதுகாப்பு பற்றிய நியாயமான கேள்விகளை, உணவு தானியத்தில் மரபணு மாற்று வருவதால் எச்சரிக்கையாக கவனிக்கவேண்டும் என்று அவர் கூறினார். இந்திய அறிவியல் காங்கிரசின் 97வது அமர்வை தொடங்கி வைக்கும் போதே, மன்மோகன் சிங், அறிவியல் நிபந்தனைகளை கறாராக பின்பற்றி, தேவையான ஒழுங்கு படுத்தல் கட்டுப்பாடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதையொட்டியே இப்போது இரண்டாவது பொதுக்கலந்துரையாடல் நடத்தப்பட இருக்கிறது.
ஏற்கனவே கேரளா, மத்திய பிரதேசம், ஒரிசா, பீகார், சத்திஸ்கர் ஆகிய மாநில அரசுகள் இந்த மரபணு மாற்று கத்திரிக்காயை தடை செய்துள்ளன. கேரள முதலமைச்சர் இதுபற்றிய பாதிப்புகளை தொகுத்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 50 ஆண்டுகளுக்கு கேரளா இந்த பயிரை அனுமதிக்காது என்று எழுதியுள்ளார். தமிழக அரசு இத்தகைய மரபணு மாற்று விவகாரங்களை, கவனமாக எடுத்துக் கொள்ளப்போகிறதா என்ற கேள்வி எழுகிறது. அதே நேரம் ஆந்திராவிற்கும், கர்நாடகாவிற்கும் இதுபற்றிய கலந்துரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்த மத்திய அரசு, கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் ஏன் அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை என்பதை நமது சட்டமன்றம் கேள்வி கேட்குமா? என்று மரபணு மாற்று கத்திரிக்காயின் பாதிப்புகளை உணரும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.

Saturday, January 9, 2010

வெளிநாடு வாழ் இந்தியரால் யாருக்கு லாபம்?

நேற்று புதுடெல்லியில் தொடங்கிய அல்லது தலைமை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட அல்லது கடல்கடந்த இந்தியர் விவகார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு நடந்தது. அதற்கு இந்தியிலேயே பெயர் கொடுத்திருந்தார்கள். பிரவசி பாரதிய திவஸ் என்பது அதன் பெயர். பிரவசி என்றால் இந்தியாவில் வாழாமல், வெளிநாட்டில் வாழ்பவர் என்றோ, புலம் பெயர்ந்தவர் என்றோ பொருள். பாரதிய என்றால் இந்திய என்று பொருள். திவஸ் என்றால் தினம் என்று பொருள். ஆகவே வெளிநாடு வாழ் இந்தியர் நாள் என்பதாக இந்த மாநாட்டிற்கு பெயர். இந்த மாநாட்டை கடல் கடந்த இந்தியர்களின் விவகாரத்தை கவனிக்கும் அமைச்சகமும், எப்.ஐ.சி.சி.ஐ. என்று அழைக்கப்படும் இந்திய வர்த்தக சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்களின் கூட்டமைப்பும் சேர்ந்து நடத்துகின்றன. அதே சமயம் கோபியோ (எணிணீடிணி) என்று அழைக்கப்படும், இந்திய வம்சாவழி மக்களின் உலக சமூகம் (எடூணிஞச்டூ இணிட்ட்தணடிtதூ ணிஞூ கஞுணிணீடூஞுண் ணிஞூ ஐணஞீடிச்ண Oணூடிஞ்டிண) இதற்கான தயாரிப்புகளை உலக அரங்கில் செய்து வருகிறது.
மகாத்மா காந்தி என்றழைக்கப்படும் கரம்சந்த் காந்தி இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்ற இந்தியர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். அவர் தென்னாப்பிரிக்கா சென்ற போது, அங்கே வெள்ளையர்களை எதிர்த்து அவர் நடத்திய போராட்டங்கள், கருப்பர் இனத்தின் உரிமைகளுக்கான வரலாற்றுப்பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன. உலகத்தில் உள்ள கருப்பர் இனமக்களில் முதலில் உரிமைக்குரலை எழுப்பியவர்களாக இந்தியர்களும், அதற்கு முன்னோடியாக மகாத்மா காந்தியையும் உலகம் மதிக்கிறது. அப்படி இனவாதத்திற்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் போராடிவிட்டு, காந்தி இந்தியா திரும்பிய நாள் ஜனவரி 9ம் நாள். ஆகவே அந்த நாளை வெளிநாடு வாழ் இந்தியர்களுடைய நாள் என்பதாக அழைப்பதில் அவர்கள் பெருமைப்படுகிறார்கள். அந்த நாளில் அவர்களது கோரிக்கைகளை உருவாக்குவதற் கான மாநாட்டை கூட்டுவதில் மகிழ்ச்சி யடைகிறார்கள்.
இப்படிப்பட்ட மாநாடு முதலில் 2003ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இதே நேரத்தில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு டெல்லியில் நடக்கும் இந்த பிரவசி பாரதிய திவஸ் மாநாடு 8வது மாநாடு.
அத்தகைய 10வது மாநாட்டை தொடங்கி வைக்கும் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் ஒரு நீண்ட உரையை ஆற்றியுள்ளார். இந்த மாநாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவழி மக்கள் ஆகியோர் மத்தியில் உள்ள சில திறமையுள்ள தனிநபர்களுக்கு, விருதுகள் வழங்கப் படுகிறது. அத்தோடு நிறுத்தாமல் வெளிநாடு வாழ் இந்தியர்களை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக அல்லது பொருளாதார இயக்கப்போக்குக்காக ஈடுபடுத்துவதை ஒரு முயற்சியாக இந்த மாநாடு எடுத்துக்கொண்டுள்ளது.
இந்த மாநாட்டின் பங்கேற்பாளர்களில், இந்தியாவிலிருந்து பணி நிமித்தமாக, வியாபார காரணங்களுக்காக, வெளிநாடு சென்றிருக்கும் குடிமக்கள் இருக்கிறார்கள். அது தவிர நீண்ட காலமாக தங்களது தந்தையர், மூதாதையர் ஆகியோர் இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்தாலும், தாங்கள் பூர்வீக இந்தியர்கள் என்ற உணர்வுள்ளோர் பங்கேற்கிறார்கள். இவர்களை இந்திய வம்சாவழி குடிமக்கள் என்பதாக அழைக்கலாம். ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா ஆகிய கண்டங்களிலிருந்து இப்படிப் பட்டவர்கள் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறார்கள்.
ஆப்பிரிக்காவிலிருந்து போட்ஸ்வானா, கென்யா, மடகாஸ்கர், மௌரீசியஸ், மொசாம்பிக், நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்தும் சேச்சல்ஸ், தென்னாப்பிரிக்கா, டன்சானியா, உகாண்டா, ஜாம்பியா, ஜிம்பாபாவே ஆகிய நாடுகளிலிருந்தும் இந்தியர்கள் வந்திருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவில் வாழுகின்ற இந்தியர்களில், பெரும்பான்மை யானவர்கள் தமிழர்களாக இருக்கிறார்கள்.
ஆசியா கண்டத்திலிருந்து பர்மா, ஹாங்காங், ஜப்பான், ஈரான், இந்தோனேஷியா, இஸ்ரேல், மலேசியா, மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, யுனைடெட் அரபு எமிரேஸ், வியாட்நாம் ஆகிய நாடுகளில் வசிக்கின்ற இந்தியர்கள் இதில் பங்கு கொள்கிறார்கள். இவற்றில் கணிசமான நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
அமெரிக்க கண்டத்தில் பர்பாதாஸ், பேலிஸ், கனடா, கரிபியன், கிரேனடா, குண்டேலூப், கயானா, ஜமைக்கா, பனாமா, சுரினேம், டிரினிடாட், தோபகா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்களும் பங்கு கொள்கிறார்கள். இவற்றில் கனடாவிலும், அமெரிக்காவிலும் தமிழர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாண்ட்ஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் இந்தியர்கள் பங்கேற்கிறார்கள். இதில் சில நாடுகளில் தமிழர்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஓசியானாவில், ஆஸ்திரேலியா, பிஜி, நியூ கலிடோனியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் கலந்து கொள்கிறார்கள்.
இப்படியாக உலக அளவில் என்ற சொல்லுக்கேற்ப பங்கேற்பு இருக்கிறது. இந்த முறை நடத்தப்படும் இந்த மாநாட்டில் 40 நாடுகளிலிருந்து, 1500 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் மத்தியில் துவக்க உரையாற்றிய நமது தலைமை அமைச்சர் உற்சாகமாக இந்திய பொருளாதாரம் வளரப் போகிறது என்ற ஆருடத்தை அள்ளிவீசினார்.
உலக மயமாக்கலின் விளைவாக உலகம் முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கும் காலம் இது. அத்தகைய வீழ்ச்சியை நேரிடையாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கும் இந்தியர்கள். அதனால் மன்மோகனது உரையில், அப்படிப்பட்ட உலக பொருளாதார வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, நாம் வீழவில்லை என்று உரைத்தது பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
இன்று இந்திய பொருளாதாரம் 7% வளர்ச்சியில் நிற்கிறது என்று மன்மோகன் கொடுத்த கணக்கு, மாநாட்டு ஏற்பாட்டாளர்களில் ஒரு அமைப்பான இந்திய வணிக சங்கங்கள் மற்றும் தொழில் அதிபர்களின் கூட்டமைப்பிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த உற்சாகம் வந்து இறங்கியுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளின் நிதி மூலதனம் தங்களது தொழில் மயமாக்கல் முயற்சிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஓரிரு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 9% மற்றும் 10% என்ற வளர்ச்சியை காட்டி விடும் என்று மன்மோகன் உறுதியளித்திருக்கிறார்.
அடுத்து வரும் பொதுத் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்தியாவில் வாக்குரிமை உண்டு என்று மத்திய அரசின் ஒரு புதிய சூளுரையை மன்மோகன் இந்த மாநாட்டில் வாக்குரிமையாக அளித்திருக்கிறார். இது வந்திருப்பவர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும், இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று புதிய கேள்விகளும் எழுந்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய ஆட்சியாளர்களை சுற்றி வருகின்ற விவாதமாக இந்த குடியுரிமை பிரச்சினை இருக்கிறது. அதாவது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இரட்டை குடியுரிமை கொடுப்பது பற்றி விவாதம் தொடர்கிறது. சென்ற ஆட்சியில், இதே மன்மோகன் சிங் இரட்டை குடியுரிமை பற்றி உறுதி கூறினார். இப்போது அவர்களுக்கான வாக்குரிமை பற்றி வாக்குறுதி கொடுக்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்களில், பல்லாயிரக்கணக்கான கோடிகளை மூலதனமிடக்கூடிய தகுதி உள்ளவர்கள், வாக்குரிமை என்ற அடிப்படையில் நேரிடையாக அனைத்து வாய்ப்புகளையும் பெற்று தொழில் செய்ய முடியும். அது மட்டுமின்றி இந்திய தேர்தல்களில் நின்று, ஆட்சியை கையில் எடுக்க முடியும். இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை இந்த இடத்தில் மன்மோகன் தந்துள்ளார்.
ஆனால் இந்த மாநாட்டிற்கான அழைப்பை நிரகாரித்தவர்களும் இருக்கிறார்கள். மலேசியாவில் உள்ள பல தமிழர்கள் குறிப்பாக தேர்தல் வெற்றி பெற்ற பேராளர்கள் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளனர். அதிலும் குறிப்பாக மலேசியா நாட்டில், பினாங்கு மாநிலத்தில் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள, பேராசிரியர் ராமசாமி இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளார். இலங்கையில் வன்னிப்போர் மூலம் தமிழ் இன ஒழிப்புக்கு காரணமான இந்திய அரசின் ஏற்பாட்டில் நடக்கும் பிரவசி மாநாட்டின் அழைப்பை மறுப்பதாக அவர் அறிவித்துள்ளார். இப்படித்தான் இந்த மாநாடு பற்றி இரு வேறு கருத்துக்களும் உலா வருகின்றன. இந்திய மக்களுக்கு இந்த மாநாடு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியுடன் நாம் வெளியே வரலாம்.

Friday, January 8, 2010

Thank You! - Human Rights First - Close Gitmo

Thank You! - Human Rights First - Close Gitmo

வடக்கும், கிழக்கும் இணைவதில் யாருக்கு நட்டம் ?

வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் என்பதாக தமிழர் தாயகத்தை இரண்டாகப் பிரித்து, மகிந்த ராஜபக்சே அரசாங்கம் இலங்கை தீவில் ஒற்றையாட்சியை நடத்திக் கொண்டு வருகிறது. இலங்கைத்தீவு இரண்டு தேசங்களை கொண்டது என்பதும், இரண்டு தேசிய இனங்களை உள்ளடக்கியது என்பதும் வரலாற்று உண்மை. அப்படியிருக்கும் போது, ஒரு தேசிய இனத்தின் கட்டுப்பாட்டில், மற்றொரு தேசிய இனத்தை திணித்த ஆங்கிலேயர்களுடைய பிரித்தாளும் சூழ்ச்சிதான், 60 ஆண்டுகளாக பேரினவாத ஆதிக்கத்தை தொடர வைத்துள்ளது. இந்த நிலையில் அங்கே எழுந்த அறவழிப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக தலையெடுத்தப் பிறகு, தாக்குப்பிடிக்க முடியாத அரசாங்கத்தாரும், அண்டை நாட்டு வல்லரசுதாரரும் இணைந்து போட்ட ஒப்பந்தம் தான் 1987ம் ஆண்டின் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தில் வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டு, தமிழர் தாயகம் என்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படிப்பட்ட குறைந்த பட்ச அடையாளத்தை கூட, தமிழினம் பெற்றுக் கொள்வதை விரும்பாத ஒரு பேரினவாத வெறிதான் ஆட்சியாளர்கள் மத்தியிலிருந்து வெளிப்பட்டது.
சென்ற அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் போதே மகிந்த ராஜபக்சே, தெளிவாக ஒரு செய்தியை அறிவித்தார். இலங்கைத் தீவில் ஒற்றையாட்சிதான் நடத்தப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒற்றையாட்சி என்றால், யூனிட்டரி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், அரசாட்சி முறைபற்றிய தமிழாக்கம். அதாவது அத்தகைய ஆட்சியில் கூட்டமைப்பு என்ற சமஷ்டி முறையிலான பெடரேஷன் என்ற பண்பு கொண்டது அல்ல என்று பொருள். அதாவது சுயாட்சிகள் என்ற அளவுக்கு அட்டானமி என்று ஆங்கிலத்தில் சொல்லும் சொல்லுக்கேற்ப, எந்த ஒரு அதிகாரப்பகிர்வும் இருக்காது என்று பொருள். அப்படிப்பட்ட மத்தியத்துவப் படுத்தப்பட்ட, அதிகாரக் குவிமையம் கொண்ட ஒரு ஆட்சிமுறைதான் ஒற்றையாட்சி முறை. ஒற்றையாட்சி முறையை அறிவித்த மகிந்த ராஜபக்சே, தான் வெற்றிபெற்று அரசதலைவரானபிறகு, அதை அப்படியே அமுல்படுத்தினார்.
தேர்தலுக்கு முன்பு மகிந்தா உருவாக்கிய கூட்டணியில் முக்கியமாக ஜனதா விமுக்தி பெரமுனா இருந்தது. அவர்களிடம் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில், ஒற்றையாட்சியை கொண்டு வருவேன் என்று மகிந்தா எழுதிக்கொடுத்தார் என்பது தான் அன்றைய குற்றச்சாட்டாக தமிழர்கள் மத்தியில் எழுப்பப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை அமுலாக்குவதில் மிகுந்த அக்கறையை, தான் வெற்றி பெற்ற பிற்பாடு மகிந்தா காட்டினார். அதற்கு முதல் கட்டமாக, வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஒற்றுமையை பிரித்தார். அதற்கு அவர் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடினார். ஏன் என்றால் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்பது, தமிழர்களுக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஒன்று பட்ட அதிகாரத்தை கொடுப்பது என்பதாக கையெழுத்திடப் பட்டிருந்தது. கையெழுத்திடப்பட்ட இரண்டு நாட்டு தலைவர்களின் ஒப்பந்தம், ஒரு அனைத்து நாட்டு தன்மையை கொண்டது என்பதனால், நீதிமன்றத்தின் உதவியின் மூலம் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையான வடக்கு கிழக்கு மாகாண ஒற்றுமையை உடைக்க மகிந்தா திட்டமிட்டார். நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறாத அந்த ஒப்பந்தம், இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டப்படி அமுலாக்குவதற்கு உகந்ததா என்ற கேள்வி இருந்தது. இதையொட்டியே மகிந்தாவின் விருப்பத்திற்கொப்ப, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களை பிரித்து விட்டது.
பிரித்து விட்ட கையோடு கிழக்கு மாகாணத்திற்கு, மாகாண சபைத் தேர்தலை மகிந்தா நடத்திவிட்டார். அதுவும் கூட, தமிழீழ விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்தை விட்டு, தங்களது படைப்பிரிவுகளை திரும்ப அழைத்துக்கொண்ட ஒரு சூழலில்தான், அத்தகைய மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் விடுதலைபுலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா தலைமையிலான துரோகப்படை என்று அறியப்பட்ட, பிரிவினரின் ஒரு தளபதியான பிள்ளையான் முன்னெடுத்த குழுவினரையும், தமிழ் பேசும் முஸ்லிம்கள் அமைப்பினரையும் வெற்றி பெற்றவர்களாக அறிவித்தது. அப்போதும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து முதல்வர் பொறுப்பு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும் மகிந்தாவின் சதித்திட்டம் கிழக்கு மாகாண சபைக்கு, தனது கூட்டணியின் மூலம் ஒரு தமிழரை முதல்வராக்கியதாக உலகை நம்ப வைக்க முயன்றது. அதன் விளைவுதான் அன்று வரை அரசியல் கற்றுணராத பிள்ளையான் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
சென்ற ஆண்டு மே மாதத்தில் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட வன்னிப்போருக்கு பிறகு, வடக்கு மாகாணத்திலும் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறாக வடக்கையும், கிழக்கையும் பிரித்து நிறுத்துவதில் மகிந்தாவை பொறுத்தவரை ஒரு கட்டம் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இப்போது அரசதலைவருக்கான தேர்தல் நெருங்கும் நேரத்தில், மகிந்தாவின் போட்டி வேட்பாளர் சரத் பொன்சேகா புதிய அறிவிப்பை கொடுத்துள்ளார். பொன் சேகாவை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், வடக்கையும், கிழக்கையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பொன்சேகா ஆவணமாக எழுதிக்கொடுத்திருக்கிறார் என்று செய்திகள் வெளிவருகின்றன. அத்தகைய செய்திகளின் அடிப்படையில், பொன் சேகா தமிழர் தேசிய கூட்டமைப்பினருடன் ரகசியமான ஒப்பந்தம் என்பதாக, பேரினவாத சக்திகள் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து, மகிந்தா கட்சிக்கு தாவிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அதை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டால், மீண்டும் தமிழீழம் எழுந்து விடும் என்பதாக அவரது கண்டனக்குரல் ஒலிக்கிறது. அதுபோலவே அரசதலைவர் மகிந்த ராஜபக்சேயும், வடக்கையும், கிழக்கையும் இணைக்க விடமாட்டோம் என்பதாக கூறியுள்ளார்.
இப்போது மகிந்தாவின் இந்த கூற்று, சிங்கள பேரினவாத மனோபாவம் கொண்ட மக்களின் வாக்குகளை வழிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஈழத் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் யாருக்கு வாக்களிக்கிறார்களோ, அவர்கள் தான் அதிபர் தேர்தலில் வெல்லமுடியும் என்ற செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் செல்வாக்குடன் இருக்கின்ற முஸ்லிம் கட்சியும் கூட, பொன்சேகாவின் ஆதரவு கூட்டணியில்தான் இருக்கிறது. ஒரு காலத்தில் சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில்தான் மகிந்தாவும் இருந்தார். அந்த கட்சி மூலம்தான் வேட்பாளராக அறிமுகப் படுத்தப்பட்டார். ஆனால் சந்திரிகா ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, கூட்டமைப்பு முறையிலான ஆட்சி பற்றி முன்வைப்புக் களை வைத்தார். இப்போது சந்திரிகா முழுமையாக பொன் சேகாவிற்காக இறங்கி பிரச்சாரம் செய்கிறார். மகிந்தாவிற்கு ஒற்றையாட்சி கொள்கையை எடுத்துக் கொடுத்த ஜே.வி.பி. கூட, இப்போது பொன்சேகாவை ஆதரிக்கிறது. இப்படியாக பல தரப்புகளிலிருந்தும், வடக்கும், கிழக்கும் இணைவது பற்றி ஆதரவு கருத்துக்கள் இருந்து வருகின்றன.
மகிந்தா கூட்டணியில் ஒட்டிக் கொண்டுள்ள, டக்ளஸ் தேவனாந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி கூட, வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நீண்ட நாட்களாக கூறிவருகிறார்கள். அவர்கள் எந்த முகத்தோடு வடக்கு கிழக்கு பற்றி மகிந்தாவின் கருத்துக் களை, தமிழ்மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்று தெரிய வில்லை.
தேசத்தை இழந்து, அறவழி போரிலும் தோற்று, ஆயுதப்போரிலும் பலியாகி, முள்வேலி முகாம்களில் அவதியுறும் தமிழ்மக்களுக்கு, குறைந்த பட்சம் வடக்கும், கிழக்கும் இணைக்கப்படும் என்ற செய்திகூட, ஒரு ஆறுதலான சொல்லாக இருக்கும். மோசமான சூழலுக்கு மத்தியில், குறைந்த பட்சம் தமிழர்கள் தாயகம் அங்கே அடையாளத்திற்காகவாவது உருவாக்கப் படட்டும்.