Sunday, April 4, 2010

குடிசைவாசிகளும், சாலையோர வாசிகளும் நமது மக்களே!

இரண்டு நாட்களாக இந்தியத் துணைக் கண்டம் எங்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப் பட்டுள்ளது. இந்தியாவின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் குடியரசு தலைவர், மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் குடியாக பதிவு செய்யப்பட்டார். அதேபோல இரண்டாவது குடிமகனாக, தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் பதிவு செய்யப்பட்டுள்ளார். அவர்களது பதிவுகளைக் கூட ஒரு விழாவாக ஆக்கி, இந்திய அரசு அகமகிழ்ந்து கொள்கிறது. மன்மோகன் சிங் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பதை, சாதாரணமாக எண்ணிக்கை ரீதியான புள்ளி விவரமாகக் காணாமல், அதுவே நாட்டின் வளர்ச்சித் திட்டங் களுக்கு அடிக்கோலாக அமை யக்கூடியது என்று கூறியுள்ளார். இது வரை இந்தியாவில் அரசாங் கத்தால் அறிவிக்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாமே, அவை நிறு வப்படும் பகுதிகளின் மக்களிடம் கலந்தாலோசிக்காமல், அந்த மக் களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொள்ளாமல், வளர்ச்சித் திட்டத்தின் கட்டாயத்தைக் கருதி பாரம்பரியமாக அந்த வட்டாரத்தில் வாழ்கின்ற மக்கள் தொகையினரை, இடம்பெயர்த்தலுக்கு உள்ளாக்கும் நிலமையைத் தான் உருவாக்கியிருக்கிறது. மேற்கண்ட நிர்ப்பந்தமான இடம்பெயர்தலுக்கு, பல்வேறு உதாரணங்களை நாடெங் கும் காட்ட முடியும். அதில் 2,00,000 ஆதிவாசி மக்களை கட்டாயமாக இடம்பெயரச் செய்யும், சர்தார் சரோவர் அணைக்கட்டு என்ற மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள, நர்மதா நதிக்கு குறுக்கே கட்டப்படும் அணைக்கட்டு என்ற வளர்ச்சித் திட்டம், பத்தாண்டுகளுக்கு மேலாக மக்களால் எதிர்க்கப்படுகிறது. மேதா பட்கர் தலைமையிலான அந்த நர்மதா இயக்கம், மாற்று இடத்தை, மறு வாழ்வு திட்டத்தை அளிக்காமல் இருக்கும் இந்திய அரசை கேள்விக் கேட்கிறது. இதுபோன்ற கட்டாய இடம்பெயர்தல்கள், இந்தியா எங்கும் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் வந்திறங்கியுள்ளன. அவற்றினால் மரபு ரீதியாக தாங்கள் வாழ்ந்து வரும் வயல் வெளிகளையும், மலைகளையும், வனங்களையும், கடற்கரைகளையும் விட்டு மக்கள் வெளியேற்ற கட்டாயப் படுத்தப்படுவார்களானல், அவர்கள் தங்களது மறுவாழ்வுக்கு என்ன செய் வார்கள் என்ற கேள்வி நாடெங்கும் எழுந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்சனைகள் தான் முக்கியமாக நமது மக்கள் மத்தியில் அலை பாய்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையில் வளர்ச்சித் திட்டங்களுடன் இணைத்து சுட்டிக்காட்டியுள்ள தலைமை அமைச்சரின் பார்வை, மக்களுக்கு சாதகமாக இனியாவது அரசாங்கம் வளர்ச்சித் திட்டங்களை மாற்றியமைப்பார்களா என்ற நப்பாசையை நமக்குக் கிளப்பி யுள்ளது.
அதேசமயம் தொடங்கியுள்ள இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி, கருத்துக் கூறியுள்ள நமது தமிழக முதல்வர், சாலையோரம் வசிப்பவர்களும், அரவாணிகள் என்ற திருநங்கைகளும் அதில் சேர்க்கப்பட வேண்டும் என்பதாக அறிவித்துள்ளார். இது மேலும் ஒரு ஆறுதலான அணுகுமுறையாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. சாலையோரம் வசிப்பவர்கள் என்ற பெயர், உள்ளபடியே நகரங்களில் வீடுகள் அற்றவர்கள் என்பதாக பொருள்படும். அதேபோல திருநங்கைகளும் கூட, இந்த சமுதாய அமைப்பில் அடிப்படை அலகுகளாக இருக்கின்ற குடும்பங்களில் இணைத்துக் கொள்ளப்படாமல், வெளியே அனுப்பப்பட்ட அரவானிகள் என்ப தாகவும் நம்மால் புரிந்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட இரண்டு பிரிவினரையும், அவர்களும் மனிதர்கள் தான் என்ற அடிப்படை உணர்வோடு, அவர்களும் இந்த நாட்டு குடிமக்கள் தான் என்ற குடியுரிமை சிந்தனையோடு, அவர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்ற முதல்வரது கோரிக்கை, நல்லதொரு அணுகுமுறை.
தலைமை அமைச்சரின் உரைகள், மத்திய அரசாங்கத்தின் திட்டங்களை உரைக் கல்லாக வைத்து பார்க்கப்பட வேண்டும் என்று நாம் கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால் மாநாடுகளிலும், விழாக்களிலும் அரசியல் தலைவர்களும், தலைமை அமைச்சர் கூட, பல்வேறு முன்னேறிய கருத்துக்களை கூறக்கூடும். அதேசமயம் மத்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் இருந்து வெளியே வருகின்ற வளர்ச்சித் திட்டங்கள், மக்களை கணக்கிலெடுக்காமல், அவர்களது மறுவாழ்வுக்கு திட்ட மிடாமல், முடிந்த அளவில் அவர்களது வாழ்க்கைத் தேவையை வளப்படுத்தும் எண்ணத்தைக் கொள்ளாமல் உரு வாக்கப்படுகின்றன என்பதே கிடைத் திருக்கும் அனுபவம்.
அதேபோல சாலையோரவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற சரியான கருத்தை முன்வைக்கும்போது, அத்தகைய சாலையோர வாசிகள் உருவாகி வரும் புறச்சூழலை நாம் எப்படி சந்திக்கப்போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. குடியிருப்பதற்கு குடிசை கூட இல்லாத நிலையிலுள்ளவர்கள் தான், சாலையோர வாசிகள். அத்தகைய சாலையோர வாசிகள், கடந்த 30 ஆண்டுகளுக்குள் நகரை நோக்கி நகர்ந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். வீடற்ற இந்த கூலி மக்கள், அன்றாடம் வேலைக்குச் செல்கிறார்கள்.
சென்னை நகரின் அடிப்படையான பணிகளைச் செய்வதில் இவர்களும் பங்களிப்புச் செலுத்துகிறார்கள். அப்படி 30 ஆண்டுகளுக்கு முன்
சென்னை நகர சாலையோரவாசிகளாக வாழ வந்த குடும்பங்களில், பிறந்து வளர்ந்த இளைஞர்கள் கல்லூரி படிப்பு வரை படித்து, வேலைக்குச் செல்வதையும் காண முடிகிறது. இன்றுவரை இப்படிப்பட்டவர்களுக்கு வீடு கொடுக்க முடியாத ஒரு நிலை, ஆரோக்கியமான சூழ்நிலை அல்ல. வீடற்றவர்கள் என்பதால் இவர்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் என ஆகிவிடக் கூடாது என்பது சரியான சிந்தனை. அதேநேரம் வீடற்றவர்களாக இப்படியொரு பிரிவினரை வைத்திருப்பது எப்படி ஆரோக்கியமான சூழலாக இருக்கும்?
வீடு இருந்தும் தொடர்ந்து இருக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்ட மக்கள் பலரும், நகரங்களில் வாழ்ந்து வருகி றார்கள். அவர்கள் குடிசைவாசிகள் என்பதாக அழைக்கப்படுகிறார்கள். குடிசைகள் இல்லாத நகரங்களை உருவாக்குவோம் என்பது, இன் றைய நாகரீகமான ஒரு முழக்கம். நகர்மயமாதலில் தோற்றுவிட்ட பகுதிதான் குடிசைகள் என்பதாக ஒரு கருத்து இருக்கிறது. திட்டமிடப்படாத நகரம் என்பதாக குடிசை பகுதிகள் அழைக்கப்படுகின்றன. அவை திட்ட மிடப்படாத பகுதிகள் மட்டுமல்ல. அவை கண்ணுக்குத் தெரியாத பகுதிகளாக நகரங்களில் இருக்க வேண்டும் என்று ஆள்வோர் விரும்புகிறார்கள்.
டெல்லியில் நடைபெறப் போகின்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக, அந்த நகரம் விமர்சையாக தயாராகி வருகிறது. அதில் ஒன்று டெல்லியில் இருக்கும் குடிசைப் பகுதிகளை, அந்த விளையாட்டுப் போட்டிக் காலத்தில் கண்களில் காட்டாமல் மறைப்பது என்பதாக திட்டமிடுகிறார்களாம். மும்பையிலும் இதேபோல குடிசைப் பகுதிகளை, சுற்றுலா வருகின்ற வெளிநாட்டுப் பயணிகளுக்கு கண்களுக்குத் தெரியாமல் மறைக்க முயலும் திட்டம் ஒன்று இருக்கிறது.
நகரங்களில் திடீரென்ற குடிசைப் பகுதிகள் தோன்றுவதற்கான அடிப் படைக் காரணங்கள் களையப்படாமல், குடிசைப் பகுதிகளை நீக்குவது அல்லது மாற்றியமைப்பது அல்லது இனி வருங்காலங்களில் இல்லாமல் செய்வது என்பது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் இணைந்தே எழுகிறது. எப்படியோ இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பாவது ஆட்சியாளர்கள் மத்தியில், மக்களின் பல்வேறு பிரிவினர்கள் பற்றி சிந்திக்க வைத்திருக்கிறதே என்பதாக நாம் இப்போது ஆறுதல் கொள்கிறோம்.

Saturday, April 3, 2010

தலித் கிருத்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதா?

நேற்று இந்திய தலைமை அமைச் சருக்கு தமிழக முதல்வர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். வழக்கமாக தமிழக முதல்வரின் கடிதம், தமிழ்நாட்டின் தேவைகளைப் பற்றியதாக இருக்கும். காவிரி நீர் தீர்ப்பாணையம், முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உயர்த்துவது, பாலாற்றில் கட்டப்படும் தடுப்பணை, போன்ற தமிழ்நாட்டின் தேவைகள் பற்றி, வழமையாக தமிழக முதல்வர் இந்தியத் தலைமை அமைச் சருக்கு கடிதங்கள் எழுதுவதுண்டு. சில நேரங்களில் ஈழப்பிரச்சனை சம்மந்தமாகவும், ஒரு கட்டத்தில் வன் னிப்போரில் பொதுமக்களை அழிப்பது சம்மந்தமாகவும், தமிழ் நாட்டில் வாழும் ஈழ அகதிகள் குறித் தும், தமிழக முதல்வர் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கிற்கு கடிதங்கள் எழுதியதுண்டு. ஆனால் இந்தியா தழுவிய ஒரு முக்கிய சமூகப் பிரச்சனையின் மீது, அதிலும் குறிப்பாக தலித் மக்களின் ஒரு சாராரது அடிப்படையான உரிமை குறித்து இப்போது கடிதம் எழுதியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களாக இந்திய துணைக் கண்டத்தில் ஒடுக்கப்பட்டு கிடக்கின்ற தலித் மக்கள் சொல்லொ ணாக் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் மீது தீண் டாமை என்ற அடக்கு முறையும், அவமதிப்பு முறையும் பாய்கிறது. அப்படிப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, மதவேறுபாடின்றி
சாதிய ரீதியான ஒடுக்குமுறையை மட்டுமே கணக்கிலெடுத்து இடஒதுக் கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பது சரியான ஒரு கோரிக்கை. இன்றைய சமூகத்தில் அது ஒரு முற்போக்கான கோரிக்கையும் கூட. கிராமப்புறங்களில் குறிப்பாக நடத்தப்படுகின்ற அடக்குமுறைகளில், ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று கவனிப்பதை விட, எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பது தான் கவனிக்கப்படுகிறது.
சாதியை வைத்து மட்டுமே ஒருவர் கிராமப்புறங்களில் மரியாதை பெற முடிகிறது. ஒருவருடைய வாழும் இடத்தைக் கூட, கிராமப்புறங்களில் சாதி தான் தீர்மானிக்கிறது. மதம் மாறியதால் மட்டுமே எந்தவொரு சாதிக்காரரும், தன்னுடைய கிராமத் தில் மாற்றுச் சாதியினர் வாழும் தெருவிற்குள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. வாழும் இடம், பழகும் மக்கள், உறவுக் காரர்கள், ரத்த உறவுகள், மணம் முடிப்போர் இப்படியாக அனைத் துமே சாதியரீதியாக மட்டுமே தீர் மானிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் இருக்கின்ற அல்லது மாறுகின்ற மதத்தை வைத்து ஒரு மனிதருக்கு வழங்கப்பட வேண்டிய ஒதுக்கீடுகளை முடிவு செய்யாமல், அவர் அழுத்தப்பட்டுள்ள சாதியை வைத்து மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்ற இந்த கோரிக்கை மிகவும் நியாயமான ஒன்று.
முதல்வர் மேற்கோள் காட்டுகின்ற 1950ம் ஆண்டுக்கான தாழ்த்தப் பட்டோர் சட்டம், 1956ம் ஆண்டுக் கான தாழ்த்தப்பட்டோர் சீரமைப்புச்
சட்டம், 1976ம் ஆண்டுக்கான எஸ்.சி, எஸ்.டி. சட்டத்திருத்தம் ஆகியவை ஒருவர் இந்துவாயிருந்தாலும், சீக்கியர் என்றாலும், புத்தமதத்தைச் சேர்ந்தவர் என்றாலும் எந்த மதத் தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்றால் அவரை தாழ்த்தப்பட்டவர் என்றே கருத வேண்டும் என்பது பொருத்தமாக இருக்கிறது.
இந்து மதத்தில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களை, பட்டியல் இனத்தவர் என்பதாக வரையறை செய்து, அவர்களுக்கான தனிச்சலு கைகளை அல்லது உரிமைகளை அரசியல் சட்டத்திலேயே அடிப்படை உரிமையாக இணைத்தார்கள். 1950ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் சட்டத்தில் மூன்றாவது பாராவில் 56ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது என்றும், அதில் சீக்கிய மதத்தைச்
சேர்ந்த தாழ்த்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது என்பதையும் சுட் டிக்காட்டுகிறார். அதுமட்டுமின்றி 1990ம் ஆண்டு புத்தமதத்தை ஏற்றுக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களையும், இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந் தார்கள். உண்மை விவரங்கள் இப்படியிருக்கையில், கிருத்துவ மதத்திற்கு மாறிச் சென்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைக் காமலேயே இருக்கிறது.
முதல்வர் எழுதிய கடிதத்தில் நாடாளுமன்றச் சட்டப்பிரிவுகள் 341(2) மற்றும் 342(2) ஆகியவற்றின் கீழ் பிரதமரே நேரடியாக தலையிட்டு, இதற்கான தீர்வைக் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார். மேற்கண்ட கோரிக்கை தொடர்ந்து இருக்கின்ற ஒன்று தான் என்றாலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது என்பதை அந்த கடிதத்தில் முதல்வர் பகிர்ந்து கொள்கிறார். இத்தகைய கடிதத்தின் தேவை நிலவுகின்ற சாதிய ரீதியான சமூகச் சூழலாலும், நடை முறையில் உள்ள கிருத்துவ திருச்சபைகளின் குரல்களாலும் இன்றைக்கு மீண்டும் வெளிவந்திருக்கலாம். ஆனால் இத்தகைய கோரிக்கைக்கான அடிப்படை சமூகச் சூழல் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் இருக்கும் கிராமங் களில் இந்து மத நம்பிக்கை கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள், தங்கள் விருப்ப தெய்வங்களை வழிபட, கோவில்களுக்கு செல்வதில் கூட, பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதுதான் சிவகங்கை மாவட்டத்தில், தேவகோட்டை வட்டத்தில் கண்டதேவி கிராமத்தில் உள்ள
சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலையத்தில், தேர்வடம் பிடிக்க தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று வந்தும் கூட, ஆதிக்கவாதிகளின் தடையை முழுமையாக அரசு நிர்வாகத்தாலும், காவல் துறையாலும் உடைக்க முடியவில்லை. அதேபோல கோவில்பட்டி மாரியம்மன் கோவி லில் தாழ்த்தப்பட்டோருக்கான மண்டகப்படி இதுவரை ஆதிக்கச் சாதியினரால் கொடுக்கப்படவில்லை. கோவையில் மலைக்கோவிலான வேலாயுதன் பாளையத்தில், தாழ்த் தப்பட்டோர் சுதந்திரமாக வழிபாடு செய்ய முடியவில்லை. காஞ்சி மாவட்டத்தில் கூத்தரம்பாக்கம் கிராமத்தில், கோவிலுக்கான வரி செலுத்தியும் கூட, தாழ்த்தப்பட்டோர் தெருவிற்கு சாமி பல்லக்கு வருவதற்கு ஆதிக்கச் சாதியினர் இன்னமும் அனுமதிக்கவில்லை. இப்படியாக நேரடியான சாதிய அடக்குமுறையை தலித் மக்களின் மீது கட்டவிழ்த்து விடும்போது, அவர்கள் சுதந்திர மான வழிபாட்டிற்காக மதம் மாறுகிறார் கள்.
அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையம், தனித் தொகுதிகளாக அறிவித்தும் கூட, தலித் பிரதிநிதிகள் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு கிராமத்திலும், கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி கிராமங்களிலும் ஊராட்சித் தலைவர்களாக சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்படுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. உத்தபுரத்தில் தீண்டாமைச் சுவர் பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படவில்லை. சொந்த மதத்தைச் சேர்ந்த ஆதிக்க
சாதிக்காரர்களால் அவதிப்படுவதினால், அவமானப்படுத்தப்படுவதினால், விரக்தியடையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறி செல்கின்றனர். அவ்வாறு கிருத்துவ மதத்திற்கு சென் றவர்களுக்குக் கூட, சாதி முத்திரை அழிக்கப்படவில்லை. கிருத்துவ மதத்திற்கு உள்ளேயும், தனிவழிபாட்டு தலம், தனி சுடுகாடு போன்றவற்றால் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இருக்கும் கிருத்துவ மதப்பிரிவுகள், சாதி அடையாளத்தை உடைக்காமல் பாதுகாத்து வரு வது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. அப்படியிருக்கையில் மத அடையாளத்தைக் காரணம் காட்டி, அவர்களுக்கு சாதி அடையாளத்தால் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பறிப்பது எந்த விதத்திலும் நியாய மில்லை.
இந்திய அரசியல் சட்டத்தில் யார் வேண்டுமானாலும், எந்த மதத்திற்கும் விரும்பினால் மாறிச் செல்லலாம் என்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய தனிநபர் உரிமையே அவர்களுக்கான சாதிவழி சட்ட உரிமைகளை தடுப்பதற்காக பயன் படுத்தப்படலாமா? செங்கல்பட்டில் பஞ்சமி நில போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தலித் இளைஞர்கள், ஜாண் தாமஸிற்கும், ஏழுமலைக்கும் காவல்துறையின் தோட்டாக்கள் வேறுபாடு பார்த்ததா? தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளத்தில், உடைக்கப்பட்ட வீடுகளில் மாட சாமிக்கும், அந்தோணி சாமிக்கும் வேறுபாடு காட்டமுடியுமா? இந்து மதத்தில் இருந்தால் தான் தாழ்த் தப்பட்டோருக்கான இடஒதுக் கீடு கிடைக்கும் என்றால், அது மறைமுக மாக சலுகை கொடுத்து குறிப்பிட்ட மதத்தில், மக்களை தக்கவைத்துக் கொள்ளும் போக்கு என கருதப்பட முடியாதா? இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது உண்மையானால், மதத்தை அளவுகோலாக்கி, சாதி ஒடுக்கலுக்கு எதிராக வழங்கப்படும் உரிமைகள் மறுக்கப்படலாமா? மேற்கண்ட கேள்விகள் முதல்வரின் கடிதத்திற்கு ஆதரவாக கூடுதலாகவே எழுகின்றன. மத்திய அரசு தலித் கிருத்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும்வரை, தமிழ்நாடு அரசு அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், இடைக்கால நிவாரணம் போல
சேர்க்கக்கூடாதா? இவையெல்லாம் விவாதங்களின் மத்தியில் வந்தி ருக்கின்ற வினாக்களாக இருக்கின் றன.

Friday, April 2, 2010

இடதுசாரிகள் கலாச்சார காவலர்களாக மாறுகிறார்களா?

சமீபத்தில் கேரளாவில் நடந்து வரும் பல்வேறு பிரச்சனைகள், நாட்டையே ஈர்க்கும் தன்மையுள்ளதாக இருக்கிறது. அவற்றில் பெரிய இடதுசாரி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளேயே இருக்கும் இருபெரும் அரசியல் சக்திகளுக்குள் நடக்கும் மோதல், அதில் ஒரு குழுவினரால் நடத்தப்படும் ஒரு காட்சி ஊடகம், இன்னொரு குழுவிற்கு ஆதரவாக செய்தி வெளியிடும் மற்றொரு காட்சி ஊடகம், பண்பாட்டுத் தளத்தில் பிரபல கவிஞர்களுடன் மோதல், பிரபல எழுத்தாளரை குற்றம்சாட்டும் தலைவர், மதுபோதையை அதிகமாக பயன்படுத்துவதாக ஊடகங்கள் கொடுத்த விமர்சனம் ஆகியவற்றின் மூலம் கேரளா சமீப வாரத்தில் அதிகமாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக சமீபத்தில் கேரளாவிற்கு வந்த பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய், ஊடகவியலாளர் கூட்டத்தில் பேசுவதற்கு மறுத்து விட்டதாக ஒரு மலையாள இதழ் எழுதியிருக்கிறது. அருந்ததிராய் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண். பல பிரபல பெண்களைப் போலவே, அவரும் கேரளாவை விட்டு வெளியே வந்த பிற்பாடு தான் பிரபலமடைந்திருக்கிறார். அங்கேயுள்ள ஊடகவியலாளர்களை, தன் முகத்தைப் பார்த்து பேசுவதற்குப் பதில், மார்பை பார்க்கிறார்கள் என்பதாக விமர்சித்ததாக ஒரு ஏடு எழுதியுள்ளது. அவர் அப்படி பகிரங்கமாக விமர்சித்தது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இத்தகைய விஷயத்தில் கேரளா ஒரு ஆரோக்கியமற்ற சூழலை தக்க வைத்திருக்கிறது என்பதாகவும் கூறப்படுகிறது. பாலியல் முதிர்ச்சியை அந்த மாநிலத்தின் மக்கள் எப்போது பெறப்போகிறார்கள். இவ்வாறான கேள்விகளை கேரளாவின் பிரபல மலையான எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சகாரியா கூறியுள்ளதாக, மலையாள வார இதழான கலாகோமதியில் எழுதியிருக்கிறார்கள்.
இதுவரை கேரள முதல்வரான வி.எஸ்.அச்சுதானந்தத்தின் குழுவினருக்கும், கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராய் விஜயன் குழுவினருக்கும் இடையே உள்ள மோதல் தான் அரசியல் ரீதியாக பிரபலமாக வெடித்துக் கொண்டிருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த சில மோதல்கள் அரசியல், சமூகம், பண்பாடு ஆகிய தளங்களிலும் எதிரொலிக்கிறது.
சமீபத்தில் ராஜ்மோகன் உன்னிதான் என்ற ஒரு காங்கிரஸ் தலைவர் வீட்டை உடைத்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் உள்ளே புகுந்து, அந்த தலைவர் ஒரு பெண்ணுடன் இருந்ததை கையும், களவுமாக பிடித்துள்ளனர். இதை எழுத்தாளர் சகாரியா கலாச்சாரக் காவலர்களின் வேலை என்பதாக விமர்சித்தார். அதற்காகவே சகாரியா கலந்துக் கொண்ட ஒரு இலக்கிய விழாவில், பையனூரில் அவர் வாலிபர் சங்கத்தினரால் தாக்கப்பட்டார். இதுபற்றி சகாரியா கொடுத்த நேர்காணலில், அத்தகைய செயல்பாட்டை கேரளாவில் தான் காண்பதாக விமர்சித்திருக்கிறார். டெல்லியில் தான் வாழ்ந்ததாகவும், சென்னையில் வாழ்ந்ததாகவும் எங்குமே இப்படியொரு பாலியல் பசியைத் தான் பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மற்றவர்களுடைய விவகாரங்களுக்குள் தலையை நீட்டி, பிரச்சனையை உருவாக்குவதை தான் கேரளாவில் தான் கண்டுள்ளதாக அந்த பிரபல எழுத்தாளர் கூறுகிறார். ஊடகங்களிலும், அறிவு ஜீவிகள் மத்தியிலும், காவல்துறையிலும், அரசியல் கட்சிகளிலும் கூட இப்படிப்பட்ட பாலியல் வக்கிரங்கள் இருப்பதாக சகாரியா குற்றம்சாட்டி, அதற்கான காரணங்களை மதவழி பின்னணிகளாக எடுத்துக் கூறியுள்ளார். அதற்கு இரண்டு உலகப் போர்களை நடத்திய ஐரோப்பா, நவீன தன்மைக்கு வந்துவிட்டதாகவும், ஆனால் பின்தங்கிய நிலையிலுள்ள மத அமைப்புகள் கேரளாவில் தெளிவு பெறவில்லை என்றும் அவர் கூறுகிறார். ஸ்ரீநாரயண குரு இதுபோன்ற உறவுகளில் ஒரு தாராளப் பார்வைக் கொண்டிருந்தார் என்றும், அதற்குப் பிறகு வந்த இடதுசாரிகளும் பாலியல் பற்றிய வரட்டுத்தனத்தை கொண்டிருக்கவில்லை என்றும், அவையெல்லமே தனிநபர் சுதந்திரம், கருத்தியல் சுதந்திரம் மற்றும் சமூக மாற்றம் பற்றிய தன்மைத்தவை என்றும் அவர் கூறினார்.
அத்தகைய கடந்த காலம் இப்போது மாறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தொலைநோக்குப் பார்வையில்லாத புதிய தலைவர்களால் பிரச்சனைகள் வருவதாக எடுத்துச் சொன்னார். அதற்கு இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு காரணம் என்றும் குற்றம் சாட்டினார். ஆண், பெண் உறவுகளை பொறாமையுடனும், வக்கிரத்துடனும் காண்பதற்கு ஊடகங்கள் தான் காரணம் என்று கடுமையாக விமர்ச்சித்திருந்தார். பையனூரில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் தான் பேசியதற்காக, வாலிபர் சங்கத்தினர் தன்னிடம் உரசியதையும், அதையே பின்னர் பினராய் விஜயன் தனக்கெதிராக விமர்சித்ததையும் சகாரியா கடுமையாக சுட்டிக்காட்டியிருந்தார்.
அரசியலும், மதமும் அங்கே கழிசடையாகப் போய்விட்டது என்றும், சாதியம் வளர்கிறது என்றும், நாராயணகுருவாலும், கம்யூனிஸ்ட்களாலும் தூக்கியெறியப்பட்ட பழக்கங்கள் மீண்டும் தலையெடுத்துள்ளன என்பதாகவும் அந்த எழுத்தாளர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக அருந்ததிராய் பேசுவதாக குறிப்பிடும் பினராய் விஜயன், அவரை ஏகாதிபத்திய கைக்கூலி என்று கூறும் அளவுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் கடந்த நிதியாண்டில் கேரளா அதிகமான அளவுக்கு மதுவை பயன்படுத்தியுள்ளது என்பதாக அங்கிருந்து வெளிவரும் பிரபல ஏடு ஒன்று கூறியுள்ளது. அதாவது ரூ.5,500 கோடிக்கு மது விற்பனையை அவர்கள் கணக்கிடுகிறார்கள். சென்ற நிதி ஆண்டான 200809 ஆண்டின் ரூ.4,631 கோடிக்கு மதுவிற்பனை இருந்தது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதும் அவர்களது புள்ளிவிவரம். இதைவைத்து கேரள மாநிலத்தை அவர்கள் மதிப்பீடு செய்தார்கள் என்றால், ரூ.14,000 கோடி ரூபாய்க்கு மது விற்பனை மூலம் ஈட்டியுள்ளதாக காட்டும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வைத்து, நாம் எந்தவிதத்தில் மதிப்பீடு செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் பி.பி.சி. தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ள புள்ளி விவரங்கள் மறுக்கப்பட முடியாதவை. இந்தியாவில் இருக்கின்ற குடிகாரர்களிலேயே, அதிகமாக குடிப்பது கேரளாவில் தான் என்பதாக ஒரு புள்ளிவிவரத்தை அது கொடுத்துள்ளது. தந்தை குடிக்கும்போது, இணைந்து குடித்து வளர்ந்த மகனைப் பற்றிய கதையை அது கூறுகிறது. பெரும் குடிகாரனாக மாறியவர், கல்வியிழந்து, வேலையிழந்து, மறுவாழ்வு இல்லங்களுக்கு 32வயதிலேயே எடுத்துச் செல்லப்பட்டதையும், போதைத் தேவைகளுக்காக தெருவில் பிச்சைக்காரன் போல் நடமாடியதையும் அந்த ஊடகம் ஒரு கதையாக எடுத்துக் கூறியுள்ளது. மது அருந்துவது கேரளாவில் இருக்கும் ஒரு நோய் என்பதாக அது சுட்டிக்காட்டுகிறது. பலர் மனநிலை காப்பகங்களில் போய்ச் சேர்ந்துள்ளதையும் எடுத்துச் சொல்லுகிறது. கேரளாவில் ரம், பிரான்டி ஆகியவற்றிற்கு தான் அதிக கிராக்கி இருக்கிறது என்பதாகவும் குறிப்பிடுகிறது. மாநில மதுவாரியம் 7 நாட்களும் செயல்படும் 337 மதுக்கடைகளை வைத்திருப்பதாக அந்த அறிக்கைக் கூறுகிறது. ஒவ்வொரு கடையிலும், 80,000 பேர் வாடிக்கையாளர்கள் என்பதாகவும் கணக்கிடுகிறது. 3கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தில் ரூ.4,500 கோடிக்கு இந்த நிதியாண்டில் மது விற்பனை எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த புள்ளிவிவரம் அடுக்குகிறது.
மது அருந்துபவர்களுக்கு அல்லது பழக்கமானவர்களுக்கு போதுமான உணவு கிடைக்குமானால், அது அவர்கள் உடலைப் பாதிக்காது என்று விளக்கம் கூறி, அப்படிப்பட்ட சூழல் பெருவாரியான மக்களுக்கு அங்கு கிடைக்கவில்லை என்பதனால், அவர்கள் மூழ்கி வருவதாகவும் அந்த செய்தி கூறியுள்ளது. போதையினால் மட்டுமே சென்ற ஆண்டு சாலை மரணத்தில் 4,000 பேர் இறந்ததாகவும் எடுத்துக் காட்டுகிறது. மது போதையிலிருந்து தெளிவுக்குக் கொண்டுவர ஒரு சிறப்பு மருத்துவமனை உருவாக்கும் திட்டம் இருப்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. குடிப்பது கூட ஒரு சமூகப் பிரச்சனைத் தான் என்பதாக அந்த செய்தி எடுத்துச் சொல்கிறது. மதுவிலக்கு அறிவித்தால் அதுவே குடிவிற்பவர்களையும், குடிப்பவர்களையும் ரகசியமாக செயல்படும்படி ஆக்கிவிடும் என்றும் வாதம் செய்கிறார்கள்.
மது எனும் செயற்கைப் போதை ஏறுவதற்கு முன்பே, ஆணாதிக்கம் மற்றும் கலாச்சாரக் காவலர்கள் எனும் இயற்கை போதை ஏறியிருப்பதற்கான சூழல் அங்கே கோரமுகத்தைக் காட்டினால், எங்கேதான் அதன் அடிப்படை முகத்தை காட்டாமல் இருக்கிறது என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது.

Thursday, April 1, 2010

ஆயுதம் விற்கும் சாவு வியாபாரிகளைத் தடுக்க முடியுமா?

சமீபத்தில் ஒவ்வொரு நாட்டின் ஆயுத வியாபாரிகள் பற்றிய செய்திகளும் பகிரங்கமாக வந்து கொண்டிருக்கின்றன. சிறிய ஆயுதங்கள் என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கிகள், பிஸ்டல்கள் முதல் தானியங்கி ஆயுதங்களான ஏ.கே47 மற்றும் சிறிய இயந்திர துப்பாக்கிகள், நடுத்தர இயந்திர துப்பாக்கிகள், ஏவுகணை ஆயுதங்களான சாம்7, ராக்கெட் புரொப்பல்லர் போன்ற எல்லாவகை ஆயுதங்களும், அவற்றிற்கான தோட்டாக்களும், சிறிய வகை பீரங்கிகள் அவற்றிற்கான ஷெல்கள், கிரனேடுகள் மற்றும் கையெறி குண்டுகள் என பல்வேறு வகைப்பட்ட ஆயுதங்களும் இன்றைய உலகச்சந்தை யிலே காசிருந்தால் வாங்கலாம் என்ற நிலைமை இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் இங்கிலாந் திலிருந்து 2 நாட்களுக்கு முன்னால் வந்த செய்தி ஆச்சரியத்தைத் தருகிறது. இலங்கை நாட்டிற்கு ஆயுதங்களை இங்கிலாந்து நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்து கொண்டிருந்த 9 நிறுவனங்களின் உரிமங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இலங்கைக்கு போர் நிறுத்தம் அமலில் இருந்த காலத்தில், இங்கிலாந்திலிருந்து ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வந்த நிறுவனங்களின் செயல்களுக்காக, ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் என்ற மக்களவை வருத்தம் தெரிவித்துள்ளது. ஹவுஸ் ஆஃப் காமன்ஸின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அதன் உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக் குழு அளித்துள்ள அறிக்கையை இரண்டு நாள் முன்பு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வெளி யிட்டார்கள். அதில் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த குழு முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இங்கி லாந்தின் வெளிவிவகார காமன்வெல்த் அலுவலகத்திற்கான அமைச்சர், நீண்ட காலமாக இலங்கைச் சூழ்நிலை பற்றி இங்கிலாந்து அரசாங்கம் அக்கறை செலுத்தி வருகிறது என்றார். அதேநேரம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறது என்றார். இங்கிலாந்து அரசாங்கம் மறுஆய்வு செய்ததின் அடிப்படையில் தான் 2009ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் 9 நிறுவனங்களுக்கான உரிமம் பறிக்கப்பட்டது என்று அமைச்சர் விளக்கியிருந்தார். இலங்கையில் இருக்கும் மோதல் சூழ்நிலை பற்றி, ஆயுத எதிர்ப்பு துறையின் துணைத் தலைவரான டேவிட் ஹால், கடந்த காலத்தில் நடந்த ஆதாரங்களை கணக்கிலெடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என உறுதி அளித்தார். அதிலும் குறிப்பாக நிலையற்ற நாடுகள் பற்றிய மதிப்பீட்டிற்கு காலம் எடுத்துக் கொண்டு கவனிப்பது என்றும், அமைதி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைத் தேட வேண்டும் என்றும் கூறினார்.
உலகம் முழுவதும் இன்று ஆயுதப் பண்பாடு அதிகமாகப் பரவி வருகின்ற வேளையில், அதை ஆட்சியில் அமர்ந்தி ருக்கின்ற அமைப்பாக்கப்பட்ட அரசுகள் எப்படி பயன்படுத்துகின்றன என்பதும், சுதந்திரமான கட்டுப்பாடற்ற உற்பத்தி முறை மற்றும் சுதந்திரமான வணிகம் என்ற பெயரில் லாபநோக்கத்தை மட் டுமே குறிவைத்து செயல்படும் சில பன் னாட்டு மூலதன வியாபாரிகள் இதற்கு காரண கர்த்தாக்களாக இருக்கிறார்கள் என் பது அடிப்படையான ஒரு உண்மை. சமீ பத்திய நாட்களில் நடந்த ஆயுத வியா பா ரிகளின் விற்பனைகளை கணக்கில் எடுத் தாலும் நமக்கு வியப்பாக இருக்கும்.
நேட்டோ படைவரிசையில் ஒரு பகுதி யான துருக்கி நாட்டின் கப்பல்படை 8 ஹெலிகாப்டர்களை நிறுத்தக் கூடிய தளம் கொண்ட ஒரு கப்பலை வாங்குவ தற்கான முயற்சியில் இறங்கியது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்று அழைக்கப்படும் ஒரு பின்மெக்கானிக்கா கம்பெனி, கூடுதலாக இங்கிலாந்து ராணு வத்திற்கு 10 லின்ஸ் எம்.கே.9 வகை ஹெலிகாப்டர்களை விற்பதற்கு 4 கோடி டாலர் ஒப்பந்தத்தை செய்துள்ளது. கத்தார் நாட்டின் தோஹா துறைமுகத்தில், 2வது தோஹா அனைத்து நாட்டு கடல்வழி பாதுகாப்பு கண்காட்சிக்கு குறைந்தபட்சம் 15 போர்க் கப்பல்களை, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து தருவிக்கிறது. அவற்றில் பெரிய கப்பலாக அமெரிக்க கப்பல்படையின் 208 எம் நீளமுள்ள மேசா வெர்டே இருக்கும். அதற்கு சமமாக இங்கிலாந்து நாட்டின் கப்பல் படையின் ஆர்.எப்.ஏ. என்ற லைமேபே என்ற 190எம் நீளம் கொண்ட போர்க்கப்பல் இருக்கும். அந்த கண்காட்சியில் துருக்கியின் 139 எம் கொண்ட டி.சி.ஜி. ஜெம்லக், 133 எம் உள்ள அமெரிக்க கப்பல் படையின் எச்.எம்.எஸ். செயிண்ட் அலபான்ஸ், 125 எம் கொண்ட பிரான்ஸ் போர்க்கப்பல், 118 எம் கொண்ட ஆஸ்திரேலியா போர்க்கப்பல் ஆகியவற்றுடன் 126 எம் கொண்ட ஐஎன்எஸ் பிட்வா என்ற இந்திய போர்க் கப்பலும் இடம்பெறுகிறது. இதன் மூலம் உலக ஆயுதமயமாக்கல் என்ற அழிவுப் பாதையிலே, மேற்கத்திய நாடுகளின் ஆயுதந்தாங்கிய அணிவகுப்புப் பட்டியலில், இந்திய அரசும் இணைந்துக் கொண்டுள்ளது என்பது பட்டவர்த் தன மாகியுள்ளது.
தோஹா துறைமுகத்தின் ஆயுதந் தாங்கிய போர்க்கப்பல்களின் வரிசையில் பட்டியல் இடப்படும் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு பொருளாதாரத்தில், வளர்ந்த நாடுகளாக வரிசைப்படுத்தப்பட்டவை. ஆனால் இந்தியா மட்டும் வளரும் நாடாகவோ, வளராத நாடாகவோ, ஏழை நாடாகவோ விவரிக்கப்படும் ஒரு நாடு. பெருவாரியான தங்கள் நாட்டு மக்கள் தொகையை, வறுமையின் எல்லைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களாகவோ அல்லது அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கக்கூடியவர்களாகவோ வைத்திருக்கின்ற ஒரு நாடு, இவ்வாறு உலக நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு, ஆயுதபாணியாக்கப்பட்ட பட்டியலில் சேர்ந்திருப்பது பெருமைக்குரியதா?
மேற்கண்ட கேள்வியை அமைதி விரும்புவோரும், போர் எதிர்ப்பாளர் களும், ஆயுதக் கலாச்சாரத்தை மறுப்ப வர்களும், அணு ஆயுத உற்பத்தியையும், சோதனையையும், பயன்படுத்தலையும் எதிர்த்துக் குரல் கொடுப்பவரும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கிலாந்தில் இருக்கின்ற ஆயுத வியாபார நிறுவனங்கள், இங்கிலாந்து ஆயு தப் படைகளுடன், தொழிற்
சாலையில் தொடங்கி போர்க்களம் வரை இணைந்தே செயல்படுகிறார்கள். உதார ணமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இறக்கி விடப்பட்டுள்ள இங்கிலாந்து ராணுவத்துடன் இணைந்து, இங்கிலாந்து ஆயுத தொழிற்சாலைகளைச் சேர்ந்த 4,000 பேர் இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது பன்னாட்டு மூலதன ஆயுத உற்பத்தியாளர்களான, லாபம் ஈட்டும் தனியார் நோக்கங் களுக்கு ஏற்றாற்போல், ஒரு நாட்டின் வெளி விவகாரக் கொள்கை தீர்மானிக்கப்படும் என்பதை நிரூபித்து நிற்கிறது. ஆயுத உற்பத்தி செய்யும் ஒரு தனியார் நிறுவனம், தன்னுடைய உற்பத்தி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தான் விரும்ப முடியும். அதற்காக தொடர்ந்து போர்கள் நடந்து கொண்டேயிருக்க வேண்டும். இப்படிப்பட்ட போர்களை நடத்துகின்ற அல்லது திட்டமிடுகின்ற அரசுகளுடன் போர்க்களத்தில் இறங்கி தனியார் நிறுவன ஊழியர்கள் செயல்பட அனுமதிப்பது என்பதே, அவர்களது லாபவெறிக்கு துணைப் போவது என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
இப்போது ரஷ்ய நாடும் தென்அமெரிக் காவில், வெனிசுலா மட்டுமல்லாமல் வியட்நாம் உட்பட நாடுகளுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. அதேபோல ரஷ்ய ஆயுதங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், குறிப்பாக வடஆப்பிரிக்க நாடுகளுக்கும் விற்கப் படுகின்றன. இந்தியாவிற்கு 2007ம் ஆண்டு 800 கோடி டாலருக்கும், 2008ம் ஆண்டு ரஷ்யா 835 கோடி டாலருக்கும் ஆயுத விற்பனை செய்துள்ளது.
இப்போது நிர்ப்பந்தமான நிலையை எடுத்திருக்கும் இங்கிலாந்து அரசு 2008 ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து 2009 மார்ச் 31ம் தேதி வரை இலங்கை அரசக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய 31 உரிமங்களை வழங்கியுள்ளது. அவை அனைத்துமே இலங்கை அரசால் விடு தலைப்புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்றைக்கு அரசியல் அதிகார சமன்பாட்டில் வந்தி ருக்கும் மாற்றங்களையொட்டியும், பொது மக்களின் எதிர்ப்பையும், ஈழத் தமிழர்களின் விழிப்புணர்வால் இங்கி லாந்து நாட்டிற்குள் உருவாகியுள்ள அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கணக்கில் கொண்டு, சில மாற்றங்கள் ஏற்பட் டிருக்கலாம். ஆனால் அடிப்படையில் இத்தகைய நாட்டு அரசுகள் தனியார் ஆயுத வியாபாரிகளை ஊக்குவித்து, பிற்போக்கு அரசுகளுக்கு வியாபாரம் செய்து, உரிமைக்குப் போராடும் மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. ஆகவே ஆயுத விற்பனை செய்யும் சாவு வியாபாரிகளுக்கு எதிரான, உலகம் தழுவிய ஜனநாயக குரலை எழுப்புவது ஒரு அவசியத் தேவையாகிறது.

Wednesday, March 31, 2010

எதிர்கட்சியில்லா தேர்தல் ஜனநாயகம் எங்கே இழுத்துச் செல்லும்?

மியான்மர் நாடு தேர்தல் பாதைக்கு திரும்பப் போகிறதாம். அதையொட்டி வருகின்ற தேர்தலில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் போட்டியிடக் கூடாது என்று ஒரு சட் டம் வந்துள்ளதாம். அதனால் எதிர்கட்சி தலைவியாக அறியப்பட்ட ஆங் சான் சூ கி தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலைமை எழுந்தது. அதையொட்டி அவரது கட்சியான தேசிய ஜனநாயக லீக் இந்த தேர்லைப் புறக்கணித்துள்ளது. அதன் மூலம் மியான்மர் என்ற பர்மாவில் நடக்கயிருக்கும் தேர்தல் அல்லது அரசியல் பாதை தவறானது என்ற செய்தியை உலக சமூகத்திற்கும், பர்மாவின் மக்களுக்கும் அதேசமயம் அங்கே ஆளுகின்ற ராணுவ ஆட்சியாளர்களுக்கும் அறிவிப்பதாக அது இருக்கிறது. அதேசமயம் இத்தகைய புறக்கணிப்பு தேசிய ஜனநாயக லீக் கட்சியை தனிமைப்படுத்தி விடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஜனநாயகத்திற்கு ஆதரவான கட்சி என்று அறியப்படும் அந்த கட்சியை இதை வைத்தே கேள்வி கேட்கும் நிலையும் வரும். அதேசமயம் ராணுவ ஆட்சியாளர்களை யாருமே எதிர் கொள்ள முடியாது என்ற உணர்வும் எழலாம். அனைத்து நாட்டு சமூகத்திற்கு சூ கியும், தேசிய ஜனநாயக லீக்கும் மியான்மரில் ஜனநாயகத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையிலும், அவர்கள் தான் மக்களின் தேர்வு என்ற புரிதலிலும் இருந்தார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்பது அந்த அனைத்து நாட்டு சமூகத்திற்கு ஒரு பெரும் அதிர்ச்சியானச் செய்தி தான்.
எதிர்கட்சியின் புறக்கணிப்பு தந்திரத்தின் மூலம், மீண்டும் ராணுவ தளபதிகளை ஆட்சியில் அமர்த்தக் கூடிய ஒரு செயல் நிறைவேறி விடும். நூற்றுக்கணக்கான தேசிய ஜனநாயக லீக் ஊழியர்களை சிறையில் அடைத்து, பல ஆண்டுகளாக அவர்களது கட்சி அலுவலகத்தை மூடி வைத்து, இந்த மாதம் அவற்றை மீண்டும் திறக்க அனுமதித்துள்ள ராணுவ தளபதிகள் மீண்டும் அதிகாரத்தில் தொடர்வதற்கு ஏதுவாகப் போய்விட்டது என்ற கருத்தும் அங்கே இருக்கிறது.
இந்தியாவின் எல்லையோரத்தில் இருக்கும் பர்மா என்ற இந்த மியான்மர் நாட்டில் 1990ம் ஆண்டிற்குப் பிறகு இப்போது 2010ல் தான் தேர்தல் அறிவிக் கப்படுகிறது. 90ம் ஆண்டில் பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சூ கி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 59% வாக்குகளை அவர் பெற்றிருந்தார். மியான்மர் நாடாளுமன்றத்திற்கான 492 தொகுதிகளில், 394ல் சூ கியின் கட்சி வெற்றி பெற்றிருந்தது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, ராணுவ தளபதிகளால் சூ கி வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் அவர் வீட்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்தார். 1990ம் ஆண் டிலேயே ராப்டோ பரிசு, சகரோ பரிசு ஆகியவற்றை கருத்துரிமைக்காக அவர் பெற்றிருந்தார். 91ம் ஆண்டில் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றார். 92ம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அனைத்து நாட்டு புரிதலுக்கான ஜவ ஹர்லால் நேரு விருது பெற்றார். இப்போது 64 வயதடைந்துள்ள ஆங் சான் சூ கி, உலக மக்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் பெற்றிருந்தும் கூட, மீண்டும் ஜனநாயக ரீதியாக வெல்ல முடியாத நிலைமை.
1945ம் ஆண்டு ஜுன் 19ம் நாள் ரங்கூனில் பிறந்த சூ கியின் தந்தை நவீன பர்மாவின் ராணுவ நிறுவனராகவும், தளபதியாகவும் இருந்தார். 1947ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் பர்மாவின் விடுதலைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்றவர் அவர். அதே ஆண்டில் எதிர்ப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். சூ கி தனது பட்டப் படிப் புக்குப் பிறகு நியூயார்க் நகரில் வாழ்ந்து வந்தார். ஐ.நா.சபையின் பணிகளில் மூன்றாண்டு பணியாற்றினார். 1972ல் டாக்டர் மைக்கேல் அரிஸ் என்பவரை மண முடித்தார். அவருக்கு அலெக்சாண்டர் அரிஸ், கிம் என்ற மகன்கள் பிறந்தனர். 1988ல் பர்மாவுக்கு திரும்பினார். 1999ல் தனது 53வது வயதில் அவரது கணவர் அரிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார். 1989ல் இருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்து சூ கியை தனது இறுதி நாட்களில் 5 முறை மட் டுமே அவரது கணவரால் சந்திக்க முடிந்தது. இங்கிலாந்தில் இருக்கும் தனது குழந்தைகளுடனும் தொடர்பறுந்த நிலை யில் சூ கி வீட்டுச் சிறையில் இருந்தார்.
1988ம் ஆண்டிலேயே ராணுவ தளபதி நீவின் ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்திற்கான மக்களின் போராட்டம் வெடித்தது. அப்போது சூ கி 5 லட்சம் மக்களுக்கு மத்தியில் ஜனநாயகத்திற்காக உரைநிகழ்த்தியுள்ளார். அதன்பிறகு புதிய ராணுவத் தலைமை ஆட்சியை கைப்பற்றியது. அதையொட்டியே சூ கியை பொதுச்செயலாளராக கொண்டு ஜனநாயகத்திற்கான தேசிய லீக் உரு வானது. நாட்டை விட்டு வெளியேறுவதாக இருந்தால், வீட்டுக் காவலில் இருந்து விடுதலைச் செய்கிறோம் என்பது தான், கடந்த 20 ஆண்டுகளாக சூ கி முன்னால் வைக்கப்பட்ட கட்டளையாக இருந்தது.
மியான்மரில் ராணுவ ஆட்சியை மாற்று வதற்கான முயற்சியை மேற்கொள்ளாத இந்திய அரசும், சீன அரசும் சமீபத்திய ஐ.நா.வின் முயற்சிகளையும், அமெரிக்காவின் தலையீடுகளையும் எதிர்க்க முடியவில்லை. மியான்மரின் முன்மாதிரி என்பது, பொதுவாகவே உலக அரங்கில் தேர்தல் ஜனநாயகம் என்ற முன்னேறிய ஒரு வழிமுறை அமுலாகின்ற ஒவ்வொரு நாட்டிலும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது. சமீபத்தில் அதிபர் தேர்தலை முடித்து விட்டு, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்ற இலங்கைத் தீவில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ள ஒரு குழுவினர், இதேபோலத் தான் நடந்துக் கொள்கிறார்கள். எப்படி எதிர்கட்சிகளை லாவகமாக இல்லாமல் செய்து, எதிர்ப்பாளர்களை சிறைக்குள் தள்ளி தொடர்ந்து ஆளக் கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்தலாம் என்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இதனால் ஆட்சி முறைகளிலேயே, நாடா ளுமன்ற பாதை தான் சிறந்தது என்பதும், அதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்தை ஏற்படுத்துவது என்பதும் கேலிக்குரியதாக ஆகிக் கொண் டிருக்கிறது என்ற புதிய செய்தியை ஜனநாயக உணர்வாளர்கள் கண்டிப்பாக கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கத்திய நாடுகளான ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இஸ்ரேல், ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் ஆதரவு பெற்றிருந்தும் கூட, உலக அரங்கில் ஜனநாயகத்திற்கான மியான்மர் இயக்கத்திற்கு ஆதரவு இருந்தும் கூட, ஆங் சான் சூ கியால் தனது நாட்டில் ஜனநாயகத்தை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியவில்லை. மியான்மர் நாட்டில் 14 மாநிலங்கள் இருக்கின்றன. அவை மாவட்டங்களாகவும், நகரங்களாகவும், கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவைப் போன்ற ஒரு கட்டமைப்பு தான் அங்கே இருந்துக் கொண்டிருக்கிறது. மியான்மர் மீது பொருளாதார தடையை விதித்திருந்த அமெரிக்கா சமீபத்தில், ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் உத்தர வாதத்தில் அதை திரும்பப் பெற்றது. அப்படி மீட்டெடுக்கப்படும் ஜனநாயகம் தான் இந்த தேர்தலை இப்படி நடத்துகிறது. அனைத்துலக சமூகங்களும் ஜனநாயக ரீதியான தேர்தல் நடத்தப்பட்டது என்று காட்டப்பட்டாலும், உள்நாட்டில் எதிர்கட்சி செயல்படுவதற்கே அனுமதிக் கப்படவில்லை என்ற அளவில் தான் அந்த தேர்தலும் நடைபெறுகிறது. மியான்மர் நாட்டிற்கு வெளிநாட்டு மூல தனம் என்பது மேற்கத்திய வளர்ந்த நாடுகளில் இருந்து வருவதில்லை. சீனா, சிங்கப்பூர், தென்கொரியா, இந்தியா, தாய்லாந்த் ஆகிய நாடுகளில் இருந்து தான் மூலதனம் இறக்குமதியாகிறது. நாட்டின் 60% விளைச்சல் நிலத்தில் நெல் உற்பத்தியை செய்கிறார்கள். அப் படிப்பட்ட ஒரு நாட்டில் ஜனநாயக ரீதியான தேர்தல் முறையை சதிசெய்து உடைப்பது என்பது அங்கே பகிரங்கமாக நடந்துள்ளது. இதேநிலைமை தான் இலங்கைத் தீவில் நடத்தப்படுகின்ற தேர்தல்களிலும் எதிரொலிக்கிறது. இந்தியாவில் நடத்தப்படும் தேர்தல் முறைகளில், எதிர்கட்சிகளை உடைப்பது, இல்லாமல் செய்வது ஆகிய தந்திரங்களை செயல்படுத்திக்காட்டாத ஆளும் கட்சி களை காண்பது அரிதாக இருக்கிறது. அதனால் இந்தக் காலகட்டம் ஜனநாயக தேர்தல் முறைகளை, உடைப்பதற்கான காலகட்டமா? மரத்தின் நுனிக்கிளையில் இருந்தே, அடிக்கிளையை வெட்டுகின்ற காலகட்டமா? எதிர்கட்சிகளை இல்லாமல் செய்வது ஆளும் கட்சிக்கு தற்காலிக வெற்றியை அளிக்கலாம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயக முறைக்கு நிரந்தரத் தோல்வியை அளிக்காதா? இந்தியாவில் இருக்கும் ஜனநாயக சக்தி கள், இத்தகைய கேள்விகளுக்கு விடை தேடினால் நல்லது.

Tuesday, March 30, 2010

அல்கொய்தா தேனீக்கூட்டை கலைக்கிறாரா ஒபாமா?

நேற்று ரஷ்யாவின் மத்திய மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையங்களில் 2 மனித வெடிகுண்டுகள் வெடித்தன. இரண்டும் பெண் மனிதவெடிகுண்டுகள். முதல் பெண் போராளி தன்னை வெடித்துக் கொண்டு 45 நிமிடங்கள் கழித்து, அடுத்த பெண் போராளி இன்னொரு மெட்ரோ நிலையத்தில் தன்னை வெடித்துக் கொண்டுள்ளார். 50க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இது
செசன்யா தனிநாடு பிரிவினைக் கோரும் போராளிகளால் நிகழ்த்தப்பட்டது என்று முதலில் சந்தேகம் கொண்டார்கள். அதற்குள் செசன்யா விடுதலைப் போராளிகள், நடந்த சம்பவத்திற்கு உரிமைக் கோரி விட்டார்கள். தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டு, அதன் மூலம் தங்கள் நாட்டின் விடுதலைக்கு போராடும் இந்தப் போராளிகள், யாருடைய ஆதரவில், யாருடைய உதவியில் போராடுகிறார்கள் என்ற கேள்வி மேலை நாட்டு வட்டாரங்களில் கேட்கப்படுகிறது. 2004ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த தற்கொலை பயங்கரவாதம் என்ற நிகழ்வு ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வருகிறது. கடந்த காலங்களில் செசன்யா விடுதலை போராளிகளுக்கு, அல்கொய்தா பயிற்சிக் கொடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது. ஆப்கான் தாலிபன் போராளிகளும் செசன்யா விடுதலை இயக்கத்திற்கு உதவியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள தாலிபன்கள் வேறு என்றும், ஆப்கானிலுள்ள தாலிபன்கள் வேறு என்றும், அமெரிக்கா பிரித்து விளக்குகிறது. அதில் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தாலிபன்களை, அல்கொய்தாவுடன் கூட்டுச் சேர்ந்துச் செயல்படுவதாக அவர் கள் அறிவிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஆப்கான்
சென்றுள்ளார். தாலிபன்களுடைய எந்த வகையிலும் ராணுவ ரீதியாக செயல்பட விடமாட்டோம் என்பது ஒபாமாவின் சூளுரை. அல்கொய்தாவை தோற்கடித்தே காட்டுவோம் என்பது அவரது வைராக்கியம். பாகிஸ்தான் அரசினுடைய உதவியுடன், பாகிஸ்தான் மண்ணில் இருந்து ஆப்கான் நாட்டிற்குள் தாக்குதலை தொடர்ந்து எடுத்துச் செல் வது அவரது வியூகம். தான் அதிபராக இருக்கும் போதே 2012ம் ஆண்டுக்குள் அல்கொய்தாவையும், தாலிபன்களையும் தோற்கடித்து விட வேண்டும் என்ற நோக்கில் அவரது ஆப்கான் வருகை அமைந்துள்ளது.
ஆப்கான் நாட்டில் இருக்கின்ற அமெரிக்க ராணுவத்தையும், நேட்டோ படைகளையும் உற்சாகப்படுத்தி தங்களது இலக்கை அடைய ஒபாமா துடிக்கிறார். அதற்காக ஆப்கானிலுள்ள பக்ரம் பகுதியில் நிற்கும் அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடியிருக்கிறார். அதேபோல அமெரிக்காவால் தேர்தல் குளறுபடிகள் மூலம், ஆப்கானில் பொம்மையாக நிறுவப் பட்டுள்ள அதிபர் ஹமித் ஹார்சாயை காபூலில் சந்தித்திருக்கிறார். ஆப்கான் பிரச் சனையில் குழம்பிய நீரில் மீன் பிடிக்க இந்திய அரசுக்கும் ஆசைதான். ஆனால் வலியச்சென்று ஆதரவுக் கொடுக்கும் இந்திய அரசை அமெரிக்கா அதே மட்டத் தில் அங்கீகரிக்கத் தயாராயில்லை. தாலிபன்களில் வென்றெடுக்கப்பட முடிந்தவர்களுக்கு, நிதியுதவி செய்ய பல லட்சம் கோடி அமெரிக்க பணத்தை இறக்கி விட தயாராயிருக்கும் அமெரிக்க அரசு, அதற்கான சட்ட முன்வடிவையும் அமெரிக்க செனட் டில் நிறைவேற்றியுள்ளது. அதன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் கைநிறைய பணம் கொடுத்து, அவர்கள் உதவியுடன் தாலிபன்களை துரத்துவதற்கு அல்லது தோற்கடிப்பதற்கு அல்லது பிளவுப்படுத்தி வெல்வதற்கு தனது முழு முயற்சியை, அமெரிக்கா செலவழிக்கிறது. அதனால் இந்தியாவின் அண்டை நாடான ஆப் கானில் தனது போர் தந்திரங்களை செயல்படுத்த, இந்தியாவின் இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானை மட்டுமே அமெரிக்கா சார்ந்திருக்க விரும்புகிறது.
அமெரிக்க அரசுக்கு அல்கொய்தாவின் இருத்தலேக் கூட, அச்சுறுத்தலை ஏற்படுத் துகிறது. அதனால் தான் ஆப்கானிலுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களிடம் பேசிய ஒபாமா 9/11 தாக்குதலை அவர்களுக்கு நினை வுப்படுத்தினார். அதை செய்தவர் கள் என்று அல்கொய்தாவை அடையாளப் படுத்தினார். அல்கொய்தாவுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக ஆப்கான் மலைகளும், காடுகளும் இருப்பதை சுட்டிக் காட்டினார். அத்தகைய பாதுகாப்பான இடம் ஒன்றை அல்கொய்தாவிற்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தினார். அமெரிக்காவை பாதுகாப்பாக வைத்திருக் கத் தான், அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானில் இறங்கியிருக்கிறார்கள் என்பதாக அந்த வீரர்களுக்கே எடுத்துச் சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.
சமீபத்தில் லண்டனில் நடந்த ஆப்கான் பற்றிய மாநாட்டில், அமெரிக்கா ஆப்கானில் பலவீனப்பட்டுக் கொண் டிருப்பதாக வெளிப்பட்ட கருத்துக்கள் கெடுவாய்ப்பானவை என்று தனது ராணுவ வீரர்களுக்கு விளக்கினார். அமெரிக்காவும், நேட்டோ படைகளும் கூடுதலாக 30,000 ராணுவ வீரர்களை, ஆப்கானுக்குள் இறக்கி விட முடிவு செய்திருப்பதும், தங்கள் பணியை முடித்து விட்டு தங்கள் ராணுவங்கள் ஆப்கானை விட்டு வெளியேறும் என்றும் அமெரிக்கா அறிவித்திருந்தது. அந்த பணிமுடிப்பு செயலுக்காகத் தான், இப்போது தாக்குதலை துரிதப்படுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. ஆப்கான் அதிபர் கார்சாய்யுடன் புதிய புரிதலின்மை ஏற்பட்டுள்ளதை நீக்க ஒருபுறம் ஒபாமா முயன்றிருக்கிறார். தங்கள் நாட்டு பாதுகாப்பையும், ஆப்கா னிஸ்தான்பாகிஸ்தான் பிராந்திய பாது காப்பையும் இணைத்து பார்க்க வேண்டும் என்பது அமெரிக்காவின் குறிக்கோள். அதாவது அமெரிக்காவின் பாதுகாப்பே, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் எதிர்ப்பு சக்திகள் நடமாட்டத்தை இல்லாமல் செய்வதில் இருக்கிறது என்ற வேகத்துடன் அவரது செயல்பாடு பளிச்சிடுகிறது. தாங்கள் அல்கொய்தா மற்றும் தாலிபன் தலைமைக்கெதிராக கடும் தாக்குதல்களை நடத்துவதாகவும், அதில் அவர்கள் தலைமை நிலை குலைந்திருப்பதாகவும் ஒபாமா கூறியுள்ளார். அவர்களது நடமாட்டமும், பயிற்சி எடுத்தலும்,
சதி செய்தலும், தாக்குதலும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்குகிறார். ஆனால் நடைமுறையில் இதே புரிதலை அல்கொய்தாவினர் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. அனைத்து நாட்டு விதிகளின் படி, தங்கள் சுய பாதுகாப்புக்காக, தாக்கு தல் நடத்த தங்களுக்கு உரிமை இருக்கிறது என்பது அமெரிக்காவின் வாதம்.
அதேசமயம் பாகிஸ்தான் அரசோ, அமெரிக்க தூதரக ஆதரவுடன், ஆப்கானில் இந்தியாவின் நடமாட்டத்தையே இல்லா மல் செய்வதற்கு உள்ள முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒபாமாவின் ஆப்கான் பயணத்தின் மூலம், லஷ்கர் இ தொய்பாவையும் எதிர்த்து இயங்க வேண்டிய அவசியத்தை அவர் உணர் வாரா என்பதை மட்டும் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் விவாதிக்க விரும்புகிறார்கள். ஆனால் ஆண்டுபலவாக ஆப்கான் மலைகளிலும், காடுகளிலும் இருந்து ஆதிவாசிகளுடன் இரண்டறக் கலந்து, ஆப்கான் ஆதிவாசிகள் மத்தியில் இருந்தே எழுகின்ற தாலிபனுக்கு உயிர் கொடுத்து, வளர்த்திருக்கின்ற அதன் மூலம் தானும் வளர்ந்திருக்கின்ற அல் கொய்தாவை, அமெரிக்கா முன்வைத்திருக் கும் போர்த் தந்திரங்களால் அழிக்க முடியுமா? அல்கொய்தாவை தாக்கும் போது, அந்த போராளிகள் சிதறி பல் வேறு இடங்களிலும், மாறிச் சென்று விரி வடைந்து விடமாட்டார்களா?
செசன்யா விடுதலை போராளிகளுக்கு அல்கொய்தாவின் தொடர்ந்த ஆயுதப் பயிற்சி, வெடிகுண்டு பயிற்சி ஆகியவை ஏற்கனவே 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலை யத்தில் நடந்த குண்டுவெடிப்பின் மூலம் அம்பலமானது. அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் நடந்த தற்கொலைப்படை தாக்குதல், நவம்பர் மாதம் நடந்த ரயில் தாக்குதல் ஆகியவை அதை மறுஉறுதி செய்தன. சென்ற ஆண்டு சீனாவில் நடந்த உய்கூர் எழுச்சியிலும், அல்கொய்தாவின் கரங்கள் வெளியே தெரிந்தன. உஸ்பெக்கின் ஆயுத எழுச்சிக்குப் பின்னாலும் அல்கொய்தா இருக்கிறது. மத்திய ஆசிய குடியரசுகளில் அவை பிரபலமாக இருக்கின்றன. வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அல்கொய்தாவால் பயிற்சிக் கொடுக்கப்பட்டு, உஸ்பெக்ஸ், செசன்யா, உய்கூர் ஆகிய போராளிக் குழுக்களை ஊக்குவித்து ரஷ்யா, சீனா, உஸ்பெகிஸ்தான், கசக்ஸ்தான், தஜிகிஸ் தான் ஆகிய வட்டாரங்களில் இன்று சிதறியும், விரிந்தும், நீண்டும் இருக்கின்ற எதிரொலிகள் இவர்களால் நிறுத்தப்பட முடியுமா? தேனீகூட்டை தாக்கி அது சிதறி, பல இடங்களில் பரவுவதற்கு தான், ஒபாமாவின் தந்திரம் பயன்படுமா என்ற கேள்வி எழுகிறது.

Monday, March 29, 2010

இலங்கை நாடாளுமன்ற தேர்தலும், முடிக்கப்படாத முக்கியப் பிரச்சனைகளும்

வருகிற ஏப்ரல் 8ம் நாள் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப் படயிருக்கிறது. அதிகமானசொல் லாடல்கள் ஆக்கிரமித்துள்ள தேர்தலாகத் தான் இந்த முறையும் அது இருக்கிறது. கடந்த தேர்தல்கள் எல்லாமே இதுபோன்ற தன்மையில் தான் நடைபெற்றன. இந்தியாவில் ஒவ் வொரு பொதுத் தேர்தலிலும் எப்படி வாக்குகள் பெறுவதற்காக வாக்குறுதிகள் கொடுக் கப்படுமோ, அதுபோல சற்றும் குறையாத நிலையில் தான் இலங்கைத் தேர்தல்களும் நடக்கின்றன. ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் என் பது 60 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரு பிரச்சனை. அதை தீர்ப்பதற்கான அணுகு முறைகளை ஒவ் வொரு முறையும், ஒவ்வொரு வடி வில் ஆளும் வர்க்கக் கட்சிகளைச் சேர்ந்த வர்கள் வாக்குறுதிக் கொடுப்பார்கள். அது வும் பழகிப்போன செய்தியாகப் போய் விட்டது.
சந்திரிகா குமாரதுங்கா போர் எதிர்ப்பு பேசி ஆட்சிக்கு வந்தார். பதவிக்கு வந்த பிறகு தமிழர்கள் மீது போரை ஏவிவிட்டு, இனவாத தன்மையைக் காட் டினார். அதேபோல மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கு வரும்போது, சிங்கள தேசிய இனவெறியைத் தூண்டிவிட்டு தேர்தல் பரப்புரைச் செய்தார். ஆட்சிக்கு வந்த வுடன் போரை நடத்தி, இலங்கையின் பொருளாதாரத்தையும், மக்கள் வாழ் நிலையையும் ஒழித்து விட்டார். பொன் சேகா அதிபர் தேர்தலில் மகிந்தாவுக்கு எதிராக போட்டியிட்டக் காரணத்தினால், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள் ளாக்கப்பட இருக்கிறார். அதன் மூலம் போர் வெற்றியை மகிந்தா கையெடுக்கலாம் என்றாலும், தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. கூடுதலாக சிங்கள பவுத்த பிக்கு மாணவர்களை, காவல் துறையில் வைத்து மகிந்தா அரசாங்கம் அடித்து வைக்கிறது. அப்படி இருந்த போதும், சிங்கள மக்கள் மத்தியில் பெரிய அளவில் வெறுப்பு, ஆட்சியாளர் மீது உருவானதா என்று தெரியவில்லை. பொன்சேகாவின் கைதும், புத்த பிக்கு மாணவர்களை அடித்து துவைப்பதும் மகிந்தாவின் பெருமைகளை கேள்விக் கேட்கின்றன. அதாவது தமிழர்களை எதிர்த்து போரிட்டு வெல்வது தான் தனது லட்சியம் என்ற சிங்கள இனவாத தன்மையை இனி மேலும் ராஜபக்சே கூறி ஏமாற்ற முடியாது. விடுதலைப் புலிகளை போரில் வெற்றி பெற்று, பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டோம் என்று வீராப்புக் கூறிக் கொண்டு, பயங்கரவாத எதிர்ப்பு மட்டுமே தன்னுடைய கொள்கை என்று இனியும் மகிந்தா பீற்றிக் கொள்ள முடியுமா? சிங்களர்கள் மீதும் தாக்குதல்களை குறிவைத்துச் செய்யக் கூடிய மகிந்தாவின் ஆட்சி, ஒரு குறிப்பிட்ட கும்பல் தனது அதிகார வெறிக்காக நடத்தப்படும் ஆட்சி தான் என்பது அம்பலமாகி நிற்கிறது.
மகிந்தாவின் இத்தகைய செயல்பாடுகள் அனைத்து நாட்டு சமூகத்தை, அவர் பக்கம் ஈர்க்கவில்லை. மேற்கத்திய நாடுகளும், ஐ.நா.வும் மீண்டும், மீண்டும் கூறி வரும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி இந்திய அரசும், சீன அரசும் கூட இப்போது எதிர்ப்புத் தெரிவிப்பது இல்லை என்று செய்தி வெளிவருகிறது. நேற்று வரை மகிந்தா ஆட்சிக்கு ஆதரவாக, ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் பேசி வந்த இந்திய அரசும், சீன அரசும் இப்போது மௌனம் சாதிப்பதே ஆச்சரி யமான செய்தி தான்.
மனிதஉரிமைகள், கருத்துரிமை, சுதந்திர மான ஊடக உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை செயல்படுத்துவதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்காத ஒரு அரசாங்கம், தனது அரசியல் தந்திரமாக அவசரகால அரசியலை பயன்படுத்தி வருகிறது என்பதாக இந்திய ராணுவத்தில் உளவு தலைமையாக இருந்த கர்னல் ஹரிஹரன் கூறியுள்ளார். அடிப்படையில் தமிழர்களின் இனப்பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு எந்தவொரு மனோபலமும் இல்லாத ஒரு சிங்கள அரசாங்கம், தங் களுக்குள்ளேயே பிரச்சனைகளை உரு வாக்கிக் கொள்வதும், அதிலேயே மூழ்கி விடுவதும் தான் இன்றைய நிலை.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 196 பேர் நேரடி உறுப்பினர்களாக தேர்ந் தெடுக்கப்படுவார்கள். இதில் மகிந்தா தலைமையிலான ஐக்கிய மக்கள் விடு தலை கூட்டணி பெரும்பான்மையை கைப்பற்றுவதற்கான அனைத்து தந்திரங்களையும் மகிந்தா செய்துள்ளார் என்கிறார்கள். விகிதாச்சார முறைப்படி தேசிய பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, போட்டியிடும் கட்சிகள் வாங்கியுள்ள வாக்குகள் விழுக்காடுகளை வைத்து தேர்ந்தெடுக்கப்படும் 29 உறுப்பினர்களையும் சேர்த்து, முழுமை யான எண்ணிக்கையை நாடாளு மன்றத்திற்கு உருவாக்குவார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய சவால் களைச் சந்திக்கிறது. இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோரது தலைமையை எதிர்த்து, வெளியே
சென்று புதிய அமைப்புகளை உருவாக் கிக் கொண்டவர்கள் கடுமையான விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள். அவர்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் குறிப்பிட்டு சொல் லப்பட வேண்டியவர்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜி லிங்கம், கஜேந்திரன் போன்றோர் செய்கின்ற பரப்புரைகள், மகிந்தாவை எதிர்த்தோ, டக்ளஸ் தேவானந்தத்தை எதிர்த்தோ இருப்பதை விட சம்பந் தத்தையும், சுரேஷையும் எதிர்த்து அதிக மாக இருக்கின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் அதிகமான ஈர்ப்பை வைத்திருந்தார்கள். அதனால் தான் அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக் கொண்ட தற்கிணங்க, தமிழ் மக்கள் பொன்சேகா விற்கு அதிகமான வாக்குகளை அளித் தார்கள் என்பதை மகிந்தா அரசாங்கம் கவனித்துக் கொண்டேயிருந்தது. அதை யொட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கின்ற செல்வாக்கை, எப்படியாவது உடைக்க வேண்டும் என்பது மகிந்தா கூட்டணியின் திட்டமாக இருக்கிறது. இயல்பாகவே வெளியேறிச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்வு பூர்வமான விமர்சனங்களை செய்து வந்தாலும், அவர்களது வாக்குப் பிரிப்பு மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல வீனப்படுத்தப்படும். பலவீனப்படுத் தப்படும் இடங்களில், டக்ளஸ் கட்சியும், பிள்ளையான் கட்சியும் அதிக வாக்குகளை பெற முடியும். இவ்வாறு தான் ராஜபக்சே திட்டமிடுகிறார். இத்தகைய திட்டத்தை தமிழ் மக்கள் எந்த அளவுக்கு புரிந்துக் கொண்டு செயல்படுத்த முடியும் என்ற கேள்வியும் விவாதமாக இருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழம் என்ற கொள்கையை கைவிட்டு விட் டது என்பது ஒரு விமர்சனம். ஓஸ்லா மாநாட்டில் புலிகள் முன்வைத்த கருத்துக் கோப்பை ஏற்கவில்லை என்றும், இன் னொரு விமர்சனம். ஆனால் சம்பந்தரோ, சுரேஷோ கூறும்போது, தாங்கள்
சுயநிர்ணய உரிமைக்கான எந்தவொரு லட்சியத்தையும் விட்டு விடவில்லை என்கிறார்கள். எப்படியோ தமிழர் அமைப்புகளுக்குள் பிளவு ஏற்பட்டால், சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு இன்றைய தேர்தலை சந்திப்பதற்கு அதுவே எளிதாக ஆகிவிடும் என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது என்ற கொள்கைக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களையும் கலந்துக் கொள்ள வேண்டும் என்று மட்ட கிளப் மாகாணத்தின் ஐ.தே.கா. வேட்பாளர் பஷீர் சுகதாவுத் கூறியுள்ளார். முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும், சிறுபான்மையினர் உரிமையை பறித்து அரசியல் சட்டம் உருவாகி விடுமோ என அஞ்சுவதாகவும் அவர் கூறி யுள்ளார். முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் அம்பாறை மாவட்டத்தில் அவர்களுக்கு அதிக நிலங்கள் சொந்தமாக இல்லை என்பதால் அரசு சிங்கள காலணியமயமாக ஆக்கிவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. போருக்குப் பிறகு முஸ் லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் நல்லிணக்கம் கூடி வருகிறது என்றும் கூறுகிறார்கள். இருவரும் இருபெரும் சிறுபான்மை சமூகங்கள் என்பதாக அவர்கள் கருதுகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு, கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் அமைப்புகளுடன் இந்தத் தேர்தலில் தோழமையை வைத்துக் கொண்டுள்ளது.
மேற்கண்ட செய்திகள் சிங்கள ஆட்சியாளர்களின், பிளவுப்படுத்தி வெல்லும் சதியை முறியடிக்குமா என்ற கேள்வியுடன், இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இன்றைய இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட, நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கின்ற குறைவான இடத்தில், தமி ழர்கள் எப்படி விவேகமாக காய் நகர்த்தப் போகிறார்கள் என்ற கவலை நமக்கு எழுகிறது.