Sunday, May 16, 2010

கல்வி வியாபாரமா? அடிப்படை உரிமையா?

சென்ற வாரம் தமிழக சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர், தனியார் பள்ளிகளுக்கு கட்டணங்களை ஒழுங்கு படுத்துவது பற்றிய அரசின் அறிக்கையை முன்வைத்தார். தமிழ்நாட்டில் இருக்கின்ற 10,934 தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு அரசு, கட்டண ஒழுங்கமைப்பு ஒன்றை அதில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 3 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என்ப தாகவும் கூறப்பட்டுள்ளது. கோவிந்தராஜன் குழு என்ற அரசால் நிறுவப்பட்ட, தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயிப்புக் குழு, பல்வேறு பிரச்சினைகளை விரிவாக ஆய்வு செய்த பிறகு இந்த கட்டண ஒழுங்கமைப் பை ஆலோசனையாக வைத்தது. பெற்றோர் கள் மற்றும் பள்ளிகளின் நலனை கணக்கில் கொண்டு இந்த ஒழுங்கமைப்பு செய்யப் பட்டது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கான ஆய்விற்கு அந்த குழு ஒரு கேள்வித் தாளை 10,934 பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தது. அதில் 10,233 பள்ளிகளிலிருந்து பதில்கள் வந்தன. அந்த பள்ளிகளின் வரவையும் செலவையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான கட்டண ஒழுங்கமைப்பு உருவாக்கப் பட்டது. செலவை விட மாணவர்களிடம் வாங்கும் கட்டணம் மூலம் வரவு அதிகமாக இருந்தால், அதைக் குறைத்துக் கொள்ளும் படி அந்தப் பள்ளிகளுக்கு வழிகாட்டல் கொடுக்கப்பட்டது. செலவு வரவை விட அதிகமாக இருக்கும் பள்ளிகளுக்கு, நிலவும் கட்டணங்களை வாங்க அனுமதி கொடுக்கப் பட்டது. ஆய்வுக் குழுவின் கேள்விகளுக்கு பதில் தராத 701 பள்ளிகளுக்கு, அண்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு போடப்பட்ட கட்டணங்களை குழு அறிவித்தது. நகரில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு ரூ.5000/யும், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.8000/யும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.9000/யும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.11,000/யும் சராசரியாக குழு நிர்ணயித்தது.
நகரில் சில மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.35,000/ ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் வசூல் செய்கின்றன. அதே சமயம் நகரில் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் பெரும்பான்மை யானவர்கள் ஒரு மாணவனிடம் ரூ.2000/ தான் வசூல் செய்கின்றன. அதே சமயம் நெல்லை மாவட்டத்தில் உள்ள கடைய நல்லூரில் ஒரு விடுதியுடன் கூடிய பள்ளியில் ரூ.1.25 லட்சம் பணத்தை ஒரு ஆரம்பப் பள்ளி மாணவனிடம் வசூலிக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியாக வந்தடைந்துள்ளது. அந்தப் பள்ளி ரூ.3000/ ஒவ்வொரு மாணவருக்கும் செலவழிப்பதாக கணக்கு காட்டியதால், அதையே கட்டணமாக கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தது. இது தவிர பள்ளியின் வளர்ச்சிக்கான செலவாக, 10% செலவினத்தைக் கூட்டிக் கொள்ளவும் அந்தக் குழு அனுமதித்துள்ளது. மேற்கண்ட ஒழுங்கமைப்பை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விவரங்கள் வியாபாரமாக்கி விட்ட கல்வியின் நிலைமையை படம் பிடித்துக் காட்டுகின்றது. அதே சமயம் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மேற்கண்ட கட்டண ஒழுங்கமைப்பின் மூலம், பள்ளி களை நடத்த முடியாது என்று கலகம் செய்யத் தொடங்கி விட்டன. பள்ளிகளின் தரம் குறைந்து விடும் என்று அந்த கல்வி முதலாளிகள் கூக்குரலிடுகிறார்கள். தங்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், வகுப்பறைகளுக்கு வண்ணம்பூசவும் முடியாது என்று புதுப் பிரச்சினையை கிளப்புகிறார்கள். ஒரு மேல்நிலைப்பள்ளியில் ரூ.20,000க்கு குறைவாக கட்டணம் வசூலித்தல் நடைமுறை சாத்தியமில்லை என்று அந்த தனியார் கல்வி வியாபாரிகளின் பொறுப்பாளர் கூறியுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையிலான குழுவைப் பொறுத்தவரை அவர்கள் 8 அமர்வுகளில் விவாதித்து, தனியார் பள்ளிகளுடனும் விரிவான விவாதங் களை நடத்தி, பிறகே தங்களது ஆலோசனை யை வகுத்துள்ளார்கள். ஆனாலும் இப்போது தனியார் பள்ளி சங்கங்கள் அறிவிக்கப் பட்டுள்ள கட்டண ஒழுங்கமைப்பை எதிர்த்து, பள்ளிகளை திறக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். அதே நேரத்தில் பெற்றோர் சங்கங்களிடம் இன்னொரு அச்சம் தோன்றியுள்ளது. அரசு அறிவிப்பிற்குப் பிறகு தனியார் பள்ளிகள், சிறப்பு கட்டணம் என்று கட்டாய வசூலில் ஈடுபடுவார்கள் என்றும், அந்த வசூலுக்கு ரசீது தரமாட்டார் கள் என்றும் பெற்றோர்கள் அச்சப்படத் தொடங்கியுள்ளார்கள்.
இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி, இந்திய நாடாளு மன்றத்தில் ஆரம்பக் கல்வியை கட்டாய மாக்கக் கூடிய ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். அது கல்வியை ஒரு அடிப்படை உரிமை என்பதாக அறிவிக்கிறது. 6 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 2009ம் ஆண்டின் இலவசமாக கல்வி பெறுவதற்கான உரிமையையும், கட்டாய கல்வி சட்டத்தையும் அது அறிவித்துள்ளது. அதன் மூலம் இப்போது பள்ளிக்கு செல்லாத அல்லது செல்லமுடியாத ஒரு கோடி குழந்தைகள் பயன் பெறுவார்கள். அவர்கள் சூழ்நிலையின் காரணமாக படிப்பை நிறுத்தியிருக்கலாம் அல்லது கல்விக் கூடத்திற்கே செல்லமுடியாமல் இருந்திருக்க லாம். அந்த சட்டப்படி தனியார் கல்வி நிறுவனங்கள் 25% இடத்தை, சமூகத்தின் நலிந்த பிரிவினர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கவேண்டும். அத்தகைய குழந்தை களுக்கு செலவிடப்படும் தொகையில், 55% மத்திய அரசும், 45% மாநில அரசும் பொறுப்பேற்கும்.இந்த சட்டத்தை அமுல்படுத்த மாநிலங்களுக்கு ரூ.25,000, மத்திய நிதி ஆணையத்தால் கொடுக்கப்படும். சட்டத்தின் அறிவிப்பிலேயே 201011 ஆண்டுகளுக்கான ரூ.15,000 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து விட்டது. இத்தகைய ஒரு மகத்தான சட்டமும், கல்வியை வியாபாரமாக்கும் தனியார் மத்தியில் இந்த நாட்டில் தான் அரங்கேறியுள்ளது. உலகில் உள்ள சில நாடுகள் மட்டுமே இதுபோன்ற கட்டாய இலவச கல்வியை, ஆரம்பப் பள்ளிக்கு அறிவித்துள்ளன.
மேற்கண்ட சட்டம் கல்வியை அடிப்படை உரிமையாக ஆக்குவதன் மூலம், மனித உரிமை தளத்தில் ஒரு சாதனையையும், அதே சமயம் அடுத்த தலைமுறைக்கு ஒரு உத்தரவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கங்களால் தங்கள் அறிவிப்புகளையே அமுல்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையை, தனியார் கல்வி வியாபாரிகள் உருவாக்குகிறார் கள் என்று சொன்னால், இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும்.
கடந்த காலங்களில் தர்மகர்த்தா மனோநிலையில், தனியார்கள் சேவை மனோபாவத்தில் கல்விக் கூடங்களை ஏற்படுத்தினார்கள். அதன் பிறகு அரசு அந்தப் பொறுப்பை உணர்ந்து, கல்விச் சாலைகளை ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை உருவாகியது. இத்தகைய நிலைமைக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்த, “புதிய கல்விக் கொள்கை” ஒரு முற்றுப்புள்ளியை வைத்தது. நிலவும் கல்விச் சாலைகளின் அவலநிலைகளை, அணு அணுவாக தொகுத்து முன்வைத்து, அதற்கான தீர்வாக தனியார் கைகளில் கல்வியைக் கொடுத்து விடுவது என்பது தான் அந்த புதிய கல்விக் கொள்கை. அதுவே புற்றீசல் என சுயநிதி கல்விச்சாலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியில், கல்வி அமைச்சரின் தனியார் நிறுவன பாசம், புற்றீசல் என கல்விக் கொள்ளையர்கள் மாநிலமெங்கும் உருவாக உதவி செய்தது. இப்போது அவர்களின் கூட்டமைப்பால், அரசின் நல்ல திட்டம் கூட மிரட்டப்படுகிறது. இவ்வாறு அரசால் அனுமதிக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட ஒரு நச்சு விதை,மரமாக வளர்ந்து பேயாக ஆடுகின்ற சூழலை காண்கின்றோம். இப்போதாவது மன உறுதியுடன் அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கையும்.