Wednesday, December 2, 2020

விவசாயிகள் போராட்டத்தில் மதவாத திசை திருப்பல், திருப்பி அடிக்காதா?

 மின்னம்பலம் மின்னம்பலம்

விவசாயிகள் போராட்டத்தில் மதவாத திசை திருப்பல், திருப்பி அடிக்காதா?

விவசாயிகள் போராட்டத்தில் மதவாத திசை திருப்பல், திருப்பி அடிக்காதா?

டி.எஸ்.எஸ்.மணி

மூன்று விவசாய மசோதாக்களை, பாஜக அரசு, தனது அதீதப் பெரும்பான்மை கொண்ட மக்களவையிலும், மாநிலங்களவையில், தங்களைச் சார்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகளையும் வைத்து, இரு அவைகளிலும், நிறைவேற்றி விட்டது. தயாராக இருக்கும் குடியரசுத் தலைவரும், காலம் தாழ்த்தாமல் கையெழுத்துப் போட்டு, அவற்றைச் சட்டமாக்கி விட்டார். இந்தியாவில், நடைபெற்று வரும் நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி, மூன்று விவசாய மசோதாக்களையும் சட்டமாக்கியுள்ளோம் என்று ஆள்வோர் பெருமிதம் கொள்ளலாம். ஜனநாயக முறையில் தானே நிறைவேற்றினோம் என வாதம் செய்யலாம். ஆனால், இத்தகைய நடைமுறையால், "ஜனநாயகம் முழுமையாக" நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதா? இந்திய மக்களின் நலன்களை, சாதி, மத , மொழி, இன வேறுபாடின்றி, பாதுகாப்பதற்காகத்தான் " ஜனநாயக முறை " என்பது ஒரு கருவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கருவிக்குள் இருக்கும் " விதிகளையே" பயன்படுத்தி, நீங்கள் " இந்திய மக்களது நலன்களைப் பாதுகாக்காமல், அவர்களது நலன்களுக்கு எதிரான சட்டங்களையோ, நடைமுறையையோ கொண்டு வருவீர்களானால், அந்த மக்கள், ஒருநாள் இல்லாவிட்டாலும், இன்னொரு நாள் அதை எதிர்த்து கிளர்ந்து எழத்தானே செய்வார்கள்?.

மக்கள் விழித்துக்கொண்டால் எம்பிக்களின் ஒப்புதல் தாக்கு பிடிக்குமா?

பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது பல நேரங்களில், வழமைதான்.அதை ஆள்வோர் தங்களுக்குச் சாதகமாக, பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதும், 60 ஆண்டுகளாக, ஆண்டவர்களின் திட்டங்களிலிருந்தும், சட்டங்களிலிருந்தும் நாம் கண்ட அனுபவங்கள்தான்.அதையே அடுத்து ஆட்சிக்கு வந்தோரும் செய்வார்களானால், முன்பு போலவே மக்களது எதிர்ப்பு உருவாகத்தானே செய்யும்? கடந்த காலங்களில் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தவர்களும், விழித்துக் கொண்டு எழுந்து விட்டால்,அதற்கு எதிராக, ஆள்வோரின் அதீத எண்ணிக்கை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தாக்குப் பிடிக்குமா? ஆகவேதான் சட்டங்கள் மட்டுமே போதாது; அவை மக்கள் நலன்களைக் காப்பதற்காக இருக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் உயிரான அம்சம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இதுதானே " குடியுரிமைச் சட்டத்திருத்தம் " வந்த போதும் நிகழ்ந்தது.

பொதுமக்களின் " மதங்கள் தாண்டிய எதிர்ப்பால்" அத்தகைய சட்டத்தின் செயல்பாடு நிறைவேற முடியாமல் தாமதமாகிறதே! இன்னமும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு, "விதிகள்" எழுதுவதை அரசு தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறதே? அப்படித்தானே, 2014 ல் மோடி ஆட்சிக்கு வந்தவுடனேயே கொண்டு வந்த, " நிலங்களைக் கையகப்படுத்தும் மசோதா"மக்களது எதிர்ப்பின் காரணமாக, நிறைவேற்ற முடியாமல் போனது? அப்போது முக்கியமாக அந்த " நிலம் கையகப்படுத்தல் மசோதாவை " கார்ப்பரேட் நிலக் கொள்ளைக்கு வழிவகுக்கும் என்று கூறி, எதிர்த்தது, ஆர்.எஸ்.எஸ். இணைப்பில் உள்ள " பாரதிய கிஸான் சங்" தானே!. அந்த மசோதாவும் கிடப்பில் போடப்பட்டதே!

கனடா பிரதமருக்கு எதிர்ப்பும்... ட்ரம்புக்கு புகழ் மாநாடும்

அதுபோல, இப்போதும் " மூன்று விவசாய மசோதாக்கள்" மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வைக்கப்படும் போதே, விவசாயிகள் சங்கங்கள், இடதுசாரிகள் ஆகியோர் எதிர்த்தார்களே ?., அந்த மசோதாக்கள், " விவசாயிகளுக்கான " குறைந்தபட்ச ஆதரவு விலை" யை உறுதி செய்யவில்லை என்பதால் கார்ப்பரேட்களின் கொள்ளைக்கு வழிவகுக்கும், எனக்கூறி, ஆர்.எஸ்.எஸ். இணைப்பிலுள்ள, "பாரதிய கிஸான் சங்",மற்றும் "சுதேஷி ஜக்ரன் மஞ்ச்", ஆகிய அமைப்புகள் எதிர்த்தன. அதையும் தாண்டி,அவர்கள் மாற்று ஆலோசனையாக, " குறைந்தபட்ச ஆதாரவு விலைக்கு குறைவாக, யார் கொள்முதல் செய்தாலும் சட்டவிரோதம்" என்று ஒரு சட்டம் கொண்டு வா எனக் கூறி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக புதிய 3 விவசாய சட்டங்களை எதிர்ப்பவர்கள், டெல்லி போராட்டத்தில் எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை. காரணம் கேட்டால், அவர்கள் "இன்று கனடா பிரதமர் எதற்காக விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கிறார் ? காலிஸ்தான் தனிநாடு ஆதரவா ?" என பதில் கேள்வி கேட்கிறார்களே? ." எப்படிக் கேள்வி கேட்கலாம்? நமது பிரதமர் இன்னொரு நாட்டில் நடக்க இருந்த தேர்தலுக்கு அமெரிக்க அதிபர் தேர்தல் முன்பே அதற்கான ஒரு கட்சியின் அதிபர் வேட்பாளரைக் கொண்டு வந்து புகழ் மாநாடு ஒன்றை இந்தியாவில் நடத்தவில்லையா? என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைபங்கம் தீட்டியுள்ளதே?

பா.கி.சங் .போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் " தற்போதைய மோடி பாசமாக" இருந்து விட்டுப் போகட்டும். அவ்வப்போது " மதவாதத்திற்கும், கார்ப்பரேட்டிசத்திற்கும் ஒற்றுமையும், முரண்பாடும் சேர்ந்தே இருப்பது புதிதல்ல. ஆனால், " பாரதிய கிசான் சங்" என்ற பெயரில், மேற்கு உத்தரப் பிரதேசம் உட்பட சில மாநிலங்களில் இருக்கும் விவசாய சங்கங்கள், இப்போது போராடும் இந்த 35 விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பில் உள்ளன. அவை ஆர்.எஸ்.எஸ்.இணைப்பிலுள்ள, பாரதிய கிஸான் சங் அல்ல. ஒரே பெயரில் இயங்குவதால், அந்தக் குழப்பம் நமக்கு வர வேண்டாம். பஞ்சாபிலிருந்து டெல்லி வந்த, வந்து கொண்டிருக்கும், விவசாயிகள் முக்கியமாக, " பாரதிய கிசான் யூனியன்" தலைமையில் உள்ளவர்கள் அவர்கள் பெரும்பாலும், சீக்கிய ஜாட் சமூகத்தவர்கள்.

உத்தரப்பிரதேசத்திலிருந்து, டெல்லிக்கு இப்போது, நொய்டா எல்லை மூலம் வந்து குவியக்கூடிய விவசாயிகளும் முக்கியமாக, அதே பெயரில் உள்ள " பாரதிய கிசான் யூனியன்" என்ற சங்கத்தவர்கள். ஆனால், அதே பெயரில் பஞ்சாபில் உள்ள சங்கம் வேறு. உ.பி.யில் உள்ள சங்கம் வேறு. உ.பி. விவசாயிகள் முக்கியமாக, " இந்து ஜாட் சமூகத்தவர்கள்". சீக்கிய ஜாட் பஞ்சாபிலிருந்தும், இந்து ஜாட் உ.பி.யிலிருந்தும் வந்து இறங்குகிறார்கள்.

மத வேறுபாடுகளும், விவசாயிகளின் மறுப்பும்

ஹரியானாவிலிருந்து, டெல்லி வரும் ஆறு முக்கிய சாலைகளையும் அடைப்பதுதான் ஆரம்பத்திலிருந்தே விவசாய சங்கங்களின் திட்டம். சாலை மறியலும், பால், காய்கறி ஆகியவற்றை தலைநகர் டெல்லிக்கு செல்ல விடாமல் தடுப்பதும் அவர்களது நோக்கம். அவர்கள் பெரிய மைதானமான, "ராம் லீலா அல்லது போட் கிளப்" போன்ற இடங்களில் குவிய நினைத்தார்கள். ஆரம்பத்தில் டெல்லி வந்து குவிந்த விவசாயிகளை, " புரேரி மைதானம்" செல்லுங்கள் என்று அரசு கூறியது. அந்த புரேரி மைதானம் ஒரு பள்ளிக்கூட மைதானம் போல, 3000 பேர் மட்டுமே கூட முடிந்த இடம். இப்போதே ஒரு லட்சத்தைத் தொடும் எண்ணிக்கையில், விவசாயிகள் குவிந்து விட்டனர் ஆகவேதான், விவசாய சங்கங்கள், அங்கு சென்றால், " ஜாலியன்வாலாபாக் போல ஒரு சிறைக்குள் அமர்வது போல ஆகிவிடும்" என மறுத்தனர்.

முதலில், அமித் ஷா, " சீக்கியர்கள் மத்தியில் நிலவும், " ஜாட் சமூகத்தவர்க்கும், நிரங்கரி சமூகத்தவர்க்கும் இடையே இருக்கும் மத வேறுபாட்டைக் கிளற முயற்சித்தார் என்று விவசாய சங்கத்தினர் எண்ணுகிறார்கள். ஏன் என்றால், ஜாட் சமூகத்தைச் சேர்ந்த சீக்கியர்களான, பெரும்பான்மை சமூகம், " சிரோன்மனி அகாலி தளத்தின்" பின்னணியில் உள்ளவர்கள். அவர்கள் " நிரங்கரி வழிமுறையில் வழிபாட்டு முறை கொண்ட சீக்கியர்களுடன் உடன்பட்டு வாழ்வதில்லை. அவர்கள் இருவருக்கும் இடையே ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவு சண்டைகள் கூட நிகழ்வதுண்டு. அதில், தலித் சமூகமாக நிரங்கரி பிரிவை கூறுவார்கள். ஆளும் அரசு தேர்ந்தெடுத்த " புரேரி இடம், நிரங்கரி பிரிவின் குருத்துவாரா கோவிலின் மைதானம்". அந்த இடத்திற்கு எப்படி " சீக்கிய ஜாட்கள்" செல்வதற்கு ஒப்புக்கொள்வார்களா? அது “மத வேறுபாடுகளை " பயன்படுத்தி சிக்கலை உருவாக்கி விடாதா? அப்படி சிக்கல் உருவானால், அந்த மோதலைப் பயன்படுத்தி, அரசு, ராணுவத்தைக் கொண்டு வந்து அடக்குமுறை செய்ய நியாயம் கற்பிக்கப்பட்டு விடுமே? அதனைக் கருத்தில் கொண்டுதான் விவசாய சங்கத்தினர் அங்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

ஏற்கனவே பா.ஜ.க.வுடன் முப்பது ஆண்டுகளாக கூட்டணியாக இருந்த " சிரோன்மணி அகாலிதளம்" கட்சி, மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, தனது மத்திய அமைச்சரை, திரும்பப் பெற்றுக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியே வந்து விட்டனர்.அப்படிப்பட்டவர்கள் இதுபோன்ற " இடை தந்திரங்களை " புரியாமல் இருப்பார்களா? இது சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். யோகேந்திர யாதவ் போன்ற அறிவுஜீவிகள், டிசம்பர் 1 ம் நாள் ஊடகங்களிடம், டிசம்பர் 2 ம் நாள் விவசாயிகள் " புரேரி" க்கு நகர்வார்கள் எனக்கூறி விட்டார்கள். ஆனாலும் அதை சீக்கிய ஜாட் விவசாயிகள் ஏற்கவில்லை. அதேபோலத்தான் " அரசுடன் பேச்சுவார்த்தைக்கு, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தவிர யோகேந்திர யாதவ் போன்ற அறிவுஜீவிகளை, விவசாய சங்கத்தினரும், அதேபோல அரசும் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, பஞ்சாப் காங்கிரஸ் அரசாங்கம் முழுமையாக போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதால், அதை விவசாய சங்கத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அதே போல, டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து ஒருபுறம் அறிவித்தார். ஆனால், டிசம்பர் முதல்நாள், ஒர் " அறிவிக்கை ( Notification)" மூலம், 3 விவசாயச் சட்டங்களில், ஒன்றை அமுல்படுத்த அறிவிப்பு கொடுத்து விட்டார்.இப்போது, பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரிந்தர்சிங்கை எதிர்த்து கெஜ்ரிவால் பேசுகிறார். அதேசமயம், இடதுசாரி கட்சிகளின் விவசாய சங்கங்கள், போராட்டத்தில் கலந்து கொள்ள வருவதை போராட்டத் தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது.அதற்கு முன்னோட்டமாக, நவம்பர் 26 ல் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின்,அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பு ஆதரவு கொடுத்திருந்தது. அதற்கான ஏற்பாட்டை, இணங்க வைத்தவர், இன்றைய "சுவராஜ் அபேயான்" அமைப்பின் உ.பி. தலைவரும், முன்னாள் நக்சல்பாரி இயக்கத்தின் மாணவர் அமைப்பான "அகில இந்திய மாணவர் கழகத்தின்" தலைவருமான., முன்னாள் அலஹாபாத் பல்கலைக் கழக மாணவர் தலைவர் அகிலேந்திர பிரதாப் சிங். , மகாராஷ்டிரா விவசாயிகள், ராஜா ஷெட்டி தலைமையிலும், வி.எம்.சிங் தலைமையிலும் இயங்கும் சங்கங்கள் மூலம் டெல்லி செல்லப் புறப்பட்டு விட்டனர்.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போராட்டம் போல

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், ஏற்கனவே " சி.ஏ.ஏ. எதிர்ப்புக்கு ஆதரவாக ஒரு லட்சம் மக்களைக் கொண்ட பேரணி நடத்தியது போல" விவசாயிகளுக்கு ஆதரவு போராட்டம் நடத்த தயாராகி விட்டார். பீகாரிலிருந்து எம்.எல். கட்சி விவசாய சங்கத்தினரும் டெல்லி செல்ல ஆயத்தப்படுகின்றனர். இப்படி, அரசியல் கட்சிகளின் வேறுபட்ட நிலைப்பாடுகளுக்கு மத்தியில், போராட்டத் தலைமை, " கட்சி சார்பற்ற விவசாய நலன் அரசியலையே" மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஆகவே இது 2017 ஜனவரியில், தமிழ்நாட்டில் எழுந்த " ஜல்லிக்கட்டு் மக்கள் எழுச்சி" போன்ற, ஒரு " கட்சி சார்பற்ற விவசாயிகளின் எழுச்சி" என்பதும்,, விவசாயிகள் மத்தியில் உள்ள சாதி, மத வேறுபாடுகளைக் கிளறி விட்டு பிளவு படுத்த ஆள்வோர் முயன்றாலும் விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதும் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

இதற்கிடையே, விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு, " சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்டி, மூன்று சட்டங்களையும், திரும்பப் பெறு " என்பதாக அறிவித்துள்ளனர். தவிர்க்கவே முடியாமல், மூன்று விவசாய சட்டங்களுக்கும்,, விவசாயிகளை திருப்பதி படுத்தும் வகையில், "சட்டத்திருத்தங்களை" கொண்டு வர மத்திய அரசு தயாராகி விட்டது என்கிறார்கள். அதற்கான முன்னூட்டமாக, பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரிந்தர் சிங்கை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உடனடியாக சந்தித்து பேச இருக்கிறார் என்கிறார்கள். புதிய சட்டங்களை திரும்பப் பெறுவதாக இல்லை என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலையை புதிய சட்டங்களில் எப்படி உறுதிப்படுத்தலாம் எனப் பேசலாம் எனவும் மத்திய அரசு யோசிக்கிறது என்கிறார்கள். விவசாயிகளுடன் தொடர்ந்து பேச தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பு கூறி வருகிறார்கள். அதேநேரம் டெல்லி எல்லை ஓரங்களில், காவல்துறை படைகளை நிறுத்த தொடங்கியுள்ளனர். தங்களுடன் முப்பதாண்டுகளாக கூட்டணியில் இருந்த அகாலி தளம் கட்சியின் கோரிக்கையை முன்பே உணர்ந்து கொள்ளாமல், கார்ப்பரேட் நலன்களுக்கு முதலிடம் கொடுத்ததால்தானே, இத்தகைய மக்கள் போராட்டம் மூலம் வந்த நிர்பந்தத்திற்கு பா.ஜ.க. அரசு தலை வணங்க வேண்டியுள்ளது? . கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று இதைத்தான் சொல்வார்களோ?

கட்டுரையாளர் குறிப்பு

டி. எஸ்.எஸ்.மணி

டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர்.

தொடர்புக்கு: manitss.mani@gmail.com

Friday, November 27, 2020

உதயநிதி சொன்னது சரிதானா?

 மின்னம்பலம் மின்னம்பலம்

சிறப்புச் செய்தி: உதயநிதி சொன்னது சரிதானா?

சிறப்புச் செய்தி: உதயநிதி சொன்னது  சரிதானா?

டி.எஸ்.எஸ்.மணி

நவம்பர் 21 சனிக் கிழமை அமித் ஷா சென்னை வந்த நாள். அன்று உதயநிதி, திருவாரூரில் இருந்தார். அமித் ஷா தமிழக முதல்வருடன் சென்னை கலைவாணர் அரங்கில் அரசு விழாவில் கலந்து கொண்டார். அரசு விழாவிலே முதல்வரும், துணை முதல்வரும் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என்று அறிவித்தார்கள்.

அதற்கு சில வாரங்கள் முன்பாக அந்தக் கூட்டணி தொடருமா என்பது குறித்து ஊடகங்கள் யூகங்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருந்தன. அதற்கான காரணங்களாக பாஜக நடத்தும் வேல் யாத்திரையும், அதற்கு அதிமுக அரசு அனுமதி அளிக்காததும் கூறப்பட்டது. எனினும், அது சட்டம்--ஒழுங்கு சம்பந்தப்பட்ட விஷயம். அனுமதி கொடுத்தும் கொடுக்காது இருந்ததுமாக வேல் யாத்திரை செயல்பாடுகள் பார்க்கப்பட்டன.

வேல் யாத்திரை ஒவ்வொரு கோவில் வரை அனுமதிக்கப்படும். பாஜக மாநிலத் தலைவரின் வேல் யாத்திரைக்கு விளம்பரம் தருவதற்கு மட்டும் தினசரி வாய்ப்பு கொடுத்து வந்ததாகவும் பேசப்பட்டன. அப்படிப் பேசியது கூட பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன்தான். பாஜக மாநிலத் தலைவர் முருகனுக்கு கொடுக்கப்படும் விளம்பரம் பிடிக்காமல் கணேசன் பேசினார் என்று நினைத்து விடாதீர்கள். அவர் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் சொந்த ஊர்க்காரர் என்பதாலும், நண்பர் என்பதாலும், அதிமுக- பாஜக உறவில் உடன்பாடு இல்லாமல் பேசினார் என்றும் நினைத்து விடாதீர்கள்.

விளம்பரத்திற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், வேல் யாத்திரை மத மோதலை உருவாக்கும் என்றும், சாதி, மத மோதல்களை தமிழக அதிமுக (அம்மா) அரசு அனுமதிக்காது என்றும் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக கூறியதும், அதிமுகவின் அதிகார பூர்வ ஏடான நமது அம்மாவில் எழுதியதும், இரு கட்சிகளுக்கும் இருக்கும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் என்று ஊடகங்களுக்கு தீனியாகின. கொள்கை ரீதியாக வேல் யாத்திரைக்கு எதிராக அதிமுக இருப்பது அறுதியிடப்பட்டதால், அந்த கூட்டணி அமையுமா என்ற சந்தேகத்தை ஊடகங்கள் கிளப்பின.

ஏற்கனவே மத்திய அரசு, தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதிகளை கொடுக்காமல் இழுத்தடிப்பதால் அப்படி ஒரு முரண்பாடு பேசப்பட்டது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு கேட்டு கொடுக்காததாலும் அந்த இடைவெளி பேசப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கு இட ஒதுக்கீடு அறிவித்து, அதை நிர்ப்பந்தம் செய்து பழனிச்சாமி அரசு பெற்றதாலும் அப்படி பேசப்பட்டது. மருத்துவ மேற்படிப்புக்கு தமிழக ஒதுக்கீடு என்பதற்கு மத்திய அரசின் கறாரான மறுப்பை எதிர்த்து, ஒதுக்கீட்டிற்கான அரசாணையை அம்மா அரசு அறிவித்ததாலும் அப்படி முரண்பாடு இரு கட்சிகளுக்கும் இடையில் அறியப்பட்டது. ஏழு பேர் விடுதலையில் ஒப்புதல் கிடைக்காமல் இழுத்தடிப்பதால் அதுவும் காரணமாக புரியப்பட்டது.

இத்தனையும் சேர்ந்துதான் காட்சி ஊடகங்களின் பேச்சுக் காட்சிகளில் அதிமுக-பாஜக உறவில் விரிசல் என்று விவாதங்கள் நிரம்பி வழிந்தன. அதனால் தான் அமித் ஷா வந்திருந்தபோது, விழா மேடையிலிருந்தே அறிவிக்கப்பட்ட அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்ற செய்தி, ஊடகங்களால் பெரிதும் அறிவிக்கப்பட்டன.

அந்த அறிவிப்பு பற்றி உடனடியாக எதிர்வினை ஆற்றியவர், திருவாரூர் பகுதியில் திமுகவின் பரப்புரையைத் தொடக்கி வைக்கச் சென்றவரான திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். தான் கைது செய்யப்பட்டதற்காக முதல்வர் மீது கேள்விக் கணைகளால் கோபப்பட்ட உதயநிதி, அதேசமயம் ஒரு மகிழ்ச்சி செய்தி என்று கூறினார். பாஜக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி செய்தி என்றார். அது நமக்கு எளிதாக வெற்றி வாய்ப்பைக் கொடுக்கும் என்றும் கூறினார்.

அதிமுகவோ, திமுகவோ போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு முறையும் சிறுபான்மை மக்களான முஸ்லீம், கிறிஸ்தவர் வாக்குகளை அள்ளுவதில் அனுபவம் உள்ளவர்கள். யார் அதிகமாக சிறுபான்மை மதத்தவர்களின் வாக்குகளை வாங்குவது என்ற போட்டி, இந்த இரண்டு கட்சிகளுக்கும் எப்போதும் உண்டு. அந்தப் போட்டியில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு அந்த சிறுபான்மை வாக்குகள் விழுவதில்லை என்பதும் தமிழ் நாட்டில் இருக்கும் அழுத்தமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே, உதயநிதியின் கருத்து வெளிப்பட்டது.

அப்படியானால் அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் கூட்டணி அமையாவிட்டால், பாஜக அல்லாத ஒரு கூட்டணியை அதிமுக கட்டுமானால், சிறிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு செல்லவும் ஒரு வாய்ப்பு உள்ளது. இதனால் அதிமுகவை எதிர்கொள்வதில் திமுகவிற்கு சவாலான சூழல் வந்துவிடும் என்பதாக உதயநிதி மறைபொருளாக கூறுவதாக எடுத்துக் கொள்ளலாமா?

சிறிய கட்சிகளுக்கு பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேரும்போது, எத்தனை தொகுதிகள் என்பதிலும், எவ்வளவு நிதி உதவி என்பதிலும், பேரம் நடைபெறும் என்பது வெளிப்படை. அந்தப் பேரம் படியாத நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜக அல்லாத அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கு ஒரு வாய்ப்பு உருவாகி விடும். அத்தகைய வாய்ப்பு, பா.ஜ.க.-அதிமுக கூட்டணி உறுதியாகும்போது அடைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, சிறுபான்மை மக்களது வாக்குகளும், பாஜக இருக்கும் கூட்டணிக்கு எதிராக இருக்கும் ஒரே கூட்டணியான திமுக கூட்டணிக்குத்தான் வந்து விழும் என்பது சாதாரண கணக்கு.

இந்த கணக்கின் அடிப்படையிலேயே உதயநிதி அப்படி தனது மகிழ்ச்சியையும், எளிதாக வெற்றி பெறலாம் என்ற கருத்தையும் கூறியுள்ளார். ஆனால் அது அப்படித்தான் நடக்குமா? அதிமுகவும், பாஜகவும் கூட்டணி சேர்ந்து உதயநிதி கணக்கை உண்மையாக்குவார்களா? கூட்டணி தொடரும் என்றுதானே முதல்வர் கூறியுள்ளார். அத்தகைய வார்த்தைகளை ஆறு மாதமாக சொல்லி வருகிறார்களே? அதிமுக தொண்டர்கள் மத்தியில் அப்படி ஒரு கூட்டணி வேப்பங்காயாக பார்க்கப்படுவதாக, ஊடகங்கள் ஆய்வு எழுதுகிறார்களே? அதிமுக கட்சியின் பொதுக் குழு முடிவு செய்யும் என்றும் இடையில் சொல்லியிருக்கிறார்களே? பாஜகவும் தனித்து நின்று தனது பலத்தை கணிக்க விரும்புவதாகவும் செய்திகள் வருகின்றதே? இந்துக்கள் வாக்கு என்று ஒரு அடித்தளத்தை உருவாக்க முடியும் என்ற எண்ணம் பாஜகவில் சிலருக்கு அழுத்தமாக இருப்பதாகத் தெரிகிறதே? தேர்தல் நெருங்கும்போது, இரு கட்சிகளும் பிரிந்து சென்று உதயநிதியின் எதிர்பார்ப்பை பொய்யாக்குவார்களா

இல்லை உதயநிதியின் மகிழ்ச்சி உண்மையாகி விடுமா?

Sunday, November 8, 2020

டிரம்பின் தோல்வி, மோடியின் தோல்வியா?

 மின்னம்பலம் மின்னம்பலம்

சிறப்புக் கட்டுரை: டிரம்பின் தோல்வி, மோடியின் தோல்வியா?

சிறப்புக் கட்டுரை: டிரம்பின் தோல்வி, மோடியின் தோல்வியா?

T.S.S. மணி

அமெரிக்க 46ஆவது ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். அது இந்தியத் தலைமை அமைச்சராக இருக்கும் நரேந்திர தாமோதர் மோடியின் தோல்வி என எப்படிக் கூறுகிறோம்?

கடந்த ஆண்டான 2019இல், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஹூஸ்டன் நகரில், இந்திய - அமெரிக்கர்கள் 50,000 பேரை ஒரே மண்டபத்தில் கூட்டி, மேடையில் மோடியும்,டொனால்டு டிரம்பும் மாத்திரமே காட்சி தர அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கான சொற்பொழிவை அப்போது அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்த மோடி நிகழ்த்தினார்.

அந்த மேடையில், 2020 அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்பை மோடி அறிமுகப்படுத்தும் விதமாக, வருகிற 2020 தேர்தலில் அமெரிக்காவில் டிரம்ப்தான் வெற்றி பெறுவார் என்று திருவாய் மலர்ந்தார். ஒரு நாட்டின் பிரதமர், அடுத்த நாட்டில் வரப்போகிற தேர்தலில் , இன்னார்தான் வெற்றி பெறுவார் என்று அந்த நாட்டுக்கே சென்று பேசுவது முறையா ? சரியா? அமெரிக்க நாட்டு சட்டங்கள் ஒப்புக்கொள்ளுமா? இந்திய நாட்டு வெளிவிவகாரக் கொள்கைக்கு அது பொருந்துமா? உலகம் சிரிக்காதா? அது என்ன ஆரூடம் கூறும் வேலையா?

இதுபோன்ற கேள்விகளைச் சிறிய ஊடகங்களில் நாம் பகர்ந்தாலும், பெரிய ஊடகங்களிலோ, எதிர்க்கட்சி வரிசையிலோ பெரிதுபடுத்தவில்லை. காரணம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது அத்தனை பயம்! அதனாலேயே அவர் மீது இனம் புரியாத பாசம். இத்தகைய பயம் கலந்த பாசத்தின் வேஷங்கள் இப்போதும் அந்த கொடுமையான ஹூஸ்டன் விழாவைப்பற்றி வாய் திறக்க தயங்குவார்கள். அதுகூட மோடி மீதான யு.பி.ஏ. பயமா எனத் தெரியவில்லை.

அந்த ஹூஸ்டன் நிகழ்ச்சி எப்படி இருந்தது? ஒருபுறம் வேட்பாளர் டிரம்ப் நிற்க, இன்னொரு எல்லையில் அதே மேடையில் வேட்பாளரை அறிமுகப்படுத்த வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இந்தியப் பிரதமர் மோடி நிற்கிறார். இப்படித்தானே, செல்வி ஜெயலலிதா அஇஅதிமுக தலைவியாக தேர்தல் கால மேடைகளில் ஒருபுறம் நிற்க, மேடையின் இன்னொரு மூலையில் அந்தத் தொகுதி வேட்பாளர் கைகளைக் குவித்த வண்ணம் கால்கடுக்க, பயபக்தியுடன், உடல் நெளிய நின்று கொண்டே இருப்பார் அதேபோலத்தான், ஹூஸ்டன் நகர அமெரிக்க வாழ் இந்தியர்களின் அபரிமிதமான கூட்டத்திலும், மோடி ஒரு புறம் நிற்க, டிரம்ப் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார். அந்த டிரம்பின் உடல்மொழி எப்படி இருந்தது? மாட்டுக்கார வேலன் திரைப்படத்தில் வரும் இரண்டாவது எம்.ஜி.ஆர். போல, வெட்கப்பட்டவராக, உடலை நெளிந்து, நெளிந்து அசைந்து நிற்பவராக டிரம்ப் நின்றுகொண்டிருந்தார். இத்தகைய ஒரு விழா சரிதானா என்ற கேள்வி ஒருபுறம். இது இந்திய நாட்டுக்கே அவமானமல்லவா என்ற பேச்சு டெல்லி அதிகார மட்டத்தில் எதிரொலித்ததாம். சரி.

அப்போது, டிரம்ப் மீண்டும் 2020 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என மோடி அறிவித்த ஆரூடம் இன்று பொய்த்து விட்டதே! இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு, அமெரிக்காவின் புதிய தலைவர்கள் முகத்தில் முழிக்கப்போகிறோம் என்று மானமுள்ள இந்தியனாக நாம் வேண்டுமானால் நினைக்கலாம். ஆனால் அரசியல்வாதிகளுக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை என்பதுபோல, இந்தியத் தலைமையமைச்சர் அலுவலகத்திலிருந்து, அமெரிக்கத் தேர்தல் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஜோ பிடெனுக்கு வாழ்த்துகள் பறந்து விட்டன.

அதுமட்டுமின்றி, 2020ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே, பிப்ரவரி 24இல், அமெரிக்க அதிபர் டிரம்பை குடும்பத்துடன் அழைத்து வந்து, மிகுந்த பொருட்செலவில், குஜராத்தில் ஒரு லட்சம் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்த வைத்த முயற்சி, 2020 நவம்பர் அமெரிக்கத் தேர்தலுக்கு, ‘முன்பரப்புரை’ கூட்டமில்லையா? அதில் டிரம்பை கதாநாயகனாக சித்திரித்து செய்த வேலை தேர்தலுக்கான அமெரிக்க - இந்தியர்களது வாக்குகளைக் கவருவதற்காக இல்லையா? அதன் காரணமாகவே, ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தொடங்கியிருக்க வேண்டிய, ‘கோவிட் எதிர்ப்பு தவிர்ப்பு நடவடிக்கை’ மார்ச் மாதத்துக்குத் தள்ளிப் போடப்பட்டது என்ற எதிர்க்கட்சி குற்றச்சாட்டு எழுந்ததே!

டெல்லியில், ஷாஜன்பக் சி.ஏ.ஏ. எதிர்ப்பு மக்கள் திரள் கூடலில், கூட்டத்தை மத மோதலுக்குப் பயன்படுத்த சில வெளி ஆட்கள் வன்முறையைத் தூண்டியபோது அவர்களைக் கவனிக்க முடியாமல், டிரம்ப் பாதுகாப்புப் பணியில் கவனமாக இருந்து விட்டது டெல்லி மாநகரக் காவல்துறை என்ற விமர்சனம் எழவில்லையா?

அந்த அளவுக்கு, டிரம்பின் தேர்தல் வெற்றிக்காக உழைத்த இந்தியப் பிரதமர் அலுவலகம் அந்த முயற்சிகளில் வெற்றி பெறவில்லையே... அடுத்த நாட்டுத் தேர்தலில், யாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது இந்தியாவுக்குத் தேவையான ஒன்றா?

சென்ற முறை இதே குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து நிற்கும்போது, ரஷ்ய உளவுத்துறையான கே.ஜி.பி. டிரம்பிற்காக வேலை செய்தது என்று அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ. குற்றம் சாட்டியது. இந்த முறை அமெரிக்கத் தேர்தலிலும் ரஷ்யா பற்றி இதே குற்றச்சாட்டு வந்தது. டிரம்ப் கூட சீனா தனக்கு எதிராக தேர்தலில் தலையிடுகிறது என்று குற்றம் சாட்டினார்.

அவையெல்லாமே மறைமுகமாக நடைபெற்றதாக வந்த குற்றச்சாட்டுகள். ஆனால் இந்தியா , 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அத்தனை பகிரங்கமாகத் தலையிட்டு, பரப்புரை செய்து, தனது முயற்சியில் மண்ணைக் கவ்வியதால், இது மோடியின் தோல்விதானே!

Thursday, March 12, 2020

சிபிஎம் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறாரா சீதாராம் யெச்சூரி?

சிபிஎம் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறாரா சீதாராம் யெச்சூரி?

சிபிஎம் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறாரா சீதாராம் யெச்சூரி?

-டி.எஸ்.எஸ்.மணி

இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக தோழர் சீதாராம் யெச்சூரி இருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும், அகில இந்தியப் பேராயத்தில் (காங்கிரஸ்) அகில இந்திய அளவில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் மத்தியிலிருந்து ஓர் அகில இந்திய உயர்குழுவான மத்தியக் கமிட்டியைத் தேர்வு செய்வார்கள். அந்த மத்தியக் கமிட்டி, ஓர் அகில இந்தியப் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும். அவ்வாறு சென்ற காங்கிரஸில் தேர்வு செய்யப்பட்டவர்தான் தோழர் சீதாராம் யெச்சூரி.
அதற்குமுன், அகில இந்தியப் பொதுச் செயலாளராக தோழர் பிரகாஷ் கரந்த் இருந்தார். அந்தக் காங்கிரஸில் கட்சி எதிர்காலத்தில் செல்ல வேண்டிய வழி பற்றிய விவாதம் நடத்தி முடிவு எடுக்க இரண்டு வகையான செயல் தந்திர அறிக்கைகள் வைக்கப்பட்டன. ஒன்று, தோழர் பிரகாஷ் கரந்த் வைத்தது. இன்னொன்று, தோழர் சீதாராம் யெச்சூரி வைத்தது. பிரகாஷ் கரந்த்தால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில், ‘2014 முதல் நடக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசை மதவாத ஆட்சி’ என்று விமர்சித்து இருந்தது. தோழர் சீதாராம் யெச்சூரி முன்வைத்த அறிக்கையில், ‘மோடி அரசைப் பாசிச ஆட்சி’ என்று வகைப்படுத்தி இருந்தது. அதேபோல, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாமா, கூடாதா என்ற செயல் தந்திரத்திலும், வேறுபாடு காணப்பட்டது.
ஒவ்வொரு மத்தியக் குழுக் கூட்டத்திலும், அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ} கூட்டத்திலும், காங்கிரஸ் உடன் கூட்டா, இல்லையா என்ற விவாதம் வந்தபடியே இருக்கும். அப்போதெல்லாம், மேற்கு வங்க மாநிலத்தின் சிபிஎம் கிளை, காங்கிரஸுடன் கூட்டு என்ற கருத்தை முன்வைப்பார்கள். ஆனால், மத்தியக் குழுக் கூட்டத்தில் அது மறுக்கப்படும்.
மூன்று நாட்களுக்கு முன்பு சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூடியது. அதில், வருகிற மாநிலங்களவைக்கான தேர்தலில், கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரியை, மாநிலங்களவை உறுப்பினராக ஆக்குவது சம்பந்தமான விவாதம் வந்தது. ஏற்கெனவே, சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்து முடிந்த மத்தியக் குழுக் கூட்டத்தில், மேற்கு வங்க தோழர்கள், தங்கள் மாநிலத்திலிருந்து தோழர் சீதாராம் யெச்சூரியை, மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும் என்று கூறியிருந்தார்கள்.
அதனாலேயே நடந்து முடிந்த அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தில், அது விவாதத்துக்கு வந்தது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்ய, 46 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மேற்கு வங்க சட்டப் பேரவையில் தேவை. ஆனால், இடதுசாரி கட்சிகளுக்கு மொத்தமாக இருப்பதோ, 28 எம்.எல்.ஏ.க்கள்தான். ஆகவே, காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றுத்தான், சிபிஎம் உறுப்பினரை எம்.பி ஆக்க முடியும். ஏற்கெனவே, 2005 முதல் 2017 வரை சீதாராம் யெச்சூரி, மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மீண்டும் 2017இல் அவரை எம்.பி ஆக்குவதற்கு, மேற்கு வங்க சட்டப் பேரவையில், காங்கிரஸ் கட்சி ஆதரவு தருகிறேன் என்று கூறியிருந்தது. ஆனாலும் அப்போது, சிபிஎம், காங்கிரஸ் ஆதரவைப் பெற மறுத்து விட்டது. ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்று சீதாராம் யெச்சூரியை எம்.பி ஆக்கி விடலாம் என்ற ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்று நாம் தோழரை எம்.பி ஆக்க வேண்டாம் என்று பெரும்பான்மை பொலிட் பீரோ உறுப்பினர்கள் முடிவு செய்து விட்டனர். அந்த அரசியல் தலைமைக் குழுவான, பொலிட் பீரோ கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டிய 17 பேரில், 9 பேர்தான் கலந்து கொண்டதாக மார்ச் மாதம் 9ஆம் நாள் அன்று ஆங்கில ஏடு ஒன்று, ‘சிபிஎம் யெச்சூரியை ராஜ்ய சபா அனுப்புவதற்கு எதிராக முடிவெடுத்தது’ என்று தலைப்பிட்டு வெளியிட்டிருந்தது. எப்படி கட்சியின் உயர்குழுவில் கலந்துகொண்டவர்கள் கணக்கு அந்த ஆங்கில ஏட்டுக்குச் சென்றது என்பது ஒரு விவாதமாகியுள்ளது.
அடுத்த நாள், மார்ச் 10ஆம் நாள் இன்னொரு ஆங்கில ஏடு, ‘யெச்சூரியை ராஜ்ய சபாவுக்கு அனுப்புவதில், சிபிஎம் கட்சியில் இருவித அபிப்பிராயம்’ என்று தலைப்பிட்டு, அரசியல் தலைமைக் குழுவான பொலிட் பீரோ கூட்டத்தில் கலந்துகொள்ளாத உறுப்பினர்களின் ஆதரவைப் பெற யெச்சூரி முயற்சி என்று எழுதியிருந்தது. மறுநாளான, மார்ச் 11ஆம் நாள், முதலில் இரண்டு நாட்கள் முன்பு இந்தச் செய்தியை வெளியிட்ட அதே ஆங்கில ஏடு, ‘பிகாஷ் இடது - காங்கிரஸ் வேட்பாளர்’ என்று தலைப்பிட்டு, பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா என்ற சிபிஎம் கட்சியின் கொல்கத்தா முக்கிய வழக்கறிஞரும், முன்னாள் கொல்கத்தா மேயருமான தோழர் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டு வேட்பாளராக ராஜ்ய சபாவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தான் மார்ச் 12ஆம் நாள் வேட்பு மனு செய்வதாக அவரே கூறியதாகவும் வெளியிட்டுள்ளது. அதேபோல் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா 12ஆம் தேதி வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டார்.
மேற்கண்ட செய்தி மீண்டும், இடது சாரி அணிகளுக்கு இடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சீதாராம் யெச்சூரி ராஜ்ய சபா சென்றால், சிபிஎம் கட்சியின் கொள்கைகளைப் பேசவும், பாஜக அரசின் மோடி + அமித் ஷா பாசிச தன்மையைத் தோலுரித்துக்காட்ட ராஜ்ய சபாவில் முழங்கவும், அதுவே, ஊடகங்களின் மூலம் பிரபலமாகி வெளிப்படவும் செய்யுமே?
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தோழர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினராக ஆவதற்கு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறலாம் என்றால், அதையே ஏன் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரிக்கு மறுக்க வேண்டும் என்பதே அந்த விவாதத்தின் சாரம்.