Friday, December 27, 2019

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிலை மாறுகிறாரா?

சிறப்புக் கட்டுரை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிலை மாறுகிறாரா?

 சிறப்புக் கட்டுரை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிலை மாறுகிறாரா?

டி.எஸ்.எஸ்.மணி

வியாழக் கிழமை டிசம்பர் 26 அன்று ஆங்கில ஏடுகளில் ஒரு செய்தி. டைம்ஸ் ஆப் இந்தியா "ஹிந்து, முஸ்லீம் பிளவு ஏற்படாது" என்று மோகன் பகவத் கூறியதாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. ஹிந்து ஏடு, " 130 கோடி இந்தியர்களும் ஹிந்து சமூகம்" என்று தலைப்பிட்டு, மோகன் பகவத் கூறியதாக வெளியிட்டிருந்தது. இதனைப் பார்த்த அனைவரும் ஹிந்து ராஷ்டிரீயத்தை ஏற்படுத்த, இந்திய மக்களிடையே, சிறுபான்மை மதத்தவரை ஓரங்கட்டுவது தானே ஆர்.எஸ்.எஸ் வழி என்று ஆச்சரியப்பட்டிருப்பார்கள். எல்லோருக்கும் இருப்பது போல நமக்கும் ஒரே ஆச்சரியம்.
பா.ஐ.க.வின் சமீபகால செயல்பாடுகளை கூர்ந்து கவனிப்பவர்கள், சி.ஏ.பி (குடியுரிமை சட்டத் திருத்த நகல் அறிக்கை) கொண்டு வரப்படும்போதே, சிறுபான்மையினரை ஒதுக்குவதை மாற்றி, கிருத்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோரை உள்வாங்கிக் கொண்டு முஸ்லிம்களை மட்டுமே தனிமைப்படுத்துவது என்ற புதிய தந்திரத்தை எடுத்துள்ளார்கள் என்று அறிவார்கள். அதுவே, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் கொள்கையாக இருக்கும் எனவும் நாடு தழுவிய விவாதம் உண்டு.
அத்தகைய முஸ்லிம்களை தனிமைப்படுத்துவது என்ற கொள்கை, அசாமில் தொடங்கி, நாடெங்கும் தோல்வியை சந்தித்தது. ஏன் என்றால் அசாமில், பாதிக்கப்படும் ஹிந்துக்கள் அதிகம் பேர் முஸ்லிம்களுடன் சேர்ந்து தெருவுக்கு வந்து போராடினார்கள். உத்தரப் பிரதேசத்தில், முஸாபர்பூர் மாவட்டத்திலும், பிஜனுர் மாவட்டத்திலும், போராட வந்த முஸ்லிம்கள் மீது காவல்துறையை விட்டு யோகி அரசாங்கம் துப்பாக்கி சூடு நடத்தினாலும், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் உட்பட அனைத்து பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும், சமாஜ்வாடி கட்சியின் மாணவர் அணி பெரும் அளவில் இந்து மாணவர்களை திரட்டி, முஸ்லீம் மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதை கண்கூடாக காண முடிந்தது. உ.பி.யின் எல்லா நகரங்களிலும், சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் குறிப்பாக யாதவர்கள் என்று ஊருக்கே தெரிந்தவர்கள் போராட்டங்களில் பெரும் பங்கு வகித்ததை காண முடிந்தது. அவர்களுடன் சேர்ந்து, இடது சாரி கட்சியினரும், பீம் ஆர்மி என்ற சந்திரசேகர ஆசாத் ராவண தலைமையிலான தலித் சமூக தொண்டர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டனர். அதை பார்த்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் போராட்டத்தில் இறங்க ஆயத்தமாகி வருகின்றனர்.
அதுவே கர்நாடகாவில், மங்களூரு, பெங்களூரு நகரங்களில், இந்து மாணவ, மாணவிகள் பெரும் அளவில் முஸ்லிம்களுடன் சேர்ந்து தெருவுக்கு வந்து போராடியதையும் காண முடிந்தது. நமது சென்னையில்கூட வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட பல்வேறு அமைப்புகளின் ஓன்று கூடலில், அதிக அளவில் முஸ்லிம் அல்லாத இளம் ஆண்களும், பெண்களும் முஸ்லிம் ஆண்கள், பெண்களுடன் இணைந்து கலந்து கொண்டது ஒரு செய்தியை கூறிக் கொண்டே இருந்தது. அதுதான், இந்தியாவை முஸ்லிம்கள், முஸ்லீம் அல்லாதோர் எனப் பிரிக்க முடியாது என்ற செய்தியாகும்.
பாஐகவிற்கும் நாடு ஒரு செய்தியைக் கூறுகிறது. என்.ஆர்.சி. என்ற குடியுரிமை மக்கள் பதிவேடு கொண்டுவரப்பட்டால், எதிர்ப்போம் என்று பல மாநிலங்கள் அறிவித்து விட்டன. சட்டமாக நிறைவேற்றப்பட்ட சிஏஏ வையும், வர இருப்பதாக கூறப்பட்ட என்.ஆர்.சி. யையும் எதிர்ப்போம் என்பதே பல மாநிலங்களிலும், எதிரொலிக்கிறது. கர்நாடகா பாஜக முதல்வர் எடியூரப்பவும், என்.ஆர்.சி. யை ஏற்கமாட்டோம் எனக் கூறிவிட்டார். பாஜகவின் கூட்டணியாக உள்ள "சிரோன்மணி அகாலி தள்" கட்சியும் எதிர்த்து விட்டது. நேற்றைய பாஜகவின் கூட்டணியாக சிவ சேனையும், இன்றைக்கும் கூட்டணியாக உள்ள நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் என்.ஆர்.சி. யை எதிர்த்து விட்டன. பிரதமர் மோடியும் தனது டில்லி உரையில் "நாடெங்கும் என்.ஆர்.சி. வராது" என்று கூறி விட்டார். கடைசியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வும் அதையே வழி மொழிந்து விட்டார்,
இருபது நாட்களாக நாட்டையே குலுக்கிக் கொண்டிருந்த இந்த விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இதுவரை எந்த கருத்தையும் சொல்லாமலிருந்தார். இப்போதுதான் வாயைத் திறந்து கருத்துக் கூறியிருக்கிறார். "இந்து மதம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் லட்சியம் கொண்டது” என்றதோடு, ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை இந்து-முஸ்லீம் என்று பிரிக்க முயன்ற போது, இந்த நாட்டில் அது நடக்காது என்று தாகூர் சொன்னதை மோகன் பகவத் மேற்கோள் காட்டியுள்ளார்.
"இந்துக்களும், முஸ்லிம்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ள மாட்டார்கள். மாறாக இணைந்து ஹிந்து ராஷ்டிரத்தை அமைப்பார்கள். நான் இந்து என்று கூறும் போது, இந்த நிலத்தையும், அதன் மக்களையும், அதன் காடுகளையும், இங்குள்ள எல்லாவற்றையும் நேசிப்பவர்கள் இந்துக்கள் என்ற பொருளில் கூறுகிறேன். அவர் எந்த மதத்தவராகவும், இந்தப் பிராந்தியத்தவராகவும், எந்த சாதியாகவும், அல்லது எந்த கடவுளை வணங்குபவராகவும் இருக்கலாம். எதிர்கால நம்பிக்கையுடனான ஒரு மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. தேசத்தின் முழுமையான மகிழ்ச்சிக்காக எல்லோரும் கை கோர்ப்போம்.இந்த மண்ணின் இயற்கை தன்மையே, வேற்றுமையில், ஒற்றுமைதான்.". இப்படி ஆர்.எஸ்.ஏ.ஸ். தலைவர் மோகன் பகவத் ஹைதராபாத் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடையே புதன் கிழமை பேசியுள்ளார்.
"இந்த நாட்டில் ஒவ்வொரு மனிதரும் சமமானவர்கள். பல பாரம்பரியங்கள், பழக்கங்கள் இந்தியாவில் இருக்கலாம். ஆனால் நமது குறிக்கோள், எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே" என்றும், "அரசியல்வாதிகள் மட்டுமே இந்த நாட்டின் எதிர் காலத்தை தீர்மானித்து விட முடியாது. ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவும், அதற்காக உழைக்கவும் நம்பிக்கை கொண்டது" இப்படியும் பேசியுள்ளார். என்ன இது? என்ற குழப்பத்திற்கு உள்ளாகிறீர்களா?
அடுத்து, சுவாமி விவேகானந்தரையும் மேற்கோள் காட்டுகிறார். "மக்கள் பல்வேறு ஆண் கடவுள்களையும்,பெண் கடவுள்களையும் வழிபடலாம். ஆனால் எல்லோருமே முதலில் பாரத மாதாவை வழிபட வேண்டும். ஹிந்து ராஷ்டிரா உலகத்திற்கே ஒரு வழிகாட்டி என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் " என்று கூறியுள்ளார்.
இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு, வாய் திறக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவரது இத்தகைய கூற்றிலிருந்து என்ன புரிகிறது ? அரசியல்வாதிகள் மட்டுமல்ல எல்லா அதிகார பசியுள்ளவர்களும் காலத்திற்கு ஏற்றார் போல பேச வல்லவர்கள் என்பது மட்டும் புரிகிறது. தங்களது பிளவு படுத்தும் முயற்சி தோற்று விட்டது என்ற படிப்பினையாக இருக்குமா? புதிய தந்திரமாக இருக்குமா? என்று நாடு குழப்பிக் கொள்ளட்டும் என்றும் இருக்கலாமோ?