Friday, September 10, 2021

இயக்குநர் ஜனநாதனின் ‘லாபம்’ - இளைய தலைமுறைக்கு ஓர் ‘அறிவுப் பெட்டகம்’!

Minnambalam---11-09-21                                                      இயக்குநர் ஜனநாதனின் ‘லாபம்’ - இளைய தலைமுறைக்கு ஓர் ‘அறிவுப் பெட்டகம்’!

இயக்குநர் ஜனநாதனின் ‘லாபம்’ - இளைய தலைமுறைக்கு ஓர் ‘அறிவுப் பெட்டகம்’!

டி. எஸ். எஸ். மணி

இயக்குநர் ஜனநாதன் பற்றி, நடிகர் விஜய் சேதுபதி கூறியது போல், “அவரிடம் பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்காதீர்கள். அறிவுபூர்வமான கருத்தாழம் மிக்க படங்களையே அவர் தருவார்” என்ற சொல்லை நிரூபித்து நிற்கிறது லாபம் திரைப்படம். விவசாயிகளின் போராட்டம் நாட்டையே குலுக்கிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இப்படி ஒரு படம் விவசாய சங்கம் பற்றியும், அவர்களது வாழ்க்கையை உய்விப்பது பற்றியும் வெளிவந்திருப்பது சிறப்பு. ஜனா மறைவுக்குப் பிறகு ‘லாபம்’ படம் மூலம் அவர் உயிர் பெற்று மீண்டும் முழுமையாக வெளிவந்துள்ளார்.

ஜல்லிக்கட்டு எழுச்சி, ‘மெரினா எழுச்சி’ என அழைக்கப்பட்டபோது அதில் ஈடுபட்ட லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றி தெரியாது. ஆனால், அது ‘உரிமைப் போர்’ என்று தெரியும். அதேபோல, இன்று எல்லோரும் விவசாயிகள் போராட்டம் பற்றியும், விவசாய சங்கங்கள் பற்றியும் பேசுகிறார்கள். அதைப் பற்றி ஆழமாகத் தெரியாமலேயே இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் பற்றி சமூக வலைதளங்களிலே லட்சக்கணக்கில், இளைஞர்கள் தோழமை காட்டுகிறார்கள். அத்தகைய இளைஞர்களுக்கு, ஆழமான புரிதலை உருவாக்க ஜனாவின் இந்தப் படம் ஒரு கல்விப் பெட்டகமாக அமைந்திருக்கிறது.

நடிகர் விஜய் சேதுபதி வழமை போலவே நாயகனாக, விவசாய சங்கப் போராளியாக தூள் பறத்துகிறார். ஸ்ருதிஹாசனும் அவரது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து, ரசிகர்களின் மனதில் காதல், பாடல்,நடனம், நாயகனைக் காப்பாற்றும் பாங்கு என ஒளிர்விடுகிறார். வில்லன் நடிகர்களும் கலக்கிவிட்டனர்.

விவசாயத்தை எப்படி ஆண்டு முழுவதும் செய்ய முடியும் என்று விளக்கம் கூறும் நாயகன் ஒரு வழிகாட்டியாக நிற்கிறார். இன்றைய தலைமுறைக்கு, நமது விவசாயத்துக்குத் தடைகளாக வரும் பெரும் முதலாளிகள், அரசு இயந்திரம் ஆகியோரைப் பற்றி, படம் கிழித்துத் தொங்க விடுகிறது. பெரிய முதலாளி நிலத்தில் ஆமணக்கு போட்டு, கோடிக்கணக்கான பணத்தை அந்நிய நாடுகளிடம் அள்ள நினைக்கும்போது, அவருடன் இருந்த சிறு முதலாளிகள் அதை எதிர்க்கின்றனர். புரட்சிகர விவசாய சங்கத் தலைவருடன் வந்து சேர்ந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு புதிய ஐக்கிய முன்னணியையும் விவசாய சங்கத்துக்கு ஜனா ஏற்படுத்தித் தருகிறார். அக்கறையுள்ள ரசிகர்களுக்கு இது படமல்ல; பாடம் என்று கூடச் சொல்லலாம். தஞ்சைத் தரணியில் சீனிவாசராவ் பங்களிப்பு பற்றியும் ஜனா விளக்கி விடுகிறார். துப்பாக்கிச் சூடுகள் பற்றியும், கட்சி சார்பற்ற போராட்டங்களில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொள்வதை, தூத்துக்குடி, கதிராமங்கலம் உட்பட வசனங்களிலேயே ஜனா கொண்டுவருகிறார்.

சண்டைக் காட்சிகளுக்கும் குறைவில்லை. விவசாயம் தோற்றுவிட்டதென விரக்தி அடைபவர்களுக்கும், நம்பிக்கை தருகின்ற ‘கூட்டுப் பண்ணை’ பற்றி புதிய உற்சாகம் தருகிறார் இயக்குநர். எத்தனை புதிய செய்திகள் என ஆர்வமுள்ள இளைஞர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

நம் கண்முன்னே பார்க்கும் வயல்வெளிகளை இந்த அளவுக்கு விளக்குவது ஒரு பெரும் சாதனை. பசுமை நிறைந்த வயல்களை உருவாக்கக் கொடுக்கப்படும் ‘டிப்ஸ்’ பலருக்கும் உதவிகரமாக இருக்கும். நாட்டையே புரட்டிப் போட தகுதி உள்ள விவசாயிகளின் போராட்டத்தை, ‘எதிர்கால வரலாறு’ என ஆக்கி விட்டாரே இயக்குநர்!

முதலாளிகள் மக்களை ஏமாற்ற முடியும். ஆனால், அது தற்காலிகமானது என்கிறது படம். இந்தப் படம் ‘பார்க்க, பார்க்கத்தான் அதிகமாகப் பிடிக்கும்’ என்று தனுஷ் வார்த்தைகளில்தான் சொல்ல வேண்டும். மறைந்த ஜனாவுக்கு செவ்வணக்கம் செலுத்தி, அவர் ‘லாபம்’ படம் பற்றிக் கூறியதையும் காட்டுகிறார்கள். ஜனா படப்பிடிப்பு நடத்தும் இடத்தில், நடிகர்களுடன் ஊடாடுவதை இறுதியில் காட்டும்போது, கண்களில் எவருக்குமே கண்ணீர் வந்துவிடும்.

நாயகன் செருப்புத் தொழிலாளி மகன் பக்கிரிசாமி என்று கூறும்போது, சோவியத் ரஷ்யாவின் ஸ்டாலினை மனதில் வைத்து எழுதியிருப்பாரோ! ‘ஆடு வெட்டினே... பிராமணர் ஆதரவை இழந்தே! மாடு வெட்டினே... ஒரு பகுதி மக்களின் ஆதரவை இழந்தே! பன்றி வெட்டி வியாபாரம் செய்யறே... எங்க ஆளுங்க ஆதரவையும் இழந்திருவே!’ என்று ஒரு முஸ்லிம் சொல்லும்போது, உணர்ச்சிகரமாக உள்ளது.

தொழில் செய்து பிழைப்போர் சமூகத்தில் உள்ள முரண்பாடுகளைச் சந்திப்பதை, ஜனா படம்பிடித்துக் காட்டுகிறார். தலித் மக்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஆங்கிலேயன் ஆட்சியில், நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட்ட செப்புப் பட்டயத்தை அப்படியே காட்டுகிறார். எத்தனை ஆராய்ச்சி, உழைப்பு!

காவல்துறை கண்களில் மண்ணைத் தூவ புரட்சியாளர்கள் ‘தந்தி கம்பி’களைப் பயன்படுத்துவது ஒரு புதிய யுக்தி. விவசாய சங்கம் நாகரிக உலகுக்கேற்ப வளைந்து செல்வதை, ஸ்ருதிஹாசனது நடன ஆட்ட வரவை சங்கம் அனுமதிப்பதில் பார்க்க முடிகிறது. கடவுள் பற்றி, “ நாம் பேசுவது அரசியல். ஆனால், மக்களுக்கு அது நம்பிக்கை” என்று கதாநாயகன் தனது தோழர்களிடம் கூறுவது அருமையான அறிவுரை. சமூகச் செயற்பாட்டாளர்கள் கற்றுக்கொள்ள நிறைய ‘லாபம்’ படத்தில் இருக்கிறது.

மொத்தத்தில் எந்தக் கட்சியோ, விவசாய சங்கமோ சொல்ல விரும்புவதை, ஒரு இரண்டரை மணி நேரத்தில் ஜனா படம்பிடித்துக் காட்டிவிட்டார். விவசாய சங்கம் புரட்சிகரமாகச் செயல்பட முடியும் என்பதை இந்தப் படம் பகர்கிறது. சினிமாவுக்கே உரிய கற்பனைக் காட்சிகளாக, படத்தில் வரும் நாயகனை, நாயகி காப்பாற்றுவது போன்ற கதைக்கும் இதில் பஞ்சமில்லை. பார்த்தால்தான் வரலாற்று பாடத்தை ரசிக்க முடியும். ‘கதை, வசனம், இயக்கம் – ஜனநாதன்’ என எழுத்துப் போடும்போது, ரசிகர்களின் வாழ்த்து எதிரொலித்தது.

தரமான ஒரு படத்தைப் பார்த்த திருப்தியோடு தியேட்டரை விட்டு வெளியே வந்தோம். படத் தயாரிப்பாளர், ‘தரமான ஒரு படத்தை எடுத்ததற்காகப் பெருமைப்படுகிறேன்’ என்று சொன்னாராம். ‘வணிகம் மட்டுமே நோக்கமாக இருந்தால், ஓடிடியில் மட்டுமே வெளியிட்டிருப்போம். தியேட்டருக்கு வந்தால்தான் விவசாயிகள் பார்த்துப் பயன்பட முடியும்’ என்றாராம்.

மொத்தத்தில், ஒரு ‘தாக்கம் செலுத்தும் பரப்புரை’ (Offensive Campaign) ஆகவும் உள்ளது. இப்படி ஒரு படம் எடுக்க அசாத்திய துணிச்சல் வேண்டும். அது ஜனாவிடம் நிறைய இருந்தது. ஒவ்வொரு வசனத்தையும் ஆழ்ந்து கவனித்து ரசிக்க வேண்டும். முறைப்படி ‘தேசிய விருது’ பெற தகுதியான படம்.


Saturday, May 15, 2021

கேரளத்தில் பதவியேற்பு தள்ளிப் போவது ஏன்

கேரளத்தில் பதவியேற்பு தள்ளிப் போவது ஏன்? - 
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/may/15
/கேரளத்தில்-பதவியேற்பு-தள்ளிப்-போவது-ஏன்-3623592.html

Tuesday, May 4, 2021

மூன்று மாநில மக்களும் மறுத்தது எதை?

 மின்னம்பலம் மின்னம்பலம்

மாலை 7 -செவ்வாய் 4 மே 2021

மூன்று மாநில மக்களும் மறுத்தது எதை?

மூன்று மாநில  மக்களும் மறுத்தது எதை?

டி.எஸ்.எஸ். மணி

ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்து விட்டன. அதில் மூன்று மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகியவை முறையே, பா.ஜ.க. எதிர்ப்பு, நடுவணரசு எதிர்ப்பு என்பதை முதன்மை நோக்காக தங்கள் பரப்புரையில் வைத்திருந்தார்கள்.

தங்கள் மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வரவேண்டும்? யார் வரக்கூடாது? என்பதற்கான தரவுகளையும் பரப்புரையில் கொண்டு சென்றார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், ‘பா.ஜ.க. வின் அபாயத்தைச் சுட்டிக் காட்டுவதை’ தூக்கலாகச்செய்தார்கள் என்பதை மறுக்க முடியுமா? அதற்கான கூட்டணியையும் கட்டித்தானே, தேர்தலில் போட்டியிட்டார்கள்.

ஆகவே இந்த மூன்று மாநிலங்களின் வெற்றி என்பதை, ‘மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான, பா.ஜ.க.விற்கு எதிரான வெற்றி’ என்பதாகத்தானே கொள்ள முடியும்? பா.ஜ.க.ஒரு அகில இந்திய {தேசிய}க் கட்சி என்பதாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியுமா? நடுவண் அரசில் ஏழு ஆண்டுகளாக ஆளும் ஒரு கட்சி என்றும் பார்க்க வேண்டுமல்லவா? பா.ஜ.க. வை ஒரு மதவாதக் கட்சி என்று மட்டும் பார்க்க முடியுமா? கார்ப்பரேட் கட்டுப்பாட்டை இந்த நாட்டின் மீதும், மக்கள் மீதும், திணிக்கும் கட்சி என்றும் பார்க்க வேண்டும் அல்லவா?

அப்படிப்பட்ட ஒரு கட்சி எதிர்க் கட்சியாக இருந்தால் கதை வேறு. அவ்வப்போது தேசியம், தேசப்பற்று பேசுவதற்காக, ’சுதேஷி, விதேஷி’ என்று கூறிக் கொண்டு, அந்நிய நாட்டு நிர்ப்பந்தங்களை எதிர்ப்பார்கள். அப்படிப்பட்ட கட்சி,. மாநிலத்தை ஆளும் கட்சியாக இருந்தால் கதை வேறு. அவ்வப்போது, மத்திய அரசின் அழுத்தத்தை, மாநில உரிமை பறிப்பை எதிர்ப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு கட்சி மத்தியில் ஆட்சியில் ஐந்து ஆண்டு மட்டுமல்ல, அதற்குப் பிறகும் அதிகப் பெரும்பான்மையுடன் ஆள வந்த பிறகு எப்படி உள்ளே இருக்கும், ‘சுய ரூபத்தை’ காண்பிக்காமல் இருப்பார்கள்? மதவாதத்தை சட்டபூர்வமாக செயல்படுத்தாமல் இருப்பார்கள்? அதற்காக, சி.ஏ.ஏ.போன்ற சட்டங்களைக் கொண்டு வராமல் இருப்பார்கள்? எப்படி விதேஷியான, அந்நிய நேரடி மூலதனத்தை திறந்து விடாமல் இருப்பார்கள்? எப்படிப்பட்ட ஒரு கட்சி, இந்திய நாட்டின் முதுகெலும்பான விவசாயப் பொருளாதாரத்தின், சுய சார்புத்தன்மையை உடைக்க, அதை கார்ப்பரேட் சார்புக்குத் தள்ளி விடும் மூன்று சட்டங்களைக் கொண்டு வராமல் இருப்பார்கள்?

ஆகவேதான் இந்த தேர்தல் முடிவை ஒரு ஆங்கில ஏடு, ‘காவி வளைவு வீழ்த்தப்பட்டது ( Saffron Curve Flattened)’ என்று கொரோனா செய்திகளின் மொழிநடையிலேயே, தலைப்பு போட்டுள்ளது.

ஆகவே, நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவுகள், மூன்று மாநிலங்களில், பா.ஜ.க.வும், அதனுடன் கூட்டு சேர்ந்திருந்தவர்களும் வெற்றி பெறவில்லை என்ற செய்தியைக் கூறும்போது, அதில், ‘ஆட்சிக்கு எதிரான மனோ நிலை ( Anti Incombebcy)’ என்பது, ‘மத்திய ஆட்சிக்கு எதிரான மனோ நிலை’ என்பதாகத்தான் முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டும். ஏன் என்றால், கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும், ஆட்சியில் இருந்த சி.பி.எம்., மற்றும் மம்தா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதைக் காண முடிகிறது. அவர்களது வெற்றி, மாநில உரிமைகளுக்காகவும், அதை பறிக்க முயலும் மத்திய பா.ஜ.க.வின் ஆட்சிக்கு எதிராகவும், சிறுபான்மை மத நம்பிக்கையுள்ள மக்களின் பாதுகாப்பிற்காகவும், தேர்தல் களத்தில் நிற்கும் காங்கிரஸ் கூட்டணியா? அல்லது தாங்களா? என்ற கேள்விக்கு, மக்கள் அளித்த பதிலாகப் பார்க்கப்பட வேண்டும்.

அதாவது, பா.ஜ.க.வை எதிர்க்க, வழமையாக காங்கிரசிற்கு வாக்களித்து வந்த கிறித்துவர்கள் உட்பட,கேரள மக்கள் இந்த முறை சி.பி.எம். ஐ தேர்வு செய்ததும், மேற்கு வங்க மக்கள், ‘காங்கிரஸ் + சி.பி.எம். + சித்திக் கட்சி கூட்டணி’யை விட, பாஜக எதிர்ப்பில், மம்தா கட்சியையே மீண்டும் தேர்ந்தெடுப்பதில் கவனத்தைக் காட்டியுள்ளதும் கவனிக்கப்பட வேண்டும்.

அதனால்தான், மேற்கு வங்கத்தில்,மூன்றாவது கூட்டணிக்கு என்று கணிக்கப்பட்ட தொகுதிகளிலும், மக்கள் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையே தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதனால்தான், காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. அதே சமயம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 217 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆகவே இந்த தேர்தல் முடிவுகளை, ‘மத்திய பா.ஜ.க.ஆட்சிக்கு எதிரான அலை’ என்றே எடுத்துக் கொள்ளலாம். அதனால்தான், தி.மு.க.வும், தனது தேர்தல் பரப்புரையில், பழனிச்சாமி அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை விட, ‘ பா.ஜ.க.வின் எடுபிடி அரசு’ என்பதையும், நடுவண் அரசின் அத்து மீறல்களையும் பட்டியலிட்டு, அதற்கும் மேலாக, ஜெயலலிதா ஏற்காத மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோத கொள்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்திய பழனிச்சாமி அரசு என்பதையும் சேர்த்தே அம்பலப்படுத்தி வந்தனர்.

தமிழக மக்களுக்கு எதிராக, பழனிச்சாமி அரசு செயல்பட்டது என்பதை ஆதாரபூர்வமாகக் கூறும்போதுகூட, திமுக கூட்டணியின் பரப்புரைகளில், நாடாளுமன்றத்தில் அதிமுக வின் " முத்தலாக் ஆதரவு வாக்களிப்பு, சி.ஏ.ஏ. ஆதரவு வாக்களிப்பு, மூன்று விவசாயச் சட்ட ஆதரவு வாக்களிப்பு, எட்டு வழிச்சாலை நிலப்பறிப்பு, நீட் தேர்வு அமலாக்கல், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போன்ற நடுவண் அரசின் திட்டங்களுக்கு சரண்டைந்தவற்றையே முதன்மைப்படுத்தினர்.

பொதுமக்களுக்கு குறிப்பாக, மோடி ‘காட்சி ஊடகங்களில்’ தோன்றும் போதெல்லாம் கோபம் வருவதையும், குறிப்பாக பெண்கள் மத்தியில் இருந்த அப்படிப்பட்ட வெறுப்பையும் நாம் கண்ணுற்றோம். இவையெல்லாம் வாக்குகளாக மாறும் என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபித்துள்ளது. மவுனமாகவே இருந்து மக்களவை தேர்தலில், தமிழக மக்கள் எப்படி 39 இடங்களை திமுக கூட்டணிக்கு கொடுத்தார்களோ, அதேபோல, இப்போதும் மவுனமாகவே இருந்து,திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

மக்கள் கொடுத்திருக்கும் இந்த, ‘மத்திய பா.ஜ.க.ஆட்சிக்கு எதிரான வாக்குகளை’ மூன்று மாநிலங்களும் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்பதே எதிர்காலம் பற்றிய கேள்வி