Friday, December 27, 2019

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிலை மாறுகிறாரா?

சிறப்புக் கட்டுரை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிலை மாறுகிறாரா?

 சிறப்புக் கட்டுரை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிலை மாறுகிறாரா?

டி.எஸ்.எஸ்.மணி

வியாழக் கிழமை டிசம்பர் 26 அன்று ஆங்கில ஏடுகளில் ஒரு செய்தி. டைம்ஸ் ஆப் இந்தியா "ஹிந்து, முஸ்லீம் பிளவு ஏற்படாது" என்று மோகன் பகவத் கூறியதாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. ஹிந்து ஏடு, " 130 கோடி இந்தியர்களும் ஹிந்து சமூகம்" என்று தலைப்பிட்டு, மோகன் பகவத் கூறியதாக வெளியிட்டிருந்தது. இதனைப் பார்த்த அனைவரும் ஹிந்து ராஷ்டிரீயத்தை ஏற்படுத்த, இந்திய மக்களிடையே, சிறுபான்மை மதத்தவரை ஓரங்கட்டுவது தானே ஆர்.எஸ்.எஸ் வழி என்று ஆச்சரியப்பட்டிருப்பார்கள். எல்லோருக்கும் இருப்பது போல நமக்கும் ஒரே ஆச்சரியம்.
பா.ஐ.க.வின் சமீபகால செயல்பாடுகளை கூர்ந்து கவனிப்பவர்கள், சி.ஏ.பி (குடியுரிமை சட்டத் திருத்த நகல் அறிக்கை) கொண்டு வரப்படும்போதே, சிறுபான்மையினரை ஒதுக்குவதை மாற்றி, கிருத்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோரை உள்வாங்கிக் கொண்டு முஸ்லிம்களை மட்டுமே தனிமைப்படுத்துவது என்ற புதிய தந்திரத்தை எடுத்துள்ளார்கள் என்று அறிவார்கள். அதுவே, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் கொள்கையாக இருக்கும் எனவும் நாடு தழுவிய விவாதம் உண்டு.
அத்தகைய முஸ்லிம்களை தனிமைப்படுத்துவது என்ற கொள்கை, அசாமில் தொடங்கி, நாடெங்கும் தோல்வியை சந்தித்தது. ஏன் என்றால் அசாமில், பாதிக்கப்படும் ஹிந்துக்கள் அதிகம் பேர் முஸ்லிம்களுடன் சேர்ந்து தெருவுக்கு வந்து போராடினார்கள். உத்தரப் பிரதேசத்தில், முஸாபர்பூர் மாவட்டத்திலும், பிஜனுர் மாவட்டத்திலும், போராட வந்த முஸ்லிம்கள் மீது காவல்துறையை விட்டு யோகி அரசாங்கம் துப்பாக்கி சூடு நடத்தினாலும், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் உட்பட அனைத்து பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும், சமாஜ்வாடி கட்சியின் மாணவர் அணி பெரும் அளவில் இந்து மாணவர்களை திரட்டி, முஸ்லீம் மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதை கண்கூடாக காண முடிந்தது. உ.பி.யின் எல்லா நகரங்களிலும், சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் குறிப்பாக யாதவர்கள் என்று ஊருக்கே தெரிந்தவர்கள் போராட்டங்களில் பெரும் பங்கு வகித்ததை காண முடிந்தது. அவர்களுடன் சேர்ந்து, இடது சாரி கட்சியினரும், பீம் ஆர்மி என்ற சந்திரசேகர ஆசாத் ராவண தலைமையிலான தலித் சமூக தொண்டர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டனர். அதை பார்த்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் போராட்டத்தில் இறங்க ஆயத்தமாகி வருகின்றனர்.
அதுவே கர்நாடகாவில், மங்களூரு, பெங்களூரு நகரங்களில், இந்து மாணவ, மாணவிகள் பெரும் அளவில் முஸ்லிம்களுடன் சேர்ந்து தெருவுக்கு வந்து போராடியதையும் காண முடிந்தது. நமது சென்னையில்கூட வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட பல்வேறு அமைப்புகளின் ஓன்று கூடலில், அதிக அளவில் முஸ்லிம் அல்லாத இளம் ஆண்களும், பெண்களும் முஸ்லிம் ஆண்கள், பெண்களுடன் இணைந்து கலந்து கொண்டது ஒரு செய்தியை கூறிக் கொண்டே இருந்தது. அதுதான், இந்தியாவை முஸ்லிம்கள், முஸ்லீம் அல்லாதோர் எனப் பிரிக்க முடியாது என்ற செய்தியாகும்.
பாஐகவிற்கும் நாடு ஒரு செய்தியைக் கூறுகிறது. என்.ஆர்.சி. என்ற குடியுரிமை மக்கள் பதிவேடு கொண்டுவரப்பட்டால், எதிர்ப்போம் என்று பல மாநிலங்கள் அறிவித்து விட்டன. சட்டமாக நிறைவேற்றப்பட்ட சிஏஏ வையும், வர இருப்பதாக கூறப்பட்ட என்.ஆர்.சி. யையும் எதிர்ப்போம் என்பதே பல மாநிலங்களிலும், எதிரொலிக்கிறது. கர்நாடகா பாஜக முதல்வர் எடியூரப்பவும், என்.ஆர்.சி. யை ஏற்கமாட்டோம் எனக் கூறிவிட்டார். பாஜகவின் கூட்டணியாக உள்ள "சிரோன்மணி அகாலி தள்" கட்சியும் எதிர்த்து விட்டது. நேற்றைய பாஜகவின் கூட்டணியாக சிவ சேனையும், இன்றைக்கும் கூட்டணியாக உள்ள நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் என்.ஆர்.சி. யை எதிர்த்து விட்டன. பிரதமர் மோடியும் தனது டில்லி உரையில் "நாடெங்கும் என்.ஆர்.சி. வராது" என்று கூறி விட்டார். கடைசியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வும் அதையே வழி மொழிந்து விட்டார்,
இருபது நாட்களாக நாட்டையே குலுக்கிக் கொண்டிருந்த இந்த விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இதுவரை எந்த கருத்தையும் சொல்லாமலிருந்தார். இப்போதுதான் வாயைத் திறந்து கருத்துக் கூறியிருக்கிறார். "இந்து மதம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் லட்சியம் கொண்டது” என்றதோடு, ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை இந்து-முஸ்லீம் என்று பிரிக்க முயன்ற போது, இந்த நாட்டில் அது நடக்காது என்று தாகூர் சொன்னதை மோகன் பகவத் மேற்கோள் காட்டியுள்ளார்.
"இந்துக்களும், முஸ்லிம்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ள மாட்டார்கள். மாறாக இணைந்து ஹிந்து ராஷ்டிரத்தை அமைப்பார்கள். நான் இந்து என்று கூறும் போது, இந்த நிலத்தையும், அதன் மக்களையும், அதன் காடுகளையும், இங்குள்ள எல்லாவற்றையும் நேசிப்பவர்கள் இந்துக்கள் என்ற பொருளில் கூறுகிறேன். அவர் எந்த மதத்தவராகவும், இந்தப் பிராந்தியத்தவராகவும், எந்த சாதியாகவும், அல்லது எந்த கடவுளை வணங்குபவராகவும் இருக்கலாம். எதிர்கால நம்பிக்கையுடனான ஒரு மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. தேசத்தின் முழுமையான மகிழ்ச்சிக்காக எல்லோரும் கை கோர்ப்போம்.இந்த மண்ணின் இயற்கை தன்மையே, வேற்றுமையில், ஒற்றுமைதான்.". இப்படி ஆர்.எஸ்.ஏ.ஸ். தலைவர் மோகன் பகவத் ஹைதராபாத் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடையே புதன் கிழமை பேசியுள்ளார்.
"இந்த நாட்டில் ஒவ்வொரு மனிதரும் சமமானவர்கள். பல பாரம்பரியங்கள், பழக்கங்கள் இந்தியாவில் இருக்கலாம். ஆனால் நமது குறிக்கோள், எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே" என்றும், "அரசியல்வாதிகள் மட்டுமே இந்த நாட்டின் எதிர் காலத்தை தீர்மானித்து விட முடியாது. ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவும், அதற்காக உழைக்கவும் நம்பிக்கை கொண்டது" இப்படியும் பேசியுள்ளார். என்ன இது? என்ற குழப்பத்திற்கு உள்ளாகிறீர்களா?
அடுத்து, சுவாமி விவேகானந்தரையும் மேற்கோள் காட்டுகிறார். "மக்கள் பல்வேறு ஆண் கடவுள்களையும்,பெண் கடவுள்களையும் வழிபடலாம். ஆனால் எல்லோருமே முதலில் பாரத மாதாவை வழிபட வேண்டும். ஹிந்து ராஷ்டிரா உலகத்திற்கே ஒரு வழிகாட்டி என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் " என்று கூறியுள்ளார்.
இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு, வாய் திறக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவரது இத்தகைய கூற்றிலிருந்து என்ன புரிகிறது ? அரசியல்வாதிகள் மட்டுமல்ல எல்லா அதிகார பசியுள்ளவர்களும் காலத்திற்கு ஏற்றார் போல பேச வல்லவர்கள் என்பது மட்டும் புரிகிறது. தங்களது பிளவு படுத்தும் முயற்சி தோற்று விட்டது என்ற படிப்பினையாக இருக்குமா? புதிய தந்திரமாக இருக்குமா? என்று நாடு குழப்பிக் கொள்ளட்டும் என்றும் இருக்கலாமோ?

Wednesday, December 25, 2019

மோடி - ஷா வேறுபாடுகள் மேஜைக்கு வந்தன!

சிறப்புக் கட்டுரை: மோடி - ஷா வேறுபாடுகள் மேஜைக்கு வந்தன!

சிறப்புக் கட்டுரை: மோடி - ஷா வேறுபாடுகள் மேஜைக்கு வந்தன!

டி.எஸ்.எஸ்.மணி

‘மோடி - அமித் ஷா: மோதல் ஆரம்பம்?’ என்ற தலைப்பில் மின்னம்பலம் ஒரு கட்டுரையை ‘டிஜிட்டல் திண்ணை’யில் வெளியிட்டிருந்தது. இன்னமும் சிறிது கவனமாக கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்ச்சிகளையும், ஊடகங்களில் வந்த நடுவண் அரசாங்கத்தின் எதிரொலிகளையும் நாம் காண வேண்டும்.
‘குடியுரிமை திருத்தச் சட்டம்’, ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ ஆகியவற்றைப் பற்றிய விவாதங்கள் அவை. அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களின் ‘இடம்பெயர்ந்த மக்கள்’ பற்றியே அந்தச் சர்ச்சைகள் தொடங்கின. அசாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம், 19 லட்சம் பேர் குடியுரிமை கிடைக்காதோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதில், 13 லட்சம் பேர் முஸ்லிம் அல்லாதவர்கள்.
40 ஆண்டுகளுக்கு முன்பே, ‘அனைத்து அசாம் மாணவர் சங்கம்’ தங்கள் மாநிலத்துக்குள் வந்துள்ள வங்காளிகள், தங்களுக்குச் சேர வேண்டிய கல்வி, வேலைவாய்ப்பை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர் என்று கூறி, அவர்களை வெளியேற்ற நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியாக, காங்கிரஸ் ஆட்சியில், ‘அசாம் ஒப்பந்தம்’ போடப்பட்டது என்பதும், அதன் தொடர்ச்சி இப்போது நடக்கும் போராட்டத்திலும் வெடிக்கிறது என்றும் காண முடிகிறது. அதனாலேயே, அசாம் மாநிலத்தில் வாழும் இந்துக்களும், போடா பழங்குடிகளும், கரிபி அங்கலாங் பழங்குடிகளும், ஜார்க்கண்டிலிருந்து அசாம் மாநிலம் சென்று மலையகங்களில் தோட்டத் தொழில் செய்வோரும் சேர்ந்து தெருவில் இறங்கி போராடினார்கள் என்பவை சென்ற வாரத்து நிகழ்ச்சிகள்.
அவர்கள் தங்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டதற்காகவும், வங்காளிகளுக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டதற்காகவும் இரு வெவ்வேறு காரணங்களுக்காகப் போராடினார்கள். அதே நேரம் அங்குள்ள முஸ்லிம்களும் தங்களுக்கு மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடினார்கள். இந்த இரு துருவங்களும் இணைந்து போராடியதால், ராணுவம் ஒன்றும் செய்ய இயலாத நிலை உருவானது. அதுவும் நடுவண் அரசின் கவனத்துக்குச் சென்றது.
முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோர் என்ற பிரிவினை இல்லாமல் மக்கள் போராடினார்கள் என்பதை கண்டு நடுவண் அரசு துணுக்குற்று இருக்கிறது. அதுவே மாணவர்கள் போராட்டத்திலும் டெல்லி, உ.பி, பெங்களூரு, தமிழ்நாடு, கேரளம் என தொடர்ந்தது.
இந்தியத் தலைமை அமைச்சரைப் பொறுத்தவரை, நாட்டுக்குள்ளும் வெளியிலும் வருகிற எதிர்ப்பை கவனித்து, நிர்வாகத்தை நடத்திச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரம், ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ என்பது பெரும் அச்சத்தைக் கிளப்பி விட்டது என்பது யாவரும் அறிந்ததே. அதையொட்டிதான், அமித் ஷா பேசிய பேச்சுகளும் டெல்லி பொதுக்கூட்டத்தில், மோடி பேசிய பேச்சுகளும் வேறுபட்டு உள்ளதை எதிர்க்கட்சியினர்கூட விவாதமாக்கினார்கள். அத்தகைய சூழலில், கடந்த வாரத்தில், வெளியான செய்திகள் கூறும் பின்னணியை நாம் கவனிக்க வேண்டும்.
மோடியின் டெல்லி உரைக்குப் பிறகு சில நாட்களாக நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஊடகச் செய்திகளை வெளியிடவில்லை. மாறாக, உள் துறையின் ராஜாங்க அமைச்சர் கிஷோர் ரெட்டிதான் செய்திகளை வெளியிட்டார் அல்லது வெளியிட வைக்கப்பட்டார். முதலில், ‘சட்டமாக ஆக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்பட விதிகள் தயாரிக்கப்பட வேண்டும். அத்தகைய விதிகளைத் தயாரிக்கும் காலத்தை தள்ளிப்போட்டுள்ளோம்’ என்பதே. இதை, சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவே என எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்து, ‘குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய கருத்துகளை, பரிந்துரைகளைப் பொதுமக்கள் அனுப்பலாம்’ என அதே, உள்துறையின் ராஜாங்க அமைச்சர் கிஷோர் ரெட்டி கூறினார். அதுவும் உள்துறை அமைச்சரின் மூலம் வெளியிடப்படவில்லை. நமக்கு இதில் புரியாத செய்தி, ‘வண்டிக்குப் பின்னால் குதிரையைக் கட்டுவதா? குதிரைக்குப் பின்னால் வண்டியைக் கட்டுவதா?’ என்பதுதான். ஏனென்றால், சட்டம் உருவாவதற்கு முன்னால், அதன் உள்ளடக்கம் ஒரு நகல் அறிக்கையாக (மசோதாவாக) வெளிவரும். ஆள்வோர் அதன் மீது பொதுமக்களின் கருத்தறிய விரும்பினால், வரை நகலை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்வதற்கு முன்பே அதை பொது வெளியில் வெளியிட்டு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பார்கள். ஆனால், இங்கே எல்லாமே தலைகீழாக நடக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்தம் என்ற வரை நகல், மக்களவைக்குக் கொண்டு செல்லப்பட்டு, நிறைவேறி, மாநிலங்களவைக்குக் கொண்டு செல்லப்பட்டு நிறைவேறி, குடியரசுத் தலைவரது ஒப்புதலையும் அவசரமாகப் பெற்று, சட்டமாகி விட்டது. அதன்பிறகு, நாடெங்கும் மத வேறுபாடு இன்றி பொதுமக்களின் எதிர்ப்பு உருவான பிறகு, ‘பொதுமக்களின் பரிந்துரைகளை அனுப்பலாம்’ என்றும், ‘சட்டத்தை அமலாக்குவதற்கான விதிகளை உருவாக்க கால தாமதம் ஆகும்’ என்பதாகவும், உள்துறை ராஜாங்க அமைச்சர் மூலம் வெளியிடப்படுகிறது. இந்த இடத்தில்தான் ‘புரிந்துகொள்பவர்களுக்குப் புரியும்’ என்பதாக அது பார்க்கப்படுகிறது. ஆள்வோருக்கு, அவசரம் எப்போதுமே திருப்பி அடிக்கும் வாய்ப்புடன் கூடியது என்பதை இது உணர்த்தியுள்ளது. இடையில், மோடியின் மனத்தை ஒட்டியவராகக் கருதப்படும், முன்னாள் நடுவண் அமைச்சரும், இன்றைய துணைக் குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு அவர்கள், ‘அதிருப்திகள் ஜனநாயகத்தின் சாராம்சம்’ என்று கூறியுள்ளார்.
இவை அனைத்துக்கும் பிறகே, செவ்வாய்க்கிழமை காலையில் அவசரமாகக் கூட்டப்பட்ட நடுவண் அமைச்சரவை சில முடிவுகளை எடுத்துள்ளது. அந்த முடிவுகளும் மதியம் அமைச்சர்கள் ஜவடேகர், பியூஸ் கோயல் மூலம் ஊடகத்தாருக்கு அறிவிக்கப்படும் என்றுதான் கூறப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அப்போதும் உள்துறை அமைச்சர் மூலம் அது வெளியிடப்படவில்லை. ஆனால் அதற்குப் பிறகே, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பிரதமர் மோடி கூறியது சரிதான். இப்போது தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்பாட்டுக்கு வராது. செயல்பாட்டுக்கு வரும் தேசிய மக்கள்தொகை பதிவு என்பது முற்றிலும் வேறுபட்டது’ என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். ஆள்வோருக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது புதிதும் அல்ல. தவறும் அல்ல. ஆனால், அது பொதுமக்களையும், நாட்டின் சட்ட ஒழுங்கையும் பாதிக்கும்போது, எப்படி அதை வழமைதானே என்று ஏற்றுக்கொள்ள முடியும்?