Sunday, December 25, 2011

காந்தி படத்தை இப்படி தொடங்கு....

நேற்று அண்ணாசாலை நூல்நிலைய கட்டிட அரங்கில் "எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்கள்" வெளியீடு நடந்தது. அதில் நிறைவில் இலக்கிய பேருரை நிகழ்த்தினார் எஸ்.ரா. அந்த உரைக்கு தலைப்பு, "மகாத்மாகாந்தி எனும் எழுத்தாளர்". காந்தி திரைப்படம் அவர் சுடப்பட்டதிளிருந்து தொடங்குகிறது. இது கோட்சே பாணி. அதாவது படம் செய்த இங்கிலாந்து நாட்டுகாரனுக்கு கோட்சே பாணிதான் பிடித்ததோ என்று நாம் கேட்டு கொண்டோம். ஆனால் காந்தி பாணி என்று எஸ்.ரா. ஒன்றை கூறினார். அதுதான் புதியதாகவும், ஆச்சர்யமனதாகவும் இருந்தது. எழுத்தாளர் திரைப்பட இயக்குனருக்கு ஒரு வித்தியாசமான அறிமுகத்தை காந்தி பற்றி கொடுத்தார்.


சுதந்திரம் அறிவிக்கப்படும் நாள் இரண்டு நாட்களில் வரும் நேரம். நேரு டில்லியில் இருக்கிறார். அதற்கான ஏற்பாட்டில் இருக்கிறார். காந்தி கொல்கத்தாவில் இருக்கிறார். கொல்கத்தாவில் அப்போது இன மோதல் நடந்து வருகிறது. அதற்கு மத்தியில் அது பற்றி கவலைப்பட்டுக் கொண்டு காந்தி இருக்கிறார். சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த அந்த மக்கள் மத்தியில் காந்தி வலம் வருகிறார்."சாந்தியும், சமாதானமும் இப்போது முஸ்லிம்களின் கூட்டத்தில் மட்டுமே கேட்கிறோம்" நேரு ஒரு மனிதரிடம் ஒரு கடிதத்தை காந்திக்கு கொடுத்து விடுகிறார். காந்தி இரவு ஒன்பது மணிக்கு படுக்கைக்கு போகும் பழக்கம் கொண்டவர். காலையில் நாலு மணிக்கு எழும்பும் பழக்கமும் கொண்டவர். அந்த கலவர பூமியில் இரண்டரை மணிக்கே எழுந்து விடுகிறார் என்றும் கூறுவார்கள். கடிதம் கொண்டு வந்த நபரோ இரவில் போய் கல்கத்தா சேருகிறார். நள்ளிரவிலும் காந்தியை எழுப்பி கடிதம் கொடுக்கிறார்.

கடிதத்தை பிரிக்காமலே வந்தவர் சாப்பிட்டாரா என்று காந்தி வினவுகிறார். அவரை முதலில் சாப்பிட சொல்கிறார்.அதன்பிறகு கடிதத்தை பிரிக்கிறார். அதில் இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் நீங்கள் டில்லியில் இருந்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த வேண்டும் என்று நேரு கேட்டுக் கொண்டுள்ளார். காந்தி அதை ஒப்புக்கொள்ளவில்லை கல்கத்தா இன மோதலில் ரத்தத்தில் மிதக்கும்போது டில்லி வார முடியாது என்கிறார். கடிதம் கொண்டுவந்தவருடன் மரத்தின் அடியில் காந்தி நிற்கிறார். ஒரு காய்ந்த இல்லை வந்தவரின் கையில் விழுகிறது. அதுதான் சுத்திர இந்தியாவிற்கு எனது பரிசு என்கிறார் காந்தி. அதை கேட்டு வந்தவர் கண்களில் கண்ணீர். அந்த கண்ணீர் துளிகள் அந்த காய்ந்த இலையில் விழுகின்றன. இந்த கண்ணீருடன் இணைந்த காய்ந்த இலைதான் டில்லியில் இருக்கும் நேருவிற்கு நான் கொடுத்ததாக நேநேகல்கொடுக்க வேண்டிய இந்திய சுதந்திரத்திற்கான பரிசு என்று காந்தி கூறுகிறார். இவ்வாறு ஒரு துளியை எஸ்.ரா. கூற வந்திருந்தவர்கள் எல்லாம் வாய் பிளந்து நின்றோம்.இதுதான் எழுத்தாளரின் மாண்பு.


உண்மையா,பொய்யா என்று நினைத்து பார்க்க கூட முடியாத ஒரு நிகழ்வை காந்தி பற்றி எழுதி வைத்திருப்பதனால் எஸ்.ரா. கூற முடிகிறது. நேரு என்பவர் வெறும் அரசியல் அதிகாரத்தை பற்றி மட்டுமே சிந்திப்பவர் என்றும், காந்திதான் இந்த நாட்டின் அடிப்படை மக்களின் வாழ்நிலை பற்றி சிந்திப்பவர் என்றும், நாம் நினைக்க எத்தனையோ நிகழ்வுகளை அங்கே எஸ்.ரா. சுட்டி காட்டினார். எஸ்.ரா. கூறும்போது நன்றாகத்தான் இருக்கிறது. நமக்கு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரின் தூக்கை நீக்க இரவின்பிரபுவிடம் சொல்ல சொல்லி நேரு மன்றாடியதையும், அதற்கு காந்தி என்ற அந்த "தூய்மையான " உருவம் அமைதியாக ராட்டை சுற்றிக் கொண்டு இருந்ததையும், அதனாலே அந்த மூவர் தூக்கு நிறைவேறியதையும் இன்றைய மூவர் தூக்கு பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கும் தமிழன் எண்ணிப்பார்த்துவிட்டால், அதற்கு எழுத்தாளர் எஸ்.ரா. என்ன செய்ய முடியும்? ஒன்றை பேசும்போது பிறிதொன்றை ஏன் இழுக்கிறீர்கள் என்றா கூறமுடியும்?


அம்பேத்கர் படம் பார்த்த உங்கள் அனுபவத்தை இந்த இடத்தில் எண்ணிப்பார்த்து, காந்தி அம்பேத்கரிடம் "தலித் இட ஒதுக்கீடு" தனிவாக்காளர் தொகுதியாக வரக்கூடாது என்ற முன்வைப்போடு, வருமானால் தான் உயிரை விடுவேன் என்று எரவாடா சிறையில் பட்டினி கிடந்ததை நினைத்து பார்த்து பதிலடி சிந்தனைக்கு சென்று விடாதீர்கள். அது உங்களை காந்தி ஒரு ஆதிக்கசாதிகளின் நலன் ஆதரிப்பாளர் என்று சிந்திக்க தூண்டி விடும். அது காந்தியை பார்ப்பனிய நஞ்சு என்று நீங்கள் எண்ண வைத்து விடும்.அது எஸ்.ரா. கூற முனைந்த காந்தி என்ற உருவத்தை குலைப்பதில் கொண்டுபோய் விட்டுவிடும்.உங்களால் எஸ்.ரா கூற முனைந்த காந்தியை கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விடும். எஸ்.ரா. இந்தியாவின் எளிய மக்களை பற்றியே காந்தி சிந்தித்தார் என்பதை உங்களுக்கு சொல்ல வந்துள்ளார். டில்லியில் அதிகாரத்திலுள்ளவர்கள் அரசியல் அதிகாரம் ப்ற்றியே எண்ணும்போதும், காந்தி எளிய மக்கள், மத நல்லிணக்கம் ஆகிய கோட்பாடுகளை உயர்த்தி பிடித்ததை கூற முனைந்துள்ளார். அது இன்றைய இந்தியாவின் இதய பகுதியில் உள்ள பழங்குடிகள் பற்றிய எண்ணத்தை நமக்கு கொடுவர வேண்டும். காந்தி இருந்தால் இது நடக்குமா என்று நாம் எண்ண வேண்டும்.


காந்தியின் முக்கிய முடிவுகள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டவை என்பதையும் , எஸ்.ரா சுட்டினார்.மதுரையில் காந்தி தனது உடம்பை எளிய தோற்றத்திற்கு மாற்றியதை குறிப்ப்பிட்டார். . டால்ஸ்டாய் எழுத்துகளில் காந்தி கண்ட உண்மைகளை விளக்கினார். மறுபிறவி பற்றி மூடநம்பிக்கை அற்ற டால்ஸ்டாயின் எழுத்துகளை, காந்தி எப்படி மாற்றி, இந்தியாவின் மூட நம்பிக்கைகளிலும் சார்ந்து நின்று நமது மக்கள் நல்ல சிந்தனைகளை கொள்கிறார்கள் என்று டால்ஸ்டாயையே காந்தி பின்வாங்க வைத்தார் எனபதையும் மகிழ்ச்சியோடு எஸ்.ரா. கோடிட்டு காட்டினார். அதனால் இவர்களை எல்லாம் நீங்கள் மூட நம்பிக்கை வாதிகள் என்று எண்ண கூடாது. மூட நம்பிக்கையாக இருந்தாலும் அடிப்படை மக்கள் சார்ந்து சிந்திப்பவர்கள் என்று எண்ணி பெருமைப்பட வேண்டும்.எங்கிருந்து நீதி பற்றி அறிந்தீர்கள் என்று காந்தி டால்ஸ்டாய் இடம் கேட்டபோது, அவர் தமிழிலுள்ள "திருக்குறளில்" இருந்து என்று கூறியதை எஸ்.ரா சுட்டும்போது நமது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.


எஸ்.ராவின்"புத்தனாவது சுலபம்" என்ற புத்தகத்தை பற்றி பர்வீன் சுல்தான் பேசினார். பெண்களை எப்படி அன்று முதல் இன்று வரை இழிவாக நடத்துகிறர்கள் என்பதை எஸ்.ரா அதில் கூறுவதாக தனது விளக்கங்களை அவர் கூறும்போது ஒரு புதிய தோற்றம் அந்த புத்தகத்திற்கே கிடைத்தது. அப்பா எப்படி மகனை பார்கிறார் என்று பல உதாரணங்களுடன் பர்வீன் விளக்கும்போது புத்தகம் பற்றி "சுவை" ஏறிவிட்டது. நகைச்சுவையுடன் பர்வீன் பேசுவார் என்ற காரணமும், அவரை கூப்பிட கூடுதலாக காரணமோ என்று எண்ண தோன்றியது. பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அனுபவித்து பேசினார். அவரது வீட்டு விவகாரங்கில் சிங்கபூர் மாப்பிள்ளைக்கு " அசைவ உணவு" தயாரித்து கொண்டுபோனதை நமது நாக்கு ஊற, சொல்லி தீர்த்தார். "கூழங்கர்களை பாடவைத்து" எப்படி எஸ்.ரா எழுதினார் என்று கபிலன் வைரமுத்து கூறி தனது பேச்சு திறமைக்கு ஒரு பாராட்டை பெற்று கொண்டார். டாக்டர் ராமானுஜம் "பேசி கடந்த தூரம்" புத்தகம் பற்றியும், பேராசிரியர் ராமகுருனாதன் "எனதருமை டால்ஸ்டாய்" பற்றியும் புத்தக விமர்சம் கூறினார்கள்.மாடசாமியும் தனது பங்கிற்கு "எஸ்.ராவின் எழுத்துலகம்" பற்றி பேசினார். ராமனுஜம் திருநெல்வேலி ராயல் சினிமா கொட்டகையிலிருந்து பாளையம்கோட்டை மருத்துவகல்லூரி விடுதிக்கு நடந்து நள்ளிரவில் சென்றதை சொல்லும்போது கணக்கு பார்த்து ரசிக்க முடிந்தது.

எப்படியோ இந்த கூட்டத்தில் தலைமை தாங்கியவர் சென்ற வாரம் மாலன் செய்தது போல தனது சொந்த "விருப்பு, வெறுப்பை" காட்டி வெளியிடும் புத்தகத்தை பற்றி குறைகளை கூறி அசிங்க படுத்தவில்லை. அது சென்ற வார " உயிர்மை" என்று சொல்லிவிடலாமா? அல்லது நீங்கள் கண்ட சென்ற ஆட்சியின் உயிர்மை வேறு, இப்போது வேறு என்று கூறி தப்பிவிடலாமா?

2 comments:

மனித புத்திரன் said...

பகுத்தரிவுன்னாலே காந்தியை இகழ்தல்!நடத்துங்க காமெடிய!

மனித புத்திரன் said...

காந்தின்னு அவுரு பேரு சொல்லி கூப்பிடுறீங்க!ஆனா கருனாநிதின்னு சொல்லாம தலைவர் கலைஞர் ன்னு சொல்ல என்ன முகாந்திரம்?வயசுக்கு மரியாதைன்னு சொன்னா நேரு காந்தி எல்லாரும் அப்படிதானே?அண்ணா ஹசாரேவை பொண்ணா ஹசாரேன்னு கிண்டல் பண்ணுவதுதான் வயசுக்கு மருவாதியா?அந்த எஸ் எம் பாக்கர் கிழவன் என்கிற ரீதியில் அண்ணாவை விமர்சிக்கிரான்!ஓங்க களிஞ்சற மட்டும் கேழவன்னு சொன்னா உடனே போராட்டம்!இது என்னா நியாயமோ?

Post a Comment