Tuesday, March 20, 2018

சேது கால்வாய் - எங்கே தோண்டினாலும் ஆபத்தா?

சிறப்புக் கட்டுரை: சேது கால்வாய் - எங்கே தோண்டினாலும் ஆபத்தா?

சிறப்புக் கட்டுரை: சேது கால்வாய் - எங்கே தோண்டினாலும் ஆபத்தா?

டி.எஸ்.எஸ்.மணி

சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் ராமர் பாலத்தை உடைக்காமல் கட்டப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு எழுத்துபூர்வமாகத் தெரிவித்த காரணத்தால், சுப்பிரமணிய சுவாமி, சேது கால்வாய் திட்டத்தை எதிர்க்கும் தனது வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார். அதாவது, சேது கால்வாய் திட்டத்தை, நமது சுற்றுச்சூழல்வாதிகளும், மீனவ இயக்கங்களும் கூறுவதுபோல, மீனவர் வாழ்நிலையை அழித்துவிடும் என்பதற்காகவோ, சுற்றுச்சூழலைக் கெடுத்துவிடும் என்பதற்காகவோ, பாஜகவோ சு.சுவாமியோ எதிர்க்கவில்லை. மாறாக, ராமர் பாலம் என்று அவர்கள் அழைக்கின்ற ஆதம் பாலம் வழியாக அந்தத் திட்டம் தோண்டப்படும் என்பதற்காகவே எதிர்க்கிறார்கள். ராமர் பாலம் என்பது புராணச் சின்னம். ஆகவே, அதை உடைக்க அனுமதிக்க மாட்டோம். ஆகவே, வேறு பாதை மூலம் அதே சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்பதுதான் இன்றுள்ள நடுவண் அரசில் ஆட்சி நடத்தும் பாஜக சொல்கிறது.
இன்று மட்டுமல்ல; என்றுமே அது இப்படித்தான் வாதம் செய்துவருகிறது. ஆனால், சேது கால்வாய்த் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் போடப்பட்டபோதிலிருந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சூழல்வாதிகளும் மனித உரிமையாளர்களும் மீனவர் சங்கங்களும் அந்தத் திட்டத்தை முழுமையாக எதிர்த்துவருகின்றனர். அந்தத் திட்டம் மன்னார் வளைகுடாவின் சுற்றுச்சூழலை உடைத்துவிடும் என்றும் ஐந்து லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்துவிடும் என்றும் அவர்கள் பல்வேறு ஆவணங்களுடன் எதிர்த்துப் போராடிவருகின்றனர்.
சேது கால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டைப் பொன் விளையும் பூமியாக்கிவிடும் என்ற நம்பிக்கையில் அண்ணா காலத்திலிருந்து திமுகவும், எம்ஜிஆர் காலத்தில் அதிமுக, மதிமுக மற்றும் பல்வேறு தமிழர் அமைப்புகளும் கூறிவந்தன. ஆங்கிலேயன் அக்காலத்திலிருந்து பலமுறை சேது கால்வாய் திட்டம் பற்றிய ஆய்வுகளை, இந்திய ரயில்வேயும் மற்றும் சில நடுவண் அரசின் நிறுவனங்களும் கணித்துப் பார்த்தன. ஆனால், அவற்றில் எல்லாம் அது சாத்தியப்படும் என்ற விடை கிடைக்கவில்லை. ஆகவே, அது தொடங்கப்படவில்லை. ஆனால், திமுக நடுவண் அரசில் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூவில் இருக்கும்போது, அமைச்சர் டி.ஆர்.பாலு கைகளில் கப்பல் துறை இருக்கும்போது, அவரால் வலியுறுத்தப்பட்டு அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது ஆ.ராஜா நடுவண் அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் திட்டம் தொடங்கப்பட முடியாது.
மன்னார் வளைகுடாவின் முக்கியத்துவம்
அன்றைய நிலையில், அனைத்து நாட்டு பசுமை அமைதி இயக்க அறிவியலாளர்களின் ஆவணங்களையும் சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் துறைத் தலைவர் பேராசிரியர் சுதர்ஷன், பேராசிரியர் சுமதி ஆகியோரின் ஆய்வு ஆவணத்தையும் அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழல்வாதிகள் அந்தத் திட்டத்தை எதிர்த்தனர். அந்த ஆவணங்களில், மன்னார் வளைகுடா ஒரு பயோ ஸ்பியர் ரிசர்வ் பகுதி என்று ஐநாவின் யுனெஸ்கோ மூலம் அங்கீகரிக்கப்பட்டு, அதைப் பாதுகாக்க யுஎன்டிபி என்ற ஐநா வளர்ச்சித் திட்டம் பல கோடிகளைச் செலவழிக்கிறது. சேது கால்வாய் திட்டம் வந்தால் அந்த பயோ ஸ்பியர் ரிசர்வ் அழிந்துவிடும் என்றார்கள். அதுபோலவே, அரிதான விலங்குகளான கடல் குதிரைகள் ஆறு மாதங்கள் ஆதம் பாலத்திற்கு ஒருபுறமும் அடுத்த ஆறு மாதங்கள் வெப்பம் காரணமாக மறுபுறமும் சென்று உயிர் வாழும். அவை அழிந்துவிடும் என்றார்கள். அதுமட்டுமல்ல, தூத்துக்குடிக்கும் ராமேஸ்வரத்துக்கும் மத்தியில் உள்ள 21 தீவுகளில் பவளப் பாறைகள் உள்ளன என்றும் அவை சேது கால்வாயைத் தோண்டினால் அழிந்துவிடும் என்றும் கூறினார்கள்.
உள்ளபடியே, இந்த 21 பவளப் பாறைகளைக் கொண்ட, தீவுகள்தான் 2004ஆம் ஆண்டு கடைசியில், சுனாமி வந்தபோது, சுனாமியின் வேகத்தைத் தடுத்து நிறுத்தி, சிறு பாதிப்புகூட இல்லாமல் தூத்துக்குடி நகரையும் ராமேஸ்வரம் நகரையும் காப்பாற்றின என்ற உண்மையைச் சுற்றுச்சூழல்வாதிகள் முன்வைத்தார்கள். அது மட்டுமின்றி, சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியரின் ஆவணத்தின்படி, ஐந்து லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் கெட்டுவிடும் என்பதையும் மீனவர் சங்கங்கள் முன்வைத்தன.
இத்தகைய எதிர்ப்புகளைக் கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் ஜெயலலிதா, அதிகாரிகள் மூலம் செயற்பாட்டாளர்களின் ஆவணங்களைப் பெற்று தனது நிலைப்பாடான சேது சமுத்திரத் திட்ட ஆதரவு நிலையை மாற்றிக்கொண்டார். திமுக கொண்டுவந்ததால் மாற்றிக்கொண்டார் என்று கூறுவோரும் உண்டு. ஆனாலும், அதிகாரபூர்வமான நிலைப்பாட்டின்படி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நிலைப்பாட்டில் நின்று அந்தத் திட்டத்தை எதிர்த்தார். அதன் பிறகு அதே நோக்கில் உச்ச நீதிமன்றம் சென்றார்.
இப்போது அவர் மறைந்துவிட்ட நிலையில், அவரது வழக்கை எடுத்துக்கொள்ளாமல், அவரது வாதங்களையும் எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்றம் நிற்கிறது. உள்ளபடியே, ஜெயலலிதாவின் நிலைப்பாடும் மீனவர் சங்கங்களின் நிலைப்பாடும் சுற்றுச்சூழல்வாதிகளின் நிலைப்பாடும் ஒன்றுதான். எந்த வழியில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் வந்தாலும் அது அழிவு. ஆகவே, அது தமிழர்களுக்குப் பெருமை அல்ல; மாறாக வெறுமையே என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள். இன்னமும் அவர்கள் அதே நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே, மதுரையில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருடன் முதல்வர் கருணாநிதியும் சேர்ந்து விழா ஒன்றின் மூலம் திட்டத்தைத் தொடங்கினர். இடையில் ஆக்சிஸ் வங்கியிடம் நடுவண் அரசு, திட்டத்துக்கான கடனைப் பெறச் சொல்லியிருந்தது. ஆனால், உலக வங்கிகள் இத்திட்டம் லாபம் தராது என்பதால் கடன் தர முடியாது என்று கூறிவிட்டன.
எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் பெங்களூரைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜான் ஜேக்கப், இந்தத் திட்டம் எவ்வகையிலும் லாபம் தராது என்று கட்டுரை எழுதினார். அதில், ஆப்பிரிக்க கண்டம் தொடங்கி, இங்கே வரும் பெரிய கப்பல்கள் இந்தத் திட்டப் பகுதிக்குள் நுழைய முடியாது என்றும் அவை வந்தாலும் கடலில் செல்லும் வேகத்தைக் குறைக்க எரிபொருள் மாற்றுவதற்குப் பணம், பைலட் கப்பல் வாடகை, சேது கால்வாயில் நிற்க வாடகை ஆகியவற்றைக் கட்ட வேண்டும் என்றும் ஆகவே அவர்கள் திகைத்துவிட்டார்கள் என்றும் எழுதினார். அவர்களுக்கு லாபமில்லை என்பதால் வர இயலாது என முடிவு செய்ததையும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கருங்கடலில் கப்பல்களின் எண்ணெய்ச் சிதறல்களால் கடல் வாழ் உயிரினங்களை அழிந்துவிட்டனவோ... அதுபோல இங்கும் செழிப்பாக உள்ள கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும் என்பதையும் சுற்றுச்சூழல்வாதிகள் எடுத்துவைத்தனர். அப்போது நடுவண் அரசோ, இந்தத் திட்டம் இந்திய ராணுவப் பாதுகாப்புக்கு வேண்டும் என்றனர். அதாவது தமிழர் கடலை அழித்து, மீனவர் வாழ்வைக் கெடுத்து, இந்திய - அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இந்தியப் பெருங்கடலைக் கொண்டுவருவது என்ற அவர்களது திட்டத்தை அறிவித்தனர். ஆகவே திட்ட எதிர்ப்பாளர்களது வாதங்கள் மேலும் வலுப்பெற்றன.
இப்போது இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நடுவண் அரசின் நிர்பந்தம் வருமானால் அதுவே மீண்டும் ஒரு போராட்டச் சூழலை உருவாக்கும்.

No comments:

Post a Comment