Friday, August 16, 2019

கிராம சபைகளின் சுதந்திரதின அபயக்குரல்கள்!

கிராம சபைகளின் சுதந்திரதின அபயக்குரல்கள்!

கிராம சபைகளின் சுதந்திரதின அபயக்குரல்கள்!
இந்தியாவின் 73 வது சுதந்திர தினம் 15-08-2019.
டி.எஸ்.எஸ்.மணி
இந்திய அரசியல் சட்டத்திருத்தம் 73 ன் கீழ்1994 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி,ஒவ்வொரு ஆண்டும் கிராமசபைக் கூட்டங்களை ஒவ்வொரு ஊராட்சியிலும் கூட்ட வேண்டும். கிராம சபைக்கு கூட்டங்கள், கிராம மக்களது கோரிக்கைகளை,பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்படுகின்றன. அதாவது "அதிகாரம்" பரவலாக்கப் படுவதற்காக, இந்த ஏற்பாடு. மாவட்ட ஆட்சித் தலைவர் நிர்வாகம் அதற்கு ஒழுங்கு செய்ய வேண்டும்.கிராம சபைக்கு கூட்டங்களை ஒவ்வொரு கிராமத்திலும் எந்த இடத்தில், எந்த நாளில், எந்த நேரத்தில் கூட்டுகிறோம் என்று மாவட்ட நிர்வாகம் "சுவரொட்டிகள்" மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒரு ஊராட்சியில், இரண்டு அல்லது மூன்று கிராமங்கள் இருந்தால், அதில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அத்தகைய கூட்டங்களை, கிராம சபைகளை நடத்த வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர்கள் கிராம சபைகளை நடத்துவார்கள்.ஊராட்சி மன்றத் தலைவர்கள் இல்லாத போது, பஞ்சாயத்து அலுவலர் நடத்துவார். ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும், சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரும், தலையாரியும் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்,குடியரசு தினம் ( ஜனவரி 26 ) , உழைப்பாளர் தினம் (மே 1 ), சுதந்திர தினம் ( ஆகஸ்ட் 15 ), காந்தி பிறந்த நாள் ( அக்டோபர் 2 ) ஆகிய நான்கு தினங்களும் கிராம சபைகள் கூட்டப்பட வேண்டும். கடந்த குடியரசு தினம் ஜனவரி 26 ல், கூடங்குளம் கிராம சபை "அணு உலைகளைை மூடு அணுக்கழிவுகளை இங்கு கொட்டாதே" என தீர்மானம் போட்டார்கள்.
இந்த முறை சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ல் தமிழ்நாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிகள் இல்லாத காரணத்தால் கிராம சபைகளை, பஞ்சாயத்து அலுவலர்கள் கூட்ட வேண்டிய நிலைமை. இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒவ்வொரு கிராமத்திலும், அதுபற்றிய சுவரொட்டிகள் ஓட்டப் பட வில்லை, பல கிராம சபைக்கு கூட்டங்கள் நடத்தப்படவில்லை. நடத்தப்பட்ட கிராம சபை கூட்டங்களுக்கு, பல இடங்களில், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தலையாரிகள் வந்தார்களா என்று தெரியவில்லை.
"ஆட்சித் தலைவர் வலியுறுத்தலில், ஒவ்வொரு
[B.D.O ] வட்டார வளர்ச்சி அதிகாரிகளும், கீழே உள்ள அதிகாரிகளிடம் சில கோரிக்கைகளை அவர்களே தயார்செய்து கொடுத்து, அவற்றை கிராம சபைகளில் நிறைவேற்றச் சொல்வதாகவும், வேறு மக்கள் சார்பு கோரிக்கைகளை அனுமதிக்கக் கூடாது " என்றும் கட்டாயப்படுத்தி அனுப்பியிருப்பதாகச் செய்தி வருகிறது.அதையும், "டைப் அடித்த ஏற்கனவே தயாரிக்கப்பட்ட காகிதங்களை, சில கோரிக்கைகளை எழுதி" அதை "ஊராட்சி மினிட்ஸ் புத்தகத்தில் ஒட்டி வைக்கும் வேலையைச் செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். இது மாபெரும் அநியாயம், சட்டப் பிரிவு 73 ன் படி, மாவட்ட நிர்வாகத்திலிருந்து கிராம சபைகளில் கலந்து கொள்ள வரும் அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களே ! அவர்கள் அங்கே எந்தக் கருத்தையும் பேசக் கூடாது. கிராம மக்கள் நிறைவேற்றும் தீர்மானங்களை, குறுக்கீடுகள் செய்யாமல் குறிப்பெடுத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு செல்வதுதான் அந்த அதிகாரிகளின் வேலை.ஆனால் பெரும்பாலான இடங்களில் அந்த உண்மை விதிகள் மீறப் பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிகள் இல்லாத சூழலில், ஊராட்சி அலுவலர் என்ற பஞ்சாயத்து கிளார்க்குகள் மாநிலமெங்கும் கிராம சபைக் கூட்டங்களை நடத்தப் பணிக்கப்பட்டனர். கிராம சபைகளை நடத்தாமல், நடத்தினாலும் சுயமாக மக்களை தீர்மானம் போட விடாமல் எல்லா இடங்களிலும் தடுத்து விட்டனர். " டைப் அடிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு ஒத்து ஊதும் தீர்மானங்களை" கொண்டு வந்து, கிராம சபைக் கூட்டம் என்று அறிவிக்காமலேயே, நூறு நாள் வேலைக்குப் போனோரை கூட்டம் என அழைத்து கையெழுத்து வாங்கிய சதிச்செயல் பெரும்பான்மைக் கிராமங்களில் நடந்துள்ளது.குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் அது போன்ற நிலைமைகளைக் காண முடிகிறது.
ஆனாலும் அதிகாரிகளது எதிர்ப்பை மீறி தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி, ஓட்டப்பிடாரம் கிராம சபைகளில் "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு" எனத் தீர்மானம் போட்டார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில், பழவேற்காடு பஞ்சாயத்து, லைட்ஹவுஸ் பஞ்சாயத்து, கோட்டக்குப்பம் பஞ்சாயத்து, தாங்கல் பெரும்புலம் பஞ்சாயத்து என்ற நான்கு மீனவக் கிராம சபைகளிலும், "இருக்கும் எல் & டி துறைமுகத்தை விலைக்கு வாங்கி, விரிவாக்கம் செய்யத் திட்டமிடும் அதானி துறைமுகத்தை அனுமதிக்கக் கூடாது." என்ற தீர்மானத்தை மீனவர் சங்கங்களின் முன் முயற்சியில், அரசு அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி பஞ்சாயத்துகளின் மினிட்ஸ் நோட்டுப் புத்தகத்தில் எழுதி மக்கள் கையெழுத்துப் போட்டு விட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை வட்டம் உப்பூரில் இரண்டு 800 மெகா வாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது. உப்பூர், வளமாவூர், திருப்பாலைக்குடி கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் 952.5 குறுக்கம் பட்டா நிலமும், 379.6 குறுக்கம் புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது.
இவ்விடம், உப்பூர் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து 600 மீட்டர் தொலைவிலும், கடற்கரை யிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இத்திட்டத்திற்காக தூத்துக்குடி துறைமுகத் திலிருந்து நிலக்கரியை தொடர்வண்டி மூலம் கொண்டு வரவும், ராமநாதபுரத்திலிருந்து தனி ரயில் பாதை அமைத்து, திட்ட இடத்திற்கே கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது
சுதந்திர தின கிராம சபைக் கூட்டத்தில், "உப்பூர் அனல் மின்சார ஆலைதொடர்பான அனைத்து வேலைகளும் நிறுத்தப்படவேண்டும்
உப்பூர் அனல்மின் நிலையம் அமைக்கக் கூடாது" என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் போட வேண்டும் என அனைத்து மீனவ கிராம மக்களும் திரளாக சென்று கோரிக்கை வைத்தனர்
உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க மீனவ கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தும் வீடுகள் வீதிகள் தோறும் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால், கிராம சபை தீர்மானம் போட முடிய வில்லை.
கன்னியாகுமரி மாவட்டம்,சைமன்காலனி கிராமசபை 28/06/2019 அன்று கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட(11) தீர்மானத்தின் அடிப்படையில்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்காமல் அரசு அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
ஆத்திரமடைந்த சைமன்காலனி கிராமசபை பொதுக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள், கிராம சபைக் கூட்டத்தில் பதினோரு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் நெடுவாசல் கிழக்கு ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது, நல்லன்டார்கொல்லை ,கல்லி கொல்லை, முள்ளங்குறிச்சி கோட்டைகாடு,வானக்காடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கினறுகளை உடனே அப்புறப்படுத்தி நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்கவேண்டுதல், ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் சேந்தன்குடி ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கன்னந்தங்குடி ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருவாரூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் அம்மாபேட்டை, தீபாம்பாள்பரம்,நெய்க்குண்ணம் ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கினறுகளை உடனே அப்புறப்படுத்தவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் பணையூர் கிராம சபை கூடி, ஹைட்ரோகார்பன் இங்கே எடுக்கக் கூடாது என தீர்மானம் போட்டனர்.
திருவாரூர் மாவட்டம் இக்கரையில் "ஹைட்ரோ கார்பன் எடுக்கக் கூடாது" என்று தீர்மானத்தை, கிராம சபையில் நிறைவேற்றினார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், சுற்றுலாத் தலமான , அருவிகள் நிறைந்த குற்றாலம் பேரூராட்சி, மற்றும் காசி மேஜர்புரம், கிராம சபை கூடி, அவர்கள் வட்டாரத்தில் ஓடும் ஓடைகளையும், நீர்நிலைகளையும், சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்றும்,குற்றாலத்தில் இருந்து வரும் அருவி தண்ணீரில் மனிதக் கழிவு கலப்பது சம்பந்தமாகவும், தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர், கூட்டத்தில் 60 நபர்கள் கலந்து கொண்டனர்
இவ்வாறாக பல்வேறு மாவட்டங்களில், கிராம சபைக் கூட்டங்களில், கிராம மக்கள், அரசின் "தடுப்பு நடவடிக்கைகளையும், அதிகாரிகளின் திசை திருப்பல்களையும்" உடைத்து மீறி எழுதத் தொடங்கி விட்டனர். ஆனாலும், கிராம சபைகளின் முக்கியத்துவத்தை இன்னமும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லாமல் இருக்கும் பரிதாபமே பெரும்பாலும் நிலவுகிறது.

No comments:

Post a Comment