Saturday, December 26, 2009

சீனத்தலைவர் மாசேதுங், உலகத் தலைவரானது எப்படி?

இன்று இந்திய அரசையும், இந்தியாவின் மையப்பகுதியான மாநிலங்களையும், குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை உலுக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம் உண்டு என்றால், அது மாவோயிஸ்டு இயக்கம் என்பதாக சிறுபிள்ளையும் கூறும். அதே போல அருகே இருக்கும் நேபாள நாட்டில், மன்னராட்சியை தூக்கி எறிந்து, மக்களாட்சியை நிறுவிய இயக்கத்தின் பெயரென்ன என்றால், மாவோயிஸ்டு கட்சி என்பதாக அனைவரும் கூறுவர். இன்று இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நேபாளம் சென்று அங்குள்ள பிரச்சனைகளைத் தீர்த்து ஒரு சுமூகமான தீர்வை எட்டுவதற்காக சென்றிருக்கிறார் என்றால், யாரைச் சந்தித்து சுமூகமான தீர்ப்பை ஏற்படுத்துவார் என்ற கேள்விக்கு, நேபாள மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் பிரச்சந்தாவை சந்தித்து பேச இருக்கிறார் என்பதாகத்தான் செய்திகள் வருகின்றன. அப்படி இந்தியாவையும், நேபாளத்தையும் செல்வாக்கு செலுத்தும் இந்த மாவோயிஸ்டுகள் என்ற பெயர், மாவோ என்ற சீனத்தலைவரின் பெயரிலிருந்து வந்திருக்கிறது. மாசேதுங் என்ற அந்த சீனத்தலைவர் மாவோ என்று அழைக்கப்படுகிறார். இவரது பெயர் ஏன் இந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்த வேண்டும்? அப்படி இவர் சாதித்தது என்ன? இதுபோன்ற கேள்விகள் இன்றைய காலகட்டத்தில், இளைய தலைமுறையினருக்கு எழுவது இயல்பு. இன்று டிசம்பர் 26ம் நாள், மாவோ பிறந்தநாள். 1893ம் ஆண்டு இதே நாளில் சாவோசன் என்ற ஊரில், ஹூனான் மாநிலத்தில், சீனாவில் மாசேதுங் பிறந்தார். தனது ஆரம்பப் பள்ளியிலேயே, பாரம்பரிய கன்புயூசியஸ் கருத்துக்களை கற்றார். அவரது தயார் பௌத்த மதத்தை சேர்ந்தவர். அதன் பிறகு அந்த நாட்டின் குடியரசுப் படையில் போர் வீரனாக பணியாற்றினார். மாநில நூலகத்தில் 6 மாதங்கள் படித்தார். ஹூனான் பகுதியிலிருந்தே பட்டம் பெற்றார். பிறகு தலைநகர் பீகிங் சென்றார். அங்குள்ள நூல் நிலையத்தில், உதவியாளராக பணியாற்றினார். பல்கலைக்கழகத்தில் புரட்சிகர அறிவு ஜீவிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் சீன கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்தவர்கள். 1919ம் ஆண்டு ஹூனான் பகுதிக்கு திரும்பினார். அங்கு அரசியல் பணிகளில் ஈடுபட்டார். தானே ஒரு குழுவை உருவாக்கினார். அதன் மூலம் ஒரு அரசியல் இதழை வெளியிட்டார். 1920ம் ஆண்டு தனது பேராசிரியரான யாங் என்பவரின் மகளான யாங் கைஹியூ என்ற சக மாணவியை திருமணம் செய்தார். 1930ம் ஆண்டு, சீனாவை அப்போது ஆண்டு வந்த கொமின்டாங் என்ற தேசிய படையால், கைஹியூ அவரது மகன் அனையிங்கும் கைது செய்யப்பட்டு கைஹியூ படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு மாவோ, யாங் சிங்கிலிருந்து வந்திருந்த தனது சக பணியாளரான 17 வயது பெண் ஹிசிசன் என்பவரை மணமுடித்தார். 1937ம் ஆண்டு அவர்களது மணம் முறிந்தது. பிறகு அவர் சியாங்சிங் என்ற பண்பாட்டுக் கலைஞரை, மணம் முடித்தார். தனது 27வது வயதில், ஷாங்காய் நகரில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரசின் முதல் அமர்வில் பங்கு கொண்டார். இரண்டே ஆண்டுகளில் கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார். பிறகு கட்சியால் ஹூனான் பிரதேசத்திற்கே அனுப்பப்பட்டார். இப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத்தில் வளர்ந்த மாசேதுங், பின்னாளில் சீனப்புரட்சிக்கே தலைமை தாங்குபவராக வளர்ந்தார்.சீனா ஒரு விவசாய நாடு. அங்கே விவசாயிகள் பெரும்பான்மையாக நிலமற்ற, ஏழை விவசாயிகளாக இருந்து வந்தனர். நிலங்கள் அனைத்தும் போர் பிரபுக்கள் என்று அழைக்கப்படும் பண்ணையார்களின் ஆதிக்கங்களின் கீழ் இருந்து வந்தது. அப்போது உழைத்துக் களைத்த அந்த விவசாயிகளுக்கு மட்டும் தான், உழுதுபட்ட நிலம் சொந்தம் என்ற கொள்கையை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சி போராடி வந்தது. உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற கொள்கையை முதன்மைப்படுத்தி, மாவோவும் அந்த வட்டாரத்தின் விவசாயிகளை அணி திரட்டி வந்தார். அந்த அணி திரட்டலில் ஏழை விவசாயிகளை, ஆயுதம் தாங்கிய படையாக மாவோ உருவாக்கினார். ஹூனான் பிராந்தியத்தில் மாவோ தலைமையிலான அந்தப்படை, தொழிலாளர்கள், விவசாயிகள் புரட்சிகரப்படை என்று அழைக்கப்பட்டது. மாவோவே ஒரு விவசாய குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்ததால், விவசாயிகள் மத்தியிலும், உழவர்கள் மத்தியிலும் நல்லதொரு மதிப்பு அவருக்கு இருந்தது. அதைப்பயன்படுத்தி, அந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு, மாவோ மார்க்சியத்தை அறிமுகப்படுத்தினார். அவர் தலைமை தாங்கிய அந்தப்படை ஆட்சியாளர்களது படையால் தோற்கடிக்கப்பட்டது. கடும் போருக்குப் பிறகு, மக்கள் படை சிதறடிக்கப்பட்டது. ஹூனானை விட்டு, சன்வான் பகுதிக்கு அந்தப் படைகள் நகர்ந்தன. சிதறிச்சென்ற மக்கள் படையை மாவோ மீண்டும் திரட்டி, சிறிய படையணிகளாக உருவாக்கி, ஒரு ராணுவ பிரிவையே தயார் செய்தார். அதன் தலைமையேற்க கட்சி கிளைகளை உருவாக்கினார்.படைக்குழுக்கள் ஒவ்வொன்றுக்கும், ஒரு அரசியல் ஆலோசகரை நியமித்தார். அவருடைய வழிகாட்டலில் படையின் செயல்பாடு இருக்கவேண்டும் என்பதை விதியாக்கினார். பகுதி, பகுதியாக இந்த முறையில் உருவாக்கப்பட்ட மக்கள் படைக்குழுக்கள், ஒட்டுமொத்தமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் ஒழுங்கு படுத்தப்பட்டது.மேற்கண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே, எதிர்காலத்தை மாசேதுங்கின் ராணுவப்படைப்புகள் என்பது உருவாக்கப்பட்டது. அதுவே உலகின் பல பகுதிகளிலும் இருக்கின்ற புரட்சியாளர்களுக்கு, ராணுவ வழிகாட்டும் தத்துவமாக உருவானது. அதே போல விவசாயிகள் மத்தியில், மக்கள் இயக்கங்களை உருவாக்கியதிலும், மாவோ முன்னுதாரணங்களை படைத்திருக்கிறார். தான் முதலில் பணியாற்றிய ஹூனான் பகுதி விவசாயிகளை அணி திரட்டுவதற்காக, ஒரு விவசாயத் திட்டத்தை முன்வைத்து அதை நிறைவேற்றுவதற்காக போராட்டங்களை நடத்தினார். அந்த திட்டத்தில் நாளைய சூழலில் விவசாயிகளுக்கு தேவையான உடனடி கோரிக்கைகளையும், எதிர்காலத்தில் முழுமையான விடுதலையை அடைவதற்கான உழுபவனுக்கே நிலம் என்ற கோரிக்கையையும் இணைத்து, விவசாய பெருங்குடி மக்கள் முன்னால் வைத்தார். இதன் மூலம் அணிதிரண்ட விவசாயிகளை விடுதலை செய்யப்பட்ட நிலங்களில் அமர்த்தினார். விவசாய முன்னோடிகளை தேர்வு செய்து, கொரில்லா குழுக்களை உருவாக்கினார். அத்தகைய கொரில்லா குழுக்கள் மூலம், பண்ணை அதிகாரங்களை தகர்த்தெறிந்து, விரட்டப்பட்ட பண்ணையார்களின் நிலங்களை, ஆயுதம் தாங்கிய விவசாயக் கொரில்லாக்களின் பாதுகாப்புடன், நிலமற்ற விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தார். அத்தகைய விவசாய பொருளாதாரத்தை வழிநடத்த, புரட்சிகர மக்கள் கமிட்டிகளை, கிராமங்களில் உருவாக்கினார். அவர் உருவாக்கிய கொரில்லா படைகள் இணைக்கப்பட்டு, சீரான படையாக ஆயுதம் தாங்கிய மக்கள் ராணுவமாக கிராமப்புறப் பகுதிகளில் நிலை பெற்றது. அப்படிப்பட்ட பகுதிகள் விடுதலைப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட அனுபவங்களின் மூலம், கிராமப்புறங்களை விடுதலை செய்து, நகர்ப்புறங்களை சுற்றிவளைத்து விடுதலை செய்யவேண்டும் என்ற புதிய தத்துவத்தை மாசேதுங் முன்வைத்தார். அதுவே பிற்காலத்தில் மாவோவின் மக்கள் போர்ப்பாதை என்பதாக அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் விவசாய நாடுகளில், மாவோவின் வழியை பின்பற்றுவோர், இத்தகைய மக்கள் போர்ப்பாதையை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில்தான் இந்தியாவிலிருக்கும் மாவோயிஸ்டுகளும், நேபாளத்திலிருக்கும் மாவோயிஸ்டுகளும் வரிசைப்படுத்தப் படுவார்கள்.மக்கள் ஜனநாயக புரட்சி என்பதாக மாவோ, தான் நடத்திய புரட்சியின் கட்டத்தை வர்ணித்தார். அது அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாட்டு விடுதலைக்காகவும், பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்து விவசாயிகளின் விடுதலைக்காகவும் போராடக்கூடிய ஒரு புரட்சியின் கட்டம் என்று அவர் விவரித்ததால், அதன் மூலம் ஏற்படுத்துகின்ற அராசங்கத்தை மக்கள் ஜனநாயக அராசங்கம் என்று அழைத்தார். இது முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சி என்று அழைக்கப்பட்ட, நிலப்புரபுத்துவ எதிர்ப்பு போரையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற தேசவிடுதலை போரையும் இணைத்துப் பார்ப்பதால், இதற்கு புதிய ஜனநாயக புரட்சி என்று பெயரிட்டார். அதுவே இன்று வரை பிரபலமாக இருக்கிறது. மாவோ சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக 1954 முதல் 1975 வரை இருந்தார். அதே போல ராணுவ தலைமையிலும் இருந்தார். மக்கள் சீனக்குடியரசுக்கு முதல் தலைவராக செயல்பட்டார். ஆகவே அவரது பிறந்தநாள் இந்த வரலாற்று படிப்பினைகளை, நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு நாள்.

Friday, December 25, 2009

கீழவெண்மணி படுகொலைகளும், படிப்பினைகளும்!

டிசம்பர் 25ம் நாள். ஏசுகிறிஸ்து இந்த உலகில் பிறந்த நாள் என்பதாக கடைபிடிக்கப்படும் நாள். யூத மன்னர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட யூத மக்களுக்காக, ஏசு நாதர் பாடுபட்டார் என்பதாக படிக்கின்றோம். அடிமைகளை விடுதலை செய்து, நல்வாழ்வை அவர்கள் எய்துவதற்காக பாடுபட்ட காரணத்தினால், ஏசு நாதர் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையை சுமந்து செல்லும் ஏசு நாதரை, இருபுறமும் கூடி நின்ற அடிமை மக்கள், ஆர்ப்பரித்து ஆதரவு தந்தனர். சாதி ஒடுக்கு முறையில் தவிக்கின்ற இந்தியாவிலும், ஒடுக்கப்படும் மக்கள் விடுதலை பெறுவதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றனர். சாதிய ரீதியான ஒடுக்கு முறைகளில், கூடுதலான சுமையை சுமப்பவர்கள், தீண்டத்தகாத மக்களாக ஆதிக்க சாதிகளால் அவமானப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான். அத்தகைய தலித் மக்கள் நாடெங்கிலும் விவசாயக் கூலிகளாக, நிலமற்ற, ஏழை உழவர்களாக தங்களது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிக் கொண்டு வருகின்றனர். அப்படிப்பட்ட உழவர் பெருங்குடி மக்களை, பண்ணை நுகத்தடியால் அடக்கி வைத்திருக்கும் பண்ணையார்கள், சாதீய ஒடுக்கலையும், ஒரு ஒடுக்குமுறை கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தான் சாதி அடக்கு முறையிலிருந்து விடுதலை பெறத் துடிக்கின்ற, கூலி ஏழை தலித் மக்களை, மதம் மாறினால் சுதந்திரம் கிடைக்கும் என்ற வார்த்தைகள் ஈர்த்தன. அப்படி ஈர்க்கப்பட்டு மதம் மாறிய, தலித் மக்களையும் சாதித் தீண்டாமை, தீண்டாமல் விடவில்லை. மதம் மாறினாலும் இந்த நாட்டில் சாதி மாறுவதில்லை என்பதை சாதித்து வருவது நிலப்பிரபுத்துவத்தின் குணமாகயிருக்கிறது. அப்படித்தான் இதே நாளில் அந்த வெண்மணி நிகழ்ச்சி நடந்தது. இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம், நேற்றைய கிழக்கு தஞ்சையாக இருந்தது. அதில் நாகப்பட்டினம் ஒரு வட்டாட்சியாக நிர்வகிக்கப்பட்டது. அதற்கு உட்பட்ட கிராமம் தான், கீழவெண்மணி கிராமம். கீழத்தஞ்சை முழுவதுமே, பெருவாரியான மக்களாக இருக்கும் தலித் மக்கள், கூலி, ஏழை விவசாயிகளாக இருந்து வருகிறார்கள். அவர்கள் மத்தியில், பொதுவுடைமைக் கட்சி ஆண்டு பலவாக, சங்கம் அமைத்து போராடி வருகிறது. ஆரம்பத்தில் அவர்கள் உழுபவனுக்கே நிலம் என்ற முழக்கத்தை முன்வைத்து போராடி வந்தார்கள். அப்போதும் ஆதிக்கசாதி பண்ணையார்கள், தலித் கூலி மக்களை சாணிப்பால் கொண்டும், சவுக்கடி கொண்டும் அடித்து வந்தார்கள். அதை எதிர்த்துத் தான் கம்யூனிஸ்ட் தலைவர் சீனிவாசராவ் தலைமையில், கூலி விவசாயிகளை சங்கங்கள் அமைத்து, அவர்கள் திரட்டி வந்தார்கள். சாணிப்பாலும், சவுக்கடியும், கம்யூனிஸ்ட் கட்சியால் கடுமையான போராட்டங்களின் மூலம் எதிர்க்கப்பட்டது. அப்படி வெற்றிகரமான போராட்டங்களை, பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி நடத்தி வந்த, சீனிவாசராவ் நினைவாக இப்போது அரசாங்கம் மண்டபம் கட்டியுள்ளது. வரலாற்றில் இந்த படிக்கட்டுகள் மறக்கப்பட முடியாது என்பதற்கு இதுவே உதாரணம். அப்படிப்பட்ட வட்டாரத்தில் தான், கீழவெண்மணி கிராமத்தில் இதே நாளில், அந்த சோகச் செய்தி அரங்கேறியது. கூலி உயர்வு போராட்டத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் கம்யூனிஸ்ட் கட்சி, அந்த தலித் கூலி மக்களை திரட்டி போராடி வந்தது. கீழதஞ்சையில், குறிப்பாக நாகப்பட்டினம் வட்டாரத்தில், நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற பெயரில், ஆதிக்கசாதிப் பண்ணையார்கள் உருவாக்கிய அமைப்பிற்கு, கோபால கிருஷ்ணநாயுடு தலைவராக இருந்தார். அவர் தான் அந்த வட்டாரத்தின் கூலிப் போராட்டத்தை ஒடுக்குவதில் பெயர் பெற்றவர். அரைப்படி நெல்லை உயர்த்திக் கேட்டதற்காக, கூலி விவசாயிகள் அங்கே ஒடுக்கப்பட்டார்கள். அறுவடை கூலியாக காசுக்கு பதில், நெல் கொடுப்பது தான் அங்கேயிருந்து வந்த பழக்கம். உச்சக்கட்டத்திற்கு போராட்டம் சென்ற போது, பண்ணையார் கோபால கிருஷ்ணன், காவல் துறையுடன் சேர்ந்து கொண்டு, கீழவெண்மணி கிராமத்து போராடும் மக்களை ஒடுக்குவதற்காக உள்ளே நுழைகிறார். தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அழைக்கப்படும் தலித் மக்கள், அந்த கிராமத்தின் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர். கூலி உயர்வு போராட்டத்தில்

Thursday, December 24, 2009

மழலையர்களை மிரட்டும் நர்சரிப் பள்ளிகள்

இன்று பள்ளி செல்லும் சிறுகுழந்தைகளை, மாணவ, மாணவியரை ஏற்றி செல்லும் வாகனங்கள், ஒவ்வொரு ஊராக கவிழ்ந்ததையும், கவிழ்ந்ததற்கான காரணமாக ஓட்டுனநர்களின் பொறுப்பற்ற தன்மையையும், ஊடகங்கள் தொடர்ந்து காண்கிறோம். கைப்பேசியில் பேசிக்கொண்டு சென்ற ஓட்டுநர்கள், குழந்தைப் பிள்ளைகளை வாகனத்துடன் பள்ளத்தில் விழவைத்தார்கள் என்பதால், காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள். அதே போல உரிமம் இல்லாத ஓட்டுநர்களை, பணிக்கு வைத்ததால் பள்ளி நிர்வாகங்கள் மீதும், கல்வித்துறை நடவடிக்கைகள் தொடர்கின்றன. விதிமுறைகள் படி நடந்து கொள்ளாத பள்ளி நிர்வாகங்களுக்கு, அனுமதி கொடுத்ததற்காக கல்வி இயக்கக அதிகாரிகளும் கேள்விக்குள்ளாகிறார்கள். ஒரு விபத்து நடந்ததை யொட்டி, அல்லது ஒரு விபத்து ஊரில் எல்லோரையும் உசுப்பி விட்டதையொட்டி, ஊடகங்களில் பெரிய அளவில் அம்பலமானதை யொட்டி, அரசாங்கமும், அதிகாரிகளும் துரித நடவடிக்கையாக சிலர் மீது குற்றம் சுமத்தலாம். ஆனால் ஒரு விபத்து இந்த நாட்டில் தன்னை அறிவித்துக் கொள்ளாமலேயே, தொடர்ந்து நடந்த வருகிறது. அந்த விபத்துதான் கல்வியை வியாபாரமாக்கிய ஒரு சமூகத்தில், மழலைப் பிள்கைளுக்கு கல்வி கொடுப்பதற்காக என்ற பெயரில், நர்சரிப் பள்ளிகளை எங்கெணும் தொடங்கியுள்ளார்கள். நர்சரிப் பள்ளிகளை தொடங்கியவர்கள் தனியார்கள் என்றால், அதற்கு அனுமதி கொடுத்தது. பள்ளிக் கல்வி இயக்ககம் தானே என்ற கேள்வி தானாகவே எழும். கடந்த 20 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் புற்றீசல் என வளர்ந்து விட்ட இந்த நர்சரிப் பள்ளிகளின் பண்பாடு, அனைத்துதரப்பு மக்களையும் ஒரேடியாக இழுத்துக் கொண்டு செல்கிறது. அனைத்து நர்சரி பள்ளிகளிலும் ஆங்கிலம்தான் பயிற்று மொழி. இப்படி மழலைப் பிள்ளைகளுக்கு, தொடக்கத்திலிருந்தே ஆங்கிலக்கல்வி கொடுப்பது என்பது ஆரோக்கியமானதா? அதற்காக பிள்ளைகளின் பெற்றோர் செலவழிக்கின்ற பணம், அதிகமாக இல்லையா? ஆரம்பக்கல்வியை இப்படி தனியாருக்கும், ஆங்கில பயிற்று மொழிக்கும் தாரை வார்ப்பது, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்குமா? ஆங்கில மொழி என்பது அறிவாக மாறுமா? அறிவியல் பார்வையை, தாய்மொழி தவிர எந்த மொழியின் மூலமும் கற்றுக் கொடுக்க முடியுமா? ஆங்கிலப் பயிற்று மொழி படைப்பாற்றலை ஊக்குவிக்குமா? இளம் சிறார்களுக்கு இப்படித்தான் சமூகம் வழிகாட்டுமா? இதுபோன்ற கேள்விகள் எல்லாம், எந்த ஒரு சமூகப்பார்வை உள்ளவருக்கும் ஏழவேண்டும். இந்த நேரத்தில் இந்திய நாட்டில், இயங்கிவருகின்ற நர்சரி பள்ளிகள், எப்படி காசு உருவாக்கும் இயந்திரங்களாக இருக்கின்றன என்ற புள்ளி விவரங்களை ஒரு இணையதளம் அம்பலப்படுத்தி உள்ளது. நல்ல பள்ளிகள் என்று பெயரெடுத்த பள்ளிகளின் எண்ணிக்கை, குறைவாக இருக்கின்ற காரணத்தினால், அவற்றிலும் நூற்றுக்கணக்கான இடங்களே இருக்கின்றன என்ற நிலைமையில், ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் அந்த நூற்றுக்கணக்கான இடங்களுக்காக, போட்டிப்போட்டுக் கொண்டு, தனியார் கல்வி நிறுவனங்களை, கல்வியாண்டு தொடங்கும் போது, முட்டி மோதுகிறார்கள்.அந்த இணைய தள புள்ளி விவரம் கூறுகின்ற செய்திகள், ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. இந்தியாவில் உயர்கல்வியில் முன்னேறிய கல்விச்சாலையாக கருதப்படுபவை ஐ.ஐ.டி.கள். அந்த ஐ.ஐ.டி.களில் நிலவுகின்ற கல்விக் கட்டணத்தின் அளவை விட, அதிகமாக நர்சரி பள்ளிகள் வசூலிக்கின்றன என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஐ.ஐ.டி. என்ற ஆராய்ச்சிக்கான கல்வியும் இணைந்த, உயர்க்கல்வி சாலைகள், மேற்கத்திய நாடுகளின் உதவிகளுடன், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டு நடத்தப்படுபவை. உதாரணமாக சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனம், ஜெர்மன் நாட்டு உதவியுடன் நடத்தப்படுகிறது. இதுபோல கான்பூர் ஐ.ஐ.டி., துர்காப்பூர் ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி. போன்ற கல்விச் சாலைகளும் இந்தியாவின் உயர்கல்வியில் முக்கிய இடம் பிடித்தவை. ஆராய்ச்சி படிப்புக்கான பட்டங்கள் இந்த கல்விச்சாலைகளில், குறிப்பாக அறிவியல் பாடங்களுக்கு பெயர் பெற்றவை. இவற்றிலிருக்கும் சோதனைச் சாலைகளும், உயர்ந்த தன்மைகளைக் கொண்டது. இந்த ஐ.ஐ.டி.க்கள், தனியான பெரிய வளாகங்களுக்குள் கட்டப்படுகின்றன. அவற்றிலிருக்கும் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உயர்ந்த தரத்தைக் கொண்டவை. இப்படிப்பட்ட ஐ.ஐ.டி.களில் கல்விக்கட்டணமாக ஆண்டிற்கு ரூ.50,000 வசூலிக்கிறார்கள். அது தவிர தங்கும் விடுதி, முன்னாள் மாணவர் சங்கம், நுழைவுக்கட்டணம் ஆகியவற்றை சேர்த்து, ஆண்டிற்கு ரூ.20,000 வசூலிக்கிறார்கள். அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் இருக்கின்ற பிரபல நர்சரி பள்ளிக்கூடத்தில் ஆண்டிற்கு ரூ.75,000 அல்லது அதற்கும் மேல் வசூலிக்கிறார்கள். அதிலும் குழந்தைகளும் பெற்றோருக்கு கடுமையான நேர்காணல்கள் நடத்தப்பட்டு, பல சோதனைகளுக்கு பிறகுதான் இத்தகைய நர்சரி பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். டெல்லியையொட்டியுள்ள கர்காவோன் பகுதியில் ஒரு பள்ளியில், 2009 10 கல்வி ஆண்டுக்கான நுழைவுக்கட்டணமாக ரூ.75,000. அது தவிர அதே பள்ளியில் மற்ற கட்டணங்கள் ஆண்டிற்கு ரூ.1,70,000 வசூலிக்கிறார்கள். இது தவிர ஆண்டு முழுவதுக்குமான போக்குவரத்து கட்டணமாக ரூ.38,000 முதல் ரூ.44,000 வரை வசூலிக்கிறார்கள். இது தவிர ஐ.டி.என்றழைக்கப் படுகின்ற, உயர்தொழில் நுட்பத்திற்காக, ஆண்டிற்கு ரூ.6,000 முதல் ரூ.9,500 வரை வசூலிக்கிறார்கள். இது ஐ.ஐ.டி. வசூல்களை விட பல மடங்கு அதிகம் என்பது கண்கூடு.டெல்லிக்கு அருகே உள்ள நொய்டா பள்ளி ஒன்றில் நுழைவு கட்டணமாக ரூ.61,000மும், காலாண்டு கட்டணமாக ரூ.26,000மும் வசூல் செய்கிறார்கள். அதே நகரில் இன்னொரு பள்ளியில் நுழைவுக்கட்டணமாக ரூ.45,000மும், காலாண்டுக்கு கூடுதல் கட்டணமாக ரூ.11,000மும் வசூல் செய்கிறார்கள். இதுபற்றி டெல்லி மாநிலத்தின் கல்வி அமைச்சர், அரவிந்தர் சிங் லவ்லியிடம் கேட்டதற்கு, இப்படிப்பட்ட விதிமீறல்கள், பள்ளிகளில் நடப்பது தெரியும் என்றும், பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்தாலொழிய நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறியுள்ளார். பெற்றோர்கள் ரசீதுகளை கொடுத்தார்கள் என்றால், அதன்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும், எந்த பெற்றோரும் அதற்கு முன்வருதில்லை என்றும் அந்த அமைச்சர் கூறியுள்ளார். இதே புராணத்தை எந்த மாநிலத்திலும், அமைச்சர்கள் கூறலாம். ஆனால் அப்படிப்பட்ட கல்விச்சாலைகளுக்கு, அனுமதி கொடுத்த கல்வி இயக்ககம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர்கள் எப்போதுமே விசாரணை வளையத்திற்கு உள்ளே வரமாட்டேன் என்கிறார்கள். அதுபற்றி கூறும்போது, டெல்லியிலிருக்கின்ற கல்வி இயக்ககமும், பள்ளிக்கல்விக்கான உயர்அதிகாரிகள், பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டண முறைகள் பற்றிய வழிகாட்டல்கள் மீது எந்த கருத்தும் கூற மறுக்கிறார்கள் என்பதாக அந்த இணையதளம் குற்றம்சாட்டுகிறது. நொய்டா நகரில் உள்ள ஒரு பள்ளியில் நுழைவுகட்டணமாக ரூ.45,700 வாங்கிக் கொண்டு, போக்குவரத்து உட்பட காலாண்டு கட்டணமாக, ரூ.11,000 கூடுதலாகப் பெற்றுக் கொண்டு, ரசீது மட்டும் ரூ.700க்கு கொடுக்கிறார்கள் என்ற ஒரு பெற்றோரின் குமுறலும் அதில் வெளியாகியுள்ளது. பெருவாரியான பள்ளிகள் இதே கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன என்றும், ஒரு நர்சரி இடத்திற்கு அவர்கள் வாங்கக் கூடிய முழு கட்டணத்திற்கும், என்றைக்கும் ரசீது கொடுப்பதில்லை என்பதாக இன்னொரு பெற்றோர் முறையிடுகின்றார். பள்ளிநிர்வாத்தின் கைகளில் பெற்றோர்கள் தொடர்ந்து வதைக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கல்வி இயக்ககத்தின் வழிகாட்டல்களை பின்பற்றாத பல பள்ளிகள் உள்ளன. அவை அநேகமாக, அங்கீகரிக்கப்படாத பள்ளிகளாக இருக்கின்றன. டெல்லி மாநகரில் ஏறத்தாழ 1000 அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் இருக்கின்றன என்றும், அவை கல்வி இயக்கத்தின் வழிகாட்டல்களை பின்பற்றுவதில்லை என்றும் தெளிவாக தெரிகிறது. 1973ம் ஆண்டின் டெல்லி கல்விச்சட்டத்தின் கீழ் அவை கொண்டு வரப்படமுடியாததால், அவற்றின் மீது கல்வி இயக்ககத்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்ற நிலைமை இருக்கிறது. நொய்டாவிலிருக்கும் ஒரு பிரபல பள்ளியின் நிர்வாகம் இதுபற்றி கேட்கப்பட்ட நிலையில், உங்களுக்கு நல்ல கல்வி வேண்டுமென்றால், நீங்கள் அதிகமாக கட்டணம் செலுத்தவேண்டும் என்றும், உங்கள் குழந்தைக்கு பள்ளிக்கூடம் செலவழிக்கின்ற நிதியை ஒப்பிடும் போது, நீங்கள் கொடுக்கின்ற பணம் அதிகமானதல்ல என்றும் அவர்கள் நியாயப்படுத்தினார்கள். தங்கள் பள்ளிகள் 8 மணி நேரம் நடத்தப்படுவதாகவும், சிறந்த கலைவடிவிலான உள்கட்டுமான வசதிகள் இருப்பதாகவும், அதனால் தாங்கள் பெறுகின்ற கட்டணம் நியாயமானதே என்றும் இந்த கல்வி வியாபாரிகள் கூறுகிறார்கள். மேற்கண்ட நிலைமை டெல்லியில் மட்டும்தானா? சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும், இப்போது கிராமங்களில் கூட இத்தகைய மழலையர்களுக்கு உருவாக்கப்பட்டிருக்கும், ஆங்கில வழி நர்சரி பள்ளிகள் இதே போல நடந்து கொள்ளவில்லையா? புற்றீசல் என வளர்ந்து விட்ட இந்த ஆங்கில நர்சரிப் பள்ளிகளுக்கு யார் பொறுப்பு? தாய் மொழியில் பயிற்று மொழி இல்லாமல், சிறு குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் கற்றுக்கொடுப்பது, அவர்களது சிந்தனையை தூண்டி விடுமா? வளர்க்க உதவுமா? சமச்சீர் கல்வி பற்றி பேசிவரும் நாம், முதலில் ஆரம்பக்கல்வியை ஒழுங்கு படுத்துவதற்கு திட்டமிடலாமா? இந்த கேள்விகள் ஆட்சியாளர்களுக்கு எழ வேண்டும் என்பதே நமது அவா.

Wednesday, December 23, 2009

திருவாதிரைக்கு யாழ்பாண தமிழருக்கு கப்பல் விடுங்கள்

ஈழத்தமிழர்கள் மத்தியில் சைவ சமயத்தின் நம்பிக்கை கொண்டவர்கள், கத்தோலிக்க நம்பிக்கை கொண்டவர்கள் என மக்கள் இருக்கிறார்கள். அதில் குறிப்பாக யாழ்பாண வளைகுடாவில் வாழ்கின்ற மக்கள், சைவ சமயத்தின் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற அல்லது வாழ்ந்து வந்த பெருவாரியான தமிழ்மக்கள், சைவ சமயம் சார்ந்தவர்களே. இந்து மதத்தில், சைவம், வைணவம் என்ற இரண்டு பெரும் பிரிவுகள் இருந்தாலும் கூட, தமிழர்கள் மத்தியில் குறிப்பாக சைவ சமயத்தின் செல்வாக்கு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. சிவன் வழிபாட்டை சார்ந்திருக்கின்ற தமிழ்மக்கள், சிவாச்சாரியார்கள் என்ற முன்னோடிகளை மரியாதைக்கூறியவர்களாக பார்த்து வருபவர்கள். முருகன் வழிபாட்டை வழக்கமாக கொண்டவர்கள், அதில் மிகப்பெரும் பான்மையினராக மூழ்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே எடுத்துக் கொண்டாலும், முருக கடவுள் வழிபாடு என்பது ஒரு முதன்மையான வழிபாடாக இருக்கிறது. முருகக்கடவுளை, தமிழ் கடவுள் என்று அழைக்கும் அளவுக்கு, ஆன்மீகம் இங்கே ஆழவிதை போட்டுள்ளது. மௌரீசியஸ் சென்று வந்த பிறகு, அங்குள்ள தமிழர்கள் பற்றி 25 ஆண்டுகளுக்கு முன்னால், மதுரையிலே உரையாற்றும் போது, ஆர்.எம்.வீரப்பன் ஒரு செய்தியைக் கூறினார். அதில் தயவு செய்து பகுத்தறிவு பார்வை கொண்டு, தமிழ் இனத்தை, தமிழர்களை பிளவுபடுத்தி விடாதீர்கள் என்று கூறினர். அதற்கு அவர் ஆதாரமாக எடுத்துக் கொண்டதுதான் மௌரீசியஸ் நாடு. அங்கே இருக்கின்ற மக்கள் தொகை அனைவரும் தமிழர்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் பேசத்தெரியாது. தமிழ் எழுதத்தெரியாது. ஆகவே இங்கிருந்து தமிழாசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக அனுப்பி வைக்க வேண்டும் என்பது அவரது அவாவாக இருந்தது. ஆனால் இங்கே இருக்கும் தமிழர்களையும், மௌரீசியஸ் நாட்டின் வாழும் தமிழர்களையும் இணைப்பது ஒன்றே ஒன்றுதான் என்று அவர் கூறினார். அது கடவுள் வழிபாடுதான் என்று விளக்கம் அளித்தார். அங்கேயும் முருக கடவுளைத்தான் வழிபடுகிறார்கள் என்ற செய்தியைக் கூறினார். அதன் மூலம் அவர்களும் தமிழர்கள்தான் என்பதை அறுதியிட்டார். இங்குள்ள தமிழர்களுக்கும், மௌரீசியஸ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையிலே உள்ள இணைப்பே முருகக்கடவுள்தான் என்று விளக்கினார். மேற்கண்ட ஆர்.எம்.வீரப்பனின் விளக்கம் உண்மையிலேயே சிந்திக்க கூடியதாக இருக்கிறது. ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தையும், இணைப்பையும், ஒற்றுமையையும் நிலை நாட்டுவதற்கு, அல்லது வலுப்படுத்துவதற்கு, பல்வேறு அடையாளக் குறியீடுகள் அவசியமாகிறது. அப்படிப்பட்ட அடையாளக் குறியீடாக, ஆன்மீக சின்னங்கள் ஆண்டுபலவாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. அதுதான் இந்த இடத்தில், தமிழர்கள் மத்தியில் முருகக்கடவுள் என்ற அவதாரமாக காட்சியளிக்கிறது. சைவ சித்தாந்தமும், அதன் இலக்கியங்களும் பழம்பெருமை வாய்ந்தவை. அவை ஆழமாக தமிழர் பெருமையை, தமிழர் பண்பாட்டை பதியவைக்கின்றன. சைவ சித்தாந்த நூல்கள் இன்று வரை, தமிழ் இலக்கியத்தின் வரலாற்று சான்றுகளாக நிற்கின்றன. யாழ்பாணத்தில் மட்டுமல்லாது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில், முருகன் கோவில்கள் பிரபலமானவை. அதே போல புலம் பெயர் தமிழர்கள் கூட்டம், கூட்டமாக வாழ்ந்து வருகின்ற, ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும், கோயில்களை தாங்கள் வாழும் இடங்களில் நிறுவுவதும், அவற்றில் தமிழிலேயே பூசைகள் செய்வதும், சைவ சமய பரப்புரைகளை கவனமாக, முறையாக தொடர்ந்து செய்து வருவதும் நாம் அறிந்த செய்தியே. அந்த அளவுக்கு சைவமும்,தமிழும் இரண்டறக் கலந்து நிற்கின்ற ஒரு நிலையை, தமிழ் தேசியத்தின் விடுதலைப்போராட்ட காலமான இன்று, நாம் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. களத்தில் தமிழர் விடுதலைக்கான கருவி ஏந்திய போராட்டத்தை நடத்திய போராளிகள் கூட, தங்களது போர்க்கள வெற்றியை கொண்டாடும் முகத்தோடு, அவ்வப்போது அங்குள்ள முருகன் கோவில்களில், புலால் உண்டு மகிழ்ந்தார்கள் என்பதான செய்திகள் வந்ததுண்டு. அன்று முதல், இன்று வரை இப்போதும் சைவ சமய சிந்தனைகளில் ஊறிப்போன குடும்பங்களாக, தமிழ் குடும்பங்கள் இருந்து வருகின்றன. தங்களது இன அடையாளங்களை, இழப்பதற்கு தயாராய் இல்லாத ஒரு இனம், தங்களது சமயச் சார்பு அடையாளங்களை இழப்பதற்கும் தயாராக இருக்காது. பகுத்தறிவு பார்வையும், பெரியார் சிந்தனையும் கொண்ட தமிழ் மக்களே கூட, தமிழ் தேசிய இனத்தின், சைவச் சமய ஈடுபாட்டையும், பண்பாட்டு பழக்கங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட பண்பாட்டு உரிமைகளை, அவர்கள் இழப்பதையோ, அவர்களது சமயச்சார்பு செயல்பாடுகள் மறுக்கப்படுவதையோ, சுதந்திர மான ஆன்மீக செயல்பாடுகள் செய்வதற் கான உரிமை பதிக்கப்படுவதையோ, மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதை மனித உரிமை மீறல் என்பதாகவே அழைக்கின்றனர். மதத்தின் உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும் என்பதுதான் அகிலம் தழுவிய மனித உரிமை பிரகடனம் என்று அழைக்கப்படும், ஐக்கிய நாட்டு சபையின் பிரகடனம் கூறுகிறது. சைவ சமயத்தில் ஊறிப்போன தமிழர்கள், ஒவ்வொரு நாளும் 5 நேரமும் தேவாரம் பாடுவார்கள் என்ற செய்தி, யாழ்பாண தமிழர்கள் பற்றி அநேகமாக தமிழகத்து மக்கள் அறிந்திராத செய்தி. அதுமட்டுமின்றி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, அவ்வப்போதும் சமீபத்தில் தொடர்ச்சியாகவும், யாழ்பாணத்தில், திரிகோண மலையில், வவுனியாவில், கிளிநொச்சியில், முல்லைத்தீவில், மன்னாரில், மட்டக்களப்பில், ஆக்கிரமிப்பாளர்களாக அமர்ந்திருக்கும் இலங்கை ராணுவம், முழுமையாக சிங்களவர்களைக் கொண்டதாக இருக்கிறது. அவர்கள் அனைவரையும் புத்தமத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களது வழிபாட்டுக்காக, ஒவ்வொரு ராணுவ முகாம்களுக்கு பின்னாலும், ஒரு புத்த பெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ளது. யாழ்பாணம் போன்ற பகுதிகளில், இயற்கையாகவே எல்லா இடங்களிலும், அரசமரம் இருக்கிறது. அப்படிப்பட்ட அரசமரங்களின் அடியில், இத்தகைய புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் புத்தர்தான், புத்தமதத்தின் அடையாளக்குறியீடு. அப்படிப்பட்ட பண்பாட்டு குறியீட்டை, பயன்படுத்தி சிங்கள அரசாங்கம் தனது ராணுவத்தினரது மத நம்பிக்கை உணர்வுகளுக்கு உரம் போட்டு விடுகிறார்கள். ராணுவ முகாம்களில் தினசரி அதிகாலை, புத்தபெருமானை எழுப்புகின்ற பாடல்கள் என்ற சுப்ரபாதங்கள் இசைக்கப்படுகின்றன. அருகே இருக்கும் தமிழ்மக்கள் குடியிருப்புகளில், வாழ்ந்து வரும் தமிழ் பெண்களுக்கு, இது ஒரு எரிச்சலூட்டும் செயலாகவும், பண்பாட்டு ஆக்கரமிப்பாகவும் படுகிறது. சைவ சமய நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள், கந்தசஷ்டி கவசம் போன்ற பாடல்களை, தொடர்ந்து இசைத்து அதிலேயே லயித்து போய் பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு சிங்களர்கள் கொடுக்கின்ற புத்திச பரப்புரை பெரும் பண்பாட்டு ஆக்கிரமிப்பாக தோன்றுகிறது. இப்படிப்பட்ட பண்பாட்டு சிக்கலிருந்து, நெருக்கடியிலிருந்து, மூச்சு விடுவதற்கான நேரத்தையாவது கொடுப்பதுதான் மனிதப் பண்பு.அப்படிப்பட்ட வாய்ப்பு ஒன்று, இப்போது இந்திய அரசுக்கு கிடைத்துள்ளது. அதாவது பாரம்பரியமாக தங்களது சைவச் சமய வேர்களை, தமிழ்நாட்டில் தேடிக்கொண்டிருக்கும், யாழ்பாண தமிழர்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பு அது. அதாவது இந்த மாத இறுதியில் திருவாதிரை திருநாள் வர இருக்கிறது. தமிழ்நாட்டில் சிதம்பரம் கோயிலில், திருவாதிரைத் திருநாள் 11 நாட்கள் சிறப்பு வழிபாட்டுடன் நடக்க இருக்கிறது. அதை ஆருத்ர தரிசனம் என்பதாக அழைக்கிறார்கள். அந்த சைவ வழிபாட்டுக்கு, யாழ்பாணத்திலிருக்கின்ற, மற்றும் ஈழத்திலிருக்கின்ற சைவச் சமயச் சார்பு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வந்து, கலந்து கொண்டு, உவகை கொள்வது வழக்கம். பல பத்தாயிரம் மக்கள், ஈழத்திலிருந்து சிதம்பரத்திற்கு வருவார்கள். அவர்கள் தமிழகம் வந்து, சிதம்பரம் கோயிலில் திருவிழாவில் கலந்து கொள்ள உதவிகரமாக, இந்திய அரசு தொடர் கப்பல் போக்குவரத்தை செய்து வந்தது. 30 ஆண்டுகளாக நடந்து வந்த ஈழப்போர் காலத்தில், அப்படிப்பட்ட பயணங்கள் நிறுத்தப்பட்டன. இப்போது அரசு அறிவிப்புப்படி போர் முடிந்து விட்டது. தேர்தல் வரயிருக்கிறது. தமிழ் மக்களின் வாக்குகள் தங்களுக்கு தேவையென, அரசியல்வாதிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே இன்றைய சூழலில் ஈழத்தமிழ் மக்கள், ஆருத்ரா தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கில், சிதம்பரம் வருவதற்கு ஏதுவாக கப்பல் போக்குவரத்தை இந்திய அரசு செய்து கொடுக்குமா? தமிழக அரசு நிர்பந்திக்குமா? தமிழரான உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஈழத்தமிழர்கள் சிதம்பரம் வருவதற்கு வழிவகை செய்வாரா? இந்த கேள்விகள் நம்மைத் துளைக்கின்றன.

Tuesday, December 22, 2009

கோபன்ஹெகன்: பணம் கொடுத்து உடன்பாட்டை வாங்கிய வர்த்தகர்கள்?

நேற்று அமெரிக்கா முழுவதும் பனியால் மூடப்பட்டது. வரலாறு காணாத பனி என்பதாக அது வருணிக்கப்பட்டது. நியூயார்க் சாலை முழுவதும் பனி மூடியிருந்தது. கிறிஸ்மஸ் விழாவிற்கான ஏற்பாடுகளை கவனிக்க முடியாமல் பொதுமக்களும், நிறுவனங்களும் திணறினார்கள். பிரான்சிலிருந்து அமெரிக்காவிற்கு வருகின்ற பாதை முழுவதும் பனிப்படலம் ஸ்பெயின் நாட்டிலும், சீன நாட்டிலும் கூட இதே நிலைமை. அளவுக்கதிகமாக பனிப்படலம் வந்ததற்கு யார் காரணம்? பருவநிலை மாற்றம் கண்டபடி விரைவாக மாறிக்கொண்டேயிருப்பது எதனால்? வழமையாக கட்டுக்கள் இருக்கும் பருவநிலையை, சந்தித்த மக்கள் தங்களது கிறிஸ்மஸ் விழாவை குடும்பத்துடன் ஈடுபாட்டுடன், கொண்டாடுவார்கள். அப்போதெல்லாம் இயற்கை அவர்களை எதிர்த்து சதிசெய்ததில்லை. ஆனால் இப்போது இயற்கை பனிவடிவமெடுத்து தடையாக வந்து நிற்கிறது. மனிதர்களை இயற்கை ஏன் இப்படி வதைக்கிறது? இயற்கையின் விதிகள் வழமைபோல், அதன் போக்கிற்கு முன்சென்று கொண்டிருக்கிறது. மானுடம் இயற்கை விதிகளை புரிந்துகொண்டு, தங்களுக்கு அதை பயன்படுத்திக் கொள்ள சரியான அணுகுமுறையுடன் கையாள்கிறார்களா? இயற்கையின் விதிகளை புரிந்துகொள்ளாமல், அதன் மீது தாக்குதல் நடத்தினால், இயற்கை பதிலுக்கு தாக்குதல் நடத்தும். அதனால்தான் அமெரிக்காவில், பனிப்பொழிவால் 5பேர் உயிரிழக்க நேர்ந்துள்ளது. மானுடத்தை ஒட்டுமொத்தமாக இதற்காக குறைசொல்லலாமா? மானுடத்தின் ஒரு சிறுபகுதி இப்படிப்பட்ட உடைவுக்கு, காரணமாக இருக்கின்றார்களா? மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகண்டுவிட்ட, உலகநாடுகள் அதை தடுப்பதற்கான வழிமுறைகளை காண, டென்மார்க் நாட்டில், கோபன்ஹெகன் நகரில் ஐ.நா.சபையின் ஏற்பாட்டில் கூடினார்கள். கூடி, கூடி பேசினார்கள். 10 நாள் பேசினார்கள். 11ம் நாளும் பேசினார்கள். 12ம் நாள் உலகத்தலைவர்கள் 119 நாடுகளின் அதிபர்கள் அல்லது பிரதமர்கள் கூடினார்கள். அவர்கள் கூடுவதற்கு முன்னால், முன்வைக்கப்பட்ட வரைவு நகல்கள் விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட வேண்டும் என்று இந்தியா சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி வந்தார். 119 நாட்டு தலைவர்கள் கூடி மேசைப் பேச்சு நடத்த முடியாது; தீர்வை விவாதித்து எட்டமுடியாது; ஆகவே தலைவர்களின் கூட்டத்திற்கு முன்னாலேயே, அமைச்சர்களும் பிரதிநிதிகளும் பேசிமுடிக்க வேண்டும் என்றும், தலைவர்கள் கையெழுத்திட்டு அறிக்கையை அறிவிக்க வேண்டும் என்றும் விளக்கமாக ஜெய்ராம் ரமேஷ் கூறிவந்தார். அதுமட்டுமின்றி கியோடா பிரகடனப்படி, வளர்ந்த நாடுகள் 2012க்குள் தங்களது வாயு வெளியேற்றத்தை, கடுமையாக கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், வளரும் நாடுகளுக்கு தேவையான நிதியையும், தொழில்நுட்பத்தையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். மேற்கண்ட வலியுறுத்தல்கள் 12ம் நாளுக்குப்பிறகு, தலைகீழாக மாறிவிட்டதா என்று நாம் ஜெய்ராம் ரமேஷை கேட்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஏனென்றால், ஜெய்ராம் ரமேஷ் கூறிய 119 நாட்டு தலைவர்கள் கூட அல்ல, வெறும் 4நாட்டு தலைவர்கள் அமெரிக்க அதிபருடன் சேர்ந்து ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்கள் என்ற செய்தி, முந்தைய அறிவிப்புகளுக்கு முரண்பட்டிருக்கிறது என்று அந்த மத்திய அமைச்சருக்கு தெரியுமா என நமக்குத் தெரியாது. அதேபோல 5 தலைவர்களும் சேர்ந்து, 12 நாட்களாக 100க்கும் மேற்பட்ட நாட்டுப் பிரதிநிதிகள் கூடிப் பேசி, முடிவுக்கு வரமுடியாத ஒரு வரைவு நகல் மீது, முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது எப்படிச் சாத்தியம்? அதுபோலவே விடாபிடியாக, இந்தியாவும், சீனாவும், வளரும் நாடுகளும் அழுத்தம் கொடுத்து வந்த, கியோடா பிரகடனம் ஓரங்கட்டப்பட்டு, ஒரு முடிவு உருவாகிறது என்றால், அது அனைத்து நாட்டு அங்கீகாரம் பெற்ற முடிவா? இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் எழுந்தாலும் கூட, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷûக்கு எந்த கேள்வியும் எழாமல், வெளியே வந்த அறிக்கையை ஆதரித்து பேச மட்டும் தைரியம் வந்தது எதனால்? ஒபாமாவினுடைய திடீர் பிரவேசம், இப்படியொரு ஏடா கூடமான அறிக்கையை வெளியே கொண்டு வந்திருக்கிறது என்பதை உலக ஊடகங்கள் வேடிக்கையாகப் பார்க்கின்றன. ஐ.நா.வையே தகர்ந்தெறிந்தார் பாரக் ஒபாமா என்று ஒரு தலைப்பு. அதாவது ஐ.நா. ஏற்பாடு செய்து பருவநிலை மாற்றத்திற்கான 15வது மாநாட்டில், தொடக்கத்திலிருந்தே ஐ.நா. முன்வைத்த 1990ன் மட்டத்தில் இருந்த, வாயு வெளியேற்ற அளவை அடிப்படையாகக் கொண்டு, எந்த அளவு ஒவ்வொரு நாடும் வாயு வெளியேற்றத்தை செய்யும் என்று கேட்டு வந்ததை, மறுத்து அமெரிக்கா முன்வைத்த 2005ம் ஆண்டின் மட்டத்தை அடிப்படையாகக் கொள்வது என்பதையே, பலநாடுகளும் பேசி வந்தன. கடைசியாக ஐ.நா. கூட்டிய 119 நாட்டு தலைவர்கள் கூடி முடிவு செய்யாமல் 5 நாட்டு தலைவர்கள் முடிவு செய்தார்கள் என்றால், ஐ.நா.வையே தகர்த்தார் பாரக் ஒபாமா என்ற தலைப்பு பொருத்தமானதே. உலக சமூகம் இரவில் இருட்டில், காணாமல் போனது என்பதாக, ஊடகங்கள் தலைப்பிட்டன. இதுவும் கூட முழு இரவிலும் நடந்த மேசைப் பேச்சில், தூங்கி வழிந்து கொண்டே கலந்து கொண்ட பல நாட்டு தலைவர்களை ஓரங்கட்டி விட்டு, 5 நாட்டு தலைவர்கள் முடிவு செய்தார்கள் என்றால், உலக சமூகம் இருட்டில் காணாமல் போனது என்பதாகத் தான் பொருள் கொள்ளமுடியும். மனித உரிமைகள், பெண்களின் பாத்திரம், போலியோ எதிர்ப்பு, அகதிகள் பிரச்சனை ஆகியவற்றைப் பேசும் போது, ஐ.நா. சபையும் பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளை வரவழைத்து, அமரவைத்து பேசி முடிவெடுப்பார்கள். ஆனால் தங்கள் பொருளாதாரத்தின் மையமான, எரிபொருளான பிரச்சனையை பேசும் போது, அந்த ஏழை நாடுகள் பற்றி மறந்து விடுவார்கள். அமெரிக்க பொருளாதாரத்தில் மையமாக 50 ஆண்டுகளாக நிலக்கரி இருக்கிறது. போர் பற்றியும், சமாதானம் பற்றியும் பேசும் போதும், அவர்கள் ஏழை நாடுகளை புறந்தள்ளினார்கள். இப்போது பூமி வெப்பமடைதல் விஷயத்திலும் அதையே செய்கிறார்கள். அப்படியானால் ஐ.நா.சபை என்ற ஒன்று எதற்காக இருக்கிறது? தீவிர மாசுபடுத்தும் நாடுகளை ஒரு கூட்டாக அமெரிக்கா சேர்த்து விட்டது. சீனாவும், அமெரிக்காவும், இந்தியாவும் தாங்கள் நிலக்கரியை அர்த்தமுள்ள விதத்தில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த யாரும் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தை, நிறைவேற்றி இருக்கிறார்கள். இது நரிகளின் கூட்டணி. இந்த நரிகள் கூட்டுச் சேர்ந்து, கோழிக்குஞ்சு பண்ணையை பாதுகாக்கப் போகின்றனர். அவர்களது இலக்குகள் பலவீனத்தில் தொடங்கி இருப்பற்ற நிலை வரை எட்டுகிறது. ஒபாமாவின் இந்த அறிக்கையை, வருங்காலத்தில் அமெரிக்காவிற்கு வரப்போகிற குடியரசு கட்சியின் அதிபர் ஏற்றுக் கொள்வாரா என்பது இன்னொரு பிரச்சனை. எது எப்படியிருந்தாலும் பாரக் ஒபாமா, ஐரோப்பாவையும், உலகிலுள்ள ஏழை நாடுகளையும் இழுத்துப்போட்டு, தன்னுடைய உள்நாட்டு அரசியல் லாபங்களுக்காக அறுவடை செய்து விட்டார் என்பது தான் உண்மை. அதில் ஜார்ஜ் புஷ்ஷை விட, ஒபாமா கெட்டிக்காரர் என்பது நிறுவனமாகிறது. ஆனாலும் கூட ஜி77 நாடுகள் இந்த கோபன்ஹெகன் அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. புஷ்ஷிடமிருந்து, ஒபாமா மாறுபட்டவரல்ல என்பதும் நிருபணமாகியுள்ளது. கோபன்ஹெகன் பூமி வெப்பமடைதல் பற்றியது அல்ல; பணப்பரிமாற்றம் பற்றியது என்பதாக ஒரு செய்தி வெளியாகியது. இந்தியாவிலும், சீனாவிலும் இருக்கின்ற மிகச்சிலர் சேர்ந்து கொண்டு, தங்களது நலனுக்கு எப்படி இந்த உலக நிலைமையை கையாள முடியும் என்று கற்றுவைத்திருக்கிறார்கள். இந்த உலகில் எது வேகமாக வளர்ந்து வரும் சரக்கோ, அதை திரட்டி வைத்துக்கொண்டு விற்பனை செய்கின்ற வர்த்தகர்கள், வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வெற்றிகளை எட்டுவதற்கு மூலக்காரணமாக, கோபன்ஹெகன் மாநாட்டின் அரசராக, அறிவியல் மேதை என்று வருணிக்கப்பட்ட டாக்டர் ராஜேந்திர பச்சௌரி இருந்தார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள். அவர் ஒரு முன்னாள் ரயில்வே பொறியியலாளர் என்றும், பொருளாதாரத்தில் ஆராய்ச்சிப் படிப்பு முடித்தவர் என்றும், சுற்றுச்சூழல் அறிவியலாளர் அல்ல என்றும், இப்போது சூழலை மாசுபடுத்தும் வணிகக்குழுமங்களுக்கு விலை போய், உலக மக்கள் விரோத உடன்பாடொன்றை, அறிவிக்க துணைப் போய் விட்டார் என்றும், உலகெங்கிலும் இருந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய உலக சதிக்கு, அமெரிக்காவுடன், இந்திய அரசு கைகோர்த்துக் கொண்டதா? இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

Monday, December 21, 2009

விவசாயத்துறை அமைச்சர் எதைச் சாதித்தார்?

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர். இந்த கட்சி, இந்திய தேசிய காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு, மத்திய அரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆண்டு கொண்டு வருகிறது. இவர்களது கட்சியின் அகில இந்திய மாநாட்டில், பேசும் போது, சரத்பவார் இந்தியாவில் நிலவி வரும் விலைவாசி உயர்வு பற்றி அக்கறையுடன் பேசியுள்ளார். அத்தியாவசிய உணவு பொருட்களில் விலை உயர்வு என்பது, சாதாரண மக்களை தாக்கி வருகிறது என்ற உண்மையை அப்போது மொழிந்துள்ளார். இந்த உண்மை நிலவரத்தை மாற்றி அமைப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாடு எதிர்கொண்டு வரும் பெரும் வறட்சியை சமாளித்து வருவதாகவும், பெருமையாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்திய அரசு தான் எடுக்கின்ற முன்னேற்றமான நடவடிக்கைகளின் மூலம், பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்கு குறைத்திருக்கிறோம் என்றும் பீற்றிக்கொண்டுள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு கட்டாயத்தேவை என்பதை அந்த மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்திருப்பதாகவும், செய்து கொண்டிருப்பதாகவும், மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டியதுதான் பாக்கி என்பதாகவும் அமைச்சர் சரத்பவார் புரிய வைத்துள்ளார். இதுதான் உண்மையா என்பதையும், உண்மை நிலை என்ன என்பதையும் விரிவாக பார்க்க வேண்டியிருக்கிறது. 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாள் நள்ளிரவில் சுதந்திரம் வாங்கிய பிற்பாடு, இந்திய ஆட்சியாளர்கள் விவசாயத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் என்ன என்பது பார்க்கப்படவேண்டும். விவசாயத்தை வளர்ப்பதற்கான திட்டங்களாக, 5ஆண்டு திட்டங்களும், கட்டப்பட்ட அணைக்கட்டுகளும், அன்றைய கால முயற்சிகளாக இருந்தன. அதன் பிறகு தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அமைச்சர்களும், ஆட்சியாளர்களும், விவசாயத்திற்கு எந்த அளவுக்கு கவனம் செலுத்தினார்கள் என்பதை கணக்கில் கொண்டுதான் விவசாயத்துறை அமைச்சரின் வாதங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளமுடியும். அத்தியாவசிய உணவுப் பொருள்கள் என்று அமைச்சர் சரத்பவார் கூறியிருப்பது, சமவெளிப்பகுதிகளில் விவசாயத்தின் மூலம் கிடைக்கின்ற விளை பொருள்களையும், மலைப்பகுதிகளில் இயற்கையாக உருவாகின்ற பழவகைகள் மற்றும் தேன் போன்ற இயற்கை பொருட்களையும், கடல் பகுதிகளில் கிடைக்கின்ற மீன், நண்டு, மற்ற கடல் வாழ் உயிரினங்களையும் மொத்தமாக குறிக்கிறது. இன்னமும் குறிப்பாக சொல்லப்போனால், கடல் வாழ் உயிரினங்களை பிடித்துக் கொண்டு வருகின்ற மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கின்ற மீன்வளத்துறையும், இவரது கைகளில் இருக்கின்ற விவசாயத்துறைக்கு உள்ளேதான் அடக்கம். அதாவது மீன்வளத்துறைக்காக மாநிலங்களில் இருப்பது போல, தனியானதொரு அமைச்சகம் மத்திய அரசில் இல்லை. இதன் மூலம் வேறுபட்ட உற்பத்தி முறைகளைக் கொண்ட, உணவுப் பொருட்களுக்கு அவற்றின் உற்பத்தியை ஒழுங்குபடுத்த பிரத்யேகமான ஆய்வுடனும், பார்வையுடனும், அக்கறையுடனும் செயல்பட வேண்டிய பிரத்யேக அமைச்சகத்தை ஏற்படுத்தாமல் அனைத்தையும் ஒரே துறையின் கீழ் மத்திய அரசு வைத்திருப்பதனால் கூட, வளர்ச்சிக்கு குந்தகமான நிலைமை உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. விலை உயர்வால் அவதிப்படுகின்ற பொதுமக்களைப்பற்றி பவார் கவலைப்பட்டிருக்கிறார். அதுவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதை குறிப்பிட்டு கவலைப் பட்டிருக்கிறார். அப்படி அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மக்களை சென்றடையாவிட்டால், மக்கள் நிலைமை பட்டினியில் தான் சென்று முடியும். அப்படிப்பட்ட பட்டினி சூழல் எத்தனை மக்களை பாதித்திருக்கிறது என்று பட்டியல் கேட்போம் என்றால், அதற்கும் அரசு ஒரு புள்ளி விவரத்தை தருகிறது. அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான புள்ளி விவரப்படி, இந்தியாவில் இப்போது 35 கோடி மக்கள் வறுமையின் எல்லைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். வறுமையின் எல்லைக் கோடு என்பதை அரசாங்கம் ஒரு அளவுக்குறியோடு வரையறுத்துள்ளது. கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.12 வருமானம் பெறக்கூடிய மக்களும், நகர்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.18 வருமானம் பெறக்கூடிய மக்களும், வறுமைக்கோட்டின் எல்லைக்கு கீழ் உள்ளவர்கள் என்பதாக அரசாங்கம் வரையறுத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பெண்களின் மக்கள் தொகையில் 50 விழுக்காடுவே எழுத்தறிவு இன்றி இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை அரசாங்கமே தருகிறது. பெண் சிசுக்கள் பல இடங்களில் கொல்லப்படுவதால், பல மாநிலங்களில் ஆண் பெண் விகிதாச்சாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள் பல மாநிலங்களிலிருந்தும், அதிகமான எண்ணிக்கையில் வெளிவந்து கொண்டிருப்பதால், இப்போது அதை தொடர்ந்து சொல்வதற்கே ஆளில்லாமல் ஆகிவிட்டது. பல லட்சம் பள்ளிக் குழந்தைகள், பள்ளிப்படிப்பை முடிக்கமுடியாத நிலையில் வெளியேறி விட்டனர். அதில் பல குழந்தைகள் தெருவோர குழந்தைகள் பட்டியலில் சேர்ந்து விட்டனர். அதில் பலரும் 10 வயதுக்கு முன்பே, கடுமையான உழைப்பில் ஈடுபடுத்த வைக்கப்படுகின்றனர். அதாவது குழந்தைத் தொழிலாளர்களாக நாடெங்கிலும் அவதிப் பட்டுவருகின்றனர். இப்படிப்பட்ட அனைத்துப் பிரச்சனைக்கும் காரணமாக இருப்பது வறுமை, வேலையின்மை ஆகியவை. பட்டினி என்பது இந்த நாட்டு மக்களுடைய இணை பிரியா சொத்தாக மாறியிருக்கிறது. அனைத்திற்கும் பொறுப்பெடுக்க அமைச்சர் சரத்பவாரின் விவசாய அமைச்சகம் தயாராக இருக்கிறதா? அமைச்சர் கூறும்போது, இதுவரை இல்லாத அளவு எழுந்துள்ள வறட்சி நிலைமை பற்றிக் கூறுகிறார். அதற்கான காரணத்தை அடுக்கும் போது, மழை பொய்த்துவிட்டதால் நாட்டின் பல்வேறு பாகங்களில் இந்த முறை வறட்சி ஏற்பட்டுள்ளது என்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இதே கூற்றைத்தான் இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும், தான் ஆட்சிப் பொறுப்பு எடுத்தவுடனேயே கூறி, அதற்காக பல்வேறு அகில இந்திய மாநாடுகளை நடத்தி, அதெற்கெல்லாம் தீர்வு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்தான் என்று கூறினார். அதன் பெயரையும் கூட, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டம் என்பதாக பெயர் மாற்றம் செய்து, அதன் மூலம் ஆட்சியாளர்கள் அகமகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படியிருந்தாலும், மக்களின் பிரச்சனை மட்டும் தீரவில்லை என்பதை, அவர்களது உரைகளே அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அமைச்சர் சரத்பவார் பொறுப்பில் உள்ள அமைச்சகத்திலிருக்கும், மீன்வளத்துறை இப்போது மீனவ மக்களுக்கு முன்னால், பெரும் சவாலை வைத்துள்ளது. 2009ம் ஆண்டின் மீன்பிடி தொழில் ஒழுங்கு படுத்தல் மசோதா என்ற ஒன்றை கொண்டு வந்திருக்கின்ற அந்த துறை, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்களாலும், வெவ்வேறு கட்சிகளாலும், அந்த மசோதாவுக்கு எதிரான கருத்தையும் பெற்றுள்ளது. அப்படி இருந்தும் கூட 12 கடல் மைல்களைத் தாண்டி, பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என்ற இந்த புதிய வரைவு மசோதா, நாடெங்கிலும் சீக்கிரத்தில் கலந்துரையாடலுக்கு அனுப்பப்படும் என்ற செய்தியை மௌனமாக மத்திய அரசு தருகின்றது. 12 நாட்டிங்கல் என்ற கடல் மைல்களை தாண்டி உள்ள பகுதியை முழுமையான பொருளாதார மண்டலம் என்பதாக இந்திய அரசு அழைக்கிறது. அப்படிப்பட்ட பொருளாதார மண்டலத்தில் மீன் பிடித்தல் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கம் முன்வைக்கின்ற நகல்தான் அது என்பது அவர்களது விளக்கம். இப்போது எதிர்ப்பு எல்லா திசையிலிருந்தும் எழுந்து வந்ததால், மாநில அரசாங்கங்கள் உட்பட, மீனவ மக்களையும் சேர்த்து, இதன்மீதான கலந்தா லோசனைகளை விரிவாக நடத்தப்போகிறோம் என்றும், அதற்கு பிறகே இந்த மசோதாவை சட்டமாக்கும் முயற்சிக்கு முன்செல்வோம் என்றும், இந்த துறை கூறுகிறது. இந்தியா மீன்களையும், மீன்களிலிருந்து உருவாக்கப்படும் உற்பத்தி பொருள்களையும் ஏற்றுமதி செய்வதில் முதன்மையான நாடாக, உலகத்தில் நிற்கிறது. அதை இறக்குமதி செய்யும் நாடுகளில், ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட உலகின் பலநாடுகள், சட்ட விரோதமான மீன் பிடித்தல், ஒழுங்கு படுத்தப்படாத மீன் பிடித்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒழுங்கு படுத்தலுக்கான ஒரு சட்டத்தை உருவாக்காமல், அத்தகைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என்ற நிலையில், இத்தகைய சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் பாரம்பரிய மீனவ சமூகத்தை, இத்தகைய மசோதாக்கள் எந்தளவு திவாலா ஆக்கிவிடும் என்ற சமூகப்புரிதல் அரசு இருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஒட்டுமொத்த விலைவாசி உயர்வுக்கு, மத்திய அரசு பொறுப்பு எடுப்பதுதான் முறையே தவிர, மாநில அரசுகள் மீது பொறுப்பை தள்ளி விடும் முறை, ஒரு பொறுப்பற்ற தன்மை கொண்டதே.

Sunday, December 20, 2009

காடுகளிலிருந்து தலைநகர் நோக்கி...

டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் அவர்கள் கூடினார்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் கூடிய அந்த கூட்டத்தில் பெருவாரியானவர்கள் ஆதிவாசிகள். ஒரிசாவிலிருந்து பலர் வந்திருந்தார்கள். பஞ்சாபிலிருந்து அந்தப் பேரணிக்கு அணி திரண்டவர்கள் எண்ணிக்கை அதிகம். தமிழ்நாட்டிலிருந்தும் ஆதிவாசிகள் அணிதிரண்டு வந்தார்கள். நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி புறப்பட்டது. ஜந்தர்மந்தர் மையத்திலேயே வழக்கமாக டெல்லியில் எடுக்கப்படும் பேரணிகள் எல்லாம் தடுக்கப்படுவது போல, அவர்களும் தடுக்கப்பட்டார்கள். அவர்களது பேரணி முக்கியமாக சத்திஸ்கர் மாநிலத்தில், துணை ராணுவமும், காவல்துறையும், சல்வாஜுடும் என்ற காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையும் இணைந்து கொண்டு, ஆதிவாசி மக்களை அடிப்பதையும், உதைப்பதையும், கிராமங்களில் புகுந்து படுகொலை செய்வதையும், முழக்கங்களாகவும், கோரிக்கைகளாகவும் உயர்த்தி பிடித்து, அந்த பேரணி நடத்தப்பட்டது. நடத்தப்பட்ட பேரணியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும், டெல்லிப் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர். அப்படி கலந்து கொண்டவர்களில் சத்திஸ்கர் மாநிலத்திலிருந்தும், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்தும் வந்திருந்த ஆதிவாசி மக்களின் பின்னணி கொண்ட மாணவர்கள் சிலர் இருந்தனர். அவர்களிடம் வினவும் போது, அந்த இரு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கின்ற காவல்துறையின் அடக்குமுறை பற்றி விரிவாக எடுத்துக்கூறினர். ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த பெண்களை இந்திய அரசப்படையினர் எத்தனை தூரம் பாலியல் பலாத்காரங்கள் செய்து வருகின்றார்கள் என்ற விவரங்களையும் ஊடகயியலாளர்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார்கள். சத்திஸ்கர் மாநிலத்திலிருந்து, 10,000 ஆதிவாசி மக்கள் மூன்று ரயில் வண்டிகளில் முழுமையாக ஏறி, பயணச்சீட்டின்றியே டெல்லி நோக்கி தங்களது ஜனநாயக உரிமைகளுக்கான கோரிக்கைகளை எழுப்பிக் கொண்டு வர இருக்கிறார்கள் என்ற செய்தி, டெல்லி ஊடகயியலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் சத்திஸ்கர் மாநிலத்திலிருந்து புறப்பட்ட ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்களை, ரயில் வண்டியிலே ஏறவிடாமல், ரயில்வே துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், திட்டமிட்டு தடுத்துவிட்டார்கள். இதுதான் ஜனநாயக நாட்டில், ஜனநாயக ரீதியான கோரிக்கைகளை முன்வைத்து, தலைநகர் வரை வந்து தங்களது கோரிக்கை முழக்கங்களை எழுப்பி, அதன் மூலம் அரசுக்கு தங்களது கோரிக்கைகளை வைத்து விட்டதாக திருப்தி அடைகின்ற மக்களுடைய உணர்வுகளுக்கு கிடைக்கின்ற மரியாதை. அதே போல ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இதே பேரணிக்கு ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்கள் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று பேசிய காவல்துறை அதிகாரிகளும், துணை ராணுவப்படையினரும், ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், அங்கிருந்து புறப்பட்டு டெல்லிக்கு பல்லாயிரக்கணக்கில் ஆதிவாசி மக்கள் செல்வார்களானால், வன்முறை வெடிக்கும் என்பதாக எடுத்துச் சொல்லி, அவர்களை பீதியடைய வைத்து, அங்கிருந்தும் டெல்லிப் பேரணிக்கு வரவிடாமல் செய்வதில் அரசு வெற்றியடைந்துள்ளது. டெல்லி பேரணி மூலம் சில ஆயிரங்களில் திரண்ட ஆதிவாசி மக்களின் நலன்களுக்கான கூட்டம், கடைசியாக அரசிடம் ஒப்படைத்த மனுவில் பல்வேறு அமைப்புகள் கையெழுத்திட, அதில் மணிப்பூர் மாணவரமைப்பும், நாகாலாந்து மாணவர் அமைப்பும் கையெழுத்திட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அடிப்படையில் இத்தகைய அணி திரளலுக்கு காரணமாக இருந்த சூழல், சத்திஸ்கர் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. சத்திஸ்கர் மாநிலத்தில் ஆண்டு வருவது பா.ஜ.க. ஆனால் அங்கே ஜனநாயக உரிமைக்குரல் எழுப்புகின்ற ஆதிவாசிகளை, அடக்கிக் கொண்டிருப்பது மத்திய அரசு அனுப்பி வைத்த துணை ராணுவ படையினர். மாநில காவல்துறை காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்ற ஆதிவாசி மக்களின் நிலங்களையும், வளங்களையும் கொள்ளையடிக்க வருகின்ற, தனியார் லாபநோக்க நிறுவனங்களுக்கு தங்களது நிலத்தில் இருக்கும் கனிம வளங்களை களவாட விடாமல் தடுத்த ஆதிவாசிகளை, போஸ்கோ என்ற ஆலையை நிறுவுவதன் மூலம் பாதிக்கப்படுவோம் என்று போராடும் ஆதிவாசி மக்களை, அடித்து உதைத்து அராஜகம் செய்கின்ற போக்கை எதிர்த்து போராடி வருகிறார்கள். அதே போல ஆந்திராவிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும் டெல்லி பேரணிக்கு புறப்பட்ட ஆதிவாசி மக்களையும் கூட பல்வேறு முறைகளில் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தடுத்து நிறுத்தல்கள், ஜனநாயக ரீதியான போராட்ட வடிவங்கள் மீது அந்த மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமா? ஆயுதம் ஏந்திய பாதையை பரப்புரை செய்யும் மாவோயிஸ்டுகள் பக்கத்தில் அந்த மக்களை தள்ளிவிடுமா? மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் மத்திய அரசு இருக்கிறது. ஏனென்றால் வருகிற 25ம் நாள் ஒரு சத்தியாகிரக போராட்டத்தை தொடங்க வேண்டிய நிலைமைக்கு, சத்திஸ்கர் மாநிலத்திலிருக்கின்ற காந்தியவாதிகள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் டிசம்பர் 10ம் நாள், உலகம் மனித உரிமை நாள் நிகழ்ச்சிகளையொட்டி, ஒரு பாத யாத்திரையை திட்டமிட்டார்கள். அந்த பாதை யாத்திரையை தண்டே வாடா என்ற இடத்தில் தொடங்கி, சத்திஸ்கர் மாநில தலைநகர் ரெய்பூர் நோக்கி எடுத்துச் செல்வதாக, காந்தியவாதிகள் திட்டமிட்டிருந்தார்கள். தண்டேவாடாவிலுள்ள வனவாசிகள் சேத்னா ஆசிரமம் ஒன்றை காந்தியவாதி ஹிமன்ஷû குமார் நடத்தி வருகிறார். அவர் ஆதிவாசிகள் மக்கள் மீது அனுதாபம் கொண்டு, அவர்களுக்கான உதவிகளை செய்து வருகிறார். அனைத்து விதமான வன்முறைகளையும் அவர் எதிர்த்து வருகிறார். அரசு தரப்பிலிருந்து வன்முறைகள் வந்தாலும், மாவோயிஸ்டு தரப்பிலிருந்து வந்தாலும் அவர் அவற்றை சமரசமற்று எதிர்த்து போராடி வருகிறார். அரசு தரப்பு வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும், அதனாலேயே அரசு படைகளின் வன்முறைகளிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஆதிவாசிகள் மாவோயிஸ்டு உதவிக்கு செல்வதையும், விளக்கமாக இரண்டு வாரங்களுக்கு முன்னால் சென்னை லயோலா கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் அவர் விளக்கினார். அப்படிப்பட்ட ஹிமன்ஷû குமார், சந்தீப் பாண்டேயுடன் சேர்ந்து, மனித உரிமை ஆர்வலர்களை அழைத்துக் கொண்டு, சமாதானத்தையும், சகஜநிலையையும் ஏற்படுத்துவதற்காக தண்டே வாடாவிலிருந்து அன்று பாதையாத்திரையை தொடங்கினார். ஆனால் சத்திஸ்கர் மாநில அரசாங்கமும், சல்வாஜுடும் என்று அழைக்கப்படும் ஆயுதம் தாங்கிய கூலிப்படை அவர்களை தடுத்து நிறுத்தியது. அந்த வட்டாரத்தில் பொதுமக்கள், குறிப்பாக ஆதிவாசி மக்கள், அரசு ஒடுக்குமுறையாலும், ராணுவ மயத்தாலும், வன்முறையாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். அதனால்தான் அப்படி ஒரு சமாதானத்திற்கான பாத யாத்திரை தேவைப்பட்டது. அந்த மாநிலத்தின் காவல்துறை தலைமை அதிகாரியான டி.ஜி.பி. விஸ்வரஞ்சன், ஊடகயியலாளர்களிடம் காவல்துறை பாதுகாப்பில் பாத யாத்திரை தொடங்கியுள்ளது என அறிவித்தார். ஆனால் பாத யாத்திரை தொடங்குவதற்கு முன்பே அரசு சார்பில் வன்முறை சக்திகளால் தடுக்கப்பட்டது என்பதே உண்மை. நாடு தழுவிய அளவிலிருந்து 39 பெண் ஆர்வலர்கள் பாத யாத்திரையில் கலந்து கொள்ள, ரெய்பூர் வந்திறங்கி தண்டேவாடா நோக்கி புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் பேருந்தில் வரும் வழியிலேயே, காங்கர் என்ற இடத்தில் சல்வாஜுடுமால் தடுக்கப்பட்டு, பேருந்திலிருந்து இறக்கப்பட்டனர். அந்த பெண் ஆர்வலர்களை சித்ரவதை செய்து, ரெய்பூருக்கு கூலிப்படை திருப்பி அனுப்பியது. வருகிற 2010ம் ஆண்டின் ஜனவரி 7ம் நாள் வனவாசி சேத்னா ஆசிரமம் ஏற்பாடு செய்துள்ள புது விசாரணையில் கலந்து கொள்ள, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த சந்திப்பில் சல்வாஜுடும் பற்றியும், பச்சை வேட்டை பற்றியும், நீதிக்கான போராட்டம் பற்றியும், அந்த வட்டார ஆதிவாசி மக்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். ஜனநாயக இயக்கங்களை ஒடுக்குகின்ற மாநில அரசாங்கம், அப்படிப்பட்ட சந்திப்பை அனுமதிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால் தான் ஹிமன்ஷû குமாரும், மற்றவர்களும் தண்டேவாடாவில் தங்களுடைய உரிமை கோரிக்கைகளுக்காக சத்தியகிரகத்தை தொடங்க இருக்கிறார்கள். உள்துறை அமைச்சரிடம், அவரது வருகையை அதிகாரபூர்வமாக அறிவிக்கச் சொல்லி கோரியிருக்கிறார்கள். சத்திஸ்கர் மாநில அரசாங்கம் எந்த சதி செய்தாலும், உள்துறை அமைச்சர் தனது வருகையை ரத்து செய்யக்கூடாது என்றும் கூட கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவாக பி.யூ.சி.எல். தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் ரஜிந்தர்சச்சார், மேதாபட்கர், பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ஆதிவாசி மகளிர் சங்க தலைவி மமதா குஜுர், பி.யூ.டி.ஆர். ஆஷிஷ் குப்தா, ஆகியோர் அதே குரலை எதிரொலித்துள்ளார்கள். உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால், இங்கே உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், அவரை நோக்கி இதே குரலை எதிரொலிப்பார்களா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.