Tuesday, December 29, 2009

இலங்கை அதிபர் தேர்தலை தவிர்க்கக்கூடாதா?

இலங்கைத் தீவில் அரச அதிபருக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்றைய அதிபரான மகிந்த ராஜபக்சே ஒரு வேட்பாளர். அவரை எதிர்த்து சிங்கள எதிர்க்கட்சிகள் இணைந்து நிறுத்தியிருக்கும் பொது வேட்பாளராக சரத்பொன்சேகா நிறுத்தப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் இருக்கின்ற இரண்டு வேட்பாளரையும், ஈழத்தமிழருக்கு எதிரான போருக்கு காரணமானவர்கள் என்பதாக கூறிக்கொண்டு, போர் எதிர்ப்பாளர்கள் தங்களுக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்ற பரப்புரையை செய்து வரக்கூடிய பிற வேட்பாளர்களில் முக்கியமானவர்கள், இடது முன்னணியைச் சேர்ந்த டாக்டர் விக்கிரம பாகு கருணா ரத்னேயும், இந்நாள் எம்.பி. சிவாஜி லிங்கமும், இன்னொரு இடதுசாரி தலைவர் ஜெயசூர்யாவும் வருகிறார்கள். இவர்களில் முதல் இருவர் இணைந்து பிரச்சாரத்தில் வேறு ஈடுபட்டு வருகிறார்கள். மகிந்தாவை எதிர்க்கக்கூடிய பொன்சேகா பல்வேறு தளங்களில், வாக்கு சேகரிக்க முயன்று வருகிறார். அதில் ஒன்று ஈழத்தமிழர்களில் வாக்குகளை வென்றெடுப்பது. அதற்காக போரில் நடந்த குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்துகின்ற வேலைகளை அவர் தொடங்கி விட்டார். அதன் மூலம் அவருக்கு செல்வாக்கும் கூடி வருகிறது. தென்னிலங்கையில் இருக்கின்ற மலையகத் தமிழர்கள் மத்தியிலும், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியிலும், கொழும்பு வாழ் தமிழர் மத்தியிலும், மகிந்தா அரசாங்கத்திற்கு செல்வாக்கு குறைந்து வருவது கண்கூடு. உதாரணமாக மகிந்தா அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்ற சிலோன் தொழிலாளர் காங்கிரசின் தலைவரான ஆறுமுகத் தொண்டைமான் கட்சியும், இன்னொரு அமைச்சரான மலையக மக்கள் முன்னணியின் தலைவராக இருக்கும் சந்திரசேகரன் கட்சியும், சமீபத்திய மாநில கவுன்சில்களின் தேர்தல்களில் மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றன. ஆனால் அதே மாநிலக் கவுன்சில்களின் தேர்தல்களில், கொழும்பு எம்.பி. மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி, வாக்குகளை அதிகமான அளவில் பெற்றது. இந்தக் கட்சி இலங்கையின் எதிர்க்கட்சியான ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியில் இருக்கிறது. மேற்கண்ட வாக்கு எண்ணிக்கைகளை கணக்கெடுக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியதே, அதிபர் ராஜபக்சேதான். ஏனென்றால் எல்லா மாநில கவுன்சில்களுக்கும், தேர்தல்களை நடத்தி, ஒவ்வொன்றிலும் தனது கட்சி அல்லது தனது கட்சியின் கூட்டணி அதிகமான வாக்குகளை பெற்றதாக பெருமை அடித்துக் கொண்டு, அதனால் மட்டுமே தான் நாடுதழுவிய பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான ஆதரவு தளத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துக் கொண்டிருந்த காரணத்தினால், இத்தகைய கணக்குப்பார்த்தல் தேவைப்படுகிறது. அதிபர் தேர்தலுக்கான முக்கிய இரண்டு வேட்பாளர்களில், பொன்சேகாவிற்கு ஆதரவு கூடிக்கொண்டிருப்பதாக, மகிந்தாவின் ஆதரவு ஏடுகளே எழுதத்தொடங்கிவிட்டன. பயங்கர வாதத்தை எதிர்த்து போர் நடத்த வேண்டும் .அந்தப் போரில் வெல்ல வேண்டும் என்று கருதுகின்ற சிங்கள மக்கள், அதற்காக வாக்களிக்க விரும்பினால் மகிந்தாவை மட்டுமே ஆதரிப்பார்கள் என்று யாரும் சொல்லமுடியாது. ஏனென்றால் களத்தில் பொன்சேகாவை நிறுத்தி, அதன்மூலம் தான் மகிந்தா அந்தப் போரில் வென்றதாக, மார்தட்டிக் கொள்கிறார். அதனால் சிங்கள மக்களை பொறுத்தவரை, போர் வெற்றிக்கு காரணமானவர்கள் என்று அவர்கள் இருவரையுமே பார்க்கிறார்கள். அதனால் அந்த குறிப்பிட்ட காரணத்திற்காக, ஒருவருக்கு வாக்களிப்பார்கள் என்று யாரும் கூறமுடியாது. இதிலும் கூட மகிந்தா தனது ஒரே நம்பிக்கை வாக்கான, போர் ஆதரவு வாக்குகளை பெறுகின்ற உத்தரவாதத்தை இழந்து நிற்கின்றார். வெள்ளை வாகன கடத்தல்களும், அதையொட்டிய படுகொலைகளும், கொழும்பு நகரத்தையும், ஈழத்தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆகிய அனைவரையும், நேரடியாக பாதித்து வரும் நிகழ்வுகள். தங்கள் குடும்பத்திலோ, தங்களுக்கு வேண்டிய குடும்பத்திலோ அல்லது தங்களுக்கு தெரிந்த குடும்பத்திலோ ஒருவர் வெள்ளை வாகனத்தால் கடத்தப்பட்டிருக்கிறார் என்ற செய்தி, அந்த மக்களை பெரும் பாதிப்புக் குள்ளாக்கியிருக்கிறது. வாய்திறந்து கூறமுடியா விட்டாலும், ஊரறிந்த உண்மையாக கோத்தபாய ராஜபக்சேதான் அந்த வெள்ளை வாகன கடத்தல்களுக்கு, பின்னணியில் இருந்து செயல்படுபவர் அல்லது செயல்பட்டவர் என்பதாக அவர்கள் எண்ணிப்பார்க்கிறார்கள். இதுவும் கூட மகிந்தாவிற்கு எதிராக வாக்குகளை தள்ளிவிடக்கூடிய சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. 4,000 பேர்கள் வரை வெள்ளைவாகன கடத்தலால் தூக்கிக் கொண்டு செல்லப்பட்டி ருக்கிறார்கள் என்ற செய்தி மனிதாபிமானமுள்ள யாரையும் அசைத்துப்பார்க்கிறது. அதே போல வெள்ளைக் கொடிகளுடன் வன்னிப் போரில் இறுதிக்கட்டத்தில், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த புலிப்படைத் தலைவர்கள் பலரையும் சுட்டுக் கொல்வதற்கான உத்தரவை, கோத்தபாய ராஜபக்சே அனுப்பினார் என்று பொன்சேகா வெளியிட்ட செய்தி, அங்கே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தின் பெயரில், பொன்சேகா தனது கூற்றை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், அவரை ஆதரித்து பரப்புரை செய்யும் பெரிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரனில் விக்கிரமசிங்கே அந்த பிரச்சனையை முக்கியமாக பரப்பி வருகிறார். அதனால் அது மக்களுடைய கவனத்திலிருந்து பிறழமுடியாது. சரணடைந்த எந்தப் போராளியையும் சுட்டுக் கொல்வதை, சிங்கள மக்களும் கூட அங்கீகரிக்கமாட்டார்கள். இதுவும் கூட வாக்கு எண்ணிக்கையை பாதிக்கக்கூடிய செய்திதான். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரும் ஒரே முடிவை எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். சிவாஜி லிங்கம் இன்றைய நிலையில் அவர்களிடமிருந்து வேறுபட்டாலும், தமிழ் பேசும் மக்கள் அனைவரும், தமிழ் தேச கூட்டமைப்பின் முடிவுகளை எதிர்பார்த்து நிற்கிறார்கள். பொன்சேகா அணியினருடன் பேசுவது ஒன்றைத்தான் முதன்மையாக தமிழ் தேச கூட்டமைப்பினரும் முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சி வெற்றி பெறுமானால், பொன்சேகா அவர்களுக்கு வாக்குறுதிகளை கொடுப்பாரானால், பெருவாரியான அல்லது ஒட்டுமொத்த ஈழத்தமிழர் வாக்குகள், மகிந்தாவிற்கு எதிராக விழும் என்பதில் சந்தேகம் இல்லை. டக்ளஸ் தேவானந்தா என்ற இன்றைய அமைச்சரும், கிழக்கு மாகாண முதல்வருமான பிள்ளையனும், நாடாளுமன்ற நியமன உறுப்பினரான கருணாவும், பதவி பொறுப்புகளில் இல்லாமலேயே கொழும்பில் அமர்ந்து கொண்டு மகிந்தா வேட்புமனுவை ஆதரிக்கின்ற பிளாட் தலைவர் சித்தார்த்தனும், பெருவாரியான தமிழர் வாக்குகளை தங்கள் வேட்பாளர் மகிந்தாவிற்கு ஆதரவாக திருப்புவது இயலாத காரியம். வவுனியாவில் இருக்கின்ற கணிசமான பிளாட் வாக்குகள், இந்த முறை சித்தார்த்தன் கூற்றுக்கு ஏற்ப மகிந்தாவிற்கு விழும் என்று உத்தரவாதம் சொல்ல இயலாது. முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன் காலத்திய பிளாட் அமைப்பும், மாணிக்க வாசன் காலத்திய பிளாட் அமைப்பும், சித்தார்த்தன் கூற்றை கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆகவே தமிழர் வாக்குகள் நிச்சயமாக மகிந்தாவிற்கு எதிராகத்தான் திரும்பும். அதே சமயம் தமிழ் பேசும் முஸ்லிம்களை மீண்டும் யாழ்பாணத்தில் கொண்டு வந்து குடியேற்றுவேன் என்ற திடீர் வசனத்தை மகிந்தா அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ் பேசும் முஸ்லிகளது வாக்குகளை ஈர்க்கலாம் என்று அவர் எண்ணினால், அடுத்த நாளே திரிகோண மலை மாவட்டத்தில், முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றிக் கொண்டிருக்கும் அரசின் திட்டங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. ஆகவே முஸ்லிம் வாக்குகளை ஈர்ப்பது என்பதிலும் கூட, மகிந்தாவிற்கு உறுதியில்லை. இத்தகைய சூழலில்தான், மகிந்தா தனது பீதியை வெளிப்படுத்தியுள்ளார். தன்னால் முக்கியப் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்ட ராணுவத்தளபதியே தனக்கு எதிராக போய் விட்டார் என்றும், அதனால் நாடே அழியப்போகிறது என்றும் தேர்தல் கணிப்பை முன்கூட்டியே உணர்ந்து புலம்பியுள்ளார். இப்படித்தானே பிரபாகரனிடமிருந்து, கருணாவை பிரித்த ஆட்சியாளர்கள் சதி இப்போது சிங்களர் மத்தியிலேயே நடப்பதனால் திருப்பி அடிக்கிறது என்று கேட்பவர்களும் உண்டு.இந்த நேரத்தில் தேசிய சமாதான கவுன்சில் ஒரு செய்தியை அசை போடுகிறது. அதாவது அதிபர் ஆட்சியை கலைத்துவிட்டு, நாடாளுமன்றப் பாதையில் பிரதமர் ஆட்சியை கொண்டு வருவோம் என சூளுரைக்கும் பொன்சேகா கருத்து எடுபடும் நிலைமையில், இந்த அதிபர் தேர்தல் ஒரு முதிர்ச்சியற்ற பரிசோதனை என்று அது கூறுகிறது. ஆகவே இப்போதும் கூட காலம் இருக்கிறது என்றும், அதிபர் தேர்தலை ரத்து செய்து விட்டு, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நாடு திரும்பலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஜனநாயக பார்வையுடன் அதிபர் ஆட்சியையே ரத்து செய்வதும், அதிபர் தேர்தலை நடத்தாமல் இருப்பதும் செய்யலாமே என்று இலங்கை அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருக்கும் இந்திய அரசை நாம் கேட்கலாம்.

Monday, December 28, 2009

காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டிலாவது, ஊழல் ஒழிப்பில் சீனாவை, இந்தியா பின்பற்றுமா?

அண்டை நாடுகளாக இருந்தாலும், ஒரே எல்லைக்கோடுதான் இரண்டு நாடுகளுக்கும் என்று சொன்னாலும், ஆசியா கண்டத்திற்குள்ளே இருக்கும் இந்தியாவும், சீனாவும் தங்களுக்குள் நல்லுறவை வளர்த்துக் கொள்வதில் பலவீனமாகவே இருந்தன. உலக அரங்கில் இருக்கின்ற நாடுகள் எல்லாம் இணைந்து, அகில அளவில் வளர்ந்து வரும் பருவநிலை மாற்ற ஆபத்தையும், பூமி வெப்பமடையும் அபாயத்தையும் எதிர்கொள்வதற்காக டென்மார்க்கில் கூடினர். டென்மார்க் நாட்டிலுள்ள கோபன்ஹெகன் நகரில் கூடிய அந்த ஐ.நா. சபையின் ஏற்பாடான மாநாட்டில், வளரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்தை உணர்ந்தனர். வேறுவழியே இல்லாமல் இந்த இரு நாடுகளும், அந்த மாநாட்டின் 12 நாட்களும், இணைந்தே செயல்படும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். ஊர் திரும்பினால், எல்லைப் பிரச்சினையில் ஒருவரையொருவர் கடித்துக் கொள்வார்கள் என்ற நிலைமையிலும் கூட, நல்ல விசயத்திற்காக கோபன்ஹெகனில் கூடிப் பேசி, குலாவிக்கொண்டார்கள் என்பது நல்ல செய்திதான். அதே போல மக்கள் சீன அராசங்கம் புதிதாக தொடங்கியிருக்கின்ற ஒரு இயக்கத்தை, இந்திய அரசாங்கமும் பின்பற்றுவார்களா என்று நமக்கு கேட்கத் தோன்றுகிறது. அதுதான் ஊழல் எதிர்ப்பு இயக்கம். கடந்த டிசம்பர் 26ம் நாள், மக்கள் சீன குடியரசின் முதல் தலைவராக இருந்த மாசேதுங் பிறந்த நாளன்று, ஒரு நல்ல காரியத்தை அந்த அரசாங்கம் முன் வைத்துள்ளது. அந்த நாளை ஊழல் எதிர்ப்பு நாளாக அவர்கள் கடைபிடிக்க அறிவித்தார்கள்.அதையொட்டி ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்று ஒன்றையும் கட்டவிழ்த்து விட்டார்கள். 2008ம் ஆண்டுக்குள் ஊழல் செய்த அதிகாரிகள் என்று பட்டியலிடப்பட்டு, சீன நாடெங்கிலும் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,960. இத்தகைய நிகழ்வை முன்னுதராணமாக இந்திய அரசும், பின்பற்றலாமே என்ற ஒரு நப்பாசை நமக்கு ஏற்படுகிறது. ஏனென்றால் மக்கள் சீன குடியரசு என்று அழைக்கப்படும் சீனநாட்டினுடைய அரசாங்கத்தை, சீன நாடு 1949ல் விடுதலையான பிற்பாடு வழிகாட்டி, தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பது சீன கம்யூனிஸ்ட் கட்சி. அப்படிப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடத்தப்படும் அரசாங்கத்திலேயே, ஊழல் நடப்பது என்பதும், அதை கண்டுபிடித்து அந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது என்பதும், நாம் கற்றுக் கொள்ள வேண்டிய இன்றைய உலக விதி. இந்திய அரசாங்கம், நாட்டு விடுதலைக்கு பிறகு 61 ஆண்டுகளாக, இடையில் சில ஆண்டுகள் விடுபட்டாலும், தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் என்ற காங்கிரஸ் கட்சியால் ஆளப்பட்டுவருகிறது. அந்த காங்கிரஸ் கட்சி இன்று தனது 125வது வயதை எட்டுகிறது. 1885ம் ஆண்டு டிசம்பர் 28ம் நாள், இன்றைய மும்பையில், அன்றைய பம்பாயில் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. ஏ.ஓ.ஹியூம் என்ற ஆங்கிலேயரால் அப்போது தொடங்கப்பட்டது. ஆங்கிலேயருடைய ஆட்சியிலேயே அந்தக் கட்சி துவங்கப்பட்டதால், இன்று வரை அதனுடைய துவக்கம் பற்றிய அல்லது துவக்கத்திற்கான நோக்கம் பற்றிய விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாட்டு விடுதலைக்குப் பிறகு சீன நாட்டை ஆண்டுவரும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நாட்டு விடுதலைக்குப் பிறகு இந்திய நாட்டை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கின்ற ஒத்த விசயங்களையும், வேறுபாடுகளையும் நாம் ஒப்பிட்டு இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட கேள்வியை எழுப்பவேண்டியிருக்கிறது. அதாவது, காங்கிரஸ் கட்சி தனது 125வது ஆண்டிற்குள் நுழையும் நாள் என்பதனால், குறைந்த பட்சம் ஊழல் எதிர்ப்பிலாவது அண்டைய நாட்டின் அனுபவங்களை பின்பற்றுவார்களா? என்ற கேள்வியை எழுப்புகிறோம். காங்கிரஸ் கட்சியினுடைய வரலாற்றில், அந்த கட்சியின் தலைமையும், தொண்டர்களும் சுதந்திரத்திற்காக தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஒரு காலகட்டம் உண்டு. அப்படிப்பட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளை சேர்ந்த, பல்வேறு சாதிகளை சேர்ந்த, பல்வேறு மதங்களை சேர்ந்த மக்களை எல்லாம் ஓரணியில் திரட்டி, இந்திய நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற நல்லதொரு கொள்கையை முன்வைத்து தனது கட்சியின் தலைமையில், ஒரு இயக்கத்தை நாட்டின் இயக்கமாக நடத்தி வந்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலேயர் ஒருவரால் தொடங்கப்பட்ட ஒரு கட்சியாக இருந்தாலும், ஆங்கிலேயர் வழிகாட்டலில் ஒரு நாடாளுமன்றத்தை பயிற்சிக்காக உருவாக்கி, அதை ஜவஹர்லால் நேருவின் தந்தையான மோதிலால் நேருவின் கரங்களில் கொடுத்த வரலாறு ஒரு புறம் இருந்தாலும், காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களுடைய நேரடி ஆட்சியை இந்தியாவிலிருந்து விரட்டி அடிப்பதற்காக, ஒரு மாபெரும் ஐக்கிய முன்னணியை கட்டி எழுப்பியது என்ற செய்தியை நாம் மறுப்பதற்கில்லை.ஆட்சி அதிகாரம் தங்கள் கரங்களில் வந்த பிற்பாடு, காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டில் ஊழலும், லஞ்சமும் எந்த அளவுக்கு உள்ளே புகுந்தது என்பதையும் இந்த 125 ஆண்டு வரலாற்றைக் கண்டு பெருமைப்படக்கூடிய நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 5 ஆண்டு திட்டங்களையும், பொதுத்துறைகளையும் வளர்த்து நாட்டினுடைய உள்கட்டுமான ஏற்பாடுகளை உருவாக்கிய காங்கிரஸ் கட்சித் தலைமை, பிற்காலத்தில் ஒவ்வொரு தனியார் துறையிலிருந்தும் எந்தளவுக்கு கையூட்டுப் பெற்றுக் கொண்டு, நாட்டின் முக்கியமான ஆலைகளையும், திட்டங்களையும் தாரை வார்த்தார்கள் என்ற சிதைவுகளை நாம் கணக்குப்பார்க்கவேண்டிய தருணம் இது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சீனத்தை உருவாக்குவதற்காக, பெரியதொரு புரட்சியை நடத்தியது. அத்தகைய புரட்சியை நடத்துவதற்கான மக்கள் படையை உருவாக்கி, அந்த இயக்கப்போக்கில் பல்வேறு தோழர்களின் உயிர் தியாகங்களைச் செய்து அதன் மீதே தங்கள் நாட்டின் மக்கள் குடியரசை கட்டி எழுப்பியது. அப்படிப்பட்ட சீன நாட்டில் இன்றைக்கு பல்வேறு மட்டங்களில் இருக்கின்ற அரசாங்க பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள், ஊழல் செய்தவர்களாக அடையாளம் காட்டப்பட்டு, அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, அவற்றை விசாரணை செய்து, தண்டிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது என்றால், எத்தனை உருக்கு போன்ற கட்டுப்பாடுகள் இருக்கின்ற ஒரு கட்சியிலும், அந்த கட்சியில் தலைமையிலான அரசாங்கத்திலும், இப்படிப்பட்ட ஊழல் புகார்கள் வரமுடிகிறது என்று சொன்னால், ஒரு நாட்டின் உள்ளே இருக்கின்ற ஆட்சியாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மட்டுமே இத்தகைய பிரச்சினைகளுக்கு ஒட்டு மொத்த காரணமாக இருக்க முடியாது என்பது தெரிகிறது. அப்படியானால் வெளியே இருக்கும் காரணிகள் என்ன? இன்றைய உலகச் சூழலில் ஒரு நாடு தனது நிலத்தில் உற்பத்தியாகின்ற உற்பத்திப் பொருட்களை மட்டுமே சார்ந்து வாழ முடியாது என்ற நிலைமை இருக்கிறது. உணவுப் பொருட்கள் தொடங்கி, அத்தியாவசிய தேவைப்பொருட்கள், ஆடம்பர தேவைப்பொருட்கள், வாழ்வதற்கான பல்வேறு வகையான பொருட்கள் ஆகியவற்றை நாடுவதற்காக, எந்த ஒரு நாடும் உலக சந்தையை அணுகவேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட உலக சந்தையில் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட, தனியார் முதலாளிகள் தாராளமாக உலா வருவதை யாரும் தடுத்து விடமுடியாது. அப்படிப்பட்ட தனியார் முதலாளிகள் தங்களது சரக்குகளை விற்பனை செய்வதற்காக, கையூட்டுகள் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மேற்கண்ட வழக்கத்தை பன்னாட்டு மூலதன நிறுவனங்கள், தங்களது நிர்வாகத் தலைமையிலேயே ஒரு தனிப்பிரிவாக ஒதுக்கி, ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்திலும் தீர்மானிக்கும் பொறுப்பிலிருக்கின்ற அதிகாரிகளின் பலவீனங்களை பட்டியல் போட்டு, அவர்களுக்காக பல கோடிகளை செலவு செய்யுமளவுக்கு ஒரு நடைமுறையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை அவர்களது மொழியில் வர்த்தகத் திறமை என்பதாக கூறுகிறார்கள். இத்தகைய வர்த்தகத் திறமையில் அல்லது வர்த்தக சூதாட்டத்தில், சிக்கிக் கொண்ட அரசாங்க அதிகாரிகள் தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியாலும், சீன அரசாங்கத்தாலும், சீன நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படுகிறார்கள்.நமது நாடு இதுபோன்ற பாதிப்புகளால் அதிகமாக சிக்கல்களை சந்தித்திருக்கிறது. நேருவின் குடும்பத்தினர் தங்கள் தலைமையை மீண்டும், மீண்டும் காங்கிரஸ் கட்சியின் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் நிறுவிக்கொண்ட காலம்தான் இந்த நாட்டின் வரலாறு என்றால், நாட்டின் பாதுகாப்பிற்காக விலைக்கு வாங்கக் கூடிய பீரங்கிகளிலேயே, ஊழல் நடந்ததை அம்பலப்படுத்தியதுதான் போபர்ஸ் பீரங்கி ஊழல். இப்படி ஊழல் எலும்புக்கூடுகளை தனது பதக்கமாக வைத்திருக்கின்ற காங்கிரஸ் கட்சி, தனது 125வது ஆண்டு பிறந்த நாளிலாவது, ஊழல் எதிர்ப்பு என்பதை ஒரு சூளுரையாக அறிவிப்பார்களா என்று இந்த நாளில் நாமும் கேட்க விரும்புகிறோம்.

Sunday, December 27, 2009

சுனாமி பேரழிவும், மீனவ மக்களும்...!

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள் அதிகாலை அது நிகழ்ந்தது. முதலில் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. ஒரு சில மணி நேரத்தில் கடலிலிருந்து பேரலைகள், கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. கடலோரம் வாழ் மீனவ மக்கள் அனைவரும் அடித்துப் புரண்டு கொண்டு, ஓடி வந்தனர். கரையில் ஓடிவந்த பேரலைகள், பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி விட்டு, அமைதியாக கடலுக்குள் தங்கள் கரங்களை இழுத்துக் கொண்டன. அந்த இடைநேரத்தில் ஏற்பட்ட சேதங்கள் தான் பட்டியல் போடப்பட்டன. காட்சி ஊடகங்களில் கடல் சீற்றம் என்று முதலிலும், தண்ணீர் நகருக்குள் வந்தது எனவும் கூறியவர்கள் சுனாமி பேரலை என்ற பெயரை எழுதிக்காட்டினர். அந்தப் பெயர் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் ஊடகங்களுக்கும் கூட புதிய பெயராக இருந்தது. இந்தோனேஷியாவிலும், ஜப்பானிலும் இப்படி சுனாமி பேரலை திடீரென வருவதும், அது பெரும் சேதங்களை ஏற்படுத்துவதும், பலர் உயிர்களை பறித்துக் கொண்டு செல்வதும், அடிக்கடி நிகழும் நிகழ்ச்சிகள். அதனாலேயே அங்கெல்லாம் அட்டை வீடுகளை, மர வீடுகளை கட்டிக்கொள்வதில் கடலோரத்தில் வாழும் மக்கள் பழக்கப்பட்டிருந்தனர். தென்கிழக்கு ஆசியாவில் சுனாமி பேரலையின் தாக்குதல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் 2004ம் ஆண்டு கடைசியில் வந்த சுனாமி பேரழிவு இலங்கைத் தீவைத் தாக்கியது. அந்தமான் தீவைத் தாக்கியது. தமிழ்நாட்டின் மீது படையெடுத்தது. கேரள கடற்கரையையும் பதம் பார்த்தது. ஆந்திராவின் கடலோரம் வரை அதன் கரங்கள் தீண்டின. தமிழ்நாட்டில் அதிகமான பாதிப்புகளை நாகப்பட்டினம் மாவட்டம் எதிர்கொண்டது. அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்டது கன்னியாகுமரி மாவட்டம். உயிர்ப்பலிகள் இந்த இரண்டு மாவட்டத்திலும் வரிசைக்கிரமமாக அதிகமாக இருந்தது. அதையடுத்து கடலூர் மாவட்டமும் திருவள்ளூர், வடசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், தென் சென்னை ஆகிய மாவட்டங்களும் வரிசைப்பட்டியிலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டன.சுனாமி பேரழிவு நடைபெற்ற நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆனாலும் இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், தனது அமைச்சரவையைக் கூட்டி சுனாமி பேரழிவால் மரணமடைந்த மக்களுக்கும், கடலோரம் ஏற்பட்ட சேதங்களுக்கும் உடனடியான நிவாரணப் பணிகளுக்காக, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டார். அதே போல அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும், உடனடியாக ஹெலிகாப்டரில் சுனாமி பாதிப்பு பகுதிகளுக்கு நேரடியாக வருகை தந்து, பார்வையிட்டு நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தச் சொன்னார். அதேபோல உலக அரங்கில் மேற்கத்திய நாடுகளில் இருக்கின்ற நிதி நிறுவனங்கள் கூட, தங்களது உயர்தொழில் நுட்ப வாய்ப்புகளிலிருந்து, சுனாமி பேரழிவின் பாதிப்புகள் நிகழ்ந்த இடங்களை அடையாளம் கண்டு, தங்கள் தொடர்பிலிருக்கின்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, உடனடியாக கடலோரம் சென்று நிவாரண உதவிகளை செய்யுமாறு பணித்தன. நிதிநிறுவன தலைமைகளே நேரடியாக நிவாரணப்பணி செய்யக்கோரியதால், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இருமடங்கு அக்கறையோடு கடற்கரை ஓரங்களை நோக்கி ஓடிவந்தன. நேற்று வரை கடலோர மக்களது வாழ்நிலைபற்றி நேரடியான அனுபவங்கள் இல்லாத, தொண்டு நிறுவனங்கள் இப்போது கடலோரத்தை நோக்கி விரைந்து வந்தன. தங்கள் கவனத்தை எல்லாம் நிலத்தில் வாழும் தலித் பிரச்சினைக்கும், பெண்கள் பிரச்சினைக்கும், குழந்தைகள் உரிமைகளுக்கும் மட்டுமே, வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, பணிசெய்து வந்த தொண்டு நிறுவனங்கள் கூட, முதன் முறையாக கடலோரம் வந்து, மீனவக் குப்பங்களை எட்டிப்பார்த்தனர். நிவாரணப் பணியாக உணவுப் பொட்டலங்கள், பழைய துணிகள் ஆகியவற்றை மீனவ குப்பங்களுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அடுத்த நேர உணவுக்கே வழியில்லாமல், தங்களது படகுகளையும், வலைகளையும், வீடுகளையும் இழந்து தவிக்கும் மீனவ மக்களுக்கு, உடனடித் தேவையான உணவு இந்த தொண்டு நிறுவனங்களின் சேவை காரணமாக வந்து சேர்ந்தது. அதே சமயம் தங்கள் சொந்தக்கால்களில் நின்று மட்டுமே, வாழ்ந்து வந்த மீனவ மக்களுக்கு பழைய துணிகளை பயன்படுத்த மனது தயாரில்லை. கடலுக்கு சென்று நேரடியாக மீன்கள் பிடித்து, கொண்டு வந்து விற்பனை செய்வதில், மட்டுமே தங்கள் வாழ்க்கையை நடத்திய, பாரம்பரிய மீனவ மக்கள் சில பண்பாட்டு பழக்கங்களை, தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தனர். அதாவது தங்களது வாழ்க்கைக்காக யாரையுமே சார்ந்து நிற்காத ஒரு பண்பு அவர்களது உற்பத்தி உறவின் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. அப்படிப்பட்ட தன்மையே அவர்களை தங்கள் அடிப்படை தேவைக்களுக்காக, பிறரை எதிர்பார்க்கும் தன்மையிலிருந்து விலக்கி வைத்திருந்தது. ஆனால் வயிற்றுப்பசி முதல் சில நாட்களுக்கு நிவாரண உதவி செய்யவரும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்து, மீனவர்களை நிற்க வைத்தது. ஆனாலும் பழம் துணிகள் என்ற விசயத்தில் மீனவ மக்களால் சமரசமாக முடியவில்லை. ஆட்சியாளர்களும், தொண்டு நிறுவனங்களும் கடலோரம் நோக்கி ஓடி வந்த முதல் இரண்டு நாட்களும், இந்த பேரழிவு அதிகாரிகளை குறிப்பாக மீன்வளத்துறை அதிகாரிகளை, கடற்கரையை நோக்கி இழுத்து வர தவறிவிட்டது. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுப்பு என்பதால் அதிகாரிகள் திரும்பிப்பார்க்கவில்லை என்று எண்ணமுடிந்தது. ஆனால் மறுநாள் திங்கட்கிழமையும் கூட, அரசு அதிகாரிகள் மீனவக்குப்பங்கள் நோக்கி படை எடுக்கவில்லை. மீன்வளத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் கூட, மீனவச் சமூகத்திலிருந்து வந்திருக்கவில்லை. பாரம்பரிய மீனவச்சமூகம், தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதிலும், பட்டம் பெற வைப்பதிலும், உயர்கல்வி கொடுப்பதிலும் இன்னமும் முன்னேறாத நிலைமையே நீடிக்கிறது. அதனால் அவர்களுடைய சமூகத்திலிருந்து, அரசு ஊழியர்கள் பணிக்கு ஆட்கள் வருவது அரிதான நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த சூழலில் மீன்வளத்துறையில் எப்படி மீனவச் சமூக பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்? மீனவரல்லாத சமூகத்திலிருந்து அரசு ஊழியர்களாக உருவானவர்கள் தான், மீன்வளத்துறை அலுவலகத்திலும் காணப்பட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் கடலோர மீனவர்களின் தேவைகளையும், வாழ்க்கையையும், அன்றாட பிரச்சினைகளையும், வழமையாக பருவமாற்றங்களில் எழுகின்ற சிக்கல்களையும், எந்த அளவுக்கு உணர்ந்திருப்பார்கள் அல்லது உணர்ந்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. நடந்து முடிந்த சுனாமி பேரழிவின் விளைவுகளை உடனடியாக உணர்ந்து கொள்வதில், இத்தகைய அதிகாரிகளும், ஊழியர்களும் தேவையான சுறுசுறுப்பைக் காட்டவில்லை என்ற செய்தியே மேற்கண்ட உண்மையை பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செய்யப்பட்ட மறுவாழ்வு பணிகளை அறிவதற்கு, காஞ்சி மாவட்ட சூழலை மட்டும் எடுத்து பார்க்கலாம். காஞ்சி மாவட்டத்தில் கரிக்காட்டுக் குப்பம், உய்யாலிக்குப்பம் ஆகிய இடங்களில் அதிகமான வீடுகள் சேதமும், மரணங்களும் நிகழ்ந்தன. இழந்த படகுகளுக்கும், மீன்பிடி வலைகளுக்கும், மாற்றாக தொண்டு நிறுவனங்கள் நூற்றுக்கணக்காண படகுகளையும், வலைகளையும் அளித்தனர். கோடிக்கணக்கான நிதி தொண்டு நிறுவனங்கள் மூலம் உருண்டோடியதால், அதிகமான அளவு படகுகளை செய்து அதிக நிதியை பெறுவதற்கு விரும்பிய நிறுவனங்கள், கண்ணாடி இழைப்படகுகளை பெரும் எண்ணிக்கையில் இறக்கினர். அதில் பல கடலுக்குள் எடுத்துச் செல்வதற்கே பயன்படாமல் கரையில் நிற்கின்றன. இந்த நிலைமை கரிக்காட்டுக்குப்பம் கடலூர், நெம்மேலி, கடப்பாக்கம், கோவளம், கானத்தூர் ஆகிய இடங்களில் இன்றும் பயன்படுத்தமுடியாமல் போடப்பட்டுள்ள படகுகளின் எண்ணிக்கையின் மூலம் தெரியவரும். இப்படியாக மீனவர்களுக்கு வந்தடைந்ததை விட, உதவி செய்ய வந்த அரசு உட்பட்ட நிறுவனங்களுக்கு கிடைத்த தொகை அதிகமா என்ற விவாதம் எழுந்துள்ளது. மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதிலும், காஞ்சி மாவட்டத்திலிருக்கும் 44 குப்பங்களில், 32 குப்பங்களிலிருக்கும் மக்களுக்கு தொண்டு நிறுவனங்களே கட்டிக்கொடுத்துள்ளன. அராசங்கம் மீதமுள்ள ஊர்களுக்குத்தான் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது. அராசங்கத்திடம் நிலுவையிலிருக்கும், சுனாமி நிதி சில ஆயிரம் கோடிகள் வரை வெளிப்படையான கணக்கு இல்லாமல் இன்று வரை இருந்து வருகிறது. பாரம்பரிய மீனவ மக்களுக்கு ஏன் இன்னமும் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான திட்டமும் போய்ச் சேரவில்லை என்பது விவாதிக்கப்படவேண்டும். ஒரு உண்மை இதன் மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது. நிலம்சார் உலகம் என்பது வேறு. கடல்சார் உலகம் என்பது வேறு. நிலம்சார் உலகத்தை சேர்ந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகயியலாளர்கள் ஆகியோருக்கு இயல்பாகவே கடல்சார் உலக மக்களைப்பற்றியும், நிலமைப் பற்றியும் அறிதல் இருப்பதில்லை. நிலம் சார் உலக பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அமர்ந்து கொண்டு, கடல்சார் உலகத்தினர் பற்றிய திட்டங்களை தீட்ட முடியாது. நிலம்சார் உலகத்தின் அதிகாரிகள், கடல்சார் உலகத்தின் நலனுக்காக சிந்திக்க வாய்ப்பில்லை. இத்தகைய சூழலினால் கடல்சார் உலகை சார்ந்த, பாரம்பரிய மீனவர்களான கடல்சார் பழங்குடிமக்கள், அரசாங்க செயல்பாடுகளில் ஓரங்கட்டப்பட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆகவே பழங்குடியினர் பட்டியலில் எப்போது பாரம்பரிய மீனவர்கள் சேர்க்கப்படுகிறார்களோ, அப்போதுதான் அவர்களுக்கே உரிய கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை கிடைக்கமுடியும். ஆகவே உடனடியாக பாரம்பரிய மீனவர்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய அரசு முயலுமா? என்று நாமும் கேட்க வேண்டியுள்ளது.

Saturday, December 26, 2009

சீனத்தலைவர் மாசேதுங், உலகத் தலைவரானது எப்படி?

இன்று இந்திய அரசையும், இந்தியாவின் மையப்பகுதியான மாநிலங்களையும், குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை உலுக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம் உண்டு என்றால், அது மாவோயிஸ்டு இயக்கம் என்பதாக சிறுபிள்ளையும் கூறும். அதே போல அருகே இருக்கும் நேபாள நாட்டில், மன்னராட்சியை தூக்கி எறிந்து, மக்களாட்சியை நிறுவிய இயக்கத்தின் பெயரென்ன என்றால், மாவோயிஸ்டு கட்சி என்பதாக அனைவரும் கூறுவர். இன்று இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நேபாளம் சென்று அங்குள்ள பிரச்சனைகளைத் தீர்த்து ஒரு சுமூகமான தீர்வை எட்டுவதற்காக சென்றிருக்கிறார் என்றால், யாரைச் சந்தித்து சுமூகமான தீர்ப்பை ஏற்படுத்துவார் என்ற கேள்விக்கு, நேபாள மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் பிரச்சந்தாவை சந்தித்து பேச இருக்கிறார் என்பதாகத்தான் செய்திகள் வருகின்றன. அப்படி இந்தியாவையும், நேபாளத்தையும் செல்வாக்கு செலுத்தும் இந்த மாவோயிஸ்டுகள் என்ற பெயர், மாவோ என்ற சீனத்தலைவரின் பெயரிலிருந்து வந்திருக்கிறது. மாசேதுங் என்ற அந்த சீனத்தலைவர் மாவோ என்று அழைக்கப்படுகிறார். இவரது பெயர் ஏன் இந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்த வேண்டும்? அப்படி இவர் சாதித்தது என்ன? இதுபோன்ற கேள்விகள் இன்றைய காலகட்டத்தில், இளைய தலைமுறையினருக்கு எழுவது இயல்பு. இன்று டிசம்பர் 26ம் நாள், மாவோ பிறந்தநாள். 1893ம் ஆண்டு இதே நாளில் சாவோசன் என்ற ஊரில், ஹூனான் மாநிலத்தில், சீனாவில் மாசேதுங் பிறந்தார். தனது ஆரம்பப் பள்ளியிலேயே, பாரம்பரிய கன்புயூசியஸ் கருத்துக்களை கற்றார். அவரது தயார் பௌத்த மதத்தை சேர்ந்தவர். அதன் பிறகு அந்த நாட்டின் குடியரசுப் படையில் போர் வீரனாக பணியாற்றினார். மாநில நூலகத்தில் 6 மாதங்கள் படித்தார். ஹூனான் பகுதியிலிருந்தே பட்டம் பெற்றார். பிறகு தலைநகர் பீகிங் சென்றார். அங்குள்ள நூல் நிலையத்தில், உதவியாளராக பணியாற்றினார். பல்கலைக்கழகத்தில் புரட்சிகர அறிவு ஜீவிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் சீன கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்தவர்கள். 1919ம் ஆண்டு ஹூனான் பகுதிக்கு திரும்பினார். அங்கு அரசியல் பணிகளில் ஈடுபட்டார். தானே ஒரு குழுவை உருவாக்கினார். அதன் மூலம் ஒரு அரசியல் இதழை வெளியிட்டார். 1920ம் ஆண்டு தனது பேராசிரியரான யாங் என்பவரின் மகளான யாங் கைஹியூ என்ற சக மாணவியை திருமணம் செய்தார். 1930ம் ஆண்டு, சீனாவை அப்போது ஆண்டு வந்த கொமின்டாங் என்ற தேசிய படையால், கைஹியூ அவரது மகன் அனையிங்கும் கைது செய்யப்பட்டு கைஹியூ படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு மாவோ, யாங் சிங்கிலிருந்து வந்திருந்த தனது சக பணியாளரான 17 வயது பெண் ஹிசிசன் என்பவரை மணமுடித்தார். 1937ம் ஆண்டு அவர்களது மணம் முறிந்தது. பிறகு அவர் சியாங்சிங் என்ற பண்பாட்டுக் கலைஞரை, மணம் முடித்தார். தனது 27வது வயதில், ஷாங்காய் நகரில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரசின் முதல் அமர்வில் பங்கு கொண்டார். இரண்டே ஆண்டுகளில் கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார். பிறகு கட்சியால் ஹூனான் பிரதேசத்திற்கே அனுப்பப்பட்டார். இப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத்தில் வளர்ந்த மாசேதுங், பின்னாளில் சீனப்புரட்சிக்கே தலைமை தாங்குபவராக வளர்ந்தார்.சீனா ஒரு விவசாய நாடு. அங்கே விவசாயிகள் பெரும்பான்மையாக நிலமற்ற, ஏழை விவசாயிகளாக இருந்து வந்தனர். நிலங்கள் அனைத்தும் போர் பிரபுக்கள் என்று அழைக்கப்படும் பண்ணையார்களின் ஆதிக்கங்களின் கீழ் இருந்து வந்தது. அப்போது உழைத்துக் களைத்த அந்த விவசாயிகளுக்கு மட்டும் தான், உழுதுபட்ட நிலம் சொந்தம் என்ற கொள்கையை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சி போராடி வந்தது. உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற கொள்கையை முதன்மைப்படுத்தி, மாவோவும் அந்த வட்டாரத்தின் விவசாயிகளை அணி திரட்டி வந்தார். அந்த அணி திரட்டலில் ஏழை விவசாயிகளை, ஆயுதம் தாங்கிய படையாக மாவோ உருவாக்கினார். ஹூனான் பிராந்தியத்தில் மாவோ தலைமையிலான அந்தப்படை, தொழிலாளர்கள், விவசாயிகள் புரட்சிகரப்படை என்று அழைக்கப்பட்டது. மாவோவே ஒரு விவசாய குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்ததால், விவசாயிகள் மத்தியிலும், உழவர்கள் மத்தியிலும் நல்லதொரு மதிப்பு அவருக்கு இருந்தது. அதைப்பயன்படுத்தி, அந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு, மாவோ மார்க்சியத்தை அறிமுகப்படுத்தினார். அவர் தலைமை தாங்கிய அந்தப்படை ஆட்சியாளர்களது படையால் தோற்கடிக்கப்பட்டது. கடும் போருக்குப் பிறகு, மக்கள் படை சிதறடிக்கப்பட்டது. ஹூனானை விட்டு, சன்வான் பகுதிக்கு அந்தப் படைகள் நகர்ந்தன. சிதறிச்சென்ற மக்கள் படையை மாவோ மீண்டும் திரட்டி, சிறிய படையணிகளாக உருவாக்கி, ஒரு ராணுவ பிரிவையே தயார் செய்தார். அதன் தலைமையேற்க கட்சி கிளைகளை உருவாக்கினார்.படைக்குழுக்கள் ஒவ்வொன்றுக்கும், ஒரு அரசியல் ஆலோசகரை நியமித்தார். அவருடைய வழிகாட்டலில் படையின் செயல்பாடு இருக்கவேண்டும் என்பதை விதியாக்கினார். பகுதி, பகுதியாக இந்த முறையில் உருவாக்கப்பட்ட மக்கள் படைக்குழுக்கள், ஒட்டுமொத்தமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் ஒழுங்கு படுத்தப்பட்டது.மேற்கண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே, எதிர்காலத்தை மாசேதுங்கின் ராணுவப்படைப்புகள் என்பது உருவாக்கப்பட்டது. அதுவே உலகின் பல பகுதிகளிலும் இருக்கின்ற புரட்சியாளர்களுக்கு, ராணுவ வழிகாட்டும் தத்துவமாக உருவானது. அதே போல விவசாயிகள் மத்தியில், மக்கள் இயக்கங்களை உருவாக்கியதிலும், மாவோ முன்னுதாரணங்களை படைத்திருக்கிறார். தான் முதலில் பணியாற்றிய ஹூனான் பகுதி விவசாயிகளை அணி திரட்டுவதற்காக, ஒரு விவசாயத் திட்டத்தை முன்வைத்து அதை நிறைவேற்றுவதற்காக போராட்டங்களை நடத்தினார். அந்த திட்டத்தில் நாளைய சூழலில் விவசாயிகளுக்கு தேவையான உடனடி கோரிக்கைகளையும், எதிர்காலத்தில் முழுமையான விடுதலையை அடைவதற்கான உழுபவனுக்கே நிலம் என்ற கோரிக்கையையும் இணைத்து, விவசாய பெருங்குடி மக்கள் முன்னால் வைத்தார். இதன் மூலம் அணிதிரண்ட விவசாயிகளை விடுதலை செய்யப்பட்ட நிலங்களில் அமர்த்தினார். விவசாய முன்னோடிகளை தேர்வு செய்து, கொரில்லா குழுக்களை உருவாக்கினார். அத்தகைய கொரில்லா குழுக்கள் மூலம், பண்ணை அதிகாரங்களை தகர்த்தெறிந்து, விரட்டப்பட்ட பண்ணையார்களின் நிலங்களை, ஆயுதம் தாங்கிய விவசாயக் கொரில்லாக்களின் பாதுகாப்புடன், நிலமற்ற விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தார். அத்தகைய விவசாய பொருளாதாரத்தை வழிநடத்த, புரட்சிகர மக்கள் கமிட்டிகளை, கிராமங்களில் உருவாக்கினார். அவர் உருவாக்கிய கொரில்லா படைகள் இணைக்கப்பட்டு, சீரான படையாக ஆயுதம் தாங்கிய மக்கள் ராணுவமாக கிராமப்புறப் பகுதிகளில் நிலை பெற்றது. அப்படிப்பட்ட பகுதிகள் விடுதலைப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட அனுபவங்களின் மூலம், கிராமப்புறங்களை விடுதலை செய்து, நகர்ப்புறங்களை சுற்றிவளைத்து விடுதலை செய்யவேண்டும் என்ற புதிய தத்துவத்தை மாசேதுங் முன்வைத்தார். அதுவே பிற்காலத்தில் மாவோவின் மக்கள் போர்ப்பாதை என்பதாக அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் விவசாய நாடுகளில், மாவோவின் வழியை பின்பற்றுவோர், இத்தகைய மக்கள் போர்ப்பாதையை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில்தான் இந்தியாவிலிருக்கும் மாவோயிஸ்டுகளும், நேபாளத்திலிருக்கும் மாவோயிஸ்டுகளும் வரிசைப்படுத்தப் படுவார்கள்.மக்கள் ஜனநாயக புரட்சி என்பதாக மாவோ, தான் நடத்திய புரட்சியின் கட்டத்தை வர்ணித்தார். அது அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாட்டு விடுதலைக்காகவும், பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்து விவசாயிகளின் விடுதலைக்காகவும் போராடக்கூடிய ஒரு புரட்சியின் கட்டம் என்று அவர் விவரித்ததால், அதன் மூலம் ஏற்படுத்துகின்ற அராசங்கத்தை மக்கள் ஜனநாயக அராசங்கம் என்று அழைத்தார். இது முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சி என்று அழைக்கப்பட்ட, நிலப்புரபுத்துவ எதிர்ப்பு போரையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற தேசவிடுதலை போரையும் இணைத்துப் பார்ப்பதால், இதற்கு புதிய ஜனநாயக புரட்சி என்று பெயரிட்டார். அதுவே இன்று வரை பிரபலமாக இருக்கிறது. மாவோ சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக 1954 முதல் 1975 வரை இருந்தார். அதே போல ராணுவ தலைமையிலும் இருந்தார். மக்கள் சீனக்குடியரசுக்கு முதல் தலைவராக செயல்பட்டார். ஆகவே அவரது பிறந்தநாள் இந்த வரலாற்று படிப்பினைகளை, நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு நாள்.

Friday, December 25, 2009

கீழவெண்மணி படுகொலைகளும், படிப்பினைகளும்!

டிசம்பர் 25ம் நாள். ஏசுகிறிஸ்து இந்த உலகில் பிறந்த நாள் என்பதாக கடைபிடிக்கப்படும் நாள். யூத மன்னர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட யூத மக்களுக்காக, ஏசு நாதர் பாடுபட்டார் என்பதாக படிக்கின்றோம். அடிமைகளை விடுதலை செய்து, நல்வாழ்வை அவர்கள் எய்துவதற்காக பாடுபட்ட காரணத்தினால், ஏசு நாதர் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையை சுமந்து செல்லும் ஏசு நாதரை, இருபுறமும் கூடி நின்ற அடிமை மக்கள், ஆர்ப்பரித்து ஆதரவு தந்தனர். சாதி ஒடுக்கு முறையில் தவிக்கின்ற இந்தியாவிலும், ஒடுக்கப்படும் மக்கள் விடுதலை பெறுவதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றனர். சாதிய ரீதியான ஒடுக்கு முறைகளில், கூடுதலான சுமையை சுமப்பவர்கள், தீண்டத்தகாத மக்களாக ஆதிக்க சாதிகளால் அவமானப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான். அத்தகைய தலித் மக்கள் நாடெங்கிலும் விவசாயக் கூலிகளாக, நிலமற்ற, ஏழை உழவர்களாக தங்களது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிக் கொண்டு வருகின்றனர். அப்படிப்பட்ட உழவர் பெருங்குடி மக்களை, பண்ணை நுகத்தடியால் அடக்கி வைத்திருக்கும் பண்ணையார்கள், சாதீய ஒடுக்கலையும், ஒரு ஒடுக்குமுறை கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தான் சாதி அடக்கு முறையிலிருந்து விடுதலை பெறத் துடிக்கின்ற, கூலி ஏழை தலித் மக்களை, மதம் மாறினால் சுதந்திரம் கிடைக்கும் என்ற வார்த்தைகள் ஈர்த்தன. அப்படி ஈர்க்கப்பட்டு மதம் மாறிய, தலித் மக்களையும் சாதித் தீண்டாமை, தீண்டாமல் விடவில்லை. மதம் மாறினாலும் இந்த நாட்டில் சாதி மாறுவதில்லை என்பதை சாதித்து வருவது நிலப்பிரபுத்துவத்தின் குணமாகயிருக்கிறது. அப்படித்தான் இதே நாளில் அந்த வெண்மணி நிகழ்ச்சி நடந்தது. இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம், நேற்றைய கிழக்கு தஞ்சையாக இருந்தது. அதில் நாகப்பட்டினம் ஒரு வட்டாட்சியாக நிர்வகிக்கப்பட்டது. அதற்கு உட்பட்ட கிராமம் தான், கீழவெண்மணி கிராமம். கீழத்தஞ்சை முழுவதுமே, பெருவாரியான மக்களாக இருக்கும் தலித் மக்கள், கூலி, ஏழை விவசாயிகளாக இருந்து வருகிறார்கள். அவர்கள் மத்தியில், பொதுவுடைமைக் கட்சி ஆண்டு பலவாக, சங்கம் அமைத்து போராடி வருகிறது. ஆரம்பத்தில் அவர்கள் உழுபவனுக்கே நிலம் என்ற முழக்கத்தை முன்வைத்து போராடி வந்தார்கள். அப்போதும் ஆதிக்கசாதி பண்ணையார்கள், தலித் கூலி மக்களை சாணிப்பால் கொண்டும், சவுக்கடி கொண்டும் அடித்து வந்தார்கள். அதை எதிர்த்துத் தான் கம்யூனிஸ்ட் தலைவர் சீனிவாசராவ் தலைமையில், கூலி விவசாயிகளை சங்கங்கள் அமைத்து, அவர்கள் திரட்டி வந்தார்கள். சாணிப்பாலும், சவுக்கடியும், கம்யூனிஸ்ட் கட்சியால் கடுமையான போராட்டங்களின் மூலம் எதிர்க்கப்பட்டது. அப்படி வெற்றிகரமான போராட்டங்களை, பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி நடத்தி வந்த, சீனிவாசராவ் நினைவாக இப்போது அரசாங்கம் மண்டபம் கட்டியுள்ளது. வரலாற்றில் இந்த படிக்கட்டுகள் மறக்கப்பட முடியாது என்பதற்கு இதுவே உதாரணம். அப்படிப்பட்ட வட்டாரத்தில் தான், கீழவெண்மணி கிராமத்தில் இதே நாளில், அந்த சோகச் செய்தி அரங்கேறியது. கூலி உயர்வு போராட்டத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் கம்யூனிஸ்ட் கட்சி, அந்த தலித் கூலி மக்களை திரட்டி போராடி வந்தது. கீழதஞ்சையில், குறிப்பாக நாகப்பட்டினம் வட்டாரத்தில், நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற பெயரில், ஆதிக்கசாதிப் பண்ணையார்கள் உருவாக்கிய அமைப்பிற்கு, கோபால கிருஷ்ணநாயுடு தலைவராக இருந்தார். அவர் தான் அந்த வட்டாரத்தின் கூலிப் போராட்டத்தை ஒடுக்குவதில் பெயர் பெற்றவர். அரைப்படி நெல்லை உயர்த்திக் கேட்டதற்காக, கூலி விவசாயிகள் அங்கே ஒடுக்கப்பட்டார்கள். அறுவடை கூலியாக காசுக்கு பதில், நெல் கொடுப்பது தான் அங்கேயிருந்து வந்த பழக்கம். உச்சக்கட்டத்திற்கு போராட்டம் சென்ற போது, பண்ணையார் கோபால கிருஷ்ணன், காவல் துறையுடன் சேர்ந்து கொண்டு, கீழவெண்மணி கிராமத்து போராடும் மக்களை ஒடுக்குவதற்காக உள்ளே நுழைகிறார். தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அழைக்கப்படும் தலித் மக்கள், அந்த கிராமத்தின் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர். கூலி உயர்வு போராட்டத்தில்

Thursday, December 24, 2009

மழலையர்களை மிரட்டும் நர்சரிப் பள்ளிகள்

இன்று பள்ளி செல்லும் சிறுகுழந்தைகளை, மாணவ, மாணவியரை ஏற்றி செல்லும் வாகனங்கள், ஒவ்வொரு ஊராக கவிழ்ந்ததையும், கவிழ்ந்ததற்கான காரணமாக ஓட்டுனநர்களின் பொறுப்பற்ற தன்மையையும், ஊடகங்கள் தொடர்ந்து காண்கிறோம். கைப்பேசியில் பேசிக்கொண்டு சென்ற ஓட்டுநர்கள், குழந்தைப் பிள்ளைகளை வாகனத்துடன் பள்ளத்தில் விழவைத்தார்கள் என்பதால், காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள். அதே போல உரிமம் இல்லாத ஓட்டுநர்களை, பணிக்கு வைத்ததால் பள்ளி நிர்வாகங்கள் மீதும், கல்வித்துறை நடவடிக்கைகள் தொடர்கின்றன. விதிமுறைகள் படி நடந்து கொள்ளாத பள்ளி நிர்வாகங்களுக்கு, அனுமதி கொடுத்ததற்காக கல்வி இயக்கக அதிகாரிகளும் கேள்விக்குள்ளாகிறார்கள். ஒரு விபத்து நடந்ததை யொட்டி, அல்லது ஒரு விபத்து ஊரில் எல்லோரையும் உசுப்பி விட்டதையொட்டி, ஊடகங்களில் பெரிய அளவில் அம்பலமானதை யொட்டி, அரசாங்கமும், அதிகாரிகளும் துரித நடவடிக்கையாக சிலர் மீது குற்றம் சுமத்தலாம். ஆனால் ஒரு விபத்து இந்த நாட்டில் தன்னை அறிவித்துக் கொள்ளாமலேயே, தொடர்ந்து நடந்த வருகிறது. அந்த விபத்துதான் கல்வியை வியாபாரமாக்கிய ஒரு சமூகத்தில், மழலைப் பிள்கைளுக்கு கல்வி கொடுப்பதற்காக என்ற பெயரில், நர்சரிப் பள்ளிகளை எங்கெணும் தொடங்கியுள்ளார்கள். நர்சரிப் பள்ளிகளை தொடங்கியவர்கள் தனியார்கள் என்றால், அதற்கு அனுமதி கொடுத்தது. பள்ளிக் கல்வி இயக்ககம் தானே என்ற கேள்வி தானாகவே எழும். கடந்த 20 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் புற்றீசல் என வளர்ந்து விட்ட இந்த நர்சரிப் பள்ளிகளின் பண்பாடு, அனைத்துதரப்பு மக்களையும் ஒரேடியாக இழுத்துக் கொண்டு செல்கிறது. அனைத்து நர்சரி பள்ளிகளிலும் ஆங்கிலம்தான் பயிற்று மொழி. இப்படி மழலைப் பிள்ளைகளுக்கு, தொடக்கத்திலிருந்தே ஆங்கிலக்கல்வி கொடுப்பது என்பது ஆரோக்கியமானதா? அதற்காக பிள்ளைகளின் பெற்றோர் செலவழிக்கின்ற பணம், அதிகமாக இல்லையா? ஆரம்பக்கல்வியை இப்படி தனியாருக்கும், ஆங்கில பயிற்று மொழிக்கும் தாரை வார்ப்பது, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்குமா? ஆங்கில மொழி என்பது அறிவாக மாறுமா? அறிவியல் பார்வையை, தாய்மொழி தவிர எந்த மொழியின் மூலமும் கற்றுக் கொடுக்க முடியுமா? ஆங்கிலப் பயிற்று மொழி படைப்பாற்றலை ஊக்குவிக்குமா? இளம் சிறார்களுக்கு இப்படித்தான் சமூகம் வழிகாட்டுமா? இதுபோன்ற கேள்விகள் எல்லாம், எந்த ஒரு சமூகப்பார்வை உள்ளவருக்கும் ஏழவேண்டும். இந்த நேரத்தில் இந்திய நாட்டில், இயங்கிவருகின்ற நர்சரி பள்ளிகள், எப்படி காசு உருவாக்கும் இயந்திரங்களாக இருக்கின்றன என்ற புள்ளி விவரங்களை ஒரு இணையதளம் அம்பலப்படுத்தி உள்ளது. நல்ல பள்ளிகள் என்று பெயரெடுத்த பள்ளிகளின் எண்ணிக்கை, குறைவாக இருக்கின்ற காரணத்தினால், அவற்றிலும் நூற்றுக்கணக்கான இடங்களே இருக்கின்றன என்ற நிலைமையில், ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் அந்த நூற்றுக்கணக்கான இடங்களுக்காக, போட்டிப்போட்டுக் கொண்டு, தனியார் கல்வி நிறுவனங்களை, கல்வியாண்டு தொடங்கும் போது, முட்டி மோதுகிறார்கள்.அந்த இணைய தள புள்ளி விவரம் கூறுகின்ற செய்திகள், ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. இந்தியாவில் உயர்கல்வியில் முன்னேறிய கல்விச்சாலையாக கருதப்படுபவை ஐ.ஐ.டி.கள். அந்த ஐ.ஐ.டி.களில் நிலவுகின்ற கல்விக் கட்டணத்தின் அளவை விட, அதிகமாக நர்சரி பள்ளிகள் வசூலிக்கின்றன என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஐ.ஐ.டி. என்ற ஆராய்ச்சிக்கான கல்வியும் இணைந்த, உயர்க்கல்வி சாலைகள், மேற்கத்திய நாடுகளின் உதவிகளுடன், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டு நடத்தப்படுபவை. உதாரணமாக சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனம், ஜெர்மன் நாட்டு உதவியுடன் நடத்தப்படுகிறது. இதுபோல கான்பூர் ஐ.ஐ.டி., துர்காப்பூர் ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி. போன்ற கல்விச் சாலைகளும் இந்தியாவின் உயர்கல்வியில் முக்கிய இடம் பிடித்தவை. ஆராய்ச்சி படிப்புக்கான பட்டங்கள் இந்த கல்விச்சாலைகளில், குறிப்பாக அறிவியல் பாடங்களுக்கு பெயர் பெற்றவை. இவற்றிலிருக்கும் சோதனைச் சாலைகளும், உயர்ந்த தன்மைகளைக் கொண்டது. இந்த ஐ.ஐ.டி.க்கள், தனியான பெரிய வளாகங்களுக்குள் கட்டப்படுகின்றன. அவற்றிலிருக்கும் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உயர்ந்த தரத்தைக் கொண்டவை. இப்படிப்பட்ட ஐ.ஐ.டி.களில் கல்விக்கட்டணமாக ஆண்டிற்கு ரூ.50,000 வசூலிக்கிறார்கள். அது தவிர தங்கும் விடுதி, முன்னாள் மாணவர் சங்கம், நுழைவுக்கட்டணம் ஆகியவற்றை சேர்த்து, ஆண்டிற்கு ரூ.20,000 வசூலிக்கிறார்கள். அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் இருக்கின்ற பிரபல நர்சரி பள்ளிக்கூடத்தில் ஆண்டிற்கு ரூ.75,000 அல்லது அதற்கும் மேல் வசூலிக்கிறார்கள். அதிலும் குழந்தைகளும் பெற்றோருக்கு கடுமையான நேர்காணல்கள் நடத்தப்பட்டு, பல சோதனைகளுக்கு பிறகுதான் இத்தகைய நர்சரி பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். டெல்லியையொட்டியுள்ள கர்காவோன் பகுதியில் ஒரு பள்ளியில், 2009 10 கல்வி ஆண்டுக்கான நுழைவுக்கட்டணமாக ரூ.75,000. அது தவிர அதே பள்ளியில் மற்ற கட்டணங்கள் ஆண்டிற்கு ரூ.1,70,000 வசூலிக்கிறார்கள். இது தவிர ஆண்டு முழுவதுக்குமான போக்குவரத்து கட்டணமாக ரூ.38,000 முதல் ரூ.44,000 வரை வசூலிக்கிறார்கள். இது தவிர ஐ.டி.என்றழைக்கப் படுகின்ற, உயர்தொழில் நுட்பத்திற்காக, ஆண்டிற்கு ரூ.6,000 முதல் ரூ.9,500 வரை வசூலிக்கிறார்கள். இது ஐ.ஐ.டி. வசூல்களை விட பல மடங்கு அதிகம் என்பது கண்கூடு.டெல்லிக்கு அருகே உள்ள நொய்டா பள்ளி ஒன்றில் நுழைவு கட்டணமாக ரூ.61,000மும், காலாண்டு கட்டணமாக ரூ.26,000மும் வசூல் செய்கிறார்கள். அதே நகரில் இன்னொரு பள்ளியில் நுழைவுக்கட்டணமாக ரூ.45,000மும், காலாண்டுக்கு கூடுதல் கட்டணமாக ரூ.11,000மும் வசூல் செய்கிறார்கள். இதுபற்றி டெல்லி மாநிலத்தின் கல்வி அமைச்சர், அரவிந்தர் சிங் லவ்லியிடம் கேட்டதற்கு, இப்படிப்பட்ட விதிமீறல்கள், பள்ளிகளில் நடப்பது தெரியும் என்றும், பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்தாலொழிய நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறியுள்ளார். பெற்றோர்கள் ரசீதுகளை கொடுத்தார்கள் என்றால், அதன்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும், எந்த பெற்றோரும் அதற்கு முன்வருதில்லை என்றும் அந்த அமைச்சர் கூறியுள்ளார். இதே புராணத்தை எந்த மாநிலத்திலும், அமைச்சர்கள் கூறலாம். ஆனால் அப்படிப்பட்ட கல்விச்சாலைகளுக்கு, அனுமதி கொடுத்த கல்வி இயக்ககம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர்கள் எப்போதுமே விசாரணை வளையத்திற்கு உள்ளே வரமாட்டேன் என்கிறார்கள். அதுபற்றி கூறும்போது, டெல்லியிலிருக்கின்ற கல்வி இயக்ககமும், பள்ளிக்கல்விக்கான உயர்அதிகாரிகள், பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டண முறைகள் பற்றிய வழிகாட்டல்கள் மீது எந்த கருத்தும் கூற மறுக்கிறார்கள் என்பதாக அந்த இணையதளம் குற்றம்சாட்டுகிறது. நொய்டா நகரில் உள்ள ஒரு பள்ளியில் நுழைவுகட்டணமாக ரூ.45,700 வாங்கிக் கொண்டு, போக்குவரத்து உட்பட காலாண்டு கட்டணமாக, ரூ.11,000 கூடுதலாகப் பெற்றுக் கொண்டு, ரசீது மட்டும் ரூ.700க்கு கொடுக்கிறார்கள் என்ற ஒரு பெற்றோரின் குமுறலும் அதில் வெளியாகியுள்ளது. பெருவாரியான பள்ளிகள் இதே கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன என்றும், ஒரு நர்சரி இடத்திற்கு அவர்கள் வாங்கக் கூடிய முழு கட்டணத்திற்கும், என்றைக்கும் ரசீது கொடுப்பதில்லை என்பதாக இன்னொரு பெற்றோர் முறையிடுகின்றார். பள்ளிநிர்வாத்தின் கைகளில் பெற்றோர்கள் தொடர்ந்து வதைக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கல்வி இயக்ககத்தின் வழிகாட்டல்களை பின்பற்றாத பல பள்ளிகள் உள்ளன. அவை அநேகமாக, அங்கீகரிக்கப்படாத பள்ளிகளாக இருக்கின்றன. டெல்லி மாநகரில் ஏறத்தாழ 1000 அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் இருக்கின்றன என்றும், அவை கல்வி இயக்கத்தின் வழிகாட்டல்களை பின்பற்றுவதில்லை என்றும் தெளிவாக தெரிகிறது. 1973ம் ஆண்டின் டெல்லி கல்விச்சட்டத்தின் கீழ் அவை கொண்டு வரப்படமுடியாததால், அவற்றின் மீது கல்வி இயக்ககத்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்ற நிலைமை இருக்கிறது. நொய்டாவிலிருக்கும் ஒரு பிரபல பள்ளியின் நிர்வாகம் இதுபற்றி கேட்கப்பட்ட நிலையில், உங்களுக்கு நல்ல கல்வி வேண்டுமென்றால், நீங்கள் அதிகமாக கட்டணம் செலுத்தவேண்டும் என்றும், உங்கள் குழந்தைக்கு பள்ளிக்கூடம் செலவழிக்கின்ற நிதியை ஒப்பிடும் போது, நீங்கள் கொடுக்கின்ற பணம் அதிகமானதல்ல என்றும் அவர்கள் நியாயப்படுத்தினார்கள். தங்கள் பள்ளிகள் 8 மணி நேரம் நடத்தப்படுவதாகவும், சிறந்த கலைவடிவிலான உள்கட்டுமான வசதிகள் இருப்பதாகவும், அதனால் தாங்கள் பெறுகின்ற கட்டணம் நியாயமானதே என்றும் இந்த கல்வி வியாபாரிகள் கூறுகிறார்கள். மேற்கண்ட நிலைமை டெல்லியில் மட்டும்தானா? சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும், இப்போது கிராமங்களில் கூட இத்தகைய மழலையர்களுக்கு உருவாக்கப்பட்டிருக்கும், ஆங்கில வழி நர்சரி பள்ளிகள் இதே போல நடந்து கொள்ளவில்லையா? புற்றீசல் என வளர்ந்து விட்ட இந்த ஆங்கில நர்சரிப் பள்ளிகளுக்கு யார் பொறுப்பு? தாய் மொழியில் பயிற்று மொழி இல்லாமல், சிறு குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் கற்றுக்கொடுப்பது, அவர்களது சிந்தனையை தூண்டி விடுமா? வளர்க்க உதவுமா? சமச்சீர் கல்வி பற்றி பேசிவரும் நாம், முதலில் ஆரம்பக்கல்வியை ஒழுங்கு படுத்துவதற்கு திட்டமிடலாமா? இந்த கேள்விகள் ஆட்சியாளர்களுக்கு எழ வேண்டும் என்பதே நமது அவா.

Wednesday, December 23, 2009

திருவாதிரைக்கு யாழ்பாண தமிழருக்கு கப்பல் விடுங்கள்

ஈழத்தமிழர்கள் மத்தியில் சைவ சமயத்தின் நம்பிக்கை கொண்டவர்கள், கத்தோலிக்க நம்பிக்கை கொண்டவர்கள் என மக்கள் இருக்கிறார்கள். அதில் குறிப்பாக யாழ்பாண வளைகுடாவில் வாழ்கின்ற மக்கள், சைவ சமயத்தின் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற அல்லது வாழ்ந்து வந்த பெருவாரியான தமிழ்மக்கள், சைவ சமயம் சார்ந்தவர்களே. இந்து மதத்தில், சைவம், வைணவம் என்ற இரண்டு பெரும் பிரிவுகள் இருந்தாலும் கூட, தமிழர்கள் மத்தியில் குறிப்பாக சைவ சமயத்தின் செல்வாக்கு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. சிவன் வழிபாட்டை சார்ந்திருக்கின்ற தமிழ்மக்கள், சிவாச்சாரியார்கள் என்ற முன்னோடிகளை மரியாதைக்கூறியவர்களாக பார்த்து வருபவர்கள். முருகன் வழிபாட்டை வழக்கமாக கொண்டவர்கள், அதில் மிகப்பெரும் பான்மையினராக மூழ்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே எடுத்துக் கொண்டாலும், முருக கடவுள் வழிபாடு என்பது ஒரு முதன்மையான வழிபாடாக இருக்கிறது. முருகக்கடவுளை, தமிழ் கடவுள் என்று அழைக்கும் அளவுக்கு, ஆன்மீகம் இங்கே ஆழவிதை போட்டுள்ளது. மௌரீசியஸ் சென்று வந்த பிறகு, அங்குள்ள தமிழர்கள் பற்றி 25 ஆண்டுகளுக்கு முன்னால், மதுரையிலே உரையாற்றும் போது, ஆர்.எம்.வீரப்பன் ஒரு செய்தியைக் கூறினார். அதில் தயவு செய்து பகுத்தறிவு பார்வை கொண்டு, தமிழ் இனத்தை, தமிழர்களை பிளவுபடுத்தி விடாதீர்கள் என்று கூறினர். அதற்கு அவர் ஆதாரமாக எடுத்துக் கொண்டதுதான் மௌரீசியஸ் நாடு. அங்கே இருக்கின்ற மக்கள் தொகை அனைவரும் தமிழர்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் பேசத்தெரியாது. தமிழ் எழுதத்தெரியாது. ஆகவே இங்கிருந்து தமிழாசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக அனுப்பி வைக்க வேண்டும் என்பது அவரது அவாவாக இருந்தது. ஆனால் இங்கே இருக்கும் தமிழர்களையும், மௌரீசியஸ் நாட்டின் வாழும் தமிழர்களையும் இணைப்பது ஒன்றே ஒன்றுதான் என்று அவர் கூறினார். அது கடவுள் வழிபாடுதான் என்று விளக்கம் அளித்தார். அங்கேயும் முருக கடவுளைத்தான் வழிபடுகிறார்கள் என்ற செய்தியைக் கூறினார். அதன் மூலம் அவர்களும் தமிழர்கள்தான் என்பதை அறுதியிட்டார். இங்குள்ள தமிழர்களுக்கும், மௌரீசியஸ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையிலே உள்ள இணைப்பே முருகக்கடவுள்தான் என்று விளக்கினார். மேற்கண்ட ஆர்.எம்.வீரப்பனின் விளக்கம் உண்மையிலேயே சிந்திக்க கூடியதாக இருக்கிறது. ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தையும், இணைப்பையும், ஒற்றுமையையும் நிலை நாட்டுவதற்கு, அல்லது வலுப்படுத்துவதற்கு, பல்வேறு அடையாளக் குறியீடுகள் அவசியமாகிறது. அப்படிப்பட்ட அடையாளக் குறியீடாக, ஆன்மீக சின்னங்கள் ஆண்டுபலவாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. அதுதான் இந்த இடத்தில், தமிழர்கள் மத்தியில் முருகக்கடவுள் என்ற அவதாரமாக காட்சியளிக்கிறது. சைவ சித்தாந்தமும், அதன் இலக்கியங்களும் பழம்பெருமை வாய்ந்தவை. அவை ஆழமாக தமிழர் பெருமையை, தமிழர் பண்பாட்டை பதியவைக்கின்றன. சைவ சித்தாந்த நூல்கள் இன்று வரை, தமிழ் இலக்கியத்தின் வரலாற்று சான்றுகளாக நிற்கின்றன. யாழ்பாணத்தில் மட்டுமல்லாது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில், முருகன் கோவில்கள் பிரபலமானவை. அதே போல புலம் பெயர் தமிழர்கள் கூட்டம், கூட்டமாக வாழ்ந்து வருகின்ற, ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும், கோயில்களை தாங்கள் வாழும் இடங்களில் நிறுவுவதும், அவற்றில் தமிழிலேயே பூசைகள் செய்வதும், சைவ சமய பரப்புரைகளை கவனமாக, முறையாக தொடர்ந்து செய்து வருவதும் நாம் அறிந்த செய்தியே. அந்த அளவுக்கு சைவமும்,தமிழும் இரண்டறக் கலந்து நிற்கின்ற ஒரு நிலையை, தமிழ் தேசியத்தின் விடுதலைப்போராட்ட காலமான இன்று, நாம் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. களத்தில் தமிழர் விடுதலைக்கான கருவி ஏந்திய போராட்டத்தை நடத்திய போராளிகள் கூட, தங்களது போர்க்கள வெற்றியை கொண்டாடும் முகத்தோடு, அவ்வப்போது அங்குள்ள முருகன் கோவில்களில், புலால் உண்டு மகிழ்ந்தார்கள் என்பதான செய்திகள் வந்ததுண்டு. அன்று முதல், இன்று வரை இப்போதும் சைவ சமய சிந்தனைகளில் ஊறிப்போன குடும்பங்களாக, தமிழ் குடும்பங்கள் இருந்து வருகின்றன. தங்களது இன அடையாளங்களை, இழப்பதற்கு தயாராய் இல்லாத ஒரு இனம், தங்களது சமயச் சார்பு அடையாளங்களை இழப்பதற்கும் தயாராக இருக்காது. பகுத்தறிவு பார்வையும், பெரியார் சிந்தனையும் கொண்ட தமிழ் மக்களே கூட, தமிழ் தேசிய இனத்தின், சைவச் சமய ஈடுபாட்டையும், பண்பாட்டு பழக்கங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட பண்பாட்டு உரிமைகளை, அவர்கள் இழப்பதையோ, அவர்களது சமயச்சார்பு செயல்பாடுகள் மறுக்கப்படுவதையோ, சுதந்திர மான ஆன்மீக செயல்பாடுகள் செய்வதற் கான உரிமை பதிக்கப்படுவதையோ, மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதை மனித உரிமை மீறல் என்பதாகவே அழைக்கின்றனர். மதத்தின் உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும் என்பதுதான் அகிலம் தழுவிய மனித உரிமை பிரகடனம் என்று அழைக்கப்படும், ஐக்கிய நாட்டு சபையின் பிரகடனம் கூறுகிறது. சைவ சமயத்தில் ஊறிப்போன தமிழர்கள், ஒவ்வொரு நாளும் 5 நேரமும் தேவாரம் பாடுவார்கள் என்ற செய்தி, யாழ்பாண தமிழர்கள் பற்றி அநேகமாக தமிழகத்து மக்கள் அறிந்திராத செய்தி. அதுமட்டுமின்றி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, அவ்வப்போதும் சமீபத்தில் தொடர்ச்சியாகவும், யாழ்பாணத்தில், திரிகோண மலையில், வவுனியாவில், கிளிநொச்சியில், முல்லைத்தீவில், மன்னாரில், மட்டக்களப்பில், ஆக்கிரமிப்பாளர்களாக அமர்ந்திருக்கும் இலங்கை ராணுவம், முழுமையாக சிங்களவர்களைக் கொண்டதாக இருக்கிறது. அவர்கள் அனைவரையும் புத்தமத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களது வழிபாட்டுக்காக, ஒவ்வொரு ராணுவ முகாம்களுக்கு பின்னாலும், ஒரு புத்த பெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ளது. யாழ்பாணம் போன்ற பகுதிகளில், இயற்கையாகவே எல்லா இடங்களிலும், அரசமரம் இருக்கிறது. அப்படிப்பட்ட அரசமரங்களின் அடியில், இத்தகைய புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் புத்தர்தான், புத்தமதத்தின் அடையாளக்குறியீடு. அப்படிப்பட்ட பண்பாட்டு குறியீட்டை, பயன்படுத்தி சிங்கள அரசாங்கம் தனது ராணுவத்தினரது மத நம்பிக்கை உணர்வுகளுக்கு உரம் போட்டு விடுகிறார்கள். ராணுவ முகாம்களில் தினசரி அதிகாலை, புத்தபெருமானை எழுப்புகின்ற பாடல்கள் என்ற சுப்ரபாதங்கள் இசைக்கப்படுகின்றன. அருகே இருக்கும் தமிழ்மக்கள் குடியிருப்புகளில், வாழ்ந்து வரும் தமிழ் பெண்களுக்கு, இது ஒரு எரிச்சலூட்டும் செயலாகவும், பண்பாட்டு ஆக்கரமிப்பாகவும் படுகிறது. சைவ சமய நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள், கந்தசஷ்டி கவசம் போன்ற பாடல்களை, தொடர்ந்து இசைத்து அதிலேயே லயித்து போய் பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு சிங்களர்கள் கொடுக்கின்ற புத்திச பரப்புரை பெரும் பண்பாட்டு ஆக்கிரமிப்பாக தோன்றுகிறது. இப்படிப்பட்ட பண்பாட்டு சிக்கலிருந்து, நெருக்கடியிலிருந்து, மூச்சு விடுவதற்கான நேரத்தையாவது கொடுப்பதுதான் மனிதப் பண்பு.அப்படிப்பட்ட வாய்ப்பு ஒன்று, இப்போது இந்திய அரசுக்கு கிடைத்துள்ளது. அதாவது பாரம்பரியமாக தங்களது சைவச் சமய வேர்களை, தமிழ்நாட்டில் தேடிக்கொண்டிருக்கும், யாழ்பாண தமிழர்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பு அது. அதாவது இந்த மாத இறுதியில் திருவாதிரை திருநாள் வர இருக்கிறது. தமிழ்நாட்டில் சிதம்பரம் கோயிலில், திருவாதிரைத் திருநாள் 11 நாட்கள் சிறப்பு வழிபாட்டுடன் நடக்க இருக்கிறது. அதை ஆருத்ர தரிசனம் என்பதாக அழைக்கிறார்கள். அந்த சைவ வழிபாட்டுக்கு, யாழ்பாணத்திலிருக்கின்ற, மற்றும் ஈழத்திலிருக்கின்ற சைவச் சமயச் சார்பு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வந்து, கலந்து கொண்டு, உவகை கொள்வது வழக்கம். பல பத்தாயிரம் மக்கள், ஈழத்திலிருந்து சிதம்பரத்திற்கு வருவார்கள். அவர்கள் தமிழகம் வந்து, சிதம்பரம் கோயிலில் திருவிழாவில் கலந்து கொள்ள உதவிகரமாக, இந்திய அரசு தொடர் கப்பல் போக்குவரத்தை செய்து வந்தது. 30 ஆண்டுகளாக நடந்து வந்த ஈழப்போர் காலத்தில், அப்படிப்பட்ட பயணங்கள் நிறுத்தப்பட்டன. இப்போது அரசு அறிவிப்புப்படி போர் முடிந்து விட்டது. தேர்தல் வரயிருக்கிறது. தமிழ் மக்களின் வாக்குகள் தங்களுக்கு தேவையென, அரசியல்வாதிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே இன்றைய சூழலில் ஈழத்தமிழ் மக்கள், ஆருத்ரா தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கில், சிதம்பரம் வருவதற்கு ஏதுவாக கப்பல் போக்குவரத்தை இந்திய அரசு செய்து கொடுக்குமா? தமிழக அரசு நிர்பந்திக்குமா? தமிழரான உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஈழத்தமிழர்கள் சிதம்பரம் வருவதற்கு வழிவகை செய்வாரா? இந்த கேள்விகள் நம்மைத் துளைக்கின்றன.