Friday, December 18, 2009

இலங்கை அதிபர் தேர்தலும், தமிழர் வாக்குகளும்

இலங்கைத் தீவில் ஒரு காலத்தில் நாடாளுமன்ற ஆட்சிமுறை இருந்து வந்தது. நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும், தலைமையமைச்சரும், அவரால் நியமிக்கப்படும் அமைச்சர்களும் நாட்டை ஆண்டுவந்தனர். அத்தகைய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்காக, உறுப்பினர்களை விகிதாச்சார முறை மூலம் பொதுமக்கள் தேர்வு செய்து வந்தனர். விகிதாச்சார முறை என்பது ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை வாக்குகள் என்பதாக வாக்களிப்பதும், அதில் கட்சித்தலைமையால் நியமிக்கப்படும் வேட்பாளர்கள் வரிசைப்படி தேர்வு செய்யப்படுவதும் நடைமுறையாகும். இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு, இங்கே நடந்துவரும் தேர்தல்முறை வித்தியாசமாகயிருக்கிறது. இந்தியாவில் ஒரு தொகுதியில் இருக்கின்ற 100% வாக்களர்களில், 60% வாக்காளர்கள் பொதுவாக, உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்களிக்கிறார்கள். 3அல்லது 4 கட்சிகள் அதே தொகுதியில் போட்டிபோடும் போது, பதிவுசெய்யப்பட்ட வாக்குகளில், 20% அளவு வாக்குகள் பெற்ற ஒரு வேட்பாளர், அந்தத் தொகுதியிலேயே அதிகமான வாக்குப்பெற்றவராக ஆகமுடியும். அப்போது அவர்தான் வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். அதாவது 20% வாக்குகளைப் பெற்ற ஒரு வேட்பாளர், 80% வாக்காளர்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்கப்படாத ஒரு வேட்பாளர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கின்ற ஒரு தேர்தல் முறை நமது நாட்டில் இருந்து வருகிறது. ஆனால் விகிதாச்சார தேர்தல் முறை என்பது குறைந்தளவு வாக்குகளை பெற்றிருக்கின்ற ஒரு சமூகமோ, அல்லது ஒரு அரசியல்கட்சியோ கூட, தனது பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அனுப்புவதற்கு வாய்ப்புக் கொடுக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தேர்தல் முறை இலங்கைத் தீவில், நாடாளுமன்ற பாதையில் இருந்து வருகிறது. இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் நாடாளுமன்ற முறையில், குடியரசுத் தலைவர் என்ற ஒரு பதவி, நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும் தேர்வு செய்யப்படுகிறது. அப்படி தேர்வு செய்யப்படுகின்ற குடியரசுத் தலைவர், அரசியல் சட்டத்தின்படி தீர்மானகரமான முடிவெடுக்கும் இடத்தில் இருந்தாலும் கூட, நாடாளுமன்றத்தின் தலைமையிலிருக்கும் மத்திய அமைச்சரவையில் எடுக்கின்ற முடிவுகளையொட்டி தனது ஒப்புதலை கொடுப்பது என்ற ஒரு அதிகாரத்தைத் தான் அவர் கொண்டிருக்கிறார். அதையே நமது அரசியல் வாதிகளின் வார்த்தைகளில் சொல்லப்போனால், குடியரசுத் தலைவர் பொறுப்பை, ரப்பர் ஸ்டாம்பு பொறுப்பு என்ற அழைக்கிறார்கள். தலைமை அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் மட்டுமே இந்தியாவில் அதிகமான அதிகாரம் இருக்கிறது. அதேசமயம் அதிபர் ஆட்சிமுறை என்று கூறக்கூடிய, அமெரிக்கா போன்ற நாடுகளில் செனட்சபை என்றபெயரிலும், காங்கிரஸ் என்ற பெயரிலும், மேல்சபையும், கீழ்சபையும் இயங்கி வருகின்றன. அங்கே அதிபர் என்று அழைக்கப்படும் குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை என்று கூறுவதால், அவருக்கு அதிகமான அதிகாரம் என்பதாக ஆகிறது. இந்தியாவில் கூட, அவசரநிலையை இந்திராகாந்தி கொண்டுவந்த நேரத்தில், அனைத்து அதிகாரங்களையும் ஒருவரே கையில் வைத்திருக்கவேண்டிய தேவையை, ஆட்சியில் இருந்தவர்கள் உணர்ந்தபோது, குடியரசுத் தலைவர் ஆட்சிமுறையை கொண்டுவரலாமா என்ற விவாதம் பெருமளவு நடத்தப்பட்டது. ஆனாலும் 100 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், பரந்த அளவு நிரப்பரப்பில், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள நாடாளுமன்ற ஆட்சிமுறை தான் ஜனநாயக ரீதியாக செயல்பட உதவிகரமாக இருக்கும் என்ற ஆரோக்கியமான விவாதம் எழுந்த காரணத்தினால், குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை கொண்டுவரப்படாமல் காப்பாற்றப்பட்டது. ஆனால் இலங்கைத் தீவின் நிலைமையை வேறுபோலாகிவிட்டது. 1970ன் காலந்தொட்டு, இனவாத அணுகுமுறையை ஆளுகின்ற சிங்கள ஆட்சியாளர்கள் கடைபிடித்து வந்ததனால், பொருளாதார வளர்ச்சி சீராக அங்கே இல்லாமலிருந்தது. 1980ன் தொடக்கத்தில் நேரடியான ரத்தகளரிகளாக மாறிவிட்ட இனவாத மோதல்கள், ஆள்வோரின் ஆசிபெற்று நடத்தப்பட்டதால், அங்குள்ள பொருளாதாரம் மேலும் சீரழிந்தது. உடைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட பெருமுதலாளிகளின் நிறுவனங்கள் தமிழர்களுக்கு சொந்தமானது என்ற காரணத்தினால், சிங்கள காடையரின் கோபத்திற்குள்ளானது. அதன் விளைவாக மூலதனமிட்டு தொழில் செய்தவர்களும் கூட, அந்த நாட்டை விட்டு இடம்பெயர்ந்தனர். இதுவே அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இடியாக அமைந்தது. தமிழர்கள் மீதான தாக்குதல்கள், அவர்கள் மத்தியில் போராளி குழுக்களை உருவாக்கின. அவற்றைச் சமாளிப்பதற்காக, சிங்களஅரசு ராணுவத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுவே அரசுக்கு மேலும் நிதிச்சுமையை அதிகரித்தது. பொருளாதார சிக்கல்களில் சிக்கிவிட்ட சிங்கள அரசு, விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் அளிக்கமுடியவில்லை. அப்படிப்பட்ட சூழல், ஜனத விமுக்தி பெரமுனா என்ற மக்கள் விடுதலை முன்னணி எனும் சிங்கள இடதுசாரி கட்சியை மேலும் வலுவாக்கியது. அவர்கள் ஏற்கனவே 2முறை ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியை, அரசுக்கு எதிராக செய்தவர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க, ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சிமுறையை மாற்றியமைக்க எண்ணினார்கள். அப்படிப்பட்ட எண்ணத்தின் தொடர்ச்சிதான், அதிபர் ஆட்சிமுறையை கொண்டுவருவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து, கடைசியாக சந்திரிகா காலத்தில் கொண்டுவந்தார்கள். அதன்மூலம் அதிபர் அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் வைத்துக்கொள்பவராக மாறிவிட்டார். இதுவே அதிகார குவிதலை ஒரே இடத்தில் கொண்டுபோய் கொட்டிவிட்டது. அதன்மூலம் மாறுபட்ட கருத்துள்ளவர்கள், அமைச்சரவையில் தொடர்ந்து இருக்கமுடியவில்லை. மங்கள சமரவீரா என்ற அமைச்சர், மகிந்த ராஜபக்சேயிடம் மாறுபட்ட கருத்துக் கொண்டு, வெளியேறி விமர்சனங்களை அள்ளி வீசிக்கொண்டு, அரசியல் நடத்திவருவது ஒரு உதாரணம். 3படைகளும் அதிபரின் அதாவது அரசத் தலைவரின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுவது என்பது அதனுடைய அடுத்தக் கட்ட வளர்ச்சி. நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில், மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சி கூட்டணி சார்பாகவும், முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, பிரபல எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனத விமுக்தி பெரமுனா ஆகியவற்றுடன் சேர்ந்துள்ள 14 கட்சிகளின் கூட்டணி முன்னிறுத்தும் பொது வேட்பாளராகவும், மனுச் செய்திருக்கிறார்கள். இதுதவிர நீண்ட காலமாக அரசியலிலிருக்கும் லங்கா சமசமாஜ கட்சி என்ற பழம்பெரும் இடதுசாரி கட்சியிடமிருந்து பிரிந்த நவசமசமாஜ கட்சியின் தலைவர் டாக்டர் விக்ரம பாகு கருணாரத்னேயும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். மகிந்தாவிற்கு எதிராக நிற்கின்ற பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுத்துள்ள கட்சிகளின் அறிவுறுத்தல்படி, அந்த பொதுவேட்பாளர் பொன்சேகா தான் வெற்றி பெற்றால் உடனடியாக அதிபர் ஆட்சிமுறையை கலைத்துவிட்டு, நாடாளுமன்ற ஆட்சிமுறையை கொண்டுவருவேன் என உறுதி கூறியுள்ளார். அவரை ஆதரிக்கின்ற ஐதேகவும், ஜே.வி.பி.யும், மற்ற 14 கட்சிகளும் இதையே தங்களது தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்துள்ளார்கள்.

பொதுவாக வன்னிப்போரை நடத்தி வெற்றி பெற்றதில், மகிந்தாவிற்கு ஒரு மாபெரும் வரவேற்பு சிங்கள பெரும்பான்மையிடம் இருக்கிறது. அந்த வரவேற்பை, வாக்குகளாக மாற்றுவதற்கு தான் உடனடியான தேர்தலை அதிபர் பதவிக்கு மகிந்தா ஏற்பாடு செய்துள்ளார் என்பது நாடறிந்த செய்தி. அதேபோல வன்னிப்போர் வெற்றியை கணக்கில் கொண்டுதான் தென்னிலங்கையில் பொன்சேகாவும் வாக்குப் பெற போகிறார். அதேசமயம் தமிழர் வாக்குகளுக்காக, பொன்சேகா சில புதிய முயற்சிகளை எடுத்து வருகிறார். அதிபர் தேர்தலில் 50%க்கு மேல் எடுப்பவர் தான் அதிபராக முடியும். இதை 2பெரிய வேட்பாளர்களும் எட்டாமல் இருப்பது, தமிழர் கையில் தான் இருக்கிறது. 2வது சுற்றில்தான் அதிபருக்குத் தேவையான 50% வாக்குகளை பெறமுடியும் என்ற சூழலை தமிழர்கள் நினைத்தால் ஏற்படுத்த முடியும்.

Saturday, November 7, 2009

நவம்பர் புரட்சி நினைவிலிருக்குமா?

நவம்பர் புரட்சி நினைவிலிருக்குமா?


ரஷ்ய புரட்சி என்று அழைக்கப்பட்ட 1917ம் ஆண்டு நடந்த புரட்சி, நவம்பர் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. அது ஜார் மன்னருடைய ஆட்சியில் தூக்கி எறிந்து, சோவியத் யூனியன் என்ற புதியதொரு நாட்டை உருவாக்க உதவியது. நவம்பர் மாதத்தின் தொடக்கத்தை, ரஷ்ய புரட்சியை நினைவு கொள்வதற்காக உலகமெங்கிலும் கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி, ஜனநாயகத்தை விரும்புவோரும், மன்னார் ஆட்சியை எதிர்ப்போரும், கொண்டாடுவது வழக்கம். போல்ஷ்க் கட்சி என்ற பெயரில், அப்போது லெனின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கப்பட்டது. சோவியத் யூனியனின் அந்த வெற்றி, உலகமெங்கிலும் பல்வேறு நாடுகளில் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் தேவையை உணர்த்தியது.

அதன் விளைவாக உலகமெங்கிலும், 1917க்கு பிற்பாடு பல நாடுகளில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றின. உலகில் பெரும்பாலான நாடுகளில், ஆட்சி அதிகாரத்தில் பெரும் பண்ணையார்களோ, அண்ணாவின் வார்த்தையில் நிலம் ஆளும் முதலாளிகளோ, நிலங்களை குவித்து வைத்துக் கொண்டு இருக்கும் நிலத்திமிலங்களின் நலன்களை பாதுகாப்பவர்களோ இருந்து வந்தார்கள். அவர்கள் உள்நாட்டு முதலாளிகளைக் கூட, வளரவிடுவதில்லை. இதை மார்க்சிய வாதிகள், நிலப்பிரபுத்துவ ஆட்சி முறை என்பதாக வர்ணித்தார்கள். நிலம் சார்ந்த பொருளாதாரத்தை மாற்றியமைத்து, தொழிற்சாலைகள் சார்ந்த பொருளாதாரத்தை கொண்டு வரக்கூடிய சமுதாய அமைப்பை, முதலாளித்துவ சமுதாய அமைப்பு என்று அழைக்கிறார்கள்.

அப்படி நிலம் சார்ந்த பொருளாதாரமான, நிலப்புரபுத்துவ சமுதாய அமைப்பை, மாற்றியமைத்து முதலாளித்துவ சமுதாய அமைப்பை ஏற்படுத்துவதற்கு உள்ள முயற்சி என்பது வரலாற்றில் ஒவ்வொரு நாட்டிலும் நடந்தேறியிருக்கிறது. அது வெற்றி பெற்ற நாடுகளின் சமுதாய அமைப்பை, முதலாளித்துவ அமைப்பு என்பதாக அழைப்பதும், அத்தகைய நாடுகளை முதலாளித்துவ நாடுகள் என்று அழைப்பதும் வழக்கம். அதுபோல புதிய சமுதாய அமைப்பை உருவாக்கிய நாடுகளாக, இங்கிலாந்து, மற்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளை குறிப்பிடலாம்.

ஐரோப்பிய நாடுகளில், ஜெர்மன் நாட்டில் வளர்ந்து இருந்த முதலாளித்துவ அமைப்பை நேரில் அனுபவித்த காரணத்தினால்தான், அங்குள்ள தொழிலாளர்களது அவல நிலையை விரிவாக தெரிந்து கொண்டு, அதன் மீது ஒரு சமூக, பொருளாதார, அரசியல் ஆய்வுகளை செய்த அடிப்படையில்தான், காரல்மார்க்ஸ் தனது மூலதனம் என்ற புத்தகத்தை எழுத முடிந்தது. அதில் அவர் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பை தூக்கி எறிந்து விட்டு முதலாளித்துவ சமுதாய அமைப்பு அமைக்கப்பட்ட விவரத்தை கூறுகிறார்.

மூலதனம் புத்தகம் அரசியல் பொருளாதாரம் பற்றி அடிப்படையாக விவரிக்கப்பட்டிருந்தாலும், காரல்மார்க்ஸ் எழுதிய மற்ற புத்தகங்களிலிருந்து, முதலாளித்துவத்தின் மூல வேர்களை அவர் விளக்கியிருப்பதை அறியமுடிகிறது. தொழிற்சாலைகளை உருவாக்குகின்ற முதலாளிகளுடைய ஆட்சி அதிகாரத்தில், தனது உழைப்பு சக்தியை விற்று விட்டு, அதன் ஒரு பகுதியை மட்டும் கூலியாக பெறுகின்ற தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றி அவர் எழுதுகிறார்.

நிலவுடமை சமுதாயத்தில் வாழ்ந்து வரும் பெருவாரியான உலக மக்களுக்கு, வெல்லப்படமுடியாத, வளர்ச்சியடைந்த, விஞ்ஞானத்தை சார்ந்த சக்தி, முதலாளித்துவ அமைப்பு என்ற எண்ணமே இருந்தது. அப்படிப்பட்ட முதலாளித்துவ சமுதயாத்தைக்கூட, தூக்கி எறிய முடியும் என்றும், தொழிலாளி வர்க்கத்தினுடைய தலைமையில் ஒரு ஆட்சியை நிறுவிக்கொள்ள முடியும் என்றும், உலக மக்களுக்கு நிரூபித்துக்காட்டியது, ரஷ்யாவின் நவம்பர் புரட்சி. அதனால்தான் உலகமெங்கிலும் போராடி வந்த உழைக்கும் மக்களுக்கு, ஒரு ஒளிவிளக்கு போல, ரஷ்யாவில் நடந்த போல்ஷ்விக் புரட்சி தோன்றியது. அதன் மூலம் நிலமற்ற, ஏழை உழவர்கள் உட்பட, அனைத்து உழைக்கும் மக்களுக்கும், தொழிற்சாலை பணிகளுக்கு செல்லும் தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கி, சமுதாய அமைப்பையே மாற்றியமைக்க முடியும் என்ற புதிய உண்மையை புரிய வைத்தது 1917ன் நவம்பர் புரட்சி.

அதனால்தான் அத்தகைய ரஷ்ய புரட்சிக்கு பிறகு, உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும், இத்தகைய நம்பிக்கை ஏற்பட்டு, பல நாடுகளில் பொதுவுடமை கருத்துக்களை அடிப்படையாக கொண்ட கட்சிகளை உருவாக்கினார்கள். ரஷ்யாவை ஆண்டு வந்த ஜார் என்ற மன்னன் கொடுங்கோலன் என்று நம் முன்னால் வர்ணிக்கப்படுகிறது. பாரதியாரும் கூட, கொடுங்கோலன் ஜார் வீழ்ந்தான். ஆவென எழுந்தது யுகப்புரட்சி என்று எழுதுகிறார்.

மாகாளி கண் திறந்தால் என்பதாக தன்னுடைய நம்பிக்கையை, தனக்கு கிடைத்த புதிய நம்பிக்கையுடன் இணைத்து எழுதுகிறார் பாரதி. அத்தகைய முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுதான் இந்த நவம்பர் புரட்சி. செயின் பீட்டர்ஸ் பர்க்கை சுற்றி எழுந்த தன்னெழுச்சியான புரட்சியாக, பிப்ரவரியில் நடந்த புரட்சிகர செயல்பாடுகள் விவரிக்கப்படுகின்றன. ஜார் ஆட்சியை தூக்கி எறிந்து தற்காலிக அரசாங்கம் ஒன்று ஏற்படுத்தப்படுகிறது. அதன் பிறகு அக்டோபர் மாநிலத்தில் தற்காலிக அரசாங்கம் நீக்கப்பட்டு, போல்ஷ்விக் அரசாங்கம் நிறுவப்படுகிறது. ரஷ்யாவில் தற்காலிக அரசாங்கம் நிறுவப்படும் போது, டூமா என்று அழைக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அமைப்பு முறை ஏற்படுத்தப்படுகிறது.

சோவியத்துக்கள் என்பது தொழிலாளர்களுடைய கவுன்சில்கள் என்று பொருள்படும். பிப்ரவரி புரட்சி என்று அழைக்கப்பட்ட ரஷ்யாவின் புரட்சி முதல் உலகப் போர் கால கட்டத்தில் நடந்தது. அப்போது ரஷ்யாவின் ராணுவம் பெருமளவுக்கு தாக்கப்பட்டு பின்வாங்கியிருந்தது. அதனால் சிப்பாய்களுக்குள் கலவரம் நீடித்தது. தற்காலிக அரசாங்கத்தின் தலைமை பொறுப்பிலிருந்த சோசலிச சிந்தனையாளர்கள், இடது சாரி திசைக்கு அதை எடுத்து சென்றார்கள். குழப்பமான சூழ்நிலையில், தொடர் கலகங்களும், வேலைநிறுத்தங்களும் நடந்தன. தற்காலிக அரசாங்கம் ஜெர்மனி நாட்டுடன் சேர்ந்து கொண்டு, போல்ஷ்விக்குகைளயும், மற்ற சோசலிச பிரிவுகளையும் இணைத்து கொண்டு செயல்பட்டன.

செம்படை ஒன்றை கட்டி அதை ஆயுதம் தாங்கிய படையாக உருவாக்கியிருந்த போல்ஷ்விக்குகள், அதன் மூலம் எளிதாக ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரமுடிந்தது. அரசாங்க அதிகாரத்திலும், அனைத்து பொருட்களிலும், போல்ஷ்விக்குகள் அமர்த்தப்பட்டார்கள். 1918ல் நடந்த ஜெர்மனியுடனான ஒப்பந்தத்தில் போல்ஷ்விக்கள் கையெழுத்திட்டார்கள். ஆனாலும் கூட, போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள் என்ற இருசாரர் மத்தியில் உள்நாட்டு போர் போல மோதல் நடந்தது. அதில் போல்ஷ்விக்குகள் என்று அழைக்கப்பட்ட பெரும்பான்மையினர் என்று பொருள் கொண்ட லெனின் தலைமையிலான பிரிவினர் வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் தான் சோவியத் ரஷ்யாவின் ஒன்று பட்ட நாடுகள் என்ற யூ.எஸ்.எஸ்.ஆர். உருவானது.மேற்கண்ட அனுபவங்கள் பாட்டாளி வர்க்கம் என்று அழைக்கப்படும் ஆலைத் தொழிலாளர்களான, முன்னேறிய வர்க்கத்தின் தலைமையில், அனைத்து உழைக்கும் வர்க்கங்களும் அணி திரட்டப்பட்டு, மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் உழைப்பவர்கள் தான் என்ற உண்மையிருப்பதனால், எந்த நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற விவரம் உலகிற்கு கிடைத்தது.

கம்யூனிஸ்ட் கட்சியை தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படை என்பதாக அழைப்பார்கள். ரஷ்ய புரட்சியை வெற்றிகரமாக நடத்திய லெனினது பாதை என்பது, காரல்மார்க்ஸ் வழிவகுத்து கொடுத்த பாதையை, நடைமுறை படுத்தி செயலிலே வென்ற ஒரு நிகழ்வு அதனால் காரல்மார்க்சிற்கு பிறகு, உலகமெங்கிலும் பெரும்பான்மையாக அவரை பின்பற்றியவர்கள், லெனினை ஏற்றுக் கொண்டு, அவரது அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு, லெனினிஸ்டுகளாக பவனி வந்தார்கள். இன்னமும் கூட, மார்க்சியம் என்ற சமூக அறிவியல் தத்துவத்திற்கு, லெனினது பங்களிப்பு புதிய, புதிய படைப்பாற்றல் மிக்க, உலகம் பற்றிய சித்தரிப்பு என்பதை மறுக்க முடியவில்லை.லெனினது ரஷ்யாவை நேரில் சென்று பார்த்து வந்த தந்தை பெரியார், அதே பாதையில் சமத்துவத்தை ஏற்படுத்த அறைகூவல் விடுத்தார்.

தந்தை பெரியாரை ரஷ்யநாடு சென்று, அனுபவங்களை பார்த்து வருவதற்கு ஏற்பாடு செய்த, பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடி, சிந்தனை சிற்பி சிங்காரவேலர். இந்த சிங்கார வேலர் சென்னையில் உள்ள, மயிலாப்பூரில் நடுக்குப்பத்தில், ஒரு மீனவ குடும்பத்தில் பிறந்தவர். சிங்கார வேலரது செயல்பாடுகளும், கருத்துகளும் கூட, இன்று வரை உயிர்ப்புடன் நிற்கிறது. அதனால் இந்த நவம்பர் மாதம், உலக வரலாற்றிலிருந்து நமக்கு அதிகமான பலத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கலாமா?