Wednesday, October 13, 2010

மரணத்திற்குப் பிறகும் படிப்பினைகள் தரும் தோழர் பழனியப்பன்!

பழம்பெரும் புரட்சியாளர் தோழர் பழனியப்பனை,இராவன்னா என்று அழைப்பார்கள்.அவர் காரைக்குடியில் சி.பி.ஐ கட்சியில் இருந்தார்.அப்போது 1967 ஆம் ஆண்டின் நக்சல்பாரி புரட்சி இவரையும் ஈர்த்தது.பழனியப்பன் பாத்திரங்கள் தயாரிக்கும் பணியில் இருந்தார்.உற்பத்திக்கான போராட்டம் என்று கூறப்படும் உழைப்பில் இருந்த பழனியப்பன்,தனது வாழ்க்கையை நக்சல்பாரி இயக்கத்திற்காக அர்ப்பணீப்பில் இறங்கினார். அன்றைய நக்சல்பாரி இயக்கத்தில்,சாருமஜீம்தாரின் வழிகாட்டல்கல் எல்லோராலும் ஏற்கப்பட்டன.தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட வழிகாட்டல்களில் செயல்பட்டு வந்த தோழர் எல்.அப்பு,வேலுரில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ரகசியமாக கொலை செய்யப்பட்டார்.அது 1970ஆம் ஆண்டு நடந்தது.அண்ணாமலை பழ்கலைகழகத்தில் படித்து வந்த கே.என்.கணேசன், பென்னாடத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் போது வெடித்து சிதறி தியாகியானார்.அவருடன் விளாத்திகுளத்தை சேர்ந்த சர்ச்சிலும், சிறுமுகையை சேர்ந்த கன்னியப்பனும் மரணமடைந்தார்கள் அதுவும் 1970 ஆம் ஆண்டு நடந்தது.

1972ஆம் ஆண்டு தோழர் பழனியப்பன் சாருமஜிம்தார் வழியில் செயல்பட முடிவு செய்து,தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இறங்கினார். செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் தேவேந்திரகுல மக்கள் ஆதிக்க சாதியின் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி இருந்தனர். அந்த கிராமத்தில் விவசாய வேலைகள் செய்தபடி,பழனியப்பன் இறங்கி தலைமறைவு இயக்கப்பணிகளை தொடங்கினர்.ஒரு கட்டத்தில் அந்த கிராமம் காவல்துறையின் கியூ பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டது. அப்போது சுற்றி வளைப்பை உடைத்துக்கொண்டு பழனியப்பனும்,தோழர்களும் தப்பித்தார்கள் அந்த மீனாட்சிபுரம் கிராமம்தான் பிறகு முழுமையாக முஸ்லிம்மாக மாறியது. அதாவது புரட்சிகர மாற்றத்திற்கு தயாரான தலித் மக்களை அரசு அடக்குமுறை செய்யுமானால், அவர்கள் சாதி ஒடுக்கலில் இருந்து தப்பிப்பதற்காக மதம் மாறுவார்கள் என்பதற்கு இதுவே சான்று.

அதனாலேயே அந்த கிராமத்தை சேர்ந்த வாத்தியார் இராமசாமி, நாகூர்மீரான் போன்றோர் மிசாவில் சிறையில் தள்ளப்பட்டனர். அதன்பிறகு இராவண்ணா என்று அழைக்கப்பட்ட பழனியப்பன் இராஜபாளையம் அருகே சேத்தூர்,முகவூர்,தளவாய்புரம் கிராமங்களில் தங்கள் பனிகளை தொடர்ந்தார்..அதை ஒட்டி அந்த வட்டாரத்தில் நாலு பண்ணையார்கள் அழித்தொழிக்கபபட்டார்கள்.சாருமஜீம்தாரால் முன்வைக்கப்பட்ட, கொடுமைமிக்க வர்க்கக எதிரிகளை அழித்தொழியுங்கள் என்ற செயல் தந்திரம் அங்கே நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் அந்த கிராமங்களை சேர்ந்த இரராயப்பன், மச்சக்காளை, ஆறுமுகம், ஆகியோரும், இரத்தினம்,அமல்ராஜ், ஆவுடையப்பன்,கல்லனை போன்றோரும் புரச்சிகர இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அதில் முதல் இரண்டு தோழர்களை காவல்துறை திட்டமிட்டு படுகொலை செய்தது.இதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இராவன்னாவின் செயல்பாடு விரிவடைந்தது.அதில் குறிப்பிட்ட கிராமத்தில் புதிதாக இயக்கத்திற்கு வரும் தோழர்களை இராவன்னா அழைத்து செல்வார் அங்கே அவர்களுக்கு விவசாய வேலைகளை கற்றுக்கொடுப்பார்.அதன் மூலம் புதிய தோழர்கள் உற்பத்திக்கான போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, தங்களது வர்க்கத்தன்மையை குறைத்துக்கொள்ள முற்படுவார்கள்.

இதைத்தான் மாவோவும், சாருவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப்போராட்டம் ஆகியவற்றில் புரச்சியாளர்கள் ஈடுபட்டு, அதன்மூலம் நிலமற்ற, ஏழை விவசாயிகள் மத்தியில் ஒன்றினை--ய வேண்டும் என்று சாருமஜீம்தார் வழிகாட்டல் கொடுத்து இருந்தார். அறிவு ஜீவிகள் தங்களை உழைக்கும் வர்க்கத்துடன் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டும் என்று மா-சே-துங் கூறி இருக்கிறார்.

அப்படிப்பட்ட வழிகாட்டல்களை தமிழ்நாட்டில் செயல்படுத்திய தோழர்களில் பழனியப்பன் முக்கியமானவர். சாரு வழியில் செயல்பட்ட மாநில குழுவிற்கு,பழனியப்பன் செயலாளராக பொறுப்பு ஏற்று இருந்தார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு அவர் மீது போடப்பட்ட நான்கு கொலை வழக்குகளிலும் வழக்கறிஞர்கள் வைக்காமல் தானே வாதாடி அனைத்து வழக்குகளிலும் விடுதலை பெற்றார். அந்தக்காலத்தில் புரட்சியை தொழிலாக கொண்டவர்கள் என்பதாக கட்சியின் ஊழியர்கள் பெயர் பெற்று இருந்தனர். அவர்கள் தங்களது வர்க்கத்தன்மையை குறைத்துக்கொண்டு புரட்சியாளர்களாக இயங்கி வந்தனர். காலப்போக்கில் அதுவே நகரம் சார்ந்த நடமாட்டத்தை மட்டுமே மேற்க்கொள்ளும் ஊழியர்கள்,தங்களை முழுநேரஊழியர்கள் என்று அழைத்துக் கொண்டனர்.இவர்கள் பரப்புரை மட்டுமே செய்து வருபவர்கள். இவர்கள் தங்களது வர்க்கத்தன்மையை குறைத்துக்கொண்டு, பாட்டாளி வர்க்க உலக கண்ணோட்டத்தை உள்வாங்காமலேயே செயல்பட முடிகிறது.அதனால்தான் இவர்களால் ஒடுக்கப்படும் மக்களை பெருமளவிற்கு அணி திரட்ட முடியவில்லை.இவர்களது வேலை திட்டத்தை ஆய்வு செய்வதன் மூலம்,அவர்களுக்கு இருக்கின்ற புரட்சிகர வர்க்கப்போராட்ட பிடிப்புகளை அறிந்து கொள்ள முடியும்.இந்த விசயத்தில் பழனியப்பன் ஒரு புரட்சிகர முன் உதாரணத்தை படைத்து விட்டார்.

சித்தாந்த மட்டத்திலும், பழனியப்பன் இயங்கியல் மற்றும் இயக்கமறுப்பியல் ஆகியவை பற்றிய சர்ச்சைகளை தொடர்ந்து செய்து வந்தார். இப்போது பலரிடமும் இத்தகைய விவாதங்களை காண முடிவதில்லை.

சமீபத்தில் காரைக்குடியில் 24-09-2010அன்று மரணம் அடைந்த பழனியப்பன் இறுதி நிகழ்வில், மேற்கண்ட படிப்பினைகள் உணரப்பட்டன. தமிழ்நாட்டில், பிற மாநிலங்கள் போல் இல்லாமல் புரட்சிகர இயக்கங்கள் வெற்றி பெற்று, முன் செல்லாததற்கு, இத்தகைய காரணங்களும் இருக்கின்றனவா என்ற விவாதத்தை, தோழர் பழனியப்பன் வாழ்க்கை பரிசீலிக்க வைக்கிறது.

No comments:

Post a Comment