Saturday, October 2, 2010

அய்யோபாவம் அலஹாபாத் நீதியரசர் கான். கடமை உணர்வா? அடிமை உணர்வா?

அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு உலகமெங்கிலும், குறிப்பாக இந்தியா எங்கிலும் மதச்சார்பற்ற சக்திகள் மத்தியில் பெரும் சர்ச்சையை அல்லது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் நீதியரசர்களில் மூன்றில் ஒருவரான, முஸ்லிம் நீதியரசர் கூறியுள்ள தீர்ப்பில் உள்ள கூற்றுக்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கின்றன.
கான் தனது 285 பக்க தீர்ப்பில், இது இந்திய முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் கல்வியை பரப்புவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று எழுதியுள்ளார். இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையும் அல்ல; அதேசமயம் நுண்ணிய சிறுபான்மையும் அல்ல; ஆனால் மற்ற நாடுகளில் ஒன்று முஸ்லிம்கள் பெரும்பான்மை அல்லது நுண்ணிய அளவிலான சிறுபான்மையினர். ஆகவே இந்திய முஸ்லிம்கள் தாங்கள் மற்றவர்களுடன் எப்படிப்பட்ட உறவுகளை வைத்துக்கொள்கிறோம் என்று நிரூபிக்க வேண்டிய தருணம் இது என்று எழுதியுள்ளார்.

சமாதானத்தையும், நட்பையும், சகிப்புத்தன்மையையும், தங்களது செய்தியின் மூலம், அல்லது எங்கெல்லாம், எப்போதெல்லாம் முடியுமோ அங்கெல்லாம், அப்போதெல்லாம் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, பிறரை செல்வாக்கு செலுத்தவேண்டும் என்று எழுதியுள்ளார். இந்திய முஸ்லிம்கள் ஒரு நீண்டகால மதரீதியான கல்வியையும், அறிவையும் பெற்றவர்கள் என்றும் எழுதுகிறார். அதனால் அவர்கள் இப்போதுள்ள மோதல் சூழலில், தீர்வை காண்பதற்கான தங்கள் பங்கை தொடங்கட்டும் என்று கூறியுள்ளார். இத்தகைய அறிவிப்பு நமக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அதாவது முதலில் அவர் அங்கு மூன்றில் ஒரு நீதியரசராக இருக்கவில்லையா? மூன்றில் பெரும்பான்மையாக இருக்கும் நீதியரசர்கள் முன்பு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாரா? ஆவணங்களை ஆராய்ந்து நீதி தரும் ஒரு நீதிமான் என்ற நிலையிலிருந்து, இறங்கி இந்திய முஸ்லிம்களுக்கு நீதி கூறவேண்டிய இடத்திற்கு உளவியல் ரீதியாக தள்ளப்பட்டு விட்டாரா? சொத்து சம்பந்தப்பட்ட வழக்குத்தானே அது? அதில் நம்பிக்கை அடிப்படையிலான விவாதம் ஏன் தேவை என்பதைத்தானே இப்போது நாடு கேட்டுக்கொண்டிருக்கிறது? பெரும்பான்மை மதம் சார்ந்த நீதியரசர்கள் எப்படி நம்பிக்கைகள் சார்ந்து தீர்ப்பு சொல்லவேண்டுமென ஈனுகிரார்களோ அதேபோல இந்த சிறுபான்மை மதம் சார்ந்த நீதியரசரும், ஏன் நம்பிக்கை சார்ந்து சித்தித்து, நம்பிக்கை சார்ந்த கருத்துக்களை கூறியுள்ளார்?

அப்படியானால் அங்கே விவாதிக்கப்பட்டதே நிலம் யாருக்கு என்ற சொத்து விசயமல்ல என்றும், அவர்களுக்குள் அதாவது நீதியரசர்களுக்குள் இருந்த விவாதம் நம்பிக்கை சார்ந்தது அதாவது மதம் சார்ந்த்தது என்று தெரிகிறதே? அப்படி இந்த கான் என்ற முஸ்லிம் நீதியரசரை சிந்திக்கவைக்கும் அளவுக்கு, மற்ற இரண்டு இந்து மதம் சார்ந்த நீதியரசர்களும் தங்கள் மத நம்பிக்கையை தங்களுக்குள் உள்ள விவாதத்தில் தூக்கிப்பிடித்திருக்கிரார்கள் என்றுதானே பொருள்? அதுமட்டுமின்றி இந்த நாடு பெரும்பான்மை மதம் சார்ந்தவர்களுக்கு சொந்தம் என்று மிரட்டினார்களா? இங்கே உள்ள பெரும்பான்மை மதத்தின் நம்பிக்கைகளை அங்கீகரித்து, அதற்கு தகுந்தாற்போல நீதிமன்ற தீர்ப்பு வழங்காவிட்டால் இந்த நாட்டில் உள்ள பரும்பான்மை மக்கள் கொந்தளிப்பார்கள் என்று இந்த சிறுபான்மை நீதியரசரை மிரட்டினார்களா? இல்லாவிட்டால் அவர் ஏன் இப்படி ஒரு அறிவிப்பை எழுதவேண்டும்?

அப்படியே உண்மை நிலையை எழுத அவர் விரும்பியிருந்தாலும், ஒரு நீதியரசராக நின்று, இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மதச்சார்பற்ற என்ற கொள்கை அடிப்படையில், உண்மை நிலைமையை தீர்ப்பாக எழுதுவது கண்டு பெரும்பான்மை மத நம்பிக்கையுள்ள மக்கள் ஆத்திரப்பட கூடாது என்று எழுதியிருக்கலாமே? சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த நீதியரசர் பெரும்பான்மை மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாதா? அதுதானே நீதியரசர்கள் மதம் மற்றும் நம்பிக்கைகளை தாண்டியவர்கள் என்று அர்த்தம்? அப்படி ஒரு வாய்ப்பை அவருக்கு கிடைத்த நடுநிலையாளர் என்ற வாய்ப்பை அவர் பயன்படுத்த முடியாமல் தடுத்த தடைகள் என்ன? அத்தகைய தடைகள்தானே இந்த நாட்டை 2000 ஆண்டுகளாக பிடித்து ஆட்டுகிறது? அதற்கு அந்த நீதிமன்றமும் ஆடிப்போனது என்பதுதானே இந்த எழுத்துக்களில் புரிந்துகொள்ளமுடிகிறது? நீதியரசர்களுக்கு அரசியல் சட்டத்தின் முகப்புரையில் உள்ள மதச்சார்பற்ற நாடு என்ற சொற்களை விட, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வான மதம், சாதி நம்பிக்கைகள்தான் என்பதாக இது ஆக்கிவிட்டது அல்லவா?

அப்படியானால் நீதியரசர் கான், தனது கடமையை செய்திருக்கிறாரா? அல்லது செய்ய முடிந்திருக்கிறதா? இல்லையெனில் ஒரு அடிமையாகத்தான் அங்கே அமர்ந்திருந்தாரா? இப்படித்தான் கேள்விகள் கிளம்பும்

No comments:

Post a Comment