Wednesday, June 20, 2018

கந்தக அமிலம் மட்டுமா கசியும்?

சிறப்புக் கட்டுரை: கந்தக அமிலம் மட்டுமா கசியும்?

சிறப்புக் கட்டுரை: கந்தக அமிலம் மட்டுமா கசியும்?

டி.எஸ்.எஸ்.மணி

ஜூன் 16ஆம் நாள், சனிக்கிழமை. மூடிக் கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக அமிலம் கசிவதாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தகவல் வருகிறது. அவர் 17ஆம் தேதி ஞாயிறு அன்று அதிகாரிகள் குழு ஒன்றை ஆலைக்குள் அனுப்புகிறார். அந்தக் குழுவில், மாசுக் கட்டுப்பாட்டு அலுவலக இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியியலாளர் மனோகரன், மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியியலாளர் லிவிங்ஸ்டன், தொழிற்சாலைகள் இணை இயக்குநர் சரவணன், துணை இயக்குநர் ரவிக்குமார் ஆகியோருடன் வருவாய்த் துறை அதிகாரிகளும், ஆலைக்குள் மாலை நான்கு மணிக்குச் சென்று, இரண்டு மணி நேரம் ஆய்வு செய்துவிட்டு வந்து, ‘கந்தக அமிலம் அது தேக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதியிலிருந்து கசிகிறது’ என்பதாகக் கூறியுள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கூறினார். நாம் கேட்பது, இந்தத் தாமிர உருக்கு ஆலையில் என்னவெல்லாம் ரசாயனக் கழிவுகள் இருக்கிறது என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரியாதா? இதுவரை ஆலை நிர்வாகம் அளித்துள்ள புள்ளிவிவரங்களிலிருந்தே அவை தெளிவாகத் தெரிகின்றனவே?
தூத்துக்குடியில் கட்சி சார்பற்ற அரசியலைக் கையிலெடுத்த பொதுமக்கள், ஒரு லட்சத்திற்கும் மேல், மார்ச் 24ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அணி திரண்டனர். அதன் பிறகு ஸ்டெர்லைட் ஆலையின் துணைத் தலைவர் சுமதி, ஒரு பிரபல தொலைக்காட்சியில் வெளியான தனது நேர்காணலில், ‘யார் வேண்டுமானாலும் ஆலைக்குள் வந்து பார்க்கலாம். நான் 23 ஆண்டுகளாக இந்த ஆலையில் வேலை செய்கிறேன். எனக்குப் புற்றுநோய் வரவில்லை’ என்று அறிவித்தார். அந்த அறிவிப்பால் தூண்டப்பட்டு, தூத்துக்குடி லயன்ஸ் கிளப் ஒரு உண்மையறியும் குழாமை ஸ்டெர்லைட் ஆலைக்குள், மார்ச் 30ஆம் நாள் அனுப்பியது. குழுவினர் மதியத்திற்கு மேல் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று விசாரணை நடத்திவிட்டு, இரண்டு மணி நேரத்தில் திரும்பி வந்தனர். அந்தக் குழுவினர் கேட்ட கேள்விகளுக்கு, ஆலை நிர்வாகத்தார் கொடுத்த புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்டுரையின் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தாமிரக் கனிமத்தின் கதிர் வீச்சு
ஆஸ்திரேலியாவில் உள்ள தாமிரக் கனிம வளச் சுரங்கங்களிலிருந்து மண்ணுடனும், கற்களுடனும் கலந்த தாமிரக் கனிமம் எடுக்கப்பட்டு, அது முதல்கட்டச் செறிவூட்டல் செய்யப்பட்டு கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. அதாவது, வரும் முன்பே செறிவூட்டப்பட்டதால், கதிர் வீச்சுக்கள் கொண்டதாகவே அது தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்படுகிறது. ஆஸ்திரேலியாவில், சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் தாமிரக் கனிமத்தில் தாமிரத்தின் அளவு, மூன்று முதல் ஆறு விழுக்காடு மட்டுமே இருக்கிறது. ஆஸ்திரேலியாவிலேயே செறிவூட்டப்பட்ட பிறகு, அதே கனிமத்தில், தாமிரத்தின் அளவு, முப்பது விழுக்காடாக மாறுகிறது. கப்பலில் அதிக செலவு செய்யாமல் இருப்பதற்காகவே அப்படி மாற்றிக் கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறாகக் கதிர்வீச்சு கொண்ட அந்தக் கனிமம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகிறது. துறைமுகத்தில் குவிக்கப்பட்ட அந்தப் பச்சை நிறத் தாது மணல், ஒருமுறை எனக்கு வாந்தி எடுக்கும் உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கப்பலிலிருந்து இறக்கப்பட்ட அந்தப் பச்சை மணல், ஸ்டெர்லைட் ஆலைக்கு எடுத்து வரப்படுகிறது. அப்படி எடுத்துவரப்படும் தாமிரக் கனிமம் இந்த ஸ்டெர்லைட் ஆலையில் உருக்கப்படும்போது, முப்பது விழுக்காடு மட்டுமே தாமிரம் கிடைக்கிறது. மீதியில் முப்பது விழுக்காடு, இரும்பு உபரிப் பொருளாகக் கிடைக்கிறது. மீதி முப்பது விழுக்காடு கந்தக அமிலம் உபரிப் பொருளாகக் கிடைக்கிறது அல்லது எடுக்கப்படுகிறது. அந்தக் கந்தக அமிலம்தான் இப்போது தேக்கி வைக்கப்பட்ட இடத்திலிருந்து கசிந்துள்ளது. மீதி இருக்கும் பத்து விழுக்காடு, ஆபத்தான பொருள்கள் என்று அழைக்கப்படும் ஆர்சனிக், சிங்க் முதலான மிக ஆபத்தான பொருள்களாகக் கிடைக்கிறது. அதை ஆலை நிர்வாகம் ஆபத்தான பொருள்கள், கழிவுகள் என மதிப்பீடு செய்து அழைக்கிறது.
அந்தக் கழிவுகள், ஸ்டெர்லைட் ஆலை அருகே மலை போலக் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன. இருபத்து மூன்று ஆண்டுகளாக இந்தக் கழிவுகள் அங்கேயே கொட்டப்பட்டுக் கிடப்பதை யார் வேண்டுமானாலும் ஆலை அருகே சென்று நேரில் பார்க்கலாம். ஒருமுறை பெரு மழை பொழிந்தபோது இந்தக் கழிவுகளிலிருந்து வெளியேறிய மழைத் தண்ணீர் தெருக்களில் போனதால், அருகே இருக்கும் வீடுகள் ஒவ்வொன்றின் சுவர்களிலும், காவி வண்ணத்தில் தண்ணீர் தேங்கிய அடையாளத்தை இப்போதும் நீங்கள் காணலாம். அந்த அளவுக்கு இந்தக் கழிவுகள் அழிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன.
கழிவுகளை என்ன செய்வது?
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கூறுகின்ற கணக்குப்படி, ஓர் ஆண்டில் அது நான்கு லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்கிறது. அதாவது, தாமிரக் கனிமத்தில் முப்பது விழுக்காடு என்பதே அந்த நான்கு லட்சம் டன். அப்படியானால் ஒவ்வோர் ஆண்டும், இன்னொரு முப்பது விழுக்காடாக உள்ள கந்தக அமிலமும் அதே நான்கு லட்சம் டன் உபரிப் பொருளாக உற்பத்தியாகிறது. போதாக்குறைக்கு இரும்பு வேறு நான்கு லட்சம் டன் உபரியாக உற்பத்தியாகிறது. உபரி உற்பத்திப் பொருளான ஆர்சனிக், சிங்க், போன்றவை பத்து விழுக்காடு என்பது நான்கு லட்சத்தில் மூன்றில் ஒரு பங்கு. அதாவது, ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தியாகிறது.
அந்த ஆபத்தான கழிவுகளை இருபத்து மூன்று ஆண்டுகளாகச் சேர்த்துக் குவித்து வைத்துள்ளது ஆலை நிர்வாகம். அப்படியானால், இருபத்து ஒன்பது லட்சத்து தொண்ணூறாயிரம் டன் அளவுக்கு ஆபத்தான கழிவுகள் இருக்க வேண்டும். ஆனால், முதல் ஆண்டுகளில், ஆண்டுக்கு நான்கு லட்சம் டன் ஆண்டு உற்பத்தி நடக்கவில்லை என்பதால் கழிவுகளும் குறைந்திருக்கும். எனவே, கழிவுகள் மொத்தத்தில் இருபத்து நான்கு லட்சம் டன் இருக்கும் என்று உண்மையறியும் குழு மதிப்பீடு செய்கிறது. அந்தக் கழிவுகளை, ஆலை நிர்வாகம், வெளிப்படையாகக் குவித்து வைத்துள்ளது. இது, மாவட்ட ஆட்சித் தலைவர், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தெரியும். இது பகிரங்கமாகவே மக்கள் நடமாடும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவிப் பொதுமக்கள் தவிர வேறு எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஆலை நிர்வாகத்துடன் இருபத்து மூன்று ஆண்டுகளாகத் தொடர்பில் இருக்கும் காரணத்தால் இதுவரை இந்தக் கழிவுகளைப் பற்றி யாரும் பெரிதுபடுத்தவில்லை. இப்போதாவது கழிவுகளையும் கசிவுகளையும் பற்றிப் பேசும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இந்தக் கழிவுகளை வெளியேற்ற என்ன செய்யப் போகிறார்கள்?
நிலம் திரும்பக் கிடைக்குமா?
இரண்டு நாட்கள் முன்பு மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு ஓர் அறிவிப்பு வெளியிட்டார். அரசு, விவசாயிகளிடமிருந்து வாங்கி ஆலை விரிவாக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலத்தை அரசு திரும்பப் பெற்றுள்ள நிலையில், அந்த நிலம் மீண்டும் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கே கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அந்த நிலம் ஏற்கெனவே, ஆலையின் கழிவுகளால், பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீரும் பாழ் செய்யப்பட நிலையில் அரசே அந்த நிலத்தைப் பண்படுத்தி விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அப்படிப் பண்படுத்த, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால், ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி அபராதத் தொகை மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ளதே, அதிலிருந்து எடுத்துச் செலவு செய்யலாம் என்ற ஆலோசனையும் பொதுமக்கள் மத்தியிலிருந்து வந்தது.
இந்த நேரத்தில் நாம் இன்னொரு விவரத்தையும் காண வேண்டும். ஆண்டுக்கு நான்கு லட்சம் டன் உபரி உற்பத்தியாகும் கந்தக அமிலம், இருபத்து மூன்று ஆண்டுகளில், தொண்ணூற்றி இரண்டு லட்சம் டன் என்பதாகச் சேர்ந்துள்ளது. அந்தக் கந்தக அமிலத்தை எங்கே கொண்டு போய்க் கொட்டப் போகிறீர்கள் என்று அரசும் ஆலை நிர்வாகமும் விளக்கம் சொல்ல வேண்டும். இது தவிர, இந்தத் தாமிரக் கனிமத்தை உருக்கும்போது உருவாகும் கழிவுகளைத் தாங்கள் சுத்திகரிப்பு செய்துவைத்திருப்பதாக ஆலை நிர்வாகம் கூறிவருகிறது. அந்தச் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. அது வெளியே வரும்போது நச்சு கலந்த தண்ணீர்தானே. அந்த நச்சுத் தண்ணீரை எங்கே கொட்டினீர்கள்?
அதைக் கடலில் கொட்டவில்லை என்றும் கடலில் கழிவு எதுவும் வெளியேற்றப்படவில்லை என்றும் ஆலை நிர்வாகம் கூறிவருகிறது. அப்படியானால் அதை நிலத்தடி நீரில் கலக்கவிட்டீர்களா? அது அந்த வட்டாரத்திற்கே ஆபத்து இல்லையா? இதற்கும் அரசு தரப்பும், ஆலை நிர்வாகமும் பதில் சொல்ல வேண்டும். குறிப்பாக, அத்தகைய கழிவுநீரில் டி.டி.எஸ். என்ற கரையும் திடப் பொருள் ஒரு லிட்டருக்கு இருநூறு வரை இருக்கலாம். ஆனால், இந்தக் கழுவிய கழிவு கலந்த நீரில் இருபத்தி மூவாயிரம் டி.டி.எஸ். இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய நச்சுத்தனமான தண்ணீரை இருபத்து மூன்று ஆண்டுகளாக எங்கே கொட்டினீர்கள் என்று கேட்க வேண்டுமா, இல்லையா?
மொத்தத்தில், இத்தனை ஆண்டுகள் ஆண்ட ஆட்சியாளர்கள் எல்லோருமே சேர்ந்து தூத்துக்குடியைப் பாழ்படுத்தியாகிவிட்டது. இப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்றால், மேற்கண்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறியே ஆக வேண்டும்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)

Wednesday, May 16, 2018

இந்திய படைத் தளபதி இலங்கை சென்றது ஏன்?

சிறப்புக் கட்டுரை: இந்திய படைத் தளபதி இலங்கை இலங்கை சென்றது ஏன்?

சிறப்புக் கட்டுரை: இந்திய படைத் தளபதி இலங்கை இலங்கை சென்றது ஏன்?

டி.எஸ்.எஸ்.மணி

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத் முதன்முறையாக மே 13 ஞாயிறன்று மதியம் இலங்கை சென்றார். அவருடன் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் மேஜர் ஜெனரல் ப்ரீத்தி சிங், பிரிகேடியர் மகேஷ் அகர்வால் ஆகியோர் சென்றனர். கொழும்பில் உள்ள கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இவர்கள் மதியம் சென்று இறங்கினர். மேஜர் அன்ஷுல் அஹலவ, மேஜர் ஜெனரல் அனுரா சுத்தசிங்கே, இந்திய ஹை கமிஷனைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர் அசோக் ராவ் ஆகியோர் வரவேற்றனர்.
இலங்கையில் நான்கு நாள்கள் பயணம் செய்ய இருப்பதாக இந்திய ஊடகங்களும், ஏழு நாள்கள் பயணம் செய்ய இருப்பதாக இலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயகே கூறியதாக இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே நல்ல புரிதலையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்திக்கொள்வது என்றும், இலங்கை பகுதியில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளவே இந்தப் பயணம் என்றும் இந்திய ஊடகங்கள் எழுதியுள்ளன. இந்திய ராணுவக் குழுவினருக்கு விமான நிலையத்திலேயே, சிவப்புக் கம்பள வரவேற்பும் பாரம்பரிய வெஸ் நடன வரவேற்பும் அளிக்கப்பட்டன. ஒரு நாட்டின் அரசியல் தலைமை வரும்போது செய்யப்படுவதுபோல ஏன் இப்படி வரவேற்பு என ஆச்சர்யப்படலாம். பயணத்தின் அரசியல் முக்கியத்துவம்தான் அதற்குக் காரணம்.
என்ன செய்யப் போகிறது இந்தியா?
திங்கட்கிழமை காலையிலேயே, இந்திய ராணுவக் குழுவினர், "இந்திய அமைதிப் படை வீரர்கள், பயங்கரவாதத்தை எதிர்த்து வடக்கு, கிழக்கு மாகாணங்களான தமிழர் பகுதிகளில் போரிட்ட போது இறந்து போனவர்களின் சமாதிகளுக்குச் சென்று மலர் வளையம் வைத்தனர். இறந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு ராணுவ வணக்கம் செலுத்தினர். இந்திய ராணுவக் குழுவினரை, இலங்கை ராணுவத்தின் துணை தளபதி அஜிது கன்யகாரவன வரவேற்றார். பயணத்தில் இலங்கை அதிபரையும் பாதுகாப்பு அமைச்சரையும் பாதுகாப்புச் செயலாளரையும் மூன்று படைகளின் தளபதிகளையும் சந்திப்பார்கள்; அரசியல் மற்றும் ராணுவத் தலைமைகளைச் சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது. மகேஷ் சேனநாயக்காவுடன் ராணுவச் சேவை வனிதா குழுவின் சந்திரிகா சேனநாயக்காவையும் சந்திப்பார்கள். இலங்கை ராணுவத்தின் சிக்னல் வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்க கண்டியில் சிக்னல் பள்ளியில் தொடர்பு சோதனைச் சாலையைத் திறந்துவைப்பார்கள். கிழக்கு மாகாணத்தின் திரிகோணமையில் தியதளவாவில் உள்ள ராணுவ அகாடமிக்கும் தென்னிலங்கையின் காலேயில் உள்ள இலங்கை ராணுவ அகாடமிக்கும் அவர்கள் வருகை புரிவர்.
1987இல் ராஜீவ் காந்தியால் அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும் படை உலக அரங்கில், குறிப்பாகத் தமிழர்கள் மத்தியில், ‘அமைதி கொன்ற படை’ என்று பெயர் வாங்கியது. ஈழ விடுதலைக்காகப் போராடிவந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டது. அதில் இறந்துபோன இந்தியப் படை வீரர்களுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சியையும் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதாவது, முப்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த சண்டையை, வருகிற இந்திய ராணுவ தலைவர்களுக்கு நினைவுபடுத்தியது தமிழர்களுக்கு எதிராக அவர்களது மனப்பான்மையைச் செதுக்கவா என்ற கேள்வியையும் உலகத் தமிழர்கள் கேட்கிறார்கள்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நடந்து முடிந்த இனவாதப் போரில் கடுமையான இழப்பைச் சந்தித்திருந்தாலும் சிங்களம் நடத்திய போருக்கு இந்திய அரசு சார்பாக, அன்றைய காங்கிரஸ் அரசு பல்வேறு உதவிகளைச் செய்திருந்தாலும், இன்றைய இந்திய அரசிடம் தங்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தர வேண்டி நிற்கும் நிலையிலேயே அவர்கள் உள்ளனர். அத்தகைய ஓர் எதிர்பார்ப்பை இந்தப் பயணம் கலைத்து விடுமோ என்ற அச்சமே ஈழத் தமிழர்களிடம் இருக்கிறது.
மாறும் கள நிலவரம்
இந்த நேரத்தில், இலங்கைத் தீவில் நடந்துவரும் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மஹிந்த ராஜபக்சே தலைமையிலான ஆட்சி, சீன ஆதரவு என்ற நிலையை அப்போது எடுத்திருந்தது. அதனாலேயே அமெரிக்க அரசு, ஐநா மனித உரிமைக் கழகத்தில் மஹிந்தா அரசுக்கு எதிராகப் போர்க் குற்ற விசாரணை என்ற தீர்மானத்தை, மூன்றாண்டுகள் கொண்டுவந்தது. அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ரணில் விக்ரமசிங்கே என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் மைத்திரி பாலா சிறிசேனா என்ற இலங்கை சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவின் தலைவரும் அமெரிக்கச் சார்பு, மேற்குலகச் சார்பு என்ற நிலையை எடுத்திருந்தனர். ஆனாலும், அவர்களுக்கும் இந்திய அரசின் ஆதரவு தேவைப்பட்டது. அமெரிக்காவும் இலங்கைத் தீவுக்குள் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள இந்திய அரசின் ஆதரவை வேண்டி நின்றது. ஆட்சி மற்றம் ஏற்பட்டது. மைத்திரிபால சிறிசேனா அதிபராகவும் ரணில் பிரதமராகவும் வந்துவிட்டனர். அதனால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கை அரசுக்குச் சார்பாகப் பேச தொடங்கியது.
இந்தச் சூழலில், இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தென்னிலங்கையில் சிங்களர் மத்தியில் மஹிந்த ராஜபக்சே அணியினர் அதிகமாக வெற்றி பெற்றனர். அதனால் அங்குள்ள இலங்கை சுதந்திரக் கட்சியில் சிறிசேனாவுடன் வந்தவர்களில் பலர் மீண்டும் மஹிந்தா பக்கம் சாய தொடங்கினர். பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மஹிந்தா குழுவினர் கொண்டுவந்தனர். அப்போது, அமைச்சரவையில் இருந்த சிறிசேனா ஆதரவாளர்களான அமைச்சர்கள் சிலர் உட்பட, சிங்களர்கள் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தனர். அந்நேரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈபிஆர்எல்எஃப் ஆகியவை ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்து ஆட்சியைக் காப்பாற்றினார்கள். எதிர்த்து வாக்களித்த அமைச்சர்கள், ராஜினாமா செய்தனர்.
இப்போது சிறிசேனவுடன் வெளியேறி வந்த இலங்கை சுதந்திரக் கட்சியின் 16 எம்.பிக்கள் மஹிந்தா ஆதரவு நிலைக்குச் சென்றுவிட்டனர். ஆகவே, ரணிலின் ஆட்சி சிக்கலான சூழலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நேரம் பார்த்து, இலங்கைத் தீவில் செல்வாக்குப் பெற்றிருக்கும், சீன ஆதரவு நிலையை ரணில் எடுத்துவிட்டதாகக் கேள்விப்படுகிறோம். அதாவது அமெரிக்க ஆதரவு, இந்திய ஆதரவு நிலையிலிருந்து பிரதமர் ரணில் சீன ஆதரவு நிலைக்குத் தாவியிருப்பதாக அறிகிறோம். அது உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனாலும், மஹிந்த ராஜபக்சே பக்கத்தில் மாற்றம் வந்துள்ளது உண்மையே. அதாவது, மஹிந்தவின் தம்பியான கோத்தபாய ராஜபக்சே வருகிற தேர்தலுக்கு முன்னிறுத்தப்படுவார் என்றும் அவர் இந்திய அரசு ஆதரவைக் கோருகிறார் என்றும் கேள்விப்படுகிறோம்.
அதே சமயம் கோத்தபாய ராஜபக்சேவுக்கும் அவரது இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்சேவுக்கும் யார் தலைமை எடுப்பது என்ற போட்டி இருக்கவே செய்கிறது. அவர்கள் இருவருமே இந்திய அரசின் ஆதரவை நாடுவதில் வெற்றி பெற்று வருவதாகவும் தெரிகிறது. இலங்கை ராணுவத்தைப் பொறுத்தவரை, அது அரசியல் சார்பான ராணுவம். இன உணர்வின் மூலம் வளர்க்கப்பட்ட ராணுவம். மஹிந்த ராஜபக்சேவாலும், கோத்தபாய ராஜபக்சேவாலும் வளர்க்கப்பட்ட ராணுவம். இன்னமும் இலங்கை ராணுவத்தில் ராஜபக்சே குடும்பத்தினரின் செல்வாக்கே மிகுந்து நிற்கிறது.
இத்தகைய சூழலில், இந்திய ராணுவத்தின் தலைமை அங்கே சென்று இலங்கை ராணுவத்துடன் இணைந்து பயணிக்க எண்ணுவது, தமிழர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இன்னமும் உலகத் தமிழர்கள், ஈழத் தமிழர்களது முன்னேற்றத்துக்கு இந்திய அரசையே முக்கியமாக நம்பி நிற்கின்றனர்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)

Monday, April 30, 2018

இலங்கையில் இன்று மே தினம் இல்லை!

சிறப்புப் பார்வை: இலங்கையில் இன்று மே தினம் இல்லை!

சிறப்புப் பார்வை: இலங்கையில் இன்று மே தினம் இல்லை!

டி.எஸ்.எஸ்.மணி

இலங்கையில், இந்த ஆண்டு மே தினத்தைத் தொழிலாளர்கள் கொண்டாட முடியாதாம். அதை மே ஏழாம் நாளுக்குத் தள்ளி வைத்துக்கொள்ளுங்கள் என்று மைத்ரிபால அரசு அறிவித்துள்ளது. இதுபோல ஏற்கனவே 1980ஆம் ஆண்டும் 1990ஆம் ஆண்டும் மே தினக் கொண்டாட்டத்தை இலங்கை அரசு தடுத்தது. அதை எதிர்த்து, அரசின் தடையை உடைத்து, தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் மே முதல் நாளே மே தினத்தை ஊர்வலங்களுடன் கொண்டாடினார்கள். அதேபோல இந்த ஆண்டு, மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமையில் இருந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. அந்தத் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரான தேவேந்திரா, மைத்ரிபால தலைமையிலான கட்சியிடமிருந்து தனது தொழிற்சங்கத்தை விலக்கிக்கொண்டார். தங்கள் தொழிற்சங்கத்தில் மொத்தம் தொண்ணூறாயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்கள் என அறிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், "எங்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் 90,000 பேரின் குடும்பத்தில் மொத்தம் மூன்று லட்சம் வாக்குகள் இருக்கின்றன” என்றும் மிரட்டியுள்ளார். கண்டிப்பாக தடையை உடைத்து மே தினத்தைக் கொண்டாடுவோம் என்கிறார்.
இலங்கை அரசு எதற்காக மே தினத்தைத் தள்ளிப்போட வேண்டும்?
வெசாக் என்ற பவுத்த பண்டிகை மே முதல் நாள் வருகிறது. அதற்காகவே சர்வதேச தொழிலாளர் தினத்தை மே 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கும் முடிவு. கண்டியில் உள்ள பவுத்த மகா சங்கத்தினரின் கோரிக்கையின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மார்ச் 27 அன்று ஜனாதிபதி மைத்ரிபால அறிவித்திருந்தார். வெசாக் தினத்தைக் கொண்டாடும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, திபெத், மியான்மார், கம்போடியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பவுத்தர்கள் அனைவருமே இம்முறை வெசாக் தினத்தை மே 29இல்தான் கடைப்பிடிக்கின்றன. வெசாக் பண்டிகை பற்றி ஐக்கிய நாடுகள் சபை 50 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ள பட்டியலிலும்கூட இவ்வருடம் மே 29ஆம் தேதிதான் அப்பண்டிகை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் மகா சங்கத்தினருக்கு மாத்திரம் இப்படி விபரீத, விசித்திர எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்கிற கேள்வி எழுகின்றது. இதை இலங்கையிலிருந்து வரும் ‘நமது மலையகம்’ ஏடு படம்பிடித்துக் காட்டுகிறது.
அதே சமயம், மே முதல் நாள், முன்னாள் பிரதமர் பிரேமதாசா சுட்டுக் கொல்லப்பட்ட நாள். ஆகவே அந்த நாளில், மே தினம் கொண்டாடப்படுவதை இன்றைய தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. பிரேமதாசாவும் ரணில் விக்ரமசிங்கேயும் ஐக்கிய தேசியக் கட்சியைச் (யுஎன்பி) சேர்ந்தவர்கள். அதனால்தான் அந்தப் பாசம் இருக்குமோ தெரியவில்லை.
இந்த நேரத்தில் சிங்கள மதத்திற்குள் இருக்கும் சாதி வேறுபாடுகள் வெறுப்புகளாக மாறிச் செயல்படுவது, அந்த ஏட்டின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய மாகாணத்துக்கான ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வடகிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக குடியரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனாவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் முதல் தடவையாக 24 மணிநேரத்திற்குள் இரண்டு தடவை ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நபர் ரெஜினோல்ட் குரேவாகத்தான் இருப்பார். இப்படி அவசர அவசரமாக மாற்றப்பட்டதன் பின்புலத்தில் சாதியக் காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சாதி, பாலினப் பாகுபாடுகள்
ரெஜினோல்ட் குரே இனத்தால் சிங்களவர்தான். ஆனால் மதத்தால் கத்தோலிக்கர், சாதியால் கராவ சாதியைச் சேர்ந்தவர். கராவ என்ற சாதி, சிங்கள மதத்திற்குள் உள்ள, கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்களைக் குறிக்கும். அதுபோலவே, கரையர் என்ற சாதியாக, வடக்கு மாகாணத்தில் வாழும் கரையோர மீனவர்கள் அழைக்கப்படுகிறார்கள் (அந்தப் பிரிவிலிருந்துதான் ஈழத்து தமிழ்ப் போராளிகள் பலர் வந்துள்ளார்கள்). தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில்கூட, மீனவர்களிடையே அத்தகைய பிரிவு உண்டு.
ரெஜினோல்ட் குரே பவுத்தராக இல்லாமல் கத்தோலிக்கராக இருப்பதுகூட பிரச்சினை இல்லை. அவர் உயர் சாதியான கொவிகம சாதியில்லை என்பதே பிரச்சினை.
இதேபோல, பாலினப் பாகுபாடும் அங்கே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மத்திய மாகாண முதல்வராக 17.03.2016 அன்று நிலூகா ஏக்கநாயக நியமிக்கப்பட்டபோதும் கண்டி மகா சங்கத்தின் அஸ்கிரிய தரப்பு தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. அதற்கான காரணம் அவர் ஒரு திருநங்கை என்பதுதான் (இலங்கையில் ஒரு திருநங்கை முதற்தடவையாக அரசியல் அதிகாரத்துக்குத் தேர்வான சந்தர்ப்பம் அதுதான்). நிலூகா ஏக்கநாயக கலந்துகொள்ளும் முக்கிய அரச நிகழ்வுகளில் தாமும் கலந்துகொள்ள முடியாது என்றும் வேறொருவரை அந்த இடத்துக்கு மாற்றும்படியும் அதிபர் மைத்ரியிடம் தெரிவிக்கும்படி அமைச்சர்களான எஸ்.பீ.திசநாயக, மகிந்த அமரவீர ஆகியோர் ஆசி வாங்க வந்த வேளையில் மகா சங்கத்தினர் கோரியிருந்தார்கள். ஆனாலும் அந்த சர்ச்சை நீடித்துக்கொண்டிருந்தது.
இந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவருக்கு பதிலாகத் தேர்வானவர்தான் ரெஜினோல்ட் குரே. ஆனால் அதே மகா சங்கத்தினர் இப்போது ரெஜினோல்ட் குரே சிங்களவராக இருக்கலாம்; ஆனால் அவர் பவுத்தரும் இல்லை, கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இல்லை என்கின்றனர் இந்த மகாநாயகவினர்.
வரலாற்றுப் பின்னணி
இலங்கையின் மத்திய மாகாணமானது கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. மத்திய மாகாணத்தின் தலைநகராகக் கொள்ளப்படுவது கண்டி மாவட்டம். கண்டி மாவட்டம் இலங்கையின் சிங்கள பவுத்த மரபின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. சிங்களச் சாதியமைப்பின் வீரியமாக இன்னமும் எச்சம் கொண்டுள்ள மாவட்டம் அது. மூன்று நூற்றாண்டுகளாக காலனித்துவத்திடம் பிடிகொடுக்காமல் தாக்குப்பிடித்து இறுதியாக வீழ்ந்த பிரதேசம் அது. ஆகவே அந்த மூன்று நூற்றாண்டுகளும் இலங்கையின் பாரம்பரிய மரபை இழக்காமல் தற்காத்த பின்னணி அதற்குண்டு. இலங்கையின் சுதேசியக் கொடி கடைசியாக காலனித்துவத்தால் இறக்கப்பட்ட இடம் கண்டி. அந்தப் பெருமையை அவர்கள் பேசிப் பேசி, தங்களது மக்கள் மத்தியில் இன்னமும் சாதியத்தை உயர்த்திப் பிடித்துவருகிறார்கள்.
இலங்கையின் பாரம்பரிய மரபு எனும்போது அது சாதியத்தையும் உள்ளடக்கியதுதான். சிங்களச் சாதியமைப்பில் கண்டிய கொவிகம சாதியத்துக்கு இருக்கின்ற பலமும் பெருமிதமும் அதுதான். அது மட்டுமன்றி புத்தரின் புனிதப் பல்லைத் தற்காத்துவைத்திருக்கும் தலதா மாளிகையும், பவுத்த மத மகா சங்க தலைமைப் பீடங்களையும் கொண்டுள்ள மாவட்டமும் கண்டிதான். ஆக, கண்டியை புனித நகராக அங்கீகரிக்கும்படி 1988ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை 1989ஆம் ஆண்டு அங்கீகரித்த யுனெஸ்கோ நிறுவனம் பாரீசில் நடந்த மாநாட்டில் கண்டியைப் புனித நகராக ஏற்றுக்கொண்டது. இந்தப் பின்னணி கண்டியின் மரபுரிமைக்கு மேலும் பலம் சேர்த்தது.
திரைமறைவு அதிகாரிகள்
இலங்கையின் மறைமுக சிங்கள பவுத்த ஆட்சியமைப்பு முறையைப் பேணிக் காப்பதை உறுதிபடுத்தும் பலமான அங்கமாக கண்டி திகழ்ந்துவருகிறது. சிங்கள ஆட்சியாளர்கள் பதவியேற்பதற்கு அங்கே செல்வதை மரபாகக் கொண்டுள்ளனர். கண்டிய அரசர்கள் மக்கள் முன் தோன்றிப் பேசும் தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதியில் இன்றைய நவீன ஆட்சியாளர்களும் பதவியேற்பு செய்வதை சிங்கள பவுத்தப் பெருமிதமாகக் கொண்டுள்ளனர். இங்கே இந்தியாவில், யார் குடியரசுத் தலைவராக வந்தாலும், யார் தலைமை அமைச்சராக வந்தாலும், கட்சி வேறுபாடு இல்லாமல் காஞ்சி மடத்திற்குச் சென்று ஆசி வாங்கி வந்தார்கள் அல்லவா, அதுபோல அங்கும் நடந்துவருகிறது.
பதவிகளை ஏற்கும்போதும், முக்கிய அரசியல் நிகழ்வுகளின்போதும் கண்டியிலுள்ள பவுத்த மகா பீடத்தினரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதையும், ஆலோசனைகளைப் பெறுவதையும் மரபாக இப்போது ஆக்கியுள்ளனர். அது மட்டுமன்றி முக்கிய அரசியல் சிக்கல்களின்போது ஆளுங்கட்சியும் எதிர்கட்சிகளும் ஆதரவு தேடுவதற்கு அங்கே செல்லுமளவுக்கு இலங்கையின் பலம் பொருந்திய திரைமறைவு அதிகாரிகளாக கண்டி மகா சங்கத்தவர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து கூறுவதையும் கட்டளையிடுவதையும் எச்சரிக்கையிடுவதையும் நாம் கண்டுவருகிறோம்.
1957ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர். தலைமையில் திரண்ட கண்டி பாதயாத்திரை வரலாறு மறக்காது. அதேபாணியில் நல்லாட்சி அரசாங்கம் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும், மைத்ரிபால சிறிசேனா அரசாங்கத்தை எதிர்த்து 2016இல் மேற்கொண்ட பாதயாத்திரையும் கண்டி பாதயாத்திரைதான். பொதுபல சேனா, இராவணா பலய, சிங்களே அமைப்பு போன்றவையும் அவ்வப்போது நடத்தும் ஊர்வலம், பாதயாத்திரை என்பன கண்டிக்குச் செல்லும் அல்லது கண்டியிலிருந்து ஆரம்பிக்கும். மேற்கண்ட அமைப்புகள் இந்தியாவில் உள்ள பஜ்ரங் தள், ராமர் சேனா போன்ற வன்முறைகளைப் பயன்படுத்தும் அமைப்புகள்.
இனவாத சக்திகள் தமது கடும்போக்கு நடவடிக்கைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் வன்முறைகளையும் பிரயோகிப்பதற்கு பவுத்த சீருடை தரித்தவர்களை முன்னிறுத்தித்தான் காரியம் சாதித்துவருகின்றன. அப்படியான சந்தர்ப்பங்களில் நீதியை நிலைநாட்ட வேண்டிய போலீசாரும் அடிபணிந்து பின்வாங்குவதும், கெஞ்சி சமரசம் பேசுவதும் தினமும் நடந்துவரும் நிகழ்வுகள்.
இலங்கையின் நிழல் அரசு
அது மட்டுமன்றி இலங்கையில் சமாதான முயற்சியின்போது நார்வே தூதுவர்களும் ஏனைய இணை அனுசரணை நாட்டுப் பிரதிநிதிகளும் பல தடவை உத்தேச சமாதான யோசனைகளை எடுத்துக்கொண்டுபோய் கண்டி மகா சங்கத்தினரைச் சந்தித்து அவர்களிடம் அரசியல் விளக்கம் அளித்தனர். அவர்களின் ஆதரவைக் கோரி பகீரதப் பிரயத்தனம் கொண்டனர். ஏறத்தாழ இலங்கையின் நிழல் அரசாகவே இந்த மகா சங்கத்தினர் இருந்துவருவதை இப்படி தொகுத்துப் பார்த்தால்தான் விளங்கிக்கொள்ள முடியும்.
பவுத்த சங்கங்களின் ஆசீர்வாதமும் அனுமதியுமின்றி எதையும் நிறைவேற்ற முடியாத அளவுக்கு அரச அமைப்புமுறை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கண்டியிலுள்ள ராமக்ஞ நிக்காய, அமரபுர நிக்காய ஆகியவை சாதிய ரீதியில் பிளவுண்டிருந்தாலும் அங்கே வெளிப்படையான நடைமுறை கிடையாது. அனால் இன்னொரு பிரிவான சீயம் நிக்காய வெளிப்படையாக சாதியத்தைக் கைகொள்கிறது. பவுத்த பிக்குவாக மாற விரும்புபவர்கள் அல்லது மாற்றப்படும் சிறுவர்கள் உயர் சாதி கொவிகம குலத்தைச் சேராதவருக்கு பவுத்த தீட்சை வழங்குவதில்லை. அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பவுத்த பிக்குவாக தமது நிக்காயவுக்குள் உள்வாங்குவதில்லை. ஆனால் சீயம் நிக்காய போன்றவை உயர்சாதியற்ற பெரும் பணக்காரர்கள் வழங்கும் உதவிகளையும் வசதிகளையும் அனுபவிக்கவே செய்கின்றன.
இன்னமும் இலங்கையின் அச்சு ஊடகங்களில் பவுத்த பிக்குவாக ஆவதற்கு கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள் தேவை என்கிற விளம்பரங்கள் வெளிவரவே செய்கின்றன.
கண்டிக்கு ஒரு சிங்கள – பவுத்த – கொவிகம – ஆண்/ பெண் (மூன்றாம் பாலினம் அல்லாத) பின்னணியைக் கொண்ட ஒருவர்தான் ஆளுநராக ஆக வேண்டும் என்கிற கோரிக்கையை நிறைவேற்றுபவர்களால் ஏன் இன்னமும் வடக்குக்கு அல்லது கிழக்குக்கு ஆளுநராக ஒரு தமிழரைத் தேர்வு செய்ய முடியாது இருக்கிறது என்ற கேள்வியையும் அந்த ’நமது மலையகம்’ எனும் ஊடகம் கேட்கிறது.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)

Friday, April 13, 2018

ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள் அடித்தாரா எடப்பாடி?

ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள் அடித்தாரா எடப்பாடி?
--------------------------------------------------------------------------------------------
       காவேரி ஆணையம் அமைக்க என்னதான் நடுவண் அரசு , மழுப்பி வந்தாலும், தள்ளிப் போட்டாலும், எடப்பாடி அரசுக்கு அது ஒரு பெரிய நெருக்கடிதான். நடுவண் அரசை  " பகைக்காமலே, எதிர்க்கும்" புதிய அரசியலை "திட்டமிட்டோ, திட்டமிடாமலோ" நடத்தி  வருகிறது  எடப்பாடி அரசு.  அவ்வப்போது, துணை சபா மட்டும், நடுவனை எதிர்த்து பேசுவார்.
 எல்லாவற்றிக்கும் மேலாக, தமிழக அரசு, நடுவண் அரசை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் போட்ட " நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்" சேர்க்கப்பட்ட வார்த்தைகளை, "பொருள் புரிந்து சேர்ந்தார்களா?" என்ற கேள்வி வேறு இருக்கிறது. { Willfully Disobeyed } "திட்டமிட்டு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை", என்பதாக எழுதியிருந்தார்கள். அதை யாரும் பெரிதாக விவாதிக்க வில்லை. ஆனால், இப்போது, உச்சநீதிமன்ற "கெடுவை" ஏற்றுக் கொண்டார்கள். 

                தமிழ்நாட்டு அரசியலில், ரஜினி காந்தின் பிரபல அரசியல் எதிர்ப்பு, கமலின் விமர்சனம், தி.மு.க.வின் தோழமைக்கு கட்சிகளுடன் நடைப் பயணம் செய்யும்  எதிர்ப்பு அரசியல், தினகரனின் ஊர், ஊராக செல்லும் ஆர்ப்பாட்டம், இந்த நான்கு வகைகளையும் எடப்பாடி அரசு எதிர்த்து வெல்ல வேண்டும். என்ன செய்ய? ஐ.பி.எல். மட்டைப் பந்து ஆட்டம் இந்த நேரத்தில் எதற்காக, என்ற கேள்வி தமிழ்நாட்டு மக்களிடையே, பிரபலமானது. இந்த நேரத்தில், திமுக தலைமையிலான, "மீட்பு பயணம்" தினசரி ஊடகங்களில் வரும் அளவுக்கு, தோழமைக் கட்சித் தலைவர்களுடன், திமுக செயல் தலைவர் நடக்கிறார். இந்த நேரத்தில், " தென்னிந்திய நடிகர் சங்கம்" ஏற்பாடு செய்த " மௌன ஆர்ப்பாட்டம்"  ஊடகங்களில், "முதலிடத்தை" பிடித்தது. அதிலும், ரஜினியும், கமலும் அமர்ந்து கொண்டு "விளம்பரம்" கிடைக்கப் பெற்றார்கள். யார்,யார்  காவேரி ஆணையத்திற்காக, "உரத்து" கத்துகிறோம் என்ற "போட்டியில்" ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையான வடிவத்தை எடுக்கிறார்கள். 

                   ரஜினியையோ, கமலையோ, தென்னிநிதிய  நடிகர் சங்கத்தையோ, " ஏற்றுக் கொள்ளாத"  இயக்குனர் திலகம் பாரதிராஜா,, வி.சேகர், தங்கர் பச்சன், அமீர், வெற்றி மாறன், கௌதமன், ஆகியோர், தங்கள் பங்குக்கு, " தமிழர் காலை, இலக்கிய, பண்பாட்டு பேரவை" எனது தொடக்கி  இறங்கி விட்டனர்.  அதே  கருத்துக்கள் கொண்ட சீமானும்  இணைந்து கொண்டார். மேற்கணட யாருமே, திமுக தலைமையையோ, தினகரன் தலைமையையோ, ஏற்றுக் கொள்ளாதவர்கள். இதே  "நிலைப்பாட்டில் " தான் எடப்பாடி அரசும் இருக்கிறது. இந்த நேரத்தில்தான், முதல்வர் எடப்பாடியை, "பாரதிராஜா, சேகர், தங்கர் பச்சன், அமீர்" ஆகியோர் சந்தித்து, பொன்னாடை போர்த்திய படம் வெளிவந்தது. ஐ.பி.எல்.மட்டைப் பந்து ஆட்டத்தை, நிறுத்துங்கள் என்பதே அவர்கள், முதல்வரிடம் வைத்த கோரிக்கை. 

                    அதன்படியே, பாரதிராஜா தலைமையிலான, ஊடகவியலாளர் கூட்டம், பிரபலமானதால், ஊடக முதன்மை பெற்று விட்டது. அதுவே, " திமுகவின் நடைப் பயணம், தினகரனின் ஆர்ப்பாட்டம், ரஜினி, கமல் ஆகியோரின் அறிவிப்புகள்" ஆகியவற்றை விட, "ஊடக முதன்மை" பெற்று விட்டது. அதேபோல, ஏப்ரல் 10  இன்  "சேப்பாக்கம் ஐ.பி.எல். ஆட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும், பாரதிராஜா தலைமையிலான செயல்பாடுகளே" ஊடக முதன்மை பெற்றது. ஏற்கனவே, நடுவண் அரசுக்கும், பி.சி.சி.ஐ. க்கும், எடப்பாடி அரசின் , அமைச்சர் ஜெயக்குமார் மூலம், ஊடக நேர்காணல்களில், " ஐ.பி.எல். போட்டியை சென்னையில் நடத்தாமல்  இருங்கள். நடத்தினால், நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம்" என்றே கூறிவந்தனர். அவ்வாறு கூறிக் கொண்டே,, பாரதிராஜா தலைமையிலான எதிர்ப்பிற்கு, "காவல் அனுமதியும்" கொடுத்தனர். அதை ஊடகங்களிடம், பாரதிராஜாவே கூறினார். " நாங்கள் அனுமதி பெற்றுத் தான் அறவழியில் போராடுகிறோம்" என்கிறார். அதேபோல, "ஐந்து மணிக்கு தொடக்கி,  ஆறரை மணிவரை ஆர்ப்பாட்டத்தை அனுமதித்து, ஊடக விளம்பரத்திற்கு " உதவுவதாகவே, அரசின் செயல்பாடும் இருந்தது. ஆறரை மணிக்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கைது செய்து விட்டு, " ரசிகர்களை உள்ளே விட்டு ஆட்டத்தை நடத்திக் காட்டியது" காவல்துறை. அத்பவது. எடப்பாடி அரசு, " தொட்டிலையும் ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளி விட்டதா" எனக் கேட்காதீர்கள். இப்போது, ஆர்ப்பாட்டத்தைக் கரணம் காட்டி, தமிழக அரசு, " இனி பாதுகாப்பு கொடுக்க முடியாது" என்று கூறிவிட்டதால், "ஐ.பி.எல். ஆட்டம்" மாற்றப்பட்டது என்ற செய்தி வருகிறது. இது, ஒருபுறம், "தமிழர்களின் எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி" என்பது உண்மைதான். ஆனால், இதில், இதனை "அரசியல் விளையாட்டு" மறைந்து கிடக்கிறது எனபதும் உண்மைதானே.  

              எது எப்படியோ, " ஒரே கல்லில், ஐந்து மாங்காய்களை, எடப்பாடி பறித்து விட்டாரோ".                

Monday, March 26, 2018

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

ஸ்டெர்லைட்  எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

டி.எஸ்.எஸ்.மணி

24 -03 -2018 சனிக்கிழமை தூத்துக்குடி நகரமே இதுவரை கண்டிராத மக்கள் எழுச்சியைச் சந்தித்தது. தூத்துக்குடி நகரம், ஸ்ரீவைகுண்டம் நகரம், புதியமுத்தூர் நகரம், தருவைகுளம் என எல்லா இடத்திலேயும் கடைகள் அடைக்கப்பட்டன. கடையடைப்பு என்றே அறிவிக்கப்பட்டது. ‘ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு’ என்ற முழக்கத்துடன் கடையடைப்பு செய்யப்பட்டது.
பந்த் என்று முதலில் பேசினார்கள். கேரள உயர் நீதிமன்றம் ஒரு முறையும், உச்ச நீதிமன்றம் ஒரு முறையும், "பந்த் என்றால் சட்டவிரோதம்" என அறிவித்துள்ளன. ஆகவே கடையடைப்பு என்ற சொல்லையே பயன்படுத்தலாம் என்று போராட்டக் கமிட்டி தீர்மானித்தது. போராட்டக் கமிட்டி கேட்ட நாளில் காவல் துறை பேரணிக்கு அனுமதி தர மறுத்துவிட்டது. நீதிமன்றம் சென்ற போராட்டக் கமிட்டி மார்ச் 24இல் பேரணி, பொதுக்கூட்டம் என்ற அனுமதியைத் தருமாறு, உத்தரவைப் பெற்றுவந்தது. ஆனாலும் மாவட்டக் காவல் துறை பேரணிக்கு அனுமதி தரவில்லை. "ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் கூட்டமைப்பு" என்ற பெயரில், ஒருங்கிணைப்புப் பணிகளை எல்லாச் சமூக அமைப்பினரும் செய்தனர்.
இந்த முறை, வணிகர் சங்கம் முன்கை எடுத்து வேலைகளைச் செய்தது. முதலில், 1994இல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடந்தபோதும், 1996ஆம் ஆண்டிலும் வணிகர் சங்கம் இந்த அளவுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பில் ஈடுபடவில்லையே, இப்போது எப்படி என்று வணிகர் சங்கத்தினரிடம் கேட்கப்பட்டது.
“ஆமாம், நாங்கள் அப்போது இறங்கவில்லை. அதன் ஆபத்தை உணர்ந்திருக்கவில்லை. இப்போது போதும் போதும் என்ற அளவுக்கு ஸ்டெர்லைட் புகையாலும் அதன் மாசுகளாலும், தண்ணீரைக் கெடுத்த நிலையைப் பார்த்துவிட்டு, இனியும் ஸ்டெர்லைட் வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். அதனால்தான், ஒவ்வொரு கடையிலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனுக்களில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினோம். ஒவ்வொரு கடையிலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட அட்டைகளை வைத்திருந்தோம். கீழே இறங்கி மக்களை சந்தித்தோம். கடைசியாக, கடையடைப்பையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தோம்" என்கிறார் வணிகர் சங்க ராஜா.
குமாரரெட்டியாபுரத்தில் மக்கள் போராட்டம் தொடங்கியபோது, எதிரே எம்ஜிஆர் பூங்காவில் மக்கள் அமர்ந்து அற வழியில் போராடும்போது. எட்டுப் பேரைக் கைதுசெய்தார்கள். ஆனாலும் அந்தக் கிராம மக்கள், தங்கள் நிலத்தில் சிப்காட் நுழைந்து, நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு நிலம் கொடுப்பதா எனப் பொங்கி எழுந்து போராட்டத்தை இன்றும் தொடர்கிறார்கள். பெண்கள் ஒவ்வொரு இடமாகச் சென்று, போராட்ட நாளான மார்ச் 24 அன்று வாருங்கள் என அணிதிரட்டியபடி இருந்தனர். காவல் துறை கைதுகள் நடத்தும் பாணியைப் பார்த்த சிலர், இனியும் நாம் அரசியல் கட்சிகள் இல்லாமல் போராட முடியாது என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் அரசியல் கட்சிகள் இல்லாமல்தான், 2017 தொடக்கத்தில், ஜல்லிக்கட்டு அறப் போருக்கு மாநிலம் தழுவிய அளவில் இளைஞர்களும் மாணவர்களும் பொதுமக்களும் தாய்மார்களும் திரண்டார்கள் என்ற செய்தி நினைவுபடுத்தப்பட்டது.
ஏற்கனவே 1996இல் அரசியல் கட்சிகள் இறங்கின. ஆனால் அதில் நிறைய சச்சரவுகள் பேசப்பட்டன. பிறகு கட்சிகள் தொடர்ந்து போராட முடியவில்லை. ஆகவே போராட்டம் வெற்றிகரமாக நடக்கவில்லை. அதை உணர்ந்தாவது, இனி கட்சிகளை இழுக்காமல், கட்சி சார்பற்ற மக்களை அணிதிரட்டிப் போராட்டத்தைத் தொடரலாம் என முடிவு செய்தார்கள். அதையொட்டியே வணிகர் சங்கத்தின் முன்முயற்சியையும் அங்கீகரித்து வணிகர் சங்கத் தலைவரையும் கட்சி சார்பற்ற அரசியல் என்ற பார்வையில் அழைத்தனர். அதுவே போராட்டத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.
போராட்டத்தின் மலைக்கவைக்கும் வலிமை
சாதாரணமாக, ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அணிதிரண்டதாக கட்சிகளின் வட்டாரங்களே கூறின. குடும்பம் குடும்பமாக மக்கள் பங்கெடுத்தனர். மாணவ, மாணவிகள் தாங்களாகவே பதாகைகளை எடுத்து வந்தனர். “குச்சி மிட்டாயும் கிலுகிலுப்பையும் இல்லாத திருவிழா போல” இருந்தது என்கிறார் ஒரு செயற்பாட்டாளர். பொதுமக்கள் ஆங்காங்கே தண்ணீர் கொடுத்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள் யாருமே மேடையில் ஏறவில்லை. பல கட்சிகளின் தொண்டர்கள் தாங்களாகவே, கொடியும் கட்சிப் பெயரும் இல்லாமலேயே கலந்துகொண்டனர். நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. சர்வ மதத் திருவிழா என அழைக்கலாம் போல இருந்தது என்றார் ஒரு செயற்பாட்டாளர். பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் பலரும் கருப்பு உடையில் காட்சியளித்தனர். சிறு குழந்தைகள்கூட முழக்கம் போட்டனர். போராட்டத்தைத் துவக்கிய கிராம மக்கள் மேடையில் அமர வைக்கப்பட்டனர்.
இந்த எழுச்சி, வரலாற்றுச் சாதனை. இதுவரை தூத்துக்குடி காணாத அணிதிரளல். ஒட்டுமொத்த தூத்துக்குடியும் சுற்றுப்புறமும் இயல்பாகவே ஒற்றைக் கோரிக்கைக்கு அணிதிரண்ட சாதனை. கட்சி சார்பற்ற மக்கள் எழுச்சி என்றால் இதுதான். அரசியல் கட்சிகள் பின்னால் மக்கள் இருப்பதைவிட, கட்சி சார்பற்ற அரசியலுக்குப் பின்னால்தான் மக்கள் நிற்கிறார்கள் என்பதற்கான அங்கீகாரம். இதுதான் வெற்றிக்கான அரசியல். இதுதான் மக்கள் விரும்பும் அரசியல். இதற்குப் பெயர்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசியல். ஆள்வோர் முயற்சி எடுத்தது, சுற்றுச்சூழலை அழிக்கும் அரசியல். இரண்டு வித அரசியலுக்கு மத்தியில் உள்ள போராட்டமே மக்கள் போர். அதில் கட்சி அரசியலுக்கு இடமில்லை. அதன் தொடக்க அறுதியிடலே, 2017 ஜனவரியின் ஜல்லிக்கட்டு எழுச்சி. அதன் தொடர்ச்சியே நெடுவாசல், கதிராமங்கலம். அதன் தொடர்ச்சியே ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் எழுச்சி.
இது, தேர்தல் அரசியலில் உள்ள ஊழல், மதவாதம், மதச்சார்பு, சாதிவாதம் எல்லாவற்றையும் தாண்டி, தூத்துக்குடியைப் பாதுகாக்க ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றுசேர்த்த நிகழ்ச்சி. நிகழ்ச்சிக்குச் சம்பந்தமில்லாமல், தங்கள் சொந்தக் கொள்கைகளை மேடையில் திணிக்க முயற்சி எடுத்தால், மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு வரும் என்பதற்கான முன்னுதாரண நிகழ்வும் நடந்தது. ஒருவர் தனது கருத்தியல் பார்வையை மதவெறி எதிர்ப்பு என்ற பெயரில் பேச, அதற்கு எதிர்ப்பு வர, பிறகு சம்பந்தப்பட்டவர் உட்பட அது தவறு என்று உணர்ந்து திருத்திக்கொள்ள என ஒரு பாடமாகவே நிகழ்வு நகர்ந்தது. இது கருத்தியல் பரப்புரைக்கான களம் அல்ல.வாழ்வாதாரப் பிரச்சினைக்காக அனைத்துக் கருதியல்காரர்களும் ஒன்றுசேர்ந்து வந்திருக்கும் இடம் எனபதை உணர முடிந்தது. நாம் என்ன கொள்கையை விரும்புகிறோம் என்பதைத் தாண்டி, வேறுபட்ட கொள்கை உள்ளவர்களும் அணிதிரளும் மானுட எழுச்சியின் அடையாளம் இந்தப் பொதுக்கூட்டம். கட்சி சார்பற்ற, மதம், சாதி, கருத்தியல் சார்பற்ற மக்கள் விரும்பும் உடனடி, ஒற்றைக் கோரிக்கைகளைக் கையில் எடுப்பதே வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது உண்மையாகியுள்ளது. மாற்று உலகம் சாத்தியமே என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 20, 2018

சேது கால்வாய் - எங்கே தோண்டினாலும் ஆபத்தா?

சிறப்புக் கட்டுரை: சேது கால்வாய் - எங்கே தோண்டினாலும் ஆபத்தா?

சிறப்புக் கட்டுரை: சேது கால்வாய் - எங்கே தோண்டினாலும் ஆபத்தா?

டி.எஸ்.எஸ்.மணி

சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் ராமர் பாலத்தை உடைக்காமல் கட்டப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு எழுத்துபூர்வமாகத் தெரிவித்த காரணத்தால், சுப்பிரமணிய சுவாமி, சேது கால்வாய் திட்டத்தை எதிர்க்கும் தனது வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார். அதாவது, சேது கால்வாய் திட்டத்தை, நமது சுற்றுச்சூழல்வாதிகளும், மீனவ இயக்கங்களும் கூறுவதுபோல, மீனவர் வாழ்நிலையை அழித்துவிடும் என்பதற்காகவோ, சுற்றுச்சூழலைக் கெடுத்துவிடும் என்பதற்காகவோ, பாஜகவோ சு.சுவாமியோ எதிர்க்கவில்லை. மாறாக, ராமர் பாலம் என்று அவர்கள் அழைக்கின்ற ஆதம் பாலம் வழியாக அந்தத் திட்டம் தோண்டப்படும் என்பதற்காகவே எதிர்க்கிறார்கள். ராமர் பாலம் என்பது புராணச் சின்னம். ஆகவே, அதை உடைக்க அனுமதிக்க மாட்டோம். ஆகவே, வேறு பாதை மூலம் அதே சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்பதுதான் இன்றுள்ள நடுவண் அரசில் ஆட்சி நடத்தும் பாஜக சொல்கிறது.
இன்று மட்டுமல்ல; என்றுமே அது இப்படித்தான் வாதம் செய்துவருகிறது. ஆனால், சேது கால்வாய்த் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் போடப்பட்டபோதிலிருந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சூழல்வாதிகளும் மனித உரிமையாளர்களும் மீனவர் சங்கங்களும் அந்தத் திட்டத்தை முழுமையாக எதிர்த்துவருகின்றனர். அந்தத் திட்டம் மன்னார் வளைகுடாவின் சுற்றுச்சூழலை உடைத்துவிடும் என்றும் ஐந்து லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்துவிடும் என்றும் அவர்கள் பல்வேறு ஆவணங்களுடன் எதிர்த்துப் போராடிவருகின்றனர்.
சேது கால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டைப் பொன் விளையும் பூமியாக்கிவிடும் என்ற நம்பிக்கையில் அண்ணா காலத்திலிருந்து திமுகவும், எம்ஜிஆர் காலத்தில் அதிமுக, மதிமுக மற்றும் பல்வேறு தமிழர் அமைப்புகளும் கூறிவந்தன. ஆங்கிலேயன் அக்காலத்திலிருந்து பலமுறை சேது கால்வாய் திட்டம் பற்றிய ஆய்வுகளை, இந்திய ரயில்வேயும் மற்றும் சில நடுவண் அரசின் நிறுவனங்களும் கணித்துப் பார்த்தன. ஆனால், அவற்றில் எல்லாம் அது சாத்தியப்படும் என்ற விடை கிடைக்கவில்லை. ஆகவே, அது தொடங்கப்படவில்லை. ஆனால், திமுக நடுவண் அரசில் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூவில் இருக்கும்போது, அமைச்சர் டி.ஆர்.பாலு கைகளில் கப்பல் துறை இருக்கும்போது, அவரால் வலியுறுத்தப்பட்டு அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது ஆ.ராஜா நடுவண் அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் திட்டம் தொடங்கப்பட முடியாது.
மன்னார் வளைகுடாவின் முக்கியத்துவம்
அன்றைய நிலையில், அனைத்து நாட்டு பசுமை அமைதி இயக்க அறிவியலாளர்களின் ஆவணங்களையும் சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் துறைத் தலைவர் பேராசிரியர் சுதர்ஷன், பேராசிரியர் சுமதி ஆகியோரின் ஆய்வு ஆவணத்தையும் அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழல்வாதிகள் அந்தத் திட்டத்தை எதிர்த்தனர். அந்த ஆவணங்களில், மன்னார் வளைகுடா ஒரு பயோ ஸ்பியர் ரிசர்வ் பகுதி என்று ஐநாவின் யுனெஸ்கோ மூலம் அங்கீகரிக்கப்பட்டு, அதைப் பாதுகாக்க யுஎன்டிபி என்ற ஐநா வளர்ச்சித் திட்டம் பல கோடிகளைச் செலவழிக்கிறது. சேது கால்வாய் திட்டம் வந்தால் அந்த பயோ ஸ்பியர் ரிசர்வ் அழிந்துவிடும் என்றார்கள். அதுபோலவே, அரிதான விலங்குகளான கடல் குதிரைகள் ஆறு மாதங்கள் ஆதம் பாலத்திற்கு ஒருபுறமும் அடுத்த ஆறு மாதங்கள் வெப்பம் காரணமாக மறுபுறமும் சென்று உயிர் வாழும். அவை அழிந்துவிடும் என்றார்கள். அதுமட்டுமல்ல, தூத்துக்குடிக்கும் ராமேஸ்வரத்துக்கும் மத்தியில் உள்ள 21 தீவுகளில் பவளப் பாறைகள் உள்ளன என்றும் அவை சேது கால்வாயைத் தோண்டினால் அழிந்துவிடும் என்றும் கூறினார்கள்.
உள்ளபடியே, இந்த 21 பவளப் பாறைகளைக் கொண்ட, தீவுகள்தான் 2004ஆம் ஆண்டு கடைசியில், சுனாமி வந்தபோது, சுனாமியின் வேகத்தைத் தடுத்து நிறுத்தி, சிறு பாதிப்புகூட இல்லாமல் தூத்துக்குடி நகரையும் ராமேஸ்வரம் நகரையும் காப்பாற்றின என்ற உண்மையைச் சுற்றுச்சூழல்வாதிகள் முன்வைத்தார்கள். அது மட்டுமின்றி, சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியரின் ஆவணத்தின்படி, ஐந்து லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் கெட்டுவிடும் என்பதையும் மீனவர் சங்கங்கள் முன்வைத்தன.
இத்தகைய எதிர்ப்புகளைக் கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் ஜெயலலிதா, அதிகாரிகள் மூலம் செயற்பாட்டாளர்களின் ஆவணங்களைப் பெற்று தனது நிலைப்பாடான சேது சமுத்திரத் திட்ட ஆதரவு நிலையை மாற்றிக்கொண்டார். திமுக கொண்டுவந்ததால் மாற்றிக்கொண்டார் என்று கூறுவோரும் உண்டு. ஆனாலும், அதிகாரபூர்வமான நிலைப்பாட்டின்படி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நிலைப்பாட்டில் நின்று அந்தத் திட்டத்தை எதிர்த்தார். அதன் பிறகு அதே நோக்கில் உச்ச நீதிமன்றம் சென்றார்.
இப்போது அவர் மறைந்துவிட்ட நிலையில், அவரது வழக்கை எடுத்துக்கொள்ளாமல், அவரது வாதங்களையும் எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்றம் நிற்கிறது. உள்ளபடியே, ஜெயலலிதாவின் நிலைப்பாடும் மீனவர் சங்கங்களின் நிலைப்பாடும் சுற்றுச்சூழல்வாதிகளின் நிலைப்பாடும் ஒன்றுதான். எந்த வழியில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் வந்தாலும் அது அழிவு. ஆகவே, அது தமிழர்களுக்குப் பெருமை அல்ல; மாறாக வெறுமையே என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள். இன்னமும் அவர்கள் அதே நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே, மதுரையில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருடன் முதல்வர் கருணாநிதியும் சேர்ந்து விழா ஒன்றின் மூலம் திட்டத்தைத் தொடங்கினர். இடையில் ஆக்சிஸ் வங்கியிடம் நடுவண் அரசு, திட்டத்துக்கான கடனைப் பெறச் சொல்லியிருந்தது. ஆனால், உலக வங்கிகள் இத்திட்டம் லாபம் தராது என்பதால் கடன் தர முடியாது என்று கூறிவிட்டன.
எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் பெங்களூரைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜான் ஜேக்கப், இந்தத் திட்டம் எவ்வகையிலும் லாபம் தராது என்று கட்டுரை எழுதினார். அதில், ஆப்பிரிக்க கண்டம் தொடங்கி, இங்கே வரும் பெரிய கப்பல்கள் இந்தத் திட்டப் பகுதிக்குள் நுழைய முடியாது என்றும் அவை வந்தாலும் கடலில் செல்லும் வேகத்தைக் குறைக்க எரிபொருள் மாற்றுவதற்குப் பணம், பைலட் கப்பல் வாடகை, சேது கால்வாயில் நிற்க வாடகை ஆகியவற்றைக் கட்ட வேண்டும் என்றும் ஆகவே அவர்கள் திகைத்துவிட்டார்கள் என்றும் எழுதினார். அவர்களுக்கு லாபமில்லை என்பதால் வர இயலாது என முடிவு செய்ததையும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கருங்கடலில் கப்பல்களின் எண்ணெய்ச் சிதறல்களால் கடல் வாழ் உயிரினங்களை அழிந்துவிட்டனவோ... அதுபோல இங்கும் செழிப்பாக உள்ள கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும் என்பதையும் சுற்றுச்சூழல்வாதிகள் எடுத்துவைத்தனர். அப்போது நடுவண் அரசோ, இந்தத் திட்டம் இந்திய ராணுவப் பாதுகாப்புக்கு வேண்டும் என்றனர். அதாவது தமிழர் கடலை அழித்து, மீனவர் வாழ்வைக் கெடுத்து, இந்திய - அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இந்தியப் பெருங்கடலைக் கொண்டுவருவது என்ற அவர்களது திட்டத்தை அறிவித்தனர். ஆகவே திட்ட எதிர்ப்பாளர்களது வாதங்கள் மேலும் வலுப்பெற்றன.
இப்போது இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நடுவண் அரசின் நிர்பந்தம் வருமானால் அதுவே மீண்டும் ஒரு போராட்டச் சூழலை உருவாக்கும்.

Friday, March 9, 2018

திரிபுரா தேர்தல் முடிவு இயற்கையானதா? செயற்கையானதா?

மின்னம்பலம் மின்னம்பலம் 

  சிறப்புக் கட்டுரை: திரிபுரா தேர்தல் முடிவு இயற்கையானதா? செயற்கையானதா?

சிறப்புக் கட்டுரை: திரிபுரா தேர்தல் முடிவு இயற்கையானதா? செயற்கையானதா?

டி.எஸ்.எஸ்.மணி

திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்துவந்தது. இப்போது 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், நிலைமை முழுமையாகக் கவிழ்ந்து, பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. மொத்தம் இருக்கும் 60 இடங்களில், 59 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. ஒரு தொகுதியில், ஒரு வேட்பாளர் மரணத்தை ஒட்டி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. 59 தொகுதிகளிலும், காங்கிரஸ் நின்று எந்தத் தொகுதியையும் வெல்லாமல் தோற்றுள்ளது. பாஜக 50 தொகுதிகளில் நின்று 35 தொகுதிகளை வென்றுள்ளது. பாஜக கூட்டணியாக, ஐபிபிதி 9 தொகுதிகளில் நின்று 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சிபிஎம் 56 தொகுதிகளில் நின்று 16 இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிகளான சிபிஐ, ஆர்பிஐ, பார்வாடு பிளாக் ஆகியவை ஆளுக்கு ஒரு தொகுதியில் நின்று தோல்வி அடைந்துள்ளனர். மம்தாவின் திருணமூல் காங்கிரஸ் 24 தொகுதிகளில் நின்று அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது. இந்தக் கணக்கு எதைக் காட்டுகிறது?
முழுமையான மாற்றத்திற்கான காரணங்களாகப் பல செய்திகளை வட இந்திய ஊடகங்கள் எடுத்துவைக்கின்றன. 35 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக பெற்ற வாக்கு விழுக்காடு 43 % . வெறும் 16 இடங்களில் வெற்றி பெற்ற சிபிஎம் பெற்ற வாக்கு விழுக்காடு அதே 43 % . ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திரிபுராவில் பாஜக பெற்ற வாக்குகள் 1 .54 %. சிபிஎம் பெற்ற வாக்குகள் 48 %. இப்போது அதுவே பாஜகவிற்கு 43 % ஆக மாறியுள்ளது. ஆட்சியை இழந்த சிபிஎம் தனது வாக்குகளில் ஐந்தே விழுக்காட்டை இழந்துள்ளது. அப்படியானால், கீழே இருந்த பாஜக மேலே வர, யாருடைய வாக்குகளை வாங்கியுள்ளது? காங்கிரஸ் கட்சி 2013 ஆம் ஆண்டில் பத்து இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் 35 % வாக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. அது மட்டுமின்றி, இப்போது காங்கிரஸ் கட்சி இரண்டு விழுக்காடு வாக்குகளைக்கூட வாங்கவில்லை. அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் பாஜக இருந்த இடத்திற்கு இப்போது காங்கிரஸ் சென்றுள்ளது. சிபிஎம் தனது வாக்கு வங்கியில் பெரிய அளவு சரிவை சந்திக்காதபோது, பாஜக ஆட்சியைப் பிடிக்க, காங்கிரசின் முழுமையான வாக்கு வங்கியைக் கையில் எடுத்துள்ளது.
இது தவிர திரிபுராவில் மொத்தம் உள்ள அறுபது தொகுதிகளில், 20 தொகுதிகள், "பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள்". அவற்றில் 2013 ஆம் ஆண்டு, சிபிஎம் பெரும் அளவு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. அதாவது சிபிஎம் 18 பழங்குடி தனித் தொகுதிகளிலும், சிபிஐ ஒன்றிலும், காங்கிரஸ் ஒன்றிலும் மொத்தம் 20 தொகுதிகளில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு கட்சிகள் வெற்றி பெற்றிருந்தன. இப்போது அந்த 20 தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் "சுதேசி திரிபுரா மக்கள் முன்னணி" என்ற பழங்குடி மக்களுக்குத் தனி மாநிலம் கோரும் பழங்குடிகளின் கட்சியும், அதைக் கூட்டணியில் சேர்த்துள்ள பாஜக 7 தொகுதிகளிலும், சிபிஎம் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தேர்தலில், பாஜக பழங்குடிகளின் கட்சியான "சுதேசி திரிபுரா மக்கள் முன்னணி"யுடன் கூட்டணியில் நின்றதால், அந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. அதற்கான காரணங்களாக, பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில், 25 ஆண்டுகளாக ஆண்ட சிபிஎம் ஆட்சியில், "அடிப்படை வசதிகள் இல்லை. இன்னமும் பழங்குடி மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். பழங்குடி மக்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வாய்ப்புகள் முழுமையாக வழங்கப்படவில்லை. குடி நீர் தட்டுப்பாடு தீர்க்கப்படவில்லை. அரசாங்கத் திட்டங்களை வட்டார சிபிஎம் ஊழியர்கள் தங்களின் நெருக்கமானவர்களுக்கே வாங்கித் தருகின்றனர்" போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எளிமை மட்டுமே போதுமா?
இது தவிர, சிபிஎம் கட்சி, திரிபுராவில் பெரும்பான்மையாக வசிக்கும், வங்காள இனத்தவரில் உள்ள பின்தங்கிய மக்களது வாக்குகளை முக்கியமாக இதுவரை பெற்றுவந்தது. அவர்களும், பஞ்சாயத்து அளவில் பெருகிவிட்ட ஊழலைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தனர். மாநில அளவில், முதலமைச்சர் மாணிக் சர்க்கார் எளிய வாழ்க்கை வாழ்வதையே அந்தக் கட்சியும் பரப்புதலில் பெரும்பாலும் பயன்படுத்தியது. மாணிக் சர்க்காருக்கு முன்னால் இருந்த முதலமைச்சர் நிருபன் சக்கரவர்த்தியின் எளிய வாழ்க்கையையும், சிபிஎம் கட்சி பெரிதும் பரப்புதலுக்குப் பயன்படுத்திவந்தது. காந்திய முறையிலான தலைவர்களது எளிமையான வாழக்கை என்பது, மக்களது ஏழ்மையான வாழ்க்கையை விரட்டப் போதுமானதல்ல என்று வாக்காளர்கள் உணர்ந்துவிட்ட காலம் இது. ஆகவே அவர்களது மாற்றத்தை விரும்பும் மனப்போக்கு தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மீது பொதுவாக இருக்கும் நம்பிக்கையின்மையும், சிபிஎம் காங்கிரசுடன் ரகசிய உடன்பாடு கொண்டுள்ளதாக ஒரு புரிதலும் மக்களை மாற்றம் கொண்டுவருகிறோம் எனக் கூறும் பாஜக பக்கம் ஈர்த்துள்ளது. அது தவிர, வேலையில்லாத் திண்டாட்டம் தனது பங்கைச் செலுத்தியுள்ளது. ஏழு லட்சம் இளைஞர்கள் அங்கே வேலையில்லாமல் தவிக்கின்றனர். இந்தத் தேர்தலில் பல இளைஞர்கள் வேட்பாளர்களாக வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரிபுராவில், மேற்கு வங்கம் போலவே, "இடதுசாரி ஆதரவு வாக்காளர்கள் என்றும், இடதுசாரி எதிர்ப்பு வாக்காளர்கள் என்றும்" பிரிந்து நிற்கிறார்கள். இதுவரை இடதுசாரி எதிர்ப்பு வாக்காளர்களுக்கு ஒரே வாய்ப்பு காங்கிரஸ் கட்சியாக இருந்தது. இந்த முறை காங்கிரஸ்+ சிபிஎம் என்று அவர்கள் எண்ணியதால், பாஜகவைத் தேர்வு செய்துவிட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியின் பல முக்கியஸ்தர்கள், குறிப்பாக எம்எல்ஏக்கள் திருணமூல் காங்கிரசுக்குத் தாவி, பிறகு பாஜகவிற்குத் தாவியிருக்கிறார்கள். அப்படித் தாவியவர்கள் எல்லோருமே, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். உதாரணமாக, அகர்தலாவிலிருந்து இப்போது ஐந்தாம் முறையாக வெற்றி பெற்றுள்ள, சுதீப் ராய் பர்மன், 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரைத் தலைமை தாங்கி பாஜகவிற்கு அழைத்துவந்தார். அவர் இப்போது 7382 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவில் வெற்றி பெற்றுள்ளார். பதற்காட் தொகுதியில் திபிப் சர்க்கார் 2013 தேர்தலில், காங்கிரஸ் சார்பாக நின்று, 643 வாக்கு வித்தியாசத்தில் வென்றவர், இப்போது பாஜகவில் 5448 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். மோகன்பூர் தொகுதியில், ரத்தன்லால் நாத், 2013 இல் காங்கிரஸ் சார்பாக 775 வாக்கு வித்தியாசத்தில் வென்றவர், இப்போது பாஜக சார்பாக நின்று, 5186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். போர்டோவாலி நகரத்தில் அஷிஸ் சாகா 4000 வாக்குகள் வித்தியாசத்தில், தர்ம நகர் தொகுதியில் பிஸ்வபந்து சென் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிற்குத் தாவிய பிறகு வென்றுள்ளனர். ராம் நகர் தொகுதியில் முன்பு காங்கிரசில் நின்று 65 வாக்குகளில் தோற்ற சுராஜ் தத்தா, இப்போது பாஜக சார்பில் 4855 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஹிரங்காவி 6000 வித்தியாசத்திலும், சிங்காராய் 4000 வித்தியாசத்திலும் பாஜகவுக்கு வந்த பிறகு வெற்றி பெற்றுள்ளனர். தோற்ற காங்கிரஸ் தலைவர்கள் மூன்றாவது இடத்திற்குச் சென்றுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியைப் பிடிப்பதில் பெரிய அக்கறை இல்லை என காங்கிரசுக்காரர்களே கூறுகின்றனர்.
பாஜகவின் வெற்றிக்கு, சுதேசி திரிபுரா மக்கள் முன்னணியுடன் கூட்டணி சேர்ந்தது முக்கியக் காரணம் என்கிறார்கள். வட கிழக்கு மாநிலங்களின் பாஜக முக்கியஸ்தர்களான அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமந்த பிஸ்வ சர்மாவும், ராம் மாதவும், பாஜக தலைவர் அமித் ஷாவிடம், சுதேசி திரிபுரா மக்கள் முன்னணியைச் சேர்ப்பது சிக்கலானதுதான் என்றாலும், அவர்களைச் சேர்த்தால் மட்டும்தான் சிபிஎம் கட்சியை வெல்ல முடியும் என்று கூறினார்கள். அதை அமித் ஷாவும் ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே வெற்றி சாத்தியமானது என்கிறார்கள். ஏனென்றால், அது வங்காளிகள் வாக்குகளில் எதிர்த்து அடிக்கலாம் என எண்ணினார்கள். ஏனென்றால் வங்காள தேசத்திலிருந்து வந்தவர்களை வெளியேற்றுவது என்ற பழங்குடி கட்சி மற்றும் பாஜகவின் கொள்கைகளை வங்காளிகள் கிராமப்புறங்களில் ஏற்பதில்லை. தவிர, சுதேசி திரிபுரா மக்கள் முன்னணி தலைவர் ஏன்.சி.தேவர்மா இப்போதும், தனி பழங்குடி மாநிலம் கோரிக்கையை விடவில்லை. பாஜகவோ தேர்தல் பரப்புரையில் ஒரே திரிபுரா என முழங்கியது.
வடகிழக்கு மநில மக்களின் உணர்வுகள்
திரிபுரா மாநிலத்தின் 2011ஆம் ஆண்டு கணக்குப்படி, மொத்த மக்கள் தொகை, 3673017 அதில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 853920 அதாவது மொத்த மக்கள் தொகையில் 30 -95 % அதாவது முப்பத்தொரு விழுக்காடு மக்கள்தொகையில் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். திரிபுராவின் பழங்குடிகள் மத்தியில் ஆழமாக ஊறிப்போயிருக்கும் வங்காள இனத்தின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு என்ற உணர்வை எப்போதுமே சிபிஎம் கட்சி கண்டுகொள்வதில்லை. அதாவது, வட கிழக்கு மாநிலங்களை இந்திய தேசிய கீதத்தில் இணைக்கவில்லை என்ற உண்மை விவாதிக்கப்படுவதில்லை. வங்காளக் கவி ரவீந்திரநாத் தாகூர் நமக்கெல்லாம் எப்படி மரியாதைக்குரியவரோ, அது போல வட கிழக்கு பழங்குடி மக்களுக்கு இருக்க முடியுமா? இந்தியாவிலிருந்து, வட கிழக்கு மாநிலங்களுக்குச் செல்பவர்களை, அவர்கள், " நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?" எனக் கேட்கிறார்களே, ஏன்? அந்த அளவுக்கு தூரம் தள்ளி" நிற்கும் வட கிழக்கு பழங்குடி மக்களிடம், வங்காள தேசிய இனம் உள்ளே இணைந்து சென்று வாழ்ந்துகொண்டிருப்பதை அவர்கள், ஆக்கிரமிப்பாக பார்க்கிறார்களா என்று தெரிய வேண்டாமா?
1980ஆம் ஆண்டுக்கு முன்பே அஸ்ஸாம் மாநிலத்தில், மாணவர்களின் அமைப்பான, அனைத்து அஸ்ஸாம் மாணவர் அமைப்பு எழுச்சியை உருவாக்கவில்லையா? தங்களது கல்வியையும், வேலைவாய்ப்பையும் வங்காளிகள் பறித்துக்கொண்டதாக அஸ்ஸாமியர்கள் கருதவில்லையா? அதனாலேயே, வங்காளிகளை அதிகமாகக் கொண்ட சிபிஎம் கட்சி, அந்த எழுச்சியை எதிர்க்க நிலைப்பாடு எடுக்கவில்லையா? அதனாலேயே, அஸ்ஸாமியர்கள் சிபிஎம் கட்சி அலுவலகங்களைக் கூடத் தாக்கி, அவர்களை மாநிலத்தை விட்டு வெளியேற்றவில்லையா? அதேபோல நக்சல்பாரி கட்சியின் ஒரு பிரிவான, சத்யநாராயண சிங் தலைமையிலான பிரிவு, அஸ்ஸாம் மாணவர்களின் எழுச்சிக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தபோது, அவர்களையும், ஆசு மாணவர் அமைப்பு விரட்டியடித்ததை நினைவில் கொள்ள வேண்டாமா? அதே நேரத்தில், வினோத் மிஸ்ரா தலைமையிலான நக்சல்பாரி கட்சி, சிபிஐ (எம்எல்) அஸ்ஸாம் மாணவர்கள் தலைமையிலான மக்கள் எழுச்சி ஒரு தேசிய இனத்தின் எழுச்சி. ஆகவே அதை எதிர்க்காமல், அன்று தேசிய இன உரிமைப் போர்தான் பிரதானமானது என்று நிலைப்பாடு எடுத்த காரணத்தால், அந்த மாநிலத்திலேயே தொடர்ந்து பணியாற்ற முடிந்தது என்ற உண்மைகளை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அதன் பிறகு, அந்த மாணவர் அமைப்பே, அஸ்ஸாம் கண பரிஷத் என்ற கட்சியாக மாறிய பிறகு, வெகுமக்களது கோரிக்கையைவிட, முதலாளிகளின் நலன்களை உயர்த்திப் பிடித்ததால், வீழ்ந்தது என்பது வேறு கதை.
அதேபோல, குடியரசுத் தலைவர் தேர்தலில், சென்ற முறை, பிரணாப் முகர்ஜி நின்றபோது, பழங்குடி சமூகத்தின் சங்மா வை எதிர்த்து, வங்காளப் பற்றுடன் பிரணாப் முகர்ஜியை சிபிஎம் கட்சித் தலைமை ஆதரித்ததால், டெல்லியிலுள்ள சிபிஎம் கட்சிக் கிளையில், பெரும் சச்சரவு எழுந்ததும், டெல்லியிலுள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சிபிஎம் கிளை கலைக்கப்பட்டதும், நினைவில் கொள்ள வேண்டும் அல்லவா? அதேபோல, திரிபுரா ஆதிவாசிகள் எந்த அளவுக்கு "அந்நியர்களின் அக்கிரமிப்பாக வங்காள இனத்தவரைக் கருதி, தங்கள் மாநிலத்தின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் பறிபோவதாகக் கருதுகிறார்கள்" என்பது, ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு விவாதப் பொருளாக ஆக வேண்டாமா? அதுதானே, பழங்குடிகளுக்குத் தனி மாநிலம் என்ற கோரிக்கையை, சுதேசி திரிபுரா மக்கள் முன்னணி முன்வைக்கக் காரணமாக இருக்கிறது? ஏற்கனவே, பிகார், மத்தியப் பிரதேசம் மாநிலங்களின் பழங்குடி வாழ் பகுதிகள்தானே, ஜார்க்கண்டாகவும் சத்தீஸ்கராகவும் உருவாகியிருக்கிறது?
இதுபோலப் பல அருமையான, அனுபவங்களை" திரிபுரா தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள மார்க்சிஸ்ட் கட்சி தயாரா என்ற கேள்வியே நமக்கு எழுகிறது.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)