Wednesday, January 30, 2019

ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மறக்க முடியாத மகத்தான ஆளுமை. . . .

ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மறக்க முடியாத மகத்தான ஆளுமை. . . .

ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மறக்க முடியாத மகத்தான ஆளுமை. . . .

டி.எஸ்.எஸ். மணி

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு பல அனுபவங்களை, படிப்பினைகளைக் கொடுத்துள்ளது. சரியாக இஸ்திரி போடப்படாத வெள்ளை ஜிப்பா, வெள்ளை பைஜாமா, தடித்த கண்ணாடி ஆகியவற்றுடன் எளிமையாகத் தோற்றமளிப்பவர். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று ஒரு காலத்தில் பெயர் பெற்றிருந்தார். காங்கிரஸ் அரசாங்கங்களிலேயே, உச்சகட்ட யதேச்சதிகாரி என்று பெயர் பெற்றிருந்த இந்திரா காந்தியின் உச்சகட்ட அடக்குமுறையாகக் கருதப்படும் நெருக்கடி நிலையை எதிர்த்துக் களம் கண்டவர்.
சாதாரணக் களமா அது? மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை எல்லாம் வேட்டையாடிவந்த இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை ஜெயப்ரகாஷ் நாராயணன் முதல், தமிழ்நாட்டு திமுகவினர் வரை, அனைவரையும் சிறையில் தள்ளியபோது, அரசின் கைகளுக்குச் சிக்காமல் தலைமறைவாக இருந்துகொண்டே, இயக்கம் கட்டிய வீரமிகு போராளி. நெருக்கடி நிலை வருவதற்குக் காரணமாக இருந்த அகில இந்திய ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்திய மாபெரும் தொழிற்சங்கவாதி தோழர் ஜார்ஜ் பெர்னானடஸ். அவரது தாத்தா நானூறு ஆண்டுகளுக்கு முன்னால், தூத்துக்குடியை விட்டு மங்களூருக்குச் சென்று வாழ்ந்தவர். மீனவர் பின்னணியைக் கொண்ட தமிழர் என்பதே இவரது வரலாற்றுப் பின்னணி.
1930ஆம் ஆண்டு ஜூன் 3இல், மங்களூரில் ஜோசப் பெர்னாண்டோ, அலைஸ் மார்த்தா பெர்னாண்டோ தம்பதியர்களின் மூத்த மகனாகப் பிறந்தார். ஆறு குழந்தைகளில் இவர் முதலாமவர். இதே நாளில் பிறந்த இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் மேலுள்ள ஈர்ப்பின் காரணமாக இவருக்கு ஜார்ஜ் என்று இவரது தயார் பெயர் சூட்டினார். மங்களூரியன் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த ஜார்ஜ், சிறு வயதிலேயே, குடும்பத்தவர்களால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பணி செய்ய, குருமார் ஆவதற்கான படிப்பில், 1946இல் பெங்களூரில் புனித பீட்டர்ஸ் செமினரியில் 16 வயதில் சேர்க்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகள் சித்தாந்தம் படித்தார். அங்கே ரெக்டர்களுக்குத் தனி மேசை, தனி உணவு என்று இருந்த ஏற்பாட்டில் இவருக்கு உடன்பாடில்லை.
இதுபோன்ற முரண்களைப் பற்றிய தனது சிந்தனைகளுக்கு முழுமையான விடை கிடைக்காத ஒரு நிலையில், ஜார்ஜ் செமினரியை விட்டு 1949இல் வெளியேறினார். மத நம்பிக்கையையும் இழந்தார். அப்போதே மங்களூரில் போக்குவரத்துத் தொழிலாளர்கள், உணவு விடுதித் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினார். 1949இல் பம்பாய் சென்றார். தங்க இடம் இன்றித் தெருக்களிலும் சௌபாதி கடற்கரை மணலிலும் படுத்து உறங்குவார். நள்ளிரவில் காவலர்கள் வந்து எழுப்பி விரட்டிவிடுவார்கள்.
பம்பாயில், அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த தோழர் பிளாசிட் டிமாலோ தலைமையிலான, போர்ட் & டாக் தொழிலாளர் சங்கம் துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் இயங்கிவந்தது. டிமாலோவின் தொழிற்சங்கப் பணிகளில் ஈர்க்கப்பட்டு, ஜார்ஜ் அவருடன் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். நாளிதழ் ஒன்றின் பிழை திருத்தும் பணியில் ஈடுபட்டார். அவரே பாம்பே டாக்சி சங்கம், நகராட்சி ஊழியர் சங்கம் போன்ற அடிமட்ட தொழிலாளர் சங்கங்களைக் கட்டி எழுப்பினார். ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கப் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினர்.
அந்நேரம் ராம் மனோகர் லோஹியாவின் சோஷலிஸக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவருடன் சேர்ந்தார். சோஷலிச தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். பம்பாய் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, 1961 முதல் 1968 வரை பம்பாய் நகராட்சி உறுப்பினராக இருந்தார். 1861 முதல் 1968 வரை பம்பாயில் நடந்த பல வேலை நிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் இணைந்து பயணம் செய்ததால், பொது வெளியில் செயற்பாட்டாளராக ஆனார்.
1967 பொதுத்தேர்தலில், தெற்கு பாம்பாய் தொகுதியில் 20 ஆண்டுகளாக அரசியலில் இருந்த பிரபல காங்கிரஸ் தலைவர் எஸ்.கே. பாட்டீல் என்ற சதாசிவ கனோஜி பட்டீலைத் தோற்கடிக்க இந்தப் பணிகள் மூலம் கிடைத்த ஆதரவும் புகழும் உதவின. ஜார்ஜ் 48.50% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1969இல், ஜார்ஜ் பெர்னானட்ஸ் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் (எஸ்.எஸ்.பி.) பொதுச் செயலாளராக இருந்தார். 1973இல் எஸ்.எஸ்.பி.யின் தலைவரானார்.
சக்கரங்கள் ஓடாது!
1970இல் தொடக்கி, தனியார் நிறுவனர்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சங்க வேலைகளில் ஈடுபட்டார். ரயில்வே தொழிலார்களுக்கு, 1947 முதல் 1974 வரையிலான, மூன்று சம்பள ஆணையங்களிலும் சம்பள உயர்வு இல்லை. கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு என்ற அமைப்பைக் கட்டி எழுப்பினார் ஜார்ஜ். 1974 மே 8இல், தேசிய ரயில்வே ஒருங்கிணைப்புக் குழு (என்.சி.சி.ஆர்.எஸ்.) உருவானது.
ரயில்வே தொழிலாளர் போராட்டம் என்ற இந்திய அளவிலான இதுவரை இல்லாத மாபெரும் போராட்டத்தை அறிவித்தார் ஜார்ஜ பெர்னாண்டஸ். சக்கரங்கள் ஓடாது என்ற அந்தப் போராட்ட முழக்கம் பிரபலமானது. பம்பாயில் இருந்த மின்வாரியத் தொழிலாளர்களும், போக்குவரத்துத் தொழிலாளர்களும் ரயில்வே போராட்டத்தை ஆதரித்தனர். பிகாரில் ரயில்வே தொழிலாளர்கள் கயாவில் தண்டவாளத்தில் அமர்ந்து மறித்தனர். சென்னை ஐ.சி.எஃப்.இல் இருந்த 10000 தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஜார்ஜ் உட்பட முப்பதாயிரம் தொழிலாளர்கள் கைதானார்கள். தொழிற்சங்கத்திற்கு உள்ளேயே வேறுபட்ட பேச்சுக்கள் இருந்தது என்று ஜார்ஜ் கூறினார். அதனால், மே 27இல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. தொழிலாளர்கள் விடுதலை ஆனார்கள். ஜார்ஜ் விடுதலை செய்யப்படவில்லை. அந்த ரயில்வே தொழிலாளர் போராட்டம் ஜார்ஜை இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற நிலைக்கு உயர்த்தியது.
1875இல் இந்திரா காந்தி பல்வேறு நெருக்கடிகளால் கோபக்கனலாக மாறி, 1975 ஜூன் 25இல் நெருக்கடி நிலையை அறிவித்தார். ஜார்ஜ் முன்னின்று நடத்திய ரயில்வே வேலைநிறுத்தமும் அந்த நெருக்கடிகளில் ஒன்று என்பதால் ஜார்ஜ் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவானார். ஜார்ஜ் எங்கே எனக் கேட்டுக் காவல் துறை, அவரது தம்பி லாரன்ஸ் பெர்னாண்டஸைச் சித்திரவதை செய்தது. ஜார்ஜின் நண்பர் ஸ்னேஹலதா ரெட்டி கைது செய்யப்பட்டார். விடுதலையாகி அந்தத் தாக்கத்தில் இறந்து போனார்.
புகலிடம் தந்த தமிழகம்
நெருக்கடி நிலையின்போது தலைமறைவான ஜார்ஜ் தமிழ்நாட்டில் தங்கியிருந்தார். அவருக்கு அப்போது முதல்வர் கலைஞரின் ஆதரவு கிடைத்தது. விழுப்புரத்தில் ரயில்வே தொழிலாளர் சங்கம் வலுவாக இருந்தது. திமுகவைச் சேர்ந்த வண்டிப்பாளையம் சுப்பிரமணியம் ஜார்ஜுக்கு அடைக்கலம் கொடுத்ததாகச் செய்தி பரவியதுண்டு. 1975 ஜூலையில் பரோடா டைனமைட் வழக்கு ஜார்ஜ் மீது போடப்பட்டது. பரோடா ஊடகவியலாளர் சங்கத் தலைவர் மீதும், அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் மீதும் இணைத்து அந்த வழக்கு போடப்பட்டது. பின்னாளில் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த பட்வாரி மீதும் ஜார்ஜ் உடன் சேர்ந்து சதி செய்ததாக அந்த டைமனமைட் வழக்கு போடப்பட்டது.
டைனமைட் வெடிபொருளைத் தயார் செய்து, இந்தியா முழுதும், அரசு கழிப்பிடங்களில் வெடிக்கச் செய்வதும், இந்திரா காந்தி பேசிவரும் கூட்டங்களில் சிறிது தள்ளி, யாரையும் கொல்லாமல், பீதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் வெடிக்கச் செய்யவும் திட்டமிட்டார்கள் என்பதே அந்த வழக்கு. வாரணாசியில் இந்திரா காந்தி பேச வருவதற்கு நாலு மணிநேரம் முன்பு வெடிக்கச் செய்ய திட்டமிட்டதாக அந்த வழக்கு கூறியது. அதனாலேயே பரோடா டைனமைட் வழக்கு என்று அது பிரபலமானது. புனே அருகே பிம்ப்ரி யிலிருந்து பாம்ப்பே செல்லும் ரயில் வண்டியில்,வருகின்ற ஆயுதங்களை கொள்ளை அடித்து, அதை வைத்து நாடு முழுவதும் வெடி வெடிக்க ஏற்பாடு செய்தார் என்றும் ஜார்ஜ் மீது வழக்கு. அந்நிய நாட்டு உதவியுடன் ஹாம் வானொலி தயார் செய்யத் திட்டமிட்டதாகவும் வழக்கு. தலைமறைவாக இருக்கும்போதே ஜார்ஜ் பெர்னாண்டஸை கொன்று விட அரசு துடிப்பதாகச் செய்தி வந்தது. அதனால் ஜார்ஜ் கொல்கத்தாவில் கைதானார். பரோடா சிறையில் அடைக்கப்பட்டார். ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் ஜார்ஜ் சிறையில் சித்திரவதைக்கு உள்ளாவதைக் கண்டித்தன. அவர் டில்லி திஹார் சிறைக்கு மாற்றப்பட்டார்.
நெருக்கடி நிலையை எதிர்த்து நாடே கொந்தளித்ததால் 1977 பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் வந்தது. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். பிகார் மாநிலத்தில் உள்ள முஸாபர்பூர் தொகுதியில் வென்ற ஜார்ஜ் ரயில்வே அமைச்சரானார். அந்த அமைச்சரவையில் பாரதிய ஜனசங்கமும் ஒரு அங்கம். ஜனதா என்னும் பெயரில் ஜனசங்கம் உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றாக இணைந்திருந்தன. ஜனதாவில் உறுப்பினராக இருந்துகொண்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்று ஜார்ஜ் பிரச்சினையைக் கிளப்பினார். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆட்சியில் பங்கு வகித்திருந்த சரண்சிங் பிரதமர் மொரார்ஜிக்கு எதிராகக் கலகக் கொடி எழுப்பினார். இதனால் 1979இல் ஜனதா கட்சி உடைந்தது. ஆட்சி கவிழ்ந்தது. சரண்சிங் பிரதமரானார்.
1980இல் நடைபெற்ற ஏழாவது பொதுத் தேர்தலில் ஜனதா தோற்றது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஜார்ஜ் அந்தத் தேர்தலில், பெங்களூர் வடக்கு தொகுதியில் நின்றார். அவரை எதிர்த்த ஜாபர் சேட் வெற்றி பெற்றார். 1989இல் பிகாருக்கு ஜார்ஜ் மாறினார். 1989, 1991 தேர்தல்களில், பிகார் மாநிலத்தில், முஸாபர்பூர் தொகுதியில் நின்று வென்றார்.
1988இல் பெங்களூரில் ஜனதா தளம் உருவானது. அதில் ஜார்ஜ் முக்கியப் பங்காற்றினார். அடுத்து வந்த வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியில் அமைச்சரானார். கொங்கண் ரயில்வே திட்டம் கொண்டுவந்தார். பிகாரில் லாலு பிரசாத் யாதவுக்கும் நிதிஷ் குமாருக்கும் சண்டை பெரிதானது. ஜனதா தளம் உடைந்தது. லாலுவிற்கு எதிராக சமதா கட்சியை நிதிஷுடன் சேர்ந்து 1994இல் ஜார்ஜ் உருவாக்கினார்.
தமிழகப் போராட்டக் களத்தில் ஜார்ஜ்
இடையில் ஜார்ஜ் தமிழ்நாட்டு இயக்கங்களில் முக்கியப் பங்காற்றினார். 1989இல் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களுக்கு வழி காட்டினார். தூத்துக்குடியில் பெரிய பேரணியை எங்களுடன் நடத்தினார். எங்களுக்கு அன்று அணு உலை எதிர்ப்பைக் கற்றுக் கொடுத்த, ஜீ. ராமேஷ் என்ற ஊடகவியலாளரும், அறிவியலாளருமான தோழர் நாகார்ஜுனன், ஜார்ஜுக்கு நெருக்கடி நிலை காலத்திலேயே நெருக்கமானவர். ஜார்ஜை எனக்கும், ஆண்டன் கோமஸுக்கும் அவர் அறிமுகம் செய்துவைத்தார்.
‘அதர் சைடு’ என்ற ஆங்கில ஏட்டில் எழுதிய அணு உலை எதிர்ப்பு பற்றிய கட்டுரையை எங்களுக்கு விளக்கி வகுப்பு எடுத்தார் ஜார்ஜ். அதேபோல, 1996இல், தனது நண்பர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எங்களுடன், தூத்துக்குடியில் மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பேரணிக்கு தலைமை தாங்கினார். தனது நண்பர் கருணாநிதி ஏன் காவல் துறையை ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களான, சூழலியல்வாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார் என்று தூத்துகுடி மேடையிலேயே கேள்வி எழுப்பினார்.
பாஜகவுடன் ஜார்ஜ்
1996, 1998 ஆகிய ஆண்டுகளில் அமைந்த இரண்டு கூட்டணி ஆட்சியிகளிலும் ஜார்ஜ் அமைச்சராக இருந்தார். பிறகு, அவருடைய சமதா கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. இந்த நடவடிக்கைகள் எல்லாமே காங்கிரஸ் எதிர்ப்பு என்ற அவரது கொள்கையிலிருந்தே முடிவு செய்யப்பட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமைப்பாளராக ஜார்ஜ் நியமிக்கப்பட்டார்.
1999 ஜூலையில் ஐக்கிய ஜனதா தளத்துடன் சமதாவை இணைத்தார். இரண்டாவது, மூன்றாவது தேஜகூ ஆட்சியில் அமைச்சராக இருந்தார். பாதுகாப்புத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டது. கார்கில் யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியதற்காகப் போற்றப்பட்டார். பொக்ரான் அணுகுண்டு சோதனையை நடத்தினார். எந்த ஜார்ஜ் அணு குண்டு மாத்திரமல்ல, அணு உலையே கூடாது என்று எங்களுடன் போராடினாரோ, அதே ஜார்ஜ் ஆட்சிக்கு வந்தவுடன், அணு குண்டு சோதனையை நடத்தினார் என்பதே விந்தை!
மனித உரிமைச் செயற்பாட்டாளராக ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜெயபிரகாஷ் நாராயணனால் நெருக்கடி நிலை காலத்தில், சிறைக்குள் இருந்தே தோற்றுவிக்கப்பட்ட பி.யு.சி.எல். என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினராக இருந்தார். 1980இம் ஆண்டு, சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு விடுதியில் நடந்த பியுசிஎல் தேசியக் குழுவில் பங்குகொண்டார். அப்போது நக்சல்பாரிகள் மீதான காவல் துறையின் ஜோலார்ப்பேட்டை தாக்குதல் பிரச்சினையாக்கப்பட்டுப் பேசப்பட்டது.
இரண்டும் ஒன்றல்ல
அந்நேரம் பியுசிஎல் அமைப்பின் தமிழ்நாடு தலைவராக இருந்தவர் சோ ராமசாமி. அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருந்தவர் அருண் ஷோரி. அவர்கள் இருவரும், நக்சல்பாரிகள் வன்முறையையும், காவல் துறையின் வன்முறையையும் இரண்டையும் சமமாக, ஒன்றே போலக் காண வேண்டும் என வாதாடினர். அதை எதிர்த்து, ஜார்ஜ் பெர்னாண்டஸ், காவல் துறையின் வன்முறை என்பது வினை என்றும் நக்சல்பாரிகள் செய்வது எதிர்வினை என்றும் வாதாடினார். அவர் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உறுப்பினராகவும் இருந்தார்.
ஜார்ஜ் ஊடகவியலாளராகவும் செயல்பட்டார். 1948இலேயே ‘கொங்கண் யூத்’ என்ற மாத இதழ் ஆசிரியராக இருந்தார். பைதாவணி என்ற கன்னட வார இதழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1952, 53 ஆண்டுகளில், டாக்மான் என்ற வார இதழில் பணியாற்றினார். அதர் சைடு என்ற ஆங்கில இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
அண்டை நாடுகளில் நடந்துவரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் முதன்மையாகத் திகழ்ந்தார் ஜார்ஜ். 1997இல் டில்லியில், ஈழப் பிரச்சினை பற்றிய கருத்தரங்கை நடத்தி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பகிரங்கமாகவே செயல்பட்டவர் ஜார்ஜ். 1999இல் ராமேஸ்வரத்தில் திராவிடர் கழகம் நடத்திய புலிகள் ஆதரவு மாநாட்டிற்கு வந்து சிறப்பித்தார்.
அதேபோல, சீனா திபெத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி, தலாய் லாமா குழுவைச் சேர்ந்த அகதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்கள். அவர்களின் மனித உரிமை நியாயங்களை ஜார்ஜ் தொடர்ந்து பேசிவந்தார். அவரது டில்லி இல்லத்தில், நாம் திபெத்தியர்களைக் காணலாம். மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக, ஜநாயகத்திற்காகப் போராடிய இயக்கமான, ஆங் சாங் சு கியூவை ஆதரித்துப் பரப்புரை செய்துவந்தார்.
கார்கில் யுத்த காலத்தில், அவர் மீது சவப்பெட்டி ஊழல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. அவருக்கும் முப்படைத் தளபதிகள் சிலருக்கும் இடையில் நிகழ்ந்த முரண்பாடே இந்தக் குற்றச்சாட்டுகளாக மாறியது என்று கூறப்பட்டது.
கார்கில் யுத்தத்தின்போது, சியாச்சின் என்ற உயர்ந்த மலை உச்சிக்கு 18 முறை சென்று, பாகிஸ்தானின் ஊடுருவலை எதிர்த்துப் போராடும் இந்திய வீரர்களுக்கு உத்வேகமூட்டியவர் ஜார்ஜ். சியாச்சினுக்குச் சென்ற ஒரே பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர். அந்த வயதிலும், உச்சி மலைக்குச் சென்றதாலோ என்னவோ, தலையில் தாக்கம் ஏற்பட்டு, 2005ஆம் ஆண்டு முதல் அல்சைமர் என்ற மறதி நோய்க்கு ஆளானார். பதிமூன்று ஆண்டுகள் மறதி நோயால் அவதிப்பட்டு அவர் மறைந்தார்.
கடைசிக் காலத்தில் அவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டார். ஆனால், அவர் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்ட போராட்டங்களும், செய்த சாதனைகளும் அவரது பங்களிப்புகளும் என்றும் மக்களால் நினைவில் கொள்ளப்படும்.

Friday, November 9, 2018

மாவோயிஸ்ட் தலைமை மாற்றப்பட்டதா?

சிறப்புக் கட்டுரை: மாவோயிஸ்ட் தலைமை மாற்றப்பட்டதா?

சிறப்புக் கட்டுரை: மாவோயிஸ்ட்  தலைமை மாற்றப்பட்டதா?

டி.எஸ்.எஸ்.மணி

சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைமை மாற்றப்பட்டது என்பதாகப் பல ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்களை வைத்து யூகமாகச் செய்தி வெளியிட்டு வருகின்றன. மாவோயிஸ்ட் கட்சி இன்று இந்தியாவின் இதயப் பகுதியான, மத்திய இந்தியாவில், அரசுக்கும் துணை ராணுவப் படைக்கும் சவாலாக இருக்கிறது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், ஒடிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவை ஒட்டிய ஆந்திர மாநிலத்திலும் இன்று மாவோயிஸ்ட்டுகளுடைய நடவடிக்கைகள் ஊடகங்களால் கணிக்கப்படுகின்றன.
மாவோயிஸ்ட் கட்சியின் பின்னணி
இந்த மாவோயிஸ்ட் கட்சி 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் நாள் தோழர் கணபதி என்று அழைக்கப்படும் முப்பளா லக்ஷ்மண ராவ் மூலம் தோற்றுவிக்கப்பட்டது. உடனடியாக அக்டோபர் 14இல் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே ஒன்றுபட்ட ஆந்திரா, ஒடிசா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த மக்கள் யுத்தம் குழுவினரும், ஒன்றுபட்ட பிகாரில் பணியாற்றிவந்த எம்சிசி என்ற மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் கட்சியும், பிகாரில் பணியாற்றிவந்த பார்ட்டி யூனிட்டி குழுவும் இணைந்து இந்த மாவோயிஸ்ட் கட்சியைத் தோழர் கணபதியின் முன்முயற்சியில் ஏற்படுத்தினார்.
தோழர் கணபதி என்ற முப்பளா லக்ஷ்மண ராவ், இன்றைய தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஜாகிட்டியால் மாவட்டத்திலிருக்கும் பீர்பூம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர், கொண்டப்பள்ளி சீதாராமையா தலைமையிலான மக்கள் யுத்தம் குழுவில் பணியாற்றி வந்தார்.கொண்டப்பள்ளி சீதாராமையா, 1967இல் மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல்பாரி கிராமத்தில் உருவான நக்சல்பாரி ஆயுத எழுச்சியின் மூலம் 1969இல் ஏப்ரல் 22ஆம் நாளான லெனின் பிறந்த நாளில் பிறந்த, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்ற தோழர் சாரு மஜூம்தார் தலைமையிலான கட்சியிலிருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்து, மக்கள் யுத்தம் என்ற குழுவை ஆந்திராவில் முதலில் உருவாக்கினார். அதுவே அன்று, தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் எனப் பல்வேறு மாநிலங்களில் உள்ள புரட்சிகரக் குழுக்களையும் இணைத்துக்கொண்டது.
மக்கள் யுத்தம் குழு என்ற மார்க்சிய லெனினிய அமைப்பில்தான், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.எம்.கோதண்டராமன், மறைந்த தோழர் பெண்ணாடம் கலியபெருமாள், மறைந்த தோழர் தமிழரசன் மற்றும் தோழர்கள் தமிழ்வாணன், சிவலிங்கம், ஏலகிரி ராமர் போன்றோர் பணியாற்றிவந்தனர். அப்போது தமிழ்நாட்டில் அந்தக் குழுவினருக்கு, கூட்டகக் குழு என்று பெயர். அதேநேரம், தமிழ்நாட்டில், தோழர் சாரு மஜூம்தார் வழியை ஏற்றுக்கொண்ட குழுவினரும் மறைந்த தோழர்கள் காரைக்குடி பழனியப்பன், தாத்தா என்ற பாண்டியன், மச்சக்காளை, ராயப்பன் போன்றோர் தலைமையில் செயலாற்றி வந்தனர். அது தவிர, கூட்டகக் குழு அமைப்பிலிருந்து பிரிந்து, மறைந்த தோழர்கள் கண்ணாமணி, ஜெயபால், தனபால் போன்றோரும் தனி அமைப்பாகச் செயல்பட்டு வந்தனர்.
கொண்டப்பள்ளி சீதாராமையாவுடன் கருத்து வேறுபாடு வந்த பிறகு, தோழர் கணபதி என்ற முப்பளா லக்ஷ்மண ராவ், தனது தலைமையில் இருந்த மக்கள் யுத்தம் குழுவை, எம்சிசி, பார்ட்டி யூனிட்டி ஆகிய குழுக்களுடன் இணைத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சி கடந்த பதினான்கு ஆண்டுகளில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், ஒடிசா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் உத்தரப் பிரதேசம், டெல்லி எனத் தனது செல்வாக்கு மண்டலத்தை விரிவுபடுத்தியது. அப்போது தமிழ்நாட்டில் ஏற்கனவே கொண்டப்பள்ளி சீதாராமையாவுடன் செயல்பட்டுவந்த மேலே குறிப்பிட்ட தோழர்கள், புதிய மாவோயிஸ்ட் கட்சியில் சேராமல் தனித்தனியாகப் பிரிந்து செயல்படத் தொடங்கினர்.
போர்க் குணம் மிக்க படையினர்
ஆனாலும், தோழர் கணபதி தலைமையிலான மாவோயிஸ்ட் கட்சி, இந்தியாவின் இதயப் பகுதியில், ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது. மாவோவின் ராணுவக் கோட்பாடுகளின், சிந்தனை வழியில், கெரில்லா போராட்டம், நிலையான படை, சீரான ராணுவம் ஆகியவற்றை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறது. கட்சியின் தலைமையில் சிஎம்சி என்ற மத்திய ராணுவ ஆணையம் ஒன்றையும் உருவாக்கி வைத்துள்ளது. மக்கள் விடுதலை கெரில்லா படை என்ற பெயரில், பிஎல்ஜிஏ என்று அடிப்படை உழைக்கும் மக்களான, பழங்குடிகளையம், வனவாசிகளையும் இணைத்துக்கொண்டு இந்திய அரசுக்கு எதிராகப் போரில் ஈடுபடுகிறது.
அத்தகைய போர்க் குணம் மிக்க, மக்கள் விடுதலை கெரில்லா படை, மாவோயிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவக் கமிஷன் தலைமையில் செயல்படுகிறது. அந்த மத்திய ராணுவக் கமிஷன் தலைவராக இருப்பவர்தான் 63 வயதுள்ள பசவராஜ் என அழைக்கப்படும் தோழர் நம்பள்ள கேசவராவ். இவர் இன்றைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஜியான்னபேட் கிராமத்தைச் சேர்ந்தவர்.
தோழர் பசவராஜ், மாவோயிஸ்ட் கட்சியின் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலான ராணுவ நடவடிக்கைகளில், இந்தியத் துணை ராணுவப் படையின் மீதான, ஆம்புஷ் என்ற நகர்ந்து செல்லும் படையின் மேலான தாக்குதல்களில், கடும் சேதங்களை ஏற்படுத்தும் வண்ணம் திட்டமிட்டுத் தாக்குதல்களை நடத்தியவர் என்ற பெயர் பெற்றவர். அத்தகைய தோழர் பசவராஜ், இப்போது, மாவோயிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு எடுத்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 71 வயதான தோழர் கணபதி, வயது மூப்பின் காரணமாக பொதுச் செயலாளர் பொறுப்பைத் தோழர் பசவராஜ் வசம் கொடுத்துவிட்டதாகவும் அவை சித்திரிக்கின்றன.
யார் தந்த செய்தி?
இச்செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு, இந்தச் செய்திகளைக் கொடுத்தவர் என்று சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரணடைந்த ஒரு மாவோயிஸ்ட் அடையாளம் காட்டப்படுகிறார். அவரும் தன்னிடம் ஒரு தலைமறைவுத் தோழர் கூறினார் என்றுதான் சொல்லியுள்ளார். ஆகவே இது உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்திதான். அதிகாரபூர்வமாக மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து,அறிவிக்கப்பட்ட ஒரு செய்தி அல்ல. மாவோயிஸ்ட் கட்சி தங்களது அதிகாரபூர்வமான செய்திகளை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள். அவ்வாறு அவர்களிடமிருந்து எந்தச் செய்தியும் இதுவரை வரவில்லை.
ஆனாலும், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூடியபோது இவ்வாறு முக்கியப் பொறுப்பை மாற்றிக் கொடுப்பது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது என்று தெரிகிறது. ஆனாலும் முடிவு எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் இருக்கும் 33 உறுப்பினர்களில் 17 தோழர்கள், தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள். நான்கு பெண் தோழர்களும் மத்தியக் குழுவில் இருக்கிறார்கள். அது தவிர, ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடிச் சமூகத்தின் தோழர்களும் மத்தியக் குழுவில் பங்கு கொண்டுள்ளனர்.ஆகவே, அவர்கள் கூடி எடுக்கின்ற முடிவுதான் கட்சியின் முடிவாக இருக்க முடியும்.
பசவராஜின் உறுதியான தலைமை
தோழர் பசவராஜ், 1980ஆம் ஆண்டு, ஆர்எஸ்யு என்ற, மக்கள் யுத்தக் குழுவின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் சங்கம் பொறுப்பாளராக இருக்கும்போது, ஆர்எஸ்எஸ் உடன் நடந்த மோதலில், தலைமறைவானவர் என்கிறது அந்தச் செய்தி. தோழர் பசவராஜ், வாரங்கல் நகரில் ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜ் எனச் சொல்லப்படும் பிராந்தியப் பொறியியல் கல்லூரியில் பயின்றவர். எழுபதின் பத்தாண்டுகளில் ஆந்திர மாநில, வாரங்கல் ஆர்ஈசி (ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜ்) உட்பட இந்தியாவின் எல்லா ஆர்ஈசிக்களும் மாவோயிஸ்ட் கருத்துகளின் கோட்டைகளாக இருந்தன.பொறியியல் படிப்பு படித்த மாணவர்கள், தங்களது படிப்பின் அடிப்படையில்,இந்தியாவில் தொழில்மயப்படுத்தல் நடக்கவில்லையே என ஏங்கித் தவித்தபோது, அதற்குத் தடையாக இருக்கும் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற புரட்சிகரக் கருத்தை உள்வாங்கித் தோழர் சாரு மஜூம்தாரின் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கிய காலமாக அது இருந்தது.அப்படித் தனது இளமைக் காலத்திலேயே ஆழமான கருத்தியல் தளத்தில் கருக்கொண்ட புரட்சிகரக் கொள்கைகள்தான் தோழர் பசவராஜை இன்று வரை உறுதிப்படுத்தி வைத்துள்ளது.
இதற்கிடையே, அரக்கு சட்டமன்ற உறுப்பினரான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான கிடாரி சர்வேஸ்வர் ராவ் செப்டம்பர் மாதம் 23ஆம் நாள் கொல்லப்பட்டதையும், பசவராஜ் தலைமை எடுத்ததையும் ஊடகங்கள் முடிச்சு போடுகின்றன. பல்வேறு வகையான ராணுவத் தந்திரங்களை பசவராஜ் கைக்கொள்கிறார் என அவை விவரிக்கின்றன. ஆந்திரா - ஒடிசா எல்லைப் பகுதிகளில், பசவராஜ் என்ற தோழர் கேசவராவ் கடுமையாகப் பணியாற்றியுள்ளார் எனவும் அவை சித்திரிக்கின்றன. அதேசமயம் வடக்கு தெலங்கானா பிராந்தியக் குழு பொறுப்பாளர் தோழர் பிரசாத், தந்திரமான பின்வாங்கல் என்ற யுத்த தந்திரத்தைக் கடைப்பிடித்துவருகிறார். அதனாலேயே, தற்போதைக்கு அந்தப் பகுதிகளில், தாக்குதல்கள் இல்லை. இத்தகைய நிலைப்பாட்டை தோழர் பசவராஜ் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ஊடகங்கள் வர்ணிக்கின்றன.
மொத்தத்தில் ஊடகங்களின் பார்வையில், தோழர் கணபதி அதிகமாகக் கருத்தியல் சார்ந்து இருந்தவர் என்றும், தோழர் பசவராஜ் அதிகமாக ராணுவத் தந்திரம் சார்ந்து இருப்பவர் என்றும் ஒரு விளக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியில் எப்போதுமே, மத்தியக் குழுவும், அதற்கு மேலே உள்ள பொலிட் பீரோ என்ற அரசியாக தலைமைக்கு குழுவும், அனைத்திற்கும் மேலே உள்ள கட்சிக் காங்கிரஸ் என்ற பொதுக் குழுவும்தான் கொள்கை முடிவுகளை எடுக்கும் என்பதை ஏனோ இவர்கள் அறிந்திருக்கவில்லை.
இப்போது சத்தீஸ்கரிலும் தெலங்கானாவிலும் நடைபெற இருக்கும் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் இந்த மாவோயிஸ்ட் கட்சியின் செயல் தந்திரங்கள் எத்தகைய தாக்கங்களைச் செலுத்தும் என்றும் பேசிவருகிறார்கள். கணிசமானவர்கள் வெளியே வந்து தேர்தலில் நடுவண் அரசை ஆளும் மதவாதக் கட்சிக்கு எதிராக வேலை செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் சில அவதானிகளிடம் இருக்கிறது. சமீபத்தில், சத்தீஸ்கரில், மாயாவதி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாவோயிஸ்ட்டுகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்று கூறியது இவர்களை இப்படிச் சிந்திக்க வைக்கிறது. ஆனாலும், மாவோயிஸ்ட்டுகள் மத்தியில், தற்போது செயல்தந்திரமாக, நடுவண் மதவாத ஆட்சிக்கு எதிராகப் பரந்த ஐக்கிய முன்னணியை ஜனநாயக ரீதியாகக் கட்டமைக்க வேண்டும் என்ற கருத்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

Sunday, October 21, 2018

பக்தியா? சக்தியா? தீர்மானிப்பது காவல்துறையும், அமைச்சருமா?----சிறப்புக் கட்டுரை--டி.எஸ்.எஸ்.மணி

சபரிமலை:- பக்தியா? சக்தியா? தீர்மானிப்பது காவல்துறையும், அமைச்சருமா?----சிறப்புக் கட்டுரை--டி.எஸ்.எஸ்.மணி 

Friday, September 28, 2018

சபரிமலையில் பெண்கள்: தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது?

சபரிமலையில் பெண்கள்: தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது?

சபரிமலையில் பெண்கள்: தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது?
டி.எஸ்.எஸ். மணி
சபரிமலையில், பெண்களுக்கும் அனுமதி என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன?
உலகமெங்கும்,ஒவ்வொரு நாட்டிலும், ஆளவந்த சிறுபான்மை சக்திகள், பரந்துபட்ட மக்களை மயக்க நிலையில் வைத்திருக்க, ஆள்வோரை எதிர்த்த நீதிக்கான எழுச்யில் ஒன்றுபட்டுத் திரள்வதைத் தடுக்க சமூக, பொருளாதார, அரசியல், கட்டமைப்பை இருப்பது போலவே பாதுகாக்க, ஆன்மிகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையே, காரல் மார்க்ஸ், மதம் மனிதருக்கு அபின் என்றார்.
அந்த ஆன்மிகத்தின் அம்புறாத் தூணியில் உள்ள அம்புகள் பல்வேறு நம்பிக்கை நீரோட்டங்களாக (Sects) மதங்களாக (Religions) பவனி வருகின்றன. அதில் ஒரு நீரோட்டமே, சபரிமலை ஐயப்பன்.
அத்தகய ஆன்மிக ஆயுதத்தில், ஆண், பெண் வேறுபாடு வேண்டாம் என்ற இன்றைய காலத்துக்கு ஏற்ற தீர்ப்புதான் இது. நம்பிக்கை நீரோட்டத்தை விட்டு ஒரு சரி பாதி பாலினத்தை விலகி நிற்கச் செய்யாமல் தடுக்கிறது. பெரும்பான்மை மத்த்தின் நம்பிக்கையைக் கட்டிக்காக்க, அதைப் பாலின வேறுபாடு இன்றிப் பின்பற்றச் செய்ய வேண்டும் என்ற அறிவார்ந்த உணர்தல்களை, நீதியரசர்கள் கொள்கையாகக் கொண்டுள்ளதால், பழைய பழக்கங்களை மாற்றி அனைவரையும் தங்கள் நம்பிக்கை வலைக்குள் வீழ்த்த எடுத்த தந்திரமான தீர்ப்புதான், அனைத்துப் பாலினதிற்கும், ஆன்மிகச் சமத்துவம் என்ற கருத்துக் கோப்பு.
உலகமெங்கும் இணைய தலைமுறை, இளம் பெண்கள் உட்பட, பழைய பழக்கங்களுக்கு உட்பட்டு, பாலின சமத்துவமுன்றித் தொடர்ந்து பயணிக்க விரும்பவில்லை என்ற உண்மையை உணர்ந்த நீதியரசர்களின் காலத்திற்கேற்ற கருத்துத்தான் இந்தத் தீர்ப்பு.
அரசியல் சட்டப் பிரிவு 377ஐ ( தன்பாலின உறவைக் குற்றமாகக் கருதும் பிரிவு) நீக்கியதும், சட்டப் பிரிவு 497ஐ (மண உறவுக்கு வெளியே நடக்கும் உடலுறவைக் குற்றமாகக் கருதும் பிரிவு) நீக்கியதும், மேற்கண்ட உணர்தல்களின் வெளிப்பாடே. அந்த வரிசையில்தான், இந்தத் தீர்ப்பும் வெளிவந்துள்ளது.
காலம் தமது கையை விட்டு விலகிச் செல்வதையும், மக்கள் தங்களது பிடியிலிருந்து நழுவிச் செல்வதையும் தடுத்து நிறுத்தச் சில பழைய பழக்க வழக்கங்களிலிருந்து வெளியே வர விரும்பும் அறிவார்ந்த செயல்தான், உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் இந்தத் தீர்ப்பு. அழுகிக்கொண்டு இருக்கும் சமூகத்தைத் தொடர்ந்து கட்டிக்காக்க இத்தகய தீர்ப்புகள் தேவைப்படுகின்றன.
ஒரேயொரு பெண் நீதியரசரின் அதிருப்திப் பதிவு மட்டும் தனித்து நிற்கிறது. எல்லோரும் மாற்றத்தை நோக்கிச் சென்றாலும், ஆள்வோரெனும் சிறுபான்மையினருக்குப் பெரும்பான்மையைக் கட்டிப்போட, நம்பிக்கை நீரோட்டப் பயணத்தில் பாலினச் சமத்துவம் கட்டாயத் தேவை என்பதை, எச்சரிக்கை மணியாகச் சூழல் கோரினாலும், அதைவிட வலுவான ஆணாதிக்க நம்பிக்கைகளின் பிரதிபலிப்பா அவருடைய கருத்து எனச் சமூகம் ஆய்வு செய்யத்தானே செய்யும்?

Tuesday, August 7, 2018

கலைஞர் Passed away

தலைவர் கலைஞர் என்றுதான் நான் உச்சரித்து வந்துள்ளேன். அவர் விரும்பும் விதத்திலேயே அவரை அழைப்பதுதான் பொருத்தம் என்றுதான் எனது மனம் சொன்னது. எனது இளமைக் காலத்தில், அவரது பேச்சும், எழுத்துமே என்னை ஈர்த்தது என்பதை விட, எனது தமிழைத் செதுக்கியது என்றே கூற வேண்டும். "உள்ளபடியே" என்ற சொல்லாடலை நான் அதிகமாகப் பயன்படுத்துகிறேன் என நண்பர்கள் கூறுவார்கள். அது தலைவர் கலைஞரிடமிருந்து "கடன்" வாங்கிய சொல். அண்ணா தனது பேச்சாலும், எழுத்தாலும் என்னை இளமைக் காலத்தில் ஈர்த்தார் என்பது உண்மைதான் என்றாலும், அதிகமாக நான் ரசித்து, பேசுவது கலைஞரின் பேச்சும், எழுத்துமே. நான் சிறு வயதிலிருந்தே சிவாஜி கணேசன் ரசிகர். நெல்லை சிவாஜி ரசிகர் மன்றத்தில் மாவட்ட தலைமையில் பணியாற்றியவன்.அந்தக் காலம் "சிவாஜியா?, எம்.ஜீ.ஆரா?".என்ற சர்ச்சையை இளைஞர்களிடம் விவாதிக்கப்பட்ட காலம். அப்போது, சிவாஜி கணேசனின் நண்பராக தலைவர் கலைஞர் இருந்தார். சிவாஜிக்கு திரைப்படத்திற்கு மட்டுமல்ல பொது வெளிக்கும் கலைஞரின் எழுத்துக்கள் பயன்பட்டன. அதனால் இயல்பாகவே எங்களுக்கு{ சிவாஜி ரசிகர்களுக்கு} ,கலைஞர் மீது ஒரு பாசம் உண்டு.
          திமுக 1967  இல் ஆட்சிக்கு வந்த பின், ஒரு பொதுவுடைமைவாதியான எனக்கு,  சிம்சன்  தொழிலாளர் போராட்டம், விவசாயிகள் போராட்டம் மீதான தஞ்சை துப்பாக்கி சூடு, நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு எதிராக "கியூபிரிவை" உருவாக்கியது, பின்னாளில்  மாஞ்சோலை தொழிலாளர் மீதான காவல்துறைத் தாக்குதலில் தாமிரபரணி படுகொலை, ஈழத் தமிழர் படுகொலையில் எடுத்திருந்த நிலைப்பாடு, நிறைவுக் காலத்தில் நடுவண் அதிகாரத்துடன் இணைந்து சென்றது , "ஏக இந்தியா" என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியது  ஆகியவை அவருடன் மாறுபாடுகளையம், நெருக்கடி நிலையை எதிர்த்து சட்டமன்றத் தீர்மானம் கொண்டுவந்தது,முரசொலியில் நெருக்கடி நிலை எதிர்ப்பை வெளிக்காட்டியது, எனது தலைமறைவுக் கால புரட்சிகர வாழகையிலும்,நெருக்கடி நிலை எதிரிப்பில் அவரது நிலைப்பாட்டை அங்கீகரித்தது,1983 காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்பியது, 1989  இல் திமுக நடத்திய நடுவண் அரசு எதிர்ப்பு பேரணியில், இந்திய மக்கள் முன்னை சார்பாக கலந்து கொண்டது,தமிழுக்காகவும், தமிழின உரிமைக்காகவும்,கலை, இலக்கியத்திற்க்காகவும், தனது எழுத்தில் உருவான நாடகத்திற்காகவும்,குரல் எழுப்பியது,,மரண தண்டனை எதிர்ப்பில் நிலை எடுத்தது,திருநங்கைகளுக்காகவும், குரல் எழுப்பியதால் அவருடன் ஒன்றுபட்டு இருந்த பகுதிகளையும் கண்ட அரசியல் பயணம் என்னுடையது. அவரது ஐம்பது ஆண்டு அரசியல் தலைமை ஏற்ற வாழ்க்கை காலம் தான், எனது புரட்சிகர அரசியல் வாழ்க்கையையும் வகுத்தது என்பதாலேயே, இந்த மாறுபாடுகளும், ஒற்றுமைகளும் நடைபெற்றுள்ளது. நேரெதிரெதிர் அரசியல் முகாம்களில் பயணம் செய்தது கூட, ரசனையானதுதான். தோழர் ஞானி "கலைஞர் பற்றி ரசிக்க முடியாத எழுத்துக்களை" எழுதிய போது, அதை கண்டிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில்  உரையாற்ற { அவரது தேர்வுகள் மூலம்} என்னையும் அழைத்திருந்தார்கள். அதுவே "மாற்றுக்கருத்துளளவர்களிடமும், இருக்கும் கருத்துக்களை அங்கீகரிக்கும் பாங்கு" என காண முடிந்தது.
               மறக்க முடியாத, ஒதுக்க முடியாத, மாற்றுக்கருத்துக்களும் கூட, வேறுபட்டு நிற்க முடியாத ஒரு " ஆளுமை" மறைந்தது என்பதே வருந்தத்தக்கது..     ,     

Monday, July 23, 2018

அதிருப்தியாளர்கள் மீது நக்சல் முத்திரையா?



சிறப்புக் கட்டுரை: அதிருப்தியாளர்கள் மீது நக்சல் முத்திரையா?

சிறப்புக் கட்டுரை: அதிருப்தியாளர்கள் மீது நக்சல் முத்திரையா?
டி.எஸ்.எஸ். மணி
ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வோர் ஆட்சியிலும், அந்த ஆட்சியாளர்களை எதிர்த்தோ, ஆட்சியாளர்களின் திட்டங்களை எதிர்த்தோ, மக்கள் மத்தியிலிருந்தும் அறிவுஜீவிகள், ஊடகங்கள், செயற்பாட்டாளர்கள் மத்தியிலிருந்தும் கேள்விகள் எழுவது இயற்கையே. அப்படிக் கேள்விகள் எழாவிட்டால், ஆட்சியாளர்களுக்குத் தாங்கள் கொண்டுவந்த திட்டங்களை பற்றிய நிறை குறைகள் தெரியாமல் போய்விடும். அப்படிக் கேள்விகள் எழும்போதுதான், ஆட்சியாளர்கள், தங்களது செயல்பாடுகளில் திருத்தங்களைக் கொண்டுவர முடியும். அவ்வாறு கேள்விகள் எழுவதை அனுமதிக்கும்போதுதான், ஆட்சியாளர்கள், மக்களுக்குத் தங்களது திட்டங்களில் உள்ள பலமான அம்சங்களைப் புரியவைக்க முயல முடியும். ஆகவே எப்படியும், மக்கள் மத்தியிலிருந்து அதிருப்திக் குரல்கள் எழுவது என்பது எப்போதுமே ஆரோக்கியமானதுதான்.
அதேநேரம், அத்தகைய அதிருப்தியின் குரல்களை அடக்கவும், ஒடுக்கவும் ஆட்சியாளர்கள் நினைத்தால் அவர்கள் கற்றுக்கொள்வதற்கு எதுவுமே இல்லாமல் போய்விடும். அவர்களால், மக்களை தங்கள் திட்டங்கள்பால் ஈர்க்க முடியாமல் போகும். எந்த வகையிலும், அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் மக்களை அணுகுவதற்கு, ஆட்சியாளர்களின் கைகளை பலவீனப்படுத்தவே செய்யும். இதுவே ஜனநாயகத்தின் ஆணி வேராகக் காணப்பட வேண்டும். இதையே திருவள்ளுவர் கூறுகிறார். இதையே உலகமெங்கும் ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுத்த பெரும் மேதைகள் பலரும் கூறக் கேட்டிருக்கிறோம்.
ஆங்கிலேயன் இந்த நாட்டை ஆண்டுவரும்போது நடந்த அடக்குமுறைகளைப் பற்றி பாரதியார், “இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம்” என்று கூறினார். இன்றைய நமது ஆள்வோர், ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள். ஆனால், இவர்களும் தற்போது மாறிவருகிறார்கள். மாற்றுக் கருத்தைப் பேசினாலோ, மாறுபட்ட கருத்துகளைக் கேட்டாலோ, கைது என்ற அணுகுமுறையைக் கையாளுகிறார்கள்.
ஏன் இப்படி நடக்கிறது? ஒன்று, அவர்கள் அச்சத்தின் காரணமாக, என்ன செய்வதென்றே தெரியாமல் திக்குமுக்காடுகிறார்கள். அல்லது அவர்களுக்கு ஆலோசனை கூறும் அதிகாரிகள், அடக்குமுறைகள் மூலம் அனைத்தையும் வென்றுவிடலாம் என துர்போதனை சொல்பவர்களாக இருக்க வேண்டும். எது எப்படி என்பதை அவர்களுக்கே விட்டு விடுவோம்.
அரண்டவன் கண்ணுக்கு…
அடுத்து, ஒரு புதுக் கரடியை ஆள்வோர் இறக்கி விடுகிறார்கள். அதுதான், நக்சல் எனும் சொல்லாடல். பயங்கரவாதம் எனும் பய பீதிக் கூற்று. இந்தப் பீதியை அவிழ்த்து விடுபவர்களுக்கு, அவர்களுக்கே உரித்தான தேவைகள் இருக்கலாம். ஆனால், நக்சல் என்றால் என்ன? 1967ஆம் ஆண்டு அன்றைக்கு இருந்த ஆட்சியில் சமூக, அரசியல் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடின. மக்கள் மத்தியில் நிலம் இல்லை, வேலை இல்லை, ஊதியம் இல்லை, விலைவாசி குறையவில்லை, உழைப்பவனுக்கு வாழ வழியில்லை என்ற சூழல் இந்திய நாடெங்கும் பரவிக் கிடந்தது. பொதுவுடைமைவாதிகளும் தேர்தல் பாதையில் ஒட்டிக்கொண்டு, மக்களுக்காக எதையுமே நல்லது செய்ய முடியாத நிலை வந்தது. அப்போது, புரட்சிகரப் பொதுவுடைமைவாதிகள் கல்லூரிப் பேராசிரியர் சாரு மஜும்தார் தலைமையில் திரண்டு தங்களது உழைப்பால் வந்த நிலத்தை, பொருள்களை, தாங்களே எடுத்துக்கொள்வது எனக் கிளர்ந்து எழுந்த இடம்தான், நக்சல்பாரி என்னும் கிராமம்.
மேற்கு வங்க மாநிலத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில், சிலிகுரி வட்டத்தில், நக்சல்பாரி என்ற கிராமத்தில், நிலமற்ற உழவர்கள் கிளர்ந்து எழுந்தார்கள். அந்தக் கிளர்ச்சியின் தாக்கத்தினால், பின்னால் வந்தவர்களும், ஆள்வோரும் மக்களின் கிளர்ந்தெழுதல்களை, நக்சல் வழி என அழைக்கத் தொடங்கினர். அத்தகைய நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நாம் நக்சல் என்றே அழைத்தாலும், அவர்கள் சொல்வது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
நக்சல்கள் கூறுவது என்ன?
அந்த நக்சல்கள் இந்திய நாடு, அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அடகு வைக்கப்படக் கூடாது என்றும், அந்நிய நாட்டின் சரக்குகளை இந்தியாவில் சந்தையாக்கக் கூடாது என்றும் கூறுகிறார்கள். இதைத்தானே இன்று நம்மை ஆளும் பாஜகவோ, அத்துடன் இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்போ கூறிவருகிறது? சுதேசி, விதேசி என்ற முழக்கங்களைக் காவிவாதிகளும் கூறவில்லையா? பிறகு ஏன் நக்சல் என ஒரு பிரிவினரை மட்டுமே முத்திரை குத்துகின்றனர்?
நக்சல் என்பவர்கள், நிலமற்ற உழவர்கள் உழைக்கும் நிலங்களை, நிலப்பிரபுக்கள் பலாத்காரமாகக் கைக்கொள்ளக் கூடாது என்கிறார்கள். நக்சல் என்பவர்கள், சாதிய வெறியுடன், ஆதிக்கவாதிகள், தாழ்த்தப்பட்டோரை அடக்கி ஆளக் கூடாது என்கிறார்கள். இத்தகைய கூற்றுகளை நமது அரசியல் சட்டமும் சொல்கிறதே? அப்படியானால் எதற்காக இந்த நக்சல்களைப் பிரித்துப் பார்க்கிறீர்கள் என்ற கேள்வி அறிவுஜீவிகளிடமிருந்து வருமல்லவா?
அதற்கும் நம்மை ஆள்வோரிடம் நல்ல பதில் இருக்கிறது. வன்முறை நன்முறையல்ல; அதில் ஈடுபடுபவர்களை நக்சல் என்கிறோம் என்று ஆள்வோர் பதில் கூறலாம். உண்மைதான். வன்முறை நன்முறையல்லதான். அந்த வன்முறையை, புரட்சியாளர்களோ, பண்ணையார்களோ, ஆதிக்கச் சாதிவாதிகளோ, மத வெறியர்களோ, காவல் துறையினரோ, ராணுவத்தினரோ, யார் கையில் எடுத்தாலும் அது நன்முறையல்ல. சரி. தமிழ்நாட்டுச் சூழலுக்கு வருவோம்.
போராட்டமும் ஆர்ப்பாட்டமும்
இங்கே இன்று எதற்கெடுத்தாலும் போராட்டம் நடக்கிறதே என ஆள்வோர் கேட்கிறார்கள். போராட்டம் என்றால், நகர்ப்புறங்களில், காவல் துறை அனுமதி பெற்றோ, அனுமதி பெறாமலோ, காவல் துறையின் கைது நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் போராட்டம் என்ற பெயரில் செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உண்மையில் அவையெல்லாம் போராட்டங்கள் அல்ல. அவற்றிற்கு உண்மையான பெயர் ஆர்ப்பாட்டம் தான். அதாவது, புரட்சியாளர் லெனின் வார்த்தைகளில், அவை வெறும் கிளர்ச்சிகள்தான். இந்தக் கிளர்ச்சிகளால், அடையாளபூர்வமாக எதிர்ப்பைக் காட்டலாம். அவ்வளவே. அது ஆள்வோருக்கு, ஒரு செய்தியை அறிவுறுத்துவதாக இருக்கும்.
2017 ஜனவரிக்குப் பிறகு, அதாவது, ஜல்லிக்கட்டு எழுச்சிக்குப் பிறகு, தமிழ்நாட்டில் அமைதி வழியில் அறப் போராட்டம் என்ற புரிதலில், மக்கள் எல்லோருமே, ஒரே இடத்தில் திரண்டு அமைதியாக அமர்வது என்று புதிய வடிவத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அதுவே, தங்களது கோரிக்கையை வலியுறுத்த, வன்முறையற்ற நன்முறையில், அமைதி வழியில் மக்கள் அணிதிரள்வது என்ற வடிவம். நெடுவாசலிலும், கதிராமங்கலத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பிலும் பொதுமக்கள் இப்படி அணி திரண்டதைக் கண்டோம். அத்தகைய எதிர்ப்புகளை, ஆள்வோர் பகிரங்கமாக எதிர்க்கத் தயாராயில்லை. ஏனென்றால், அவை ஊர் அறிந்த, அமைதி வழியிலான அணி திரளல். எனவே, இதை எதிர்கொள்வது கடினமானது.
அரசு கண்டுபிடித்த வழி
இத்தகைய அணி திரளலைச் சமாளிக்க ஆள்வோர் ஒரு தந்திரத்தைப் பிரயோகிக்க முயல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட குழுவையோ, சில குழுக்களையோ, தீவிரவாதிகள், நக்சல்கள் என்று முத்திரை குத்தி, அவர்களைச் சாக்காகக்கொண்டு, ஒட்டுமொத்த மக்களது எழுச்சியையும் அடக்கி ஆள்வது என்பதே அது. அத்தகைய தந்திரத்தை ஆள்வோர், ஜல்லிக்கட்டு எழுச்சிக்குப் பிறகு கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி, கைது, தடை, துப்பாக்கிச் சூடு என்று அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
இந்த இடத்தில் யார் அப்படி முத்திரை குத்தப்படுவோர் என ஆராய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகியுள்ளோம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அத்தகைய முத்திரை குத்தல் தொடங்கியது. மக்கள் அதிகாரம் என்னும் அமைப்பினர் தீவிரவாதிகள் எனக் குறிப்பிடப்பட்டார்கள். அரசு அவர்களை மக்கள், கலை இலக்கியக்காரர்கள் என்று கூறுகிறது.
அமைதிவழி நக்சல்கள்!
சரி, இருக்கட்டும். அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழகத்தில் செயல்படுகிறார்கள். எப்போதாவது, அந்த அமைப்பு வன்முறையில் ஈடுபட்ட வரலாறு உண்டா? இல்லையே. அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி, மாநாடு என்று நடத்தினாலும், காவல் துறையின் அனுமதியைப் பெற்றுத்தான் தங்கள் கிளர்ச்சிகளை நடத்துகிறார்கள். அனுமதி மறுக்கப்படும்போது, நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று நடத்துகிறார்கள். இது நாட்டு மக்களுக்குத் தெரியாவிட்டாலும், காவல் துறைக்கு நன்றாகவே தெரியும் அப்படித் தெரிந்திருந்தும்கூட, அதிருப்தியின் குரல்வளையை நெரிக்க அவர்களை நக்சல்கள் என்ற தவறான சித்திரிப்பைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் காவல் துறைக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அமைப்பினர், நக்சல்பாரிப் பாதை என்று எழுதுகிறார்களே, பேசுகிறார்களே, பாடுகிறார்களே என்று காவல் துறையினர் கேட்கலாம். ஆனால், குறிப்பிட்ட அமைப்பினரின் , செயல்கள் அமைதி வழியிலும், சட்ட ரீதியான வடிவிலும்தானே இருக்கின்றன? அப்படி இருக்கையில் அவர்களை நீங்கள் நக்சல்கள் என்று எப்படி முத்திரை குத்துவீர்கள்? அமைதிவழி நக்சல்கள் என்று வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போங்கள்.
உதாரணமாக, நக்சல்பாரிப் பாதை என்பது, ஆயுதம் தாங்கிப் புரட்சி செய்யும் பாதை. அந்தப் பாதையில், ஜார்கண்டில், சத்தீஸ்கரில், பிகாரில், ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கிப் புரட்சிகர வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சட்ட ரீதியாக, கலை, இலக்கியத் தளங்களில் இயங்கிவருவோரை, அதே முத்திரை குத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?
உண்மை வரலாற்றை நாம் கவனிப்போமானால், சாரு மஜும்தார் முன்வைத்த வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் வழி என்ற பாதையை மறுத்து, வெகுமக்களைத் திரட்டப் போகிறோம் என்று கூறி, 1971இலேயே வெளியே வந்த அமைப்புகள்தான் தமிழ்நாட்டில் இயங்கிவருகின்றன. அவை நக்சல் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தலாம். ஆனால், செயல் என்ன என்று பார்த்து அணுகுமுறையைக் கையாள்வதுதானே அரசின் கடமை? பேனைப் பிசாசு ஆக்குவது சரியான நடைமுறையா?
அற வழியில் அணி திரள்வோரை நக்சல் முத்திரை குத்துவதும், தீவிரவாதிகள் முத்திரை குத்துவதும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் அணி திரளவே உதவும். தேர்தல் பாதையில் செல்லும் கட்சிகளின் தலைவர்களையும், கருத்துக் கேட்டாலே, தீவிரவாதம் என்று முத்திரை குத்திக் கைது செய்யும் போக்கு எந்த வகையிலும், ஆரோக்கியமான முறையுமல்ல. ஆக்கத்தை அது தரப்போவதுமில்லை. இதுபோன்ற செயல்கள் மக்கள் மத்தியில் அரசின் மீது வெறுப்பையே வளர்க்கும் என்பதை ஆள்வோர் எப்போது உணரப் போகிறார்கள்? உணர்ந்தால் அவர்களுக்கு நல்லது.
(கட்டுரையாளர் குறிப்பு: டி.எஸ்.எஸ். மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)

Monday, July 2, 2018

பசுமை வழிச் சாலையா? குழம்பாதீர்கள்!

பசுமை வழிச் சாலையா? குழம்பாதீர்கள்!

பசுமை வழிச் சாலையா? குழம்பாதீர்கள்!
சென்னையிலிருந்து சேலம் செல்லும் சாலை ஒன்றை எட்டு வழியுடன் போடுவதற்காக, இந்திய நடுவண் அரசின் சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் அரவணைப்பில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியார் அறிவிக்கும்போது அதை ஆங்கிலத்தில் கிரீன் காரிடார் (Green Corridor) என்றார். தமிழில் அப்படியே அதை நேரடியாக மொழிபெயர்த்து (Literal Translation) 'பசுமை வழிச் சாலை' என்றும் அறிவித்துள்ளார். அதையே ஊடகங்களும் ஏற்றுக்கொண்டு அப்படியே குறிப்பிடுகின்றன. எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் அனைவரும் தமிழில், 'பசுமை வழிச் சாலை' என்றே விளித்து அறிக்கைகள் பறக்கின்றன.
பலருக்கும் "இது எப்படி பசுமை வழிச் சாலை?" என்ற குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. அதன் விளைவாக, காடுகளுக்கு மேலே கட்டப்பட்டுள்ள ஒரு மேம்பாலத்தின் படத்தைக் காட்டி, "இதுதானே உண்மையான பசுமை வழிச் சாலை?" என்பதாகவெல்லாம், சமூக வலைதளங்களில் எழுதித் தள்ளுகிறார்கள். இந்தப் புதிய வழித்தடத்திற்கு இது பொருத்தமான பெயர்தானா?
ஆங்கிலத்தில், வணிக மொழியில் ஓர் இடத்தில் உள்ள சாலையை விரிவுபடுத்தப் போகிறார்கள் என்றால், அதை, பிரவுன் ஃபீல்டு புராஜக்ட் (Brown Field Project) என்று அழைக்கிறார்கள். அதேநேரம், ஒரு இடத்தில் புதிதாக ஒரு சாலையை (New Road) போடப் போகிறார்கள் என்றால், அதை, வணிக மொழியில், கிரீன் ஃபீல்டு புராஜக்ட் (Green Field Project) என்று அழைக்கிறார்கள்.
ஆகவே, இங்கே சேலத்திற்குப் போட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு துடிக்கும் சாலை, இதுவரை வயல்களாகவும், மலை ஓரங்களாகவும் இருக்கின்ற, அதாவது, பாதையே இல்லாத தடத்தில் போடப்படும் சாலை என்பதால் இந்தப் புதிய பாதையை, கிரீன் ஃபீல்டு புராஜக்ட் (Green Field Project) என்று அழைக்க வேண்டும். அதன் அர்த்தம் அது, கிரீன் காரிடார் அல்ல (Green Corridor). எனவே, அதன் பொருள், பசுமை வழிச் சாலையும் அல்ல. பச்சைத் தமிழன் என்பதை Green Tamilan என மொழிபெயர்ப்பது அபத்தம் அல்லவா? அதுபோலத்தான் இதுவும்!
இங்கே ஆங்கிலத்திற்கு ஆங்கிலமும், ஆங்கிலத்திற்குத் தமிழும் என இரண்டுமே தவறாகக் கையாளப்படுகின்றன. ஓர் உதாரணத்தின் மூலம் இதைத் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். Assault என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள் தாக்குதல். ஆனால், தமிழ்நாடெங்கும், அசால்ட் (Assault) என்ற சொல் கேர்லெஸ் (Careless), கேஷுவல் (Casual) போன்ற சொற்களுக்கு இணையாகப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.
அசால்ட் என்பது எப்படியோ மாறுபட்ட பொருளில் புழங்கத் தொடங்கிவிட்டது. ஆனால், ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு இதன் பொருள் தெரியும். ஆனால், Green Corridor என்பது அது உணர்த்தும் பொருளில் மொழிபெயர்க்கப்படாமல் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எனவே, பசுமையைக் குறைக்கும் இந்தச் சாலைக்குப் பசுமை வழிச் சாலை என்ற பொருத்தமில்லாதப் பெயர் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தினால் அசால்ட் என்பது கேஷுவல் என ஆனதுபோல இதுவும் நிலைபெற்றுவிடும். எனவே, ஊடகங்களில் தொடங்கி, அரசியல்வாதிகள், எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் உட்பட அனைவருமே இந்த எட்டு வழிச் சாலையை, ‘புதிய சாலை’ என்பதாகக் குறிப்பிடுவார்களா?
(மூத்த ஊடகவியலாளர் பாபு ஜெயகுமார், சென்னைப் பல்கலைக்கழக ஊடகத் துறை அரங்கு கூட்டத்தில் பேசியதன் அடிப்படையில் எழுதப்பட்டது இது.)
- டி.எஸ்.எஸ்.மணி