Monday, October 11, 2010

போர்--தற்கொலை பற்றிய..புதிய சதியில் தமிழர்களை ஏமாற்ற வரும் உளவியலாளர்கள்

.
ஏடுகளில் வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி தந்தன. போர் காலங்களில் உள்ளதைவிட போர் இல்லாத காலங்களில் இலங்கையில் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளன என்ற மதிப்பீட்டை, இலங்கை நாட்டின் உளவியல் நிபுணர் தயா சோமசுந்தரம் கூறியதாக அந்த ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டிருந்தது இது சாதாரண மக்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கலாம். ஆனால் உளவியல் நிபுணர்களை அல்ல. எமிலே துர்கீம் என்ற பிரான்ஸ் நாட்டு உளவியல் நிபுணர், போர் காலத்தில் அடையாளம் காணப்பட்ட எதிரியை எதிர்த்து அனைவரும் உளப்பூர்வமாக திரண்டு நிற்பார்கள் . அதனால் அன்றாட வாழக்கையில் மக்களுக்குள் பெரும் பிரச்சனை எழுவதில்லை என்று கூறியுள்ளார்.

அதையே இந்த சோமசுந்தரம் சற்று மாற்றி, தற்கொலை மனோபாவம், ஈழப்போர் நேரத்தில் வேறு ஒரு உணர்வாக மாற்றப்பட்டுவிட்டது என்று கூற முற்படுகிறார். உண்மை என்ன என்றால் உளவியல் ரீதியான பார்வையை பார்க்க முனையும் இது போன்ற உளவியல் நிபுணர்கள், தளத்தில் நடக்கும் போர் பற்றியோ அதை சம்பந்தப்படுத்தி மக்கள் மத்தியில் உருவாகும் உணர்வுகள் பற்றியோ என்ன புரிதலில் இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்தே இந்த நிபுணர்களின் அபிப்பிராயங்களை காண வேண்டி உள்ளது. ஈழம் என்பது அடைய வேண்டிய ஒரு இலக்கு என்பதை அங்கு வாழும் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள் எனபது அவர்களது வேலை திட்டங்களில் இருந்தே அறியமுடியும்.

அதை விளக்க வருகிறேன் என்று சோமசுந்தரம் கூறும்போது, போர் தனக்கு வெளியே உள்ள எதிரியை அடையாளம் காண வைத்து அதன்மூலம் அந்த எதிரிக்கு எதிரான போரில் தன்னை மாய்த்துக்கொள்ள செய்கிறது. என்கிறார். போர் இல்லாத சூழலில் தனக்குள்ளேயே உள்ள முரண்பாடுகளை சந்திக்க வலு இன்றி தற்கொலை செய்து கொவதாக கூறுகிறார். உள்ளபடியே இது போன்ற அறிஞர்கள் தற்கொலைகளை தனி, தனியாக எடுத்து பார்ப்பதனால், அவர்களுக்கு சமூக சூழலை ஒட்டி அவற்றை படிக்க தெரிய வில்லை என்றுதான் கூறவேண்டும். பொது எதிரியை எதிர்த்து போரிட வாய்ப்பு இல்லாமல் போகும்போது, தனக்குள் உள்ள எதிரியை ஒருவர் தேடிக்கொள்வதாக இவர்கள் கூறுகிறார்கள். அதை சமாதான காலங்களில் என்று வர்ணிக்கிறார்கள். அதாவது இப்போது இலங்கை தீவில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமாதான நிலைமை நிலவுவதாக கற்பனை செய்துகொண்டு, இந்த நிபுணர் கூறியுள்ளார். அதாவது அரசாங்கத்தின் அறிவிப்புகளை மட்டுமே குளிர்சாதன அறைக்குள் இருந்து கொண்டு, காணும் இந்த நிபுணர்களுக்கு உண்மை நிலைமை நாட்டில் என்ன இருக்கிறது என்பதோ, மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை பற்றியோ தெரியவில்லை என்பதே இதிலிருந்து தெரிகிறது.

ஊசலாட்ட வயதில் உள்ளவர்களுக்கு, தீவிர விரக்தியாலோ, உள்நாட்டு மோதல்களின் விளைவாகவோ, ஒருவிதமான நிலையற்ற மனோ நிலை ஏற்படுகிறது எகிறார் இந்த சோமசுந்தரம். அப்படி நேரங்களில் அத்தகைய இளைஞர்கள் போரில் போராளிகளுடன் சேர்ந்துகொண்டு, மரியாதைக்குரிய மரணங்களை எட்டிவிடுகின்றனர். அதற்காக அவர்களது பெயர்கள், " வீர சாவு" என்று பெயரிடப்பட்டு அவர்களுடைய படங்கள் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டு அதன் மூலம் அவர்களது மரணங்கள் மரியாதைக்கு உரியதாக ஆக்கப்படுகின்றன. என்றும் இந்த நிபுணர் கருத்து சொல்லியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் ஆனந்தராஜா என்ற ஒரு ஆறுதல் மையம் வைத்திருப்பவர் கூறிய கருத்துக்களை இந்த நிபுணர் தனது வாதத்திற்கு துணையாக எடுத்துக்கொள்கிறார். ஆனந்தராஜா கூற்றில் சில இளைஞர்கள் போர் நேரத்தில் தங்கள் பெற்றோரிடம், ஒன்று தற்கொலை செய்துகொள்வேன் அல்லது போராளிகளுடன் போய் சேர்ந்து விடுவேன் என்று கூறியுள்ளனர் என்ற வாதத்தை தனக்கு சாதகமாக எடுத்து கொள்கிறார்.

1980 இன் காலங்களில் சமாதான நேரத்தில் யாழ்ப்பாணத்தில்தான் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளன என்று ஒரு கணக்கையும் இவர்கள் தங்கள் வாதத்தை நிரூபிக்க பயன்படுத்துகிறார்கள். உள்ளபடியே இவர்கள் எடுத்துள்ள கணக்கு என்ற எண்ணிக்கை உண்மைதான். ஆனால் அவை ஏன் என்ற காரணத்தை அறிவதற்கான அறிவு இவர்களுக்கு, அதாவது இந்த நிபுணர்கள் என்ற பெயரில் நடமாடும் புத்தி ஜீவிகளுக்கு இல்லாமல் போய்விட்டது. அதேசமயம் போர் நடக்கும் நேரத்தில், தற்கொலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 800 விழுக்காடும், தற்கொலை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 180 விழுக்காடும் குறைந்துள்ளன என்பது இவர்கள் எடுத்துள்ள கணக்கு. அந்த கணக்கில் நமக்கு பிரச்சனை இல்லை. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்க்கான காரணமாக அவர்கள் கூறும் கண்டுபிடிப்பில்தான் பிரச்சனை உள்ளது. பதினைந்து வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை உள்ள ஆண்களின் கணக்கில்தான் தாங்கள் கூறுவதாக இவர்களே அறிவித்துள்ளனர். இந்த வயதில் உள்ள ஆண்கள்தான் போர் இல்லாத காலங்களில் அதிகமான தற்கொலைகளில் மரணமடைந்தவர்கள் என்றும் இவர்களே கூறுகிறார்கள்.

உள்ளபடியே இலங்கை தீவில் ஒரு இன அடக்குமுறை இருப்பதோ, சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களாக தமிழர்கள் இருப்பதோ, அவர்கள் மீது சிங்கள பெரும்பான்மை அடக்குமுறை செலுத்துவதோ, இவர்களது உளவியல் ஆய்வுக்கு உட்படவே இல்லை. இன ஒடுக்கல் என்பது எந்த அளவுக்கு ஒரு தேசிய இனத்தின் இருத்தலுக்கே இடையூறாக அமையும் என்பதும் இவர்களுக்கு கணக்கில் வரவில்லை. வன்னியில் போர் நடக்கும் நேரத்தில், அன்றாடம் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கும் செய்திகள் வந்து அடையும் போது, இந்தியாவில் உள்ள தமிழகத்தில் நமக்கெல்லாம் எப்படி இருந்தது என்பதே இது போன்ற அறிவுஜீவிகளுக்கு தெரியாத செய்தியாக இருக்கிறது. இங்கே ஒவ்வொருவரும் கையறு நிலையில் இருந்தோம் என்ற சூழல் இவர்களது அறிவுக்கு எட்டவில்லை போலும். இங்கே இருக்கும் முதல்வர் கூட நாம் கையறு நிலையில் உள்ளோம் என்று கூறியது இவர்களுக்கு தெரியாது போலும். அந்த அளவுக்கு ஒரு தேசிய இன ஒடுக்கல் மக்களது மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கூட தெரியாதவன் எப்படி உளவியல் நிபுணராக இருக்க முடியும்?

உரிமை என்பது மனிதனுக்கு அடிப்படையானது என்று தெரியாத ஒரு உளவியல் இருக்க முடியுமா? இலங்கை வரலாற்றில் நடக்கும் இன ஒடுக்கல் உளவியல்ரீதியாக எப்படி சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்பது தெரியாதவன் உளவியல் நிபுணனாக இருக்க முடியுமா? முறையாக போராளிகள் போரை நடத்துவதற்கு முன்பு, அனைத்து அறவழி முறைகளும் தோற்றுவிட்ட நிலையில், இளைஞர்கள் விரக்தியடைந்தால் யார் பொறுப்பு? கைகளில் போராட ஆயுதம் வந்த பிறகு எந்த முட்டாள் தற்கொலை செய்து கொள்வான் என்பதையும் என்பதும் புரியாதவன் உளவியலாளரா?

இப்போது போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்து விட்டு, போரில் வெல்லவும் முடியாத ஒரு சூழலில், சமாதானம் என்ற பெயரில் சிங்கள பெரும்பான்மை யாழ்ப்பானத்திர்க்குள் குடியமர்த்தப்படுவார்கள், அதை தட்டி கேட்க முடியாத நிலையில் இளைஞர்கள் என்ன செய்வார்கள்? தற்கொலைதானே செய்துகொள்வார்கள்? இதுகூட தெரியாதவன் உளவியலாளரா? இப்படி ஒரு ஆய்வை நடத்தி அதை பிரபல படுத்த மக்கள் மத்தியில் ஏடுகள் மூலம் கொடுப்பவனது நோக்கம் என்ன? இன உணர்வு என்பதோ, உரிமை என்பதோ சாத்தியப்படாத ஒன்றுதான் என்று உறுதிபடுத்துவதுதானே?

இப்போது இலங்கை தீவை ஆளும் கொள்ளை கூட்டத்திற்கும், அதில் பங்கு போட துடிக்கும் வட்டார, மற்றும் வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளுக்கும், மீண்டும் ஒரு தேசிய இன உணர்வு துளிர்விடக்கூடாது என்பதுதானே நோக்கம்? அதற்கு ஏற்றார்போல பல திட்டங்களை அமுல்படுத்தும் அவர்கள், இந்த உளவியலாளர் என்ற பெயரில் சில குழப்பங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அதன்மூலம் நம்பிக்கை இழப்பை ஏற்படுத்துவது எனபதை தவிர வேறு என்ன சிந்திப்பார்கள்? ஆகவே இவர்கள் மனோதத்துவ நிபுணர்களோ, உளவியல் அறிஞர்களோ அல்ல, மாறாக இவர்கள் உளவு சொல்லும் ஒற்றர்கள் என்பது தெளிவு. உளவியல்போர் ஒன்றை நடத்துவதே இப்போது தமிழின எதிரிகளின் முக்கிய தொழில் எனபதை நாம் உணர வேண்டியுள்ளது.

6 comments:

Unknown said...

அருமை பதிவு.இது மாதிரியான நிறைய விசயங்களை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

mani said...

ஆயிரக்கணக்கான உறவுகள் தம் சொந்தங்களை இழந்து நிர்க்கதியான நிலையிலும், உளநெருக்கடியிலும் இருப்பது யாவரும் அறிந்ததே. அவர்களின் துயரங்களை ஆற்றுப்படுத்தி அவர்களுக்கான உளவளச்செயற்ப்பாட்டை அதிகரிக்கும்போது தற்கொலைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கலாம்

பல்லவர்கள் said...

win தொலைக்காட்சி வழியாக தங்களின் கருத்துக்களை நான் தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன்.மீனவர்கள் பற்றிய பார்வை,ஈழம்,இலக்கியம்,பச்சை வேட்டை,அருந்த்தியர் இடஓதுக்கீடு,போன்ற பல கருத்துக்கள் என்னை கவர்ந்த்து.மணி அவர்களின் கடின உழைப்பு என்னை சிந்திக்க வைக்கிறது.அவர் மேன்மேலும் சமுக சேவை ஆற்ற என் வாழ்த்துக்கள்.ச.ர.லோகநாதன்.காஞ்சிபுரம்.

Bibiliobibuli said...

நன்றி மணி. நானும் தயா சோமசுந்தரம் (Daya Somasundaram) என்பவரின் Academic Paper ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். அது பற்றிய விமர்சனங்களை தேடிக்கொண்டிருந்தேன். இப்போது கண்டுபிடித்துவிட்டேன். அவருடைய ஆய்வுகளின் விடைகளையும், விளக்கங்களையும் படித்தபோது எனக்கும் கூட நீங்கள் சொல்லும் கோணத்தில் பல கேள்விகள் எழுந்தது. அதை சரியாகவும், தெளிவாகவும் விளக்கிவிட்டீர்கள். நான் படித்தது "Decline in Suicide rate" என்ற ஓர் சிறிய பகுதிதான். வேறேதாவது இணைப்பு முழுவதுமாக இருந்தால் கொடுக்க முடியுமா.

என்னை அதிகம் கோபப்படுத்திய விடயம் அது ஆங்கிலத்தில் Int.J.of Mental Health issue வில் பிரசுரிக்கப்பட்டது தான். இதையெல்லாம் ஈழம் பற்றி ஆராய்ந்து எழுதுபவர்கள் படித்துவிட்டு தங்கள் பங்கிற்கு வேறு எதையாவது சொல்லிவைப்பார்கள் என்பதுதான்.

Maniblog said...

நன்றி , ரதி. நான் நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸில் சென்னை பதிப்பில் பார்த்த, செய்தி கட்டுரைதான் என்னை தூண்டிவிட்டு அப்படி எழுத வைத்தது. அந்த செய்தியின் தலைப்பு ஏதோ, போர் நேரத்தைவிட, போர் இல்லா நேரத்தில் ய்ஹற்கொலை கூடுதலாக உள்ளது என்றுதான் இருந்தது. உள்ளே பார்த்தால் முழுக்க நஞ்சு என்று கண்டுகொண்டேன். அதனால்தான் அந்த எதிரொலி என்னிடமிருந்து வெளி வந்தது. இன்னமும் நாம் எதிரோளித்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாமாக புதிய ஆய்வுகளை செய்து அறிவிக்கவில்லையே? .

Bibiliobibuli said...

நீங்கள் சொல்வதும் சரிதான். நாங்கள் இன்னும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

"US funded Prof. Daya Somasundaram" என்று பார்த்தவுடனேயே எனக்கு ஏதோவொன்று புத்தியில் இடறியது போல் இருந்தது. நிச்சயமாய் எங்களால் முடிந்தவரை இதற்கு பதில் சொல்வோம். நன்றி.

Post a Comment