Sunday, January 2, 2011

ராஜா ---------தயா மோதல்.

ஆ.ராஜா வுடன் , தயாநிதி குழுவினர் முரண்பட்டு இருப்பதோ, முரண்பாடுகளை கிளப்பிவருவதோ, அதிகார மோதலுக்காக ராஜாவை அம்பலப்படுத்த தயா முயற்சி எடுப்பதோ தெரிந்த பழைய செய்திகள். ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது புதிய செய்தி. டில்லி, சென்னை, பெரம்பலூர், திருச்சி, திருவானைக்காவல் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் திடீரென நடந்த சீ.பி.ஐ. சோதனைகள், யாரால் தூண்டப்பட்டன? யார் அதுகண்டு மகிழ்ந்தார்கள்? கட்டளை அனுப்பும் இடத்தில் அமர்ந்து கொண்டு அதற்கான ஆதாரங்களை கொடுத்தது யார்? இப்படிப்பட்ட கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
இதுவரை ராஜா மீது தனக்கு இருந்த முரண்ப்பாட்டை அல்லது போட்டியை அல்லது தனக்கும், டாட்டாவுக்கும் இடையே இருந்த வர்த்தக போட்டியில் ஆ.ராஜா டாட்டாவால் பயன்படுத்தப்பட்டார் என்ற கோபத்தை, அய்யோபாவமான ராஜா மீது காட்டுவது தயாநிதிக்கு வாடிக்கையாக போய்விட்டது. இதில் ராஜாவின் அறிவு வளர்ச்சிக்காகவும், சிந்தனை திறமைக்காகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்ற காரணத்திற்க்காகவும் அவரை ஊழல்களுக்கு மத்தியிலும் ஆதரித்து வந்த சில நண்பர்கள் வசமாக இந்த வலையில் சிக்கிக்கொண்டனர். ஊழலுக்கு சாதியும், மதமும், ஏகபோக எதிர்ப்பும் கிடையாது என்று அந்த நண்பர்களுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. இப்போது சோதனைகள் வந்தபின்பு அதை உணர்ந்திருப்பார்கள்.
சீ.பி.ஐ. சோதனைகளை நடத்த சில மனிதர்களின் வீடுகளை அடையாளம் காட்டியது தயாநிதிதான் என்றும், அதை அவர் தந்திரமாக தனக்கு இருக்கும் பழைய மற்றும் புதிய தொடர்புகளான அதிகார வர்க்க சக்திகளை பயன்படுத்திகொண்டார் என்றும் ராஜா ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைமை அமைச்சர் அலுவலக சக்திகளையே பயன்படுத்திகொண்டார் என்பதே அவர்களது கணிப்பு. கணிப்பொ, கண்டுபிடிப்போ, இங்கே சென்னையிலும், திருச்சியிலும், பெரம்புலூரிலும் அந்த சீ.பி.ஐ. சோதனைகள் நடந்து கொண்டு இருக்கும் போது, தயாநிதி மாறன் டில்லியில் அமர்ந்து கொண்டு, அதை ரசித்துக்கொண்டும் அதை இயக்கிகொண்டும் இருந்தார் என்று கூறுகிறார்கள்.
தி.மு.க. தலைவர் குடும்பத்தில் உள்ள உள்பகை இந்த அளவுக்கு போயிருப்பதால் தான் இப்போது அனைத்தும் அம்பலமாகி இருக்கின்றன.

No comments:

Post a Comment