Thursday, August 5, 2010

ஹிரோஷிமா: அமெரிக்கா போட்ட அணுகுண்டு

1945ம் ஆண்டு 2ம் உலகப்போரின் கடைசிக் கட்டம். அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஒரு முகாம் என்றால், ஜப்பானும், ஜெர்மனியும் இன்னொரு முகாம் என்பதாக இரண்டாவது உலகப்போர் நடந்து வந்த காலம். ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோசிமா என்ற நகரின் மீது ஆகஸ்ட் 6ம் நாள் அமெரிக்கா ஒரு அணுகுண்டை வீசியது. அந்த அணுகுண்டுவிற்கு ‘குட்டி பையன்’ என்று பெயர். அது துப்பாக்கி வடிவில் இருந்தது. யுரேனியம்235 ஆல் அது உருவாக்கப்பட்டது. டென்னேஸியில் உள்ள ஓக் ரிட்ச் என்ற இடத்தில் ராட்சச தொழிற்சாலையில், யுரேனியத்திலிருந்து அரிதான ஐசோடோப்பை எடுத்து அந்த அணுகுண்டு தயார் செய்யப்பட்டது. ஜுலை 16ம் நாளே புது மெக்சிகோவில் அலமோ கார்டோ அருகே டிரினிடி சைட்டில் முதலில் சோதிக்கப்பட்டது. அது மன்ஹட்டன் திட்டம் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அதன் அறிவியல் ஆராய்ச்சி அமெரிக்க மருத்துவர் ராபர்ட் ஓபன்ஹீமர் என்பவரால் இயக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத்தின் பொறியியலாளர்கள் படையிலிருந்து தளபதி லெஸ்லி க்ரோவ்ஸ் அதிகாரத்தின் கீழ் அந்த முழு திட்டமும் தயார் செய்யப்பட்டது. 6 மாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சுக்களால் ஜப்பான் நாட்டின் 67 நகரங்களை, அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் தாக்கியிருந்தன. அதன் பிறகு அமெரிக்கா கொடுத்த கெடுவையும் ஜப்பான் அரசாங்கம் அலட்சியப்படுத்தியது. அதனாலேயே அப்போதைய அமெரிக்க அதிபரான ஹேரி ட்ரூமன் ஹிரோஷிமா நகரின் மீது அந்த குட்டி பையனை ஏவிவிட தீர்மானித்தார்.
ஹிரோஷிமா நகரம் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது. ஜப்பானின் இரண்டாவது ராணுவ தலைநகராக இருந்தது. அது தவிர தொடர்பு மையமாகவும், சேமிப்பு கிடங்காகவும் இயங்கி வந்தது. ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு 4 மாதங்களில், 90,000 பேரில் இருந்து 166,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஹிரோஷிமாவில் உள்ள சுகாதாரத்துறையின் மதிப்பீட்டின் படி, இறந்தவர்களில் 60% குண்டின் எதிரொலியிலோ, பற்றிய நெருப்பின் காயத்திலோ இறந்திருக்கிறார்கள். 30% பேர் உடைந்து விழுந்த கட்டிடங்களினால் இறந்திருக்கிறார்கள். 10% மற்ற காரணங்களால் இறந்திருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களில் தீப்புண்ணின் பாதிப்பிலும், கதிர்வீச்சின் நோயிலும், மற்ற காயங்களிலும் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார்கள். மொத்தத்தில் 20% வரை அணுகதிர்வீச்சு நோயாலும், 30% வரை தீப்புண்களாலும், 60% வரை மற்றக் காயங்களால் ஏற்பட்ட நோய்களாலும், பெரும்பாலும் பொதுமக்களே இறந்திருக்கிறார்கள்.
முதலில் இந்த தாக்குதலை நடத்துவதற்கான இலக்குகளாக கியோட்டா, ஹிரோஷிமா, யோகோஹாமா மற்றும் கோகுராவிலுள்ள ஆயுத தளவாட கிடங்கு ஆகியவை ராபர்ட் ஓபன்ஹீமர் தலைமையில், இலக்குக் குழு என்பதில் 1945ம் ஆண்டு மே 10,11 தேதிகளில் முன்வைக்கப்பட்டது. ஹிரோஷிமா நகரம் நகர்ப்புற தொழிற்சாலைப் பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளது. அங்கு அதிகளவிலான சேதாரத்தை அந்த அணுகுண்டு தாக்குதல் ஏற்படுத்தும் என்று அனுமானிக்கப்பட்டது. அண்டையில் இருக்கும் மலைகளும், பயங்கரமான எதிரொலிகளைக் கொடுத்து வெடியின் பாதிப்பை அதிகமாக்கிக் கொடுக்கும் என்று தீர்மானித்தனர். போட்ஸ் டாம் பிரகடனத்தின் அம்சங்களை நிபந்தனையற்று சரணடைவுடன், ஜப்பான் சரணடைந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான், அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் இலக்குகள் மூலம் உளவியல் ரீதியான தாக்கங்களுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதேபோல அனைத்து நாட்டளவில் பகிரங்கமாக இத்தகைய முதல் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுவதன் மூலம், அதன் முக்கியத்துவத்தை போதுமான அளவு உணரவைக்க வேண்டும் என்பதும் நோக்கமாகும்.
கியோட்டாவில் தாக்குதல் நடத்தியிருந்தால், அது ராணுவத் தொழிற்சாலைகளின் மையமாக இருப்பதாலும், அறிவுஜீவி மையம் என்பதாக இருப்பதாலும், அந்த அணுகுண்டின் முக்கியத்துவம் மேலும் கூடியிருக்கும். ஆனால் இரண்டாம் உலகப்போரின் காலத்தில், அமெரிக்க ராணுவ உளவுசேவையில் ஜப்பான் பற்றிய நிபுணர் என்று கருதப்பட்ட எட்வின் ரெய்ஸ்சௌர் கியோட்டா மீதான குண்டுவீச்சை தவறுதலாக தவிர்த்து விட்டார். அதேசமயம் பல பத்தாண்டுகள் முன்னால் தனது தேனிலவை கியோட்டாவில் கொண்டாடிய ஹென்றி ஸ்டிம்சன் என்ற போர் செயலாளர், அந்த நகரின் மீது தனக்கிருந்த மரியாதையால் அதன் மீதான தாக்குதலை தவிர்த்தார். ஜுலை 26ம் நாள் அமெரிக்க அதிபர் ட்ரூமனும், கூட்டாளி நாடுகளின் தலைவர்களும், ஜப்பானை சரணடைய கோரும் போட்ஸ் டம் பிரகடனத்தை வெளியிட்டார்கள். அது ஒரு கெடுவாக வைக்கப்பட்டது. சரணடையாவிட்டால் தாக்குவோம் என அறிவித்திருந்தார்கள். முழுமையாக ஜப்பான் ஆயுதப்படையை அழித்து விடுவோம் எனவும், ஜப்பானிய தாய் நாட்டை உடைத்து விடுவோம் எனவும் அப்போதைய மிரட்டல் அமைந்திருந்தது. அதற்கு பொருள் அப்படிப்பட்ட தன்மைக் கொண்ட அணுகுண்டு ஒன்றை ஜப்பான் மீது வீசப்போகிறார்கள் என்று அப்போது புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதனால் ஜுலை 28ம் நாள் ஜப்பான் அரசாங்கம் அந்த மிரட்டல் பிரகடனத்தை நிராகரித்ததாக ஜப்பானிய ஊடகங்கள் வெளியிட்டன.
ஹிரோஷிமா நகரம் 3,81,000 மக்கள் தொகை கொண்டதாக இருந்தது. அணுகுண்டு வீச்சுக்குப் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுத்த ஆவணங்கள் கூட நெருப்புக்கு பலியாகியிருந்தன. அணுகுண்டு வீச்சு நடத்தப்பட்டதற்கு ஒரு மணி நேரம் முன்பு, சில அமெரிக்க விமானங்கள் ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி வருவதை ரேடார்கள் கண்டுபிடித்தன. அதையொட்டி எச்சரிக்கைக் கொடுக்கப்பட்டு, ஹிரோஷிமா உட்பட பல நகரங்களில் வானொலி கூட நிறுத்தப்பட்டது. வீசப்பட்ட ‘குட்டி பையன்’ என்ற அணுகுண்டு 65 கி.கிராம் யுரேனியம் 235 உடன் 43 செகண்ட்கள் நேரம் எடுத்து கீழே இறங்கியது.
மேற்கண்ட அணுகுண்டு தாக்குதல் உலகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் 100 கிலோ மீட்டர் வரை வெடித்த அணுகுண்டிலிருந்து வெளியேறிய அணுக்கதிர் வீச்சுகள் மக்களை தாக்கின. அதன் பாதிப்பு இன்னமும் மக்கள் மத்தியிலும், பல்வேறு உயிரினங்கள் மத்தியிலும் இருக்கிறது.
அணுகுண்டின் தாக்குதலால் ஏற்படுத்தப்படும் அணுக்கதிர் வீச்சுகள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் அழியாமல் உலகின் உயிரினங்களை அழித்துக் கொண்டிருக்கும் தன்மை கொண்டவை. அணுகதிர் வீச்சுகளிலிருந்து பாதுகாப்பு என்பது இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. புளுட்டோனியம்239 என்பதன் அணுவின் அளவு பாதியாக குறைவதற்கே 24,000 ஆண்டுகள் ஆகும் என்று அறிவியலாளர்கள் அறிவிக்கிறார்கள்.
அணுகுண்டுகள் அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதை உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக் கொள்கின்றன. ஆனாலும் வர்த்தகப் போட்டியிலும், அதற்கான அதிகார மற்றும் ஆதிக்க போட்டியிலும் ஈடுபடும் உலக நாடுகளின் அரசுகள், அணுகுண்டுகளை தயார் செய்வதில் முனைப்புடன் ஈடுபடுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகள் அணுகுண்டுகளை அதிகமான அளவில் உருவாக்கி, அவற்றை சேமித்து பெரும் அளவில் வைத்திருக்கின்றன. அதேசமயம் அணுகுண்டு சோதனைகளை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை, இன்னொரு புறம் முன்வைக்கின்றன. தங்களிடம் சேமிப்பில் உள்ள அணுகுண்டுகளால் தாங்கள் நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்துவதற்காக, பிற நாட்டு அரசுகள் அணுகுண்டு சோதனை செய்வதையும், அணுகுண்டு தயாரிப்பதையும் எதிர்க்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
அணுகுண்டுகளை தயார் செய்வதற்கான புளுட்டோனியத்தை, அணுஉலைகளிலிருந்தே இந்திய நாட்டில் பெற்றுக் கொள்கிறார்கள். ஆகவே சமாதானத்திற்கான அணுசக்தி, அழிவிற்கான அணுசக்தி என்பதாக அமெரிக்கா கூறுவது போல, இந்திய அரசும் இணைந்து அறிவிப்பது போல ஒன்று உண்டா என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கத் தொடங்கினால் தான், உண்மையைக் கூறும் நிலமைக்கு அரசு தள்ளப்பட முடியும்.

Tuesday, August 3, 2010

சட்டத்தின் முன்னால் அறியாமை தண்டிக்கப்பட வேண்டாமா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் பந்தாரா மாவட்டத்திலிருக்கும் ஒரு கிராமம் தான் கயர்லாஞ்சி. பய்யாலால் போட்மாங்கே என்ற ஒரு தலித் விவசாயியின் குடும்பம், ஆதிக்கசாதி வெறிக்கு பலியானது. 2006ம் ஆண்டு செப்டம்பர் 29ம் நாள் மாலையில், ஒரே தலித் குடும்பத்தைச் சேர்ந்த சுரேகா, சுதிர்,ரோசன், பிரியங்கா ஆகிய 4 பேரை படுகொலை செய்துள்ளனர். அதில் 19 வயது ரோசன் பிறவியிலேயே பார்வையிழந்தவர். 17 வயது உள்ள பிரியங்கா பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடூரமாக அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்பத் தலைவர் பய்யாலால் ஒரு சிறிய விவசாயி. தன்னுடைய சொந்த நிலத்தை உழுது பயிர் செய்பவராக இருந்தார். பண்ணை யார்களான ஆதிக்கசாதியினர், அவரது நிலத்தை அபகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். மகாராஷ்டிரா மாநிலம் ஆண்டு பலவாக ஆதிக்கசாதி பண்ணையார்களின் செல்வாக்கில் உள்ள கிராமங்களைக் கொண்டது. அதனால் தான் தலித் பட்டியலில் உள்ள மஹர் இனத்தை சேர்ந்த அம்பேத்கர், அந்த மாநிலத்தில் உள்ள தலித் மக்கள் விடுதலைக்காக போராட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார். அதுமட்டுமின்றி லட்சக்கணக்கான தலித் மக்களை, நசுக்கி வரும் சாதி கட்டுமான பிடிப்புக் கொண்ட இந்து மதத்தை விடுத்து வெளியே கொண்டு வந்து, புத்த மதத்தில் சேர்த்தார். ஆனாலும் கூட அத்தகைய மதமாற்றம், சாதி ஆதிக்கத்தையோ, தீண்டாமை கொடுமையையோ நீக்கி விடவில்லை. கயர்லாஞ்சியில் நடந்த தலித் படுகொலைகள் இதையே இன்றும் நிரூபித்து நிற்கின்றன. மேலே குறிப்பிடப்பட்ட பய்யாலால் குடும்பத்தினரும், அம்பேத்கர் பிறந்த அதே மஹர் இனத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களும் பலரை போல புத்த மதத்தில் சேர்ந்தவர்கள் தான். ஆனாலும் தீண்டாமையும், சாதிப் பகைமையும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்கவில்லை.
ஆதிக்கசாதி பண்ணையார்கள், தலித் மக்களை நிலவுடமையாளர்களாக காண்பதற்கு விரும்பவில்லை. குறிப்பிட்ட கயர்லாஞ்சி கிராமத்தில் பெரும்பான்மையாகவுள்ள ஆதிக்கசாதியினர் மத்தியில், விரல் விட்டு எண்ணும் அளவுக்கே தலித் குடும்பங்கள் இருக்கின்றன. அதனாலேயே அவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இன்னமும் வாழ்கிறார்கள்.
மேற்கண்ட கொலை வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் 2008ம் ஆண்டு செப்டம்பர் 24ம் நாள் குற்றம்சாட்டப்பட்ட 8 பேர்களில், 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. சக்ரு மஹகு பிஞ்சேவர், சத்ருகன் இஸ்ஸாம் தண்டே, விஷ்வநாத் ஹக்ரு தண்டே, ராமு மங்ரு தண்டே, ஜெகதீஷ் ரத்தன் மண்ட்லேக்கர், பிராபகர் ஜஸ்வந்த் மண்ட்லேக்கர் ஆகிய 6 பேர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டனர். சிசுபால் விஷ்வநாத் தண்டே, கோபால் சக்ரு பிஞ்சேவர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2010ம் ஆண்டு ஜுலை 14ம் நாள் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளை, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 6 ஆதிக்கசாதி வெறியர்களுக்கும், தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அறிவித்தது. நீதிமன்ற அமர்வில் இருந்த ஏ.பி.லவாண்டே, ஆர்.சி.சௌகன் ஆகிய நீதியரசர்கள் மேற்கண்ட தீர்ப்பை வழங்கினர். அதேசமயம் நடந்த படுகொலைகளை, 1989ம் ஆண்டின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவில் பதிவு செய்து விசாரிக்க வேண்டிய, அதனடிப்படையில் தண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதாக அந்த நீதியரசர்கள் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 2006ம் ஆண்டு நடந்த அந்த படுகொலைகளை, பதிவு செய்யும் போதே முதல் தகவல் அறிக்கையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இத்தகைய காவல் துறையின் செயல் கடுமையாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ஜுலை 14ம் நாள் சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சில் கூட்டத்தில், இந்த சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நாகபுரி கிளை இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை, குறைத்தது மட்டுமின்றி மேற்கண்ட குற்றம் சாதி அடிப்படையில் நடத்தப்பட்ட குற்றம் அல்ல என்றும் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது. அந்த கருத்து இந்திய நாடாளுமன்றத்தின் பேரவைத் தலைவரான மீரா குமார் மூலம் கடுமையாக சாடப்பட்டு, அதுவே நாடெங்கிலும் பெரும் விவாதத்தை கிளப்பி விட்டது.
தமிழ்நாட்டிலும் கூட அத்தகைய நீதியரசர்களின் முத்திரைக் குத்தல் கடுமையான ஆர்ப்பாட்டங்களுக்கும், கண்டனங்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது. மேற்கண்ட வழக்கை சாதாரண நிலப்பிரச்சனையாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் சித்தரித்த நீதியரசர்கள், அது 1989ம் ஆண்டின் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராது என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித் மக்களுக்கெதிரான அனைத்து கொடூரமான குற்றங்களும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று பேரவைத் தலைவர் மீரா குமார் கூறியது, ஊடகங்களுக்கு பெரும் செய்தியாக வெளிவந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக, தாழ்த்தப்பட்டோர் அல்லாத குற்றம் இழைத்தோர் செய்த கொடும் செயல் என்பதனால், மேற்கண்ட வழக்கு தானாகவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறு பதிவு செய்யப்படும் போது அந்த சட்டமே அந்த வழக்கின் தீர்ப்பிற்கு சரியான முறையில் வழிவகுக்கும் என்றும் மீரா குமார் கூறியுள்ளார்.
உள்ளபடியே 1989ம் ஆண்டின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தெளிவாகவே சில விளக்கங்களை கூறுகிறது. சாதாரணமாக நடத்தப்படும் தாக்குதல்கள், கொலைகள், வன்புணர்ச்சிகள், தீ வைத்தல், நிலத்தை பறித்தல் ஆகியவை பொதுவான குற்றயியல் பிரிவுகளின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பது உண்மை தான். ஆனால் 1989ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்று ஒரு புதிய சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது?
அந்த சட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த எவரையும், தாக்கவோ, கொலை செய்யவோ, வீட்டை தீ வைக்கவோ, நிலத்தை பறிக்கவோ, வன்புணர்ச்சி செய்யவோ, பாலியல் வன்முறை நடத்தவோ, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தை சாராத ஒருவர் செய்வாரானால், மேற்கண்ட 1989ன் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று விளக்கியுள்ளது. அதை கூட விளங்காத நிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் காவல்துறையோ, குறிப்பிட்ட வழக்கில் சி.பி.ஐ.யோ இருக்குமானால், அது சட்டம் தெரியாத அறியாமையாகவே கருதப்பட முடியும். அதுபோலவே மேற்கண்ட சட்டத்தில் உள்ள விளக்கத்தை படிக்காத அல்லது புரிந்துக் கொள்ளாத அல்லது அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்காத ஒரு நீதியரசர் இருப்பாரானால், அவரும் சட்டம் தெரியாத அறியாமை என்ற தவறை செய்திருக்கிறார் என்றே பொருள். சட்டத்திற்கு முன்னால் அறியாமை என்பது மன்னிக்கப்பட முடியாது. அதுவும் கூட ஒரு குற்றமே என்ற உண்மை இந்த இடத்தில் பொருத்தப்பட்டு, பார்க்கப்படுமா?
மேற்கண்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அமுலாக்கத்திற்காக விதிகள் 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அந்த விதிகளில் தாழ்த்தப்பட்டோர் அல்லாத ஒரு காவல் துறை அதிகாரியோ, நீதியரசரோ குறிப்பிட்ட வழக்கை வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யாவிட்டால், அவர்களும் கடமை தவறியதற்காக 3 ஆண்டுகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. மேற்கண்ட தவறான விளக்கத்தை, குறிப்பிட்ட சட்டத்திற்கு எதிராக தெரிவித்த நாகபுரி உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மேலே குறிப்பிட்ட படி 3 ஆண்டு தண்டனைக்குரிய குற்றத்தை செய்திருக்கிறார்கள். அவர்களை தண்டிக்க அரசும், அரசியல்வாதிகளும் தயாராக இருப்பார்களா?

Thursday, July 29, 2010

மனித கௌரவமும், மனித சோகங்களும்.

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவது தவறு என்றும், அதே போல கழிவு ஒடைகளில் உழைக்கும் மக்களை இறக்கிவிட்டு ஆபத்துகளை எதிர்கொள்ளவிடுவது பிழையானது என்றும், இந்திய நாட்டின் தேசிய மனித உரிமை ஆணையமும், பல்வேறு நீதி மன்றங்களும் கூறியுள்ளன. ஆனாலும் கூட இந்த நாட்டில் நிலவுகின்ற சாதி பாகுபாடும், தீண்டாமை இழிவுபடுத்தல்களும், மனிதர்களை அது போன்ற பணிகளில் நிர்பந்தித்துவருகிறது. அவ்வாறு செய்வது மனித கௌரவத்தை கேள்வி கேட்கின்ற ஒரு போக்கு என்று மனித உரிமை ஆர்வலர்கள் கொதித்துப் போகின்றனர்.
ஏற்கனவே மனித கழிவுகளை மனிதனே அள்ளக்கூடிய வேலைகளை தடை செய்யக் கோரி, தேசிய மனித உரிமை ஆணையம் 10 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தது. இந்திய அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் அது போன்ற செயல்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் என்று ஆணையிட்டது. அதை அமுல்படுத்தாத ரயில்வே துறையை கடுமையாக ஆணையம் கண்டித்தது. அதே போல கழிவு நீர் சாக்கடைகளில் பூமிக்குள் இறங்கி பணியாற்றச் செல்லும் தொழிலாளர்கள், கழிவுகளிலிருந்து வெளிவரும் நச்சு வாயுக்களால் தாக்கப்பட்டு, மரணமடைகின்ற நிகழ்ச்சிகளும் நாடெங்கிலும் நிகழ்ந்து வருகிறது. இத்தகைய கொடூரமான செயலை செயல்படுத்திவரும் அரசாங்கத் துறைகள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. கழிவு நீர் சாக்கடைகளில் கொல்லப்படுகின்ற தொழிலாளர்கள் பற்றிய சோகச் செய்திகளும் ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் இது போன்ற நிலைமை தொடர்கிறது. கழிவு நீர் சாக்கடைகளில் இதுவரை தமிழ்நாட்டில் மரணமடைந்த தொழிலாளர்களது எண்ணிக்கை 1000த்தை தாண்டும். மரணம் மட்டுமின்றி அத்தகைய தொழிலாளர்கள், கழிவு நீர்களுடனேயே கலந்து வாழ்வதால், பல விதமான தோல் நோய்களுக்கு உள்ளாகிறார்கள். அதன் மூலம் விரைந்து மரணத்தை பலர் சந்திக்கிறார்கள். பலர் நேரடியாக அரசாங்கம் மூலமாகவும், சிலர் தனியார் ஒப்பந்தகாரர்கள் மூலமாகவும் இத்தகைய வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இது இந்தியாவில் உள்ள தொழிலாளர் சட்டத்திற்கு எதிரானது.
சுகாதாரத் தொழிலாளர்கள் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இந்த தொழிலாளர்களை, இப்படிப்பட்ட பணிகளில் நகராட்சிகள் ஈடுபடுத்துகின்றன. உதாரணமாக திருச்சி மாநகராட்சி இத்தகைய பணிகளுக்கு ஒப்பந்தகாரர்களிடம், கழிவு நீர் குழாய்களை பராமரிக்கும் வேலையை கொடுத்துள்ளது. அதில் தற்காலிகத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். திருச்சியில் உள்ள செந்தண்ணீர்புரம் என்ற இடத்தில் ஒரு கழிவு நீர் கிடங்கு உள்ளது. அதில் ஜுன் மாதம் 21ம் நாள் 2 தொழிலாளர்கள் வேலைச் செய்யும் போது, நச்சு வாயு தாக்கி மரணமடைந்துவிட்டனர். வேலையில் ஈடுப்பட்ட போது கீழ் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தனர். அவர்கள் உடல் முழுவதும் சேறு படிந்திருந்தது. அவர்கள் வாயிலிருந்து ரத்தமும், திரவமும் வழிந்தது. மேற்கண்ட பரிதாபமான நிலைமை படங்களுடன் ஊடகங்களில் வெளிவருகிறது. இது போல எத்தனையோ விபத்துகள் சென்னையிலும் மற்ற மாநகராட்சிகளிலும் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து கொண்டிருக்கிறது. எத்தனைதான் ஊடகங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கத்தினாலும், மாநகராட்சி தரப்பினர் அசைவதாகவே இல்லை.
ஒவ்வொரு விபத்து நடக்கும் போதும், அரசுதரப்பு அதிகாரிகள் இனிமேல் கருவிகளைத் தான் கழிவு நீர் அகற்றலுக்கு பயன்படுத்துவோம் என்று ஊடக நேர்காணல்களில் கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையில் அவ்வாறு நடப்பதில்லை. 1993ம் ஆண்டு மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதை தடுக்கும் சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை மீறித்தான் அரசுத் துறைகள் செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. 2008ம் ஆண்டு நவம்பர் 20ம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய வேலைகளுக்கு எதிராக ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது. அதை மதிக்காமல் திருச்சி மாநகராட்சி தொழிலாளர்களுக்கு முழுகால்சராய், பாதுகாப்பு கவசங்கள், முகமூடிகள், பிராணவாயு குழாய்கள் ஆகியவற்றை அளிக்காமல் வேலைக்கு அனுப்பியுள்ளது.
மேற்கண்ட ஆணையை ஒட்டி 2009ம் ஆண்டு ஜுன் 16ம் நாளும், ஜூலை 10ம் நாளும், ஜூலை 24ம் நாளும், ஆகஸ்ட் 8ம் நாளும் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம், தொடராணைகளை சட்டப் பிரிவு226,215 ஆகியவற்றின் கீழ் கொடுத்துள்ளது. அத்தகைய ஆணைகளை தமிழ்நாடு அரசின் நகராட்சி நிறுவாகம் மற்றும் குடிநீர் வினியோகத் துறை செயலாளர் கவனமாக எடுத்திருந்தால், மேற்படி விபத்துகளை தடுத்திருக்கலாம். அதேபோல சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனரும் மேற்கண்ட உயர்நீதிமன்ற ஆணைகளை கவனத்துடன் அமுலாக்கியிருந்தால், விபத்துகள் தவிர்க்கப்படும்.
மேலே கூறப்பட்ட அரசுத் துறைகள், நீதிமன்ற ஆணையை மீறியதாக 2009ம் ஆண்டு ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அதன்பிறகே மேலே கூறிப்பிடப்பட்ட 5 ஆணைகள் அதே ஆண்டில் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டது. அதன் மீது நீதிமன்றம் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட சென்னை பெருநகர குடிநீர் வினியோகம் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனரை தலைவராகப் போட்டு, ஒரு சிறப்பு குழுவை உயர்நீதிமன்றம் நியமித்தது. அந்த சிறப்பு குழு கழிவு நீர் குழாய் பராமரிப்பில் மேம்பாட்டை கொண்டுவந்து, மனிதர்கள் அந்த பணியில் பாதுகாப்பின்றி ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் வழிகாட்டலாக இருந்தது. அந்த சிறப்பு குழுவில் இத்தகைய வழக்கை தொடுத்தவரும் உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.
சுகதார தொழிலாளர்களை இத்தகைய கழிவு நீர் சாக்கடைகளுக்குள் நுழையவிடுவதை தடைச் செய்து கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் குறிப்பிடப்பட்ட சிறப்பு குழு 4 கூட்டங்கள் வரை கூட்டப்பட்டும், வழிகட்டல்கள் அமுலாக்கப்படவில்லை என்ற விமர்சனத்துடன் மீண்டும் வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது. அதற்கு ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் தெளிவான அறிக்கையை முன் வைக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கண்ட நீதிமன்ற விசாரணைகளும், வழிகாட்டல்களும் நமக்கு ஒன்றை உறுதியாக தெளிவுப்படுத்துகிறது. அதாவது எத்தனைச் சட்டங்கள் போட்டாலும், அவற்றை செயல்படுத்தும் இடத்தில் உள்ள மனிதர்கள் அதாவது அதிகாரிகள் அந்த சட்டங்களை கிரகித்துக் கொண்டால் தான், சிரமேற்றால் தான் அமுல்படுவார்கள் என்ற உண்மை தெளிவாகிறது. சமூகத்தில் சாதி வேறுபாடுகளும், சாதி இழிவுபடுத்தல்களும் இருப்பதனால், வேலைகளிலும் சிலவற்றை இழிவானவை என்று கருதும் போக்கு உள்ளது. உயிருக்கு ஆபத்தான, பாதுகாப்பு இல்லாத வேலைகளை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஒதுக்கும் போக்கும் நிலவுகிறது. அதனால் அத்தகைய தொழிலாளர்கள் மீது, ஆதிக்க மனோபாவம் கொண்ட அதிகாரிகளுக்கு அக்கறை இருப்பதில்லை. இத்தகைய பொறுப்பற்ற அதிகாரிகளின் போக்கை, சாதி மனோபாவமாக பார்த்து அதன் மீது அல்லது அவர்கள் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்தகைய அதிகாரிகள் செய்கின்ற தவறுகள் அப்பாவி தொழிலாளர் உயிரை மட்டும் பறிக்கவில்லை; நீதிமன்ற அவமதிப்பு மட்டும் செய்யவில்லை; சமூக ரீதியான வன்முறையாகவும் காணப்பட வேண்டும். ஆகவே அவை தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கையை கோரி நிற்கிறது.

Wednesday, July 28, 2010

மக்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டால், ஆயுதப் போரா?

சமாதானத்திற்காகவும், நீதிக்காகவும் ஒரு நீண்ட பயணம் என்பதாக வருகிற ஆகஸ்ட்15ம் நாளுக்காக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது கொல்கத்தாவிலிருந்து லால்கர் நோக்கி என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக சேவகர் மேதாபட்கர், கொத்தடிமை விடுதலை முன்னணியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சுவாமி அக்னிவேஷ் ஆகியோர் இந்த அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளனர். இது அறவழியில் மக்களை அணிதிரட்டி நடத்தப்பட இருக்கின்ற ஒரு போராட்டம் என்பது புரிகிறது. இந்தியாவில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சனைகள் இது போன்ற பல்வேறு மக்கள் போராட்டங்களை கோரி நிற்கின்றன.
ஐ.நா. சபை சமீபத்தில் வறுமை பற்றி கொடுத்த ஒரு புதிய புள்ளி விவரத்தில் 28 ஏழ்மைமிக்க ஆப்ரிக்க நாடுகளை விட, 8 இந்திய மாநிலங்கள் வறுமையில் அதிகமான மக்களை தள்ளியுள்ளன என்பதாக கூறியுள்ளது. அது சம்பந்தப்பட்ட பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய மக்கள் தொகையில் 38 விழுக்காடு ஏழ்மையில் உழல்கிறார்கள் என்று ஒரு செய்தி. தெற்காசியாவில் தான் உலகிலேயே ஏழ்மை மக்களில் பாதி பேர் வாழ்கிறார்கள் என்று ஒரு செய்தி. பீகார், சத்திஸ்கர், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், ஓரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்குவங்கம் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 4 கோடியே 21 லட்சம் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். பீகார் மாநிலத்தில் 81 விழுக்காடு ஏழை மக்கள். டெல்லியில் 15% ஏழைகள். இத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்படும் மக்கள், போராட்டங்களில் ஈடுபடுவது இயற்கை தான்.
மற்ற மாநிலங்களை விட 43 ஆண்டுகளாக இந்தியாவின் பெரிய நாடாளுமன்ற இடது சாரி கட்சியின் ஆட்சி நடைபெறும் மேற்குவங்கத்தில் இந்த நிலைமை தொடர்வதற்கான காரணம் என்ன? மேற்குவங்கம் மாநிலத்தில் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடப் புறப்பட்ட மக்கள் இயக்கங்களை அரசு அனுமதித்ததா? அல்லது அடக்குமுறை செய்து நசுக்கியதா? சமீபத்தில் மேற்கு மிகினாபூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் வட்டார தளபதி சிதுசோரன் மற்றும் 5 பேரை காவல் துறை படுகொலைச் செய்தது. அதை வெளியிட்ட அரசு, காவல் துறையின் அராஜகத்திற்கு எதிரான மக்கள் குழுவின் சிதுகானு மக்கள் தொண்டர்கள் என்ற போராட்ட முன்னணியை சேர்ந்தவர்கள் என்று கொல்லப்பட்டவர்களை வர்ணித்தது. அதாவது பிரபலமான மக்கள் திரள் அமைப்பை சேர்ந்தவர்களை, மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் கொலைச் செய்ததை அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு போராடும் மக்களமைப்புகளை நசுக்குவதும், அதன் முன்னோடிகளை கொலைச் செய்வதும் ஒரு அரசாங்கத்தின் வாடிக்கையாக இருப்பதனால் தான், போராட்ட முன்னோடிகளும், இளைஞர்களும் ஆயுதப் போராட்ட பாதையை நோக்கி செல்கிறார்கள் என்பதற்கு இதை விட போதுமான ஆதாரம் கிடைக்காது.
43 ஆண்டுகளாக அந்த மாநிலத்தை ஆளுகின்ற மார்க்சிஸ்ட் கட்சி, தனது கொள்கைகளை, மக்கள் ஜனநாயக புரட்சி என்று பரப்புரை செய்து, லட்சக்கணக்கான ஊழியர்களை திரட்டி வைத்திருந்தது. 1964ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சமரசவாதமாக செல்வதாக குற்றம் சாட்டி, புதிய கட்சியை சி.பி.எம். என்ற பெயரில் தொடங்கியது. அந்த கட்சி மக்களை திரட்டி புரட்சியை நடத்தப் போவதாக ஊழியர்கள் நம்பினார்கள். ஆனால் தன்னால் குற்றம் சாட்டப்பட்ட இ.க.க. தலைமையை போலவே தானும் சமரசவாத பாதைக்கு சென்றது. அதையொட்டியே 1967ல் டார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல்பாரி கிராமத்தில் விவசாய புரட்சியை சாரு மஜும்தார் தொடங்கி வைத்தார். 1972ம் ஆண்டு அவரை ஜூலை 16ம் நாள் கைது செய்த மே.வங்க காவல் துறை ஜூலை 28ம் நாள் சிறையிலேயே மரணமடையவைத்தது. அதனால் தான் அவர் நினைவில் ஜூலை 28ம் நாளை புரட்சியாளர்கள் தியாகிகள் தினம் என்று கடைப்பிடிக்கிறார்கள். இப்போதும் மாவோயிஸ்டுகள் அதை அறிவித்துள்ளார்கள்.
சாருமஜும்தாரை திரிபுவாதத்திற்கு பதிலடி கொடுத்தவராக புரட்சியாளர்கள் பார்க்கிறார்கள். சி.பி.எம். கட்சி முன் வைத்த நாடாளுமன்ற பாதைக்கான ஐக்கிய முன்னணியை மறுத்து, மாவோ கூறிய புரட்சிக்கான ஐக்கிய முன்னணியை முன் வைத்தார் என்கிறார்கள். இந்தியா அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டது என்ற சி.பி.எம்.மின் வாதத்தை மறுத்து, பொருளாதார சுதந்திரம் கிடைக்காமல், அரசியல் சுதந்திரம் கிடைக்காது என்ற வாதத்தையும் சாருவிடமிருந்து எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியாவை ஆள்வது பெருமுதலாளிகள் என்ற மார்க்சிஸ்ட் கட்சி மதிப்பீட்டை மறுத்து, தரகுமுதலாளிகள் ஆள்வதாக சாரு கூறியதை ஏற்றுக் கொள்கிறார்கள். மாவோவின் மக்கள் போர்ப் பாதை, கிராமப் புறங்களை விடுதலை செய்து, நகர்ப் புறங்களை சுற்றிவளைத்து விடுதலை செய்வது தான் என்ற சாருவின் கொள்கையை பின்பற்றுகிறார்கள். இவ்வாறு சாருமஜும்தாரை தங்கள் வழிக்காட்டியாக கொண்டதால் தான், இந்திய புரட்சியாளர்கள் அவரது நினைவு நாளை, தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
அறவழியில், அமைதிப் பாதையில் மக்களைத் திரட்டி போராடக் கூடிய மக்கள் திரள் இயக்கங்களை முத்திரைக் குத்தி, அடக்குமுறை செய்வதனால் தான் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய புரட்சிகரப்பாதைக்கு ஈர்க்கப்பட்டுள்ளார்கள். அது தான் இப்போது மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட படுக் கொலைகளிலும் நடந்துள்ளது. அதனால் தான் மார்க்சிஸ்ட் கட்சி 43 ஆண்டுகளாக ஆண்டு வரும் மாநிலத்திலும், வறுமை இன்னமும் தாண்டவமாடுகிறது. ஆகவே வன்முறையை கைவிட்டு, நன் முறையில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க கோரும் நீண்ட பயணம் பிரபலமாக எதிர் பார்க்கப்படுகிறது.
அவ்வாறு லால்கர் நோக்கி புறப்படுங்கள் என்ற மேதாபட்கரின், சுவாமி அக்னிவேஷின் நீண்ட பயணம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறது. மக்களது வாழ்க்கைக்கும், அந்தஸ்த்திற்கும் உள்ள உரிமை என்பது எப்போதும் மனிதத் தன்மையற்ற வழிகள் மூலம் நியாயப்படுத்தப்பட முடியாது என்பதாக அவர்கள் கூறுகிறார்கள். வன்முறைக்கு முடிவுக் கட்டுவோம் என்கிறார்கள்.
நிலம், தண்ணீர், காடுகள், கனிமவளங்கள் ஆகிய மூலாதாரங்களை பெறுவதற்கான உரிமை மக்களுக்கு, குறிப்பாக ஆதிவாசி சமூகங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்கள். பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு, ஆதிவாசிகளின் மூலாதாரங்களை தாரைவார்க்க சுடாது. லால்கர் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். வளர்ச்சி என்பது சமத்துவம், நீதி, ஜனநாயக முறை ஆகியவற்றின் மூலம் தான் எட்டப்பட முடியும். மக்களுக்காக அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும். 1996ன் பஞ்சாயத்துச் சட்டம், வனச்சட்டம் ஆகியவை அமுல்படுத்தப்பட வேண்டும். மக்கள் போராட்டங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை இந்த அமைதி வேண்டுவோர் முன் வைக்கிறார்கள்.
இதே கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் மக்கள் இயக்கங்களை அரசு ஒடுக்கும்போது தானே, இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கும் வழியை தேர்வுச் செய்கிறார்கள்? இந்த முறை மேற்குவங்க அரசு தன்னை மாற்றிக் கொள்ளுமா? அல்லது தன்னை தூக்கியெறிய மக்களை தூண்டிவிடுமா? இதுதான் இன்றைய கேள்வியாக எழுகிறது.

Tuesday, July 27, 2010

ஜூலை-28 தியாகிகள் தினம்.

இந்திய புரட்சியின் தானைத்தலைவர், தத்துவ வழிகாட்டி, வசந்ததத்தின் இடிமுழக்கத்தை நக்சல்பாரி கிராமத்தில், விதைத்த புரட்சியாளன், மார்க்சிசத்தை திரித்த திரிபுவாதத்தை புறமுதுகிட்டு ஓடச்செய்த புதிய பூகம்பம், எட்டு கட்டுரைகள் மூலம் திரிபுவாதத்தின் அனைத்து முகங்களையும் அம்பலப்படுத்திய அரசியல் புயல், இந்தியாவின் இளைய தலைமுறைக்கு எழுச்சியை ஊட்டிய வங்காள சிங்கம், இளம் தலைமுறையினரை தியாகம் செய்ய ஊக்குவித்த உணர்வு ஏந்தல், எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்த வரலாறு, தோழர் சாருமஜூம்தார், இந்த நாளில்தான் வங்காள சிறையில் எதிரிகளின் சதியால் படுகொலை செய்யப்பட்டார். அதனால்தான் எங்களுக்கு இன்று தியாகிகள் தினம். அன்று சாரு எழுதிய திரிபுவாத எதிர்ப்பு எழுத்துக்கள், எங்களுக்கு நாடாளுமன்ற இடதுசாரிகளின் திரித்தல் வேலைகளை வெளிச்சம் போட்டு காட்டின. அன்று மாவோவின் போர்த்தந்திரங்களை, அப்படியே மாற்றி தேர்தல் களத்தில், பங்களா காங்கிரசுடன் கூட்டணி சேர்வதற்காக அதுதான் மாவோ சொன்ன ஐக்கியமுன்னணி தத்துவம் என திரித்து சொன்ன இடது சொரியர்களை அம்பலப்படுத்திய பதிவுகளில், சாருவை கண்டோம். இந்தியாவிற்கு அரசியல் சுதந்திரம் கிடைத்துவிட்டது என பொய்யான செய்தியை கூறி, தோழர்களை ஏமாற்றி வைத்த இடதுசாரிகளை அமபலப்படுத்தி, பொருளாதார சுதந்திரம் கிடைக்காமல் அரசியல் சுதந்திரம் எப்படி கிடைக்கும் என கேள்வி எழுப்பியவர் சாருமஜூம்தார். இது அரைக்காலணி நாடு என்பதை எடுத்து சொன்னதில், நாங்கள் சாருவை கண்டோம். இந்தியாவில் உள்ளது நிலபிரபுத்துவ மிச்ச சொச்சம் என்று சொன்ன நாடாளுமன்ற இடதுகளை எதிர்த்து, அரை நிலபிரபுத்துவம் இருப்பதை அமபலப்படுத்தி எங்கள் கண்களை திறந்தவர் சாருமஜூம்தார்.
இந்திய முதலாளிகள் சுதந்திரமான பெருமுதலாளிகள் என்று சொல்லி எங்களை குழப்பிய நாடாளுமன்ற இடதுகளின் குழப்பவாதத்தை உடைத்தெறிந்து, தரகு முதலாளிகள் இந்த நாட்டை ஆள்வதை எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்கள்
கண்களை திறந்தவர் சாருமஜூம்தார். மாவோ சிந்தனை மகத்தானது என்று எங்கள் சிந்தைகளை தெளிவுபடுத்தி, புரட்சிக்கு வழிகாட்டியவர் சாருமஜூம்தார். மார்க்சிய- லெனினிய- மா-சே-துங் சிந்தனை என்ற தத்துவ வழிகாட்டல்தான் நமது வழிகாட்டும் தத்துவம் என எங்களுக்கு புரியவைத்தவர் எங்கள் சாருமஜூம்தார். கிராமப்புறங்களை விடுதலை செய்து நகர்ப்புறங்களை சுற்றிவளைத்து விடுதலை செய்வதே மாவோவின் மக்கள் யுத்த தந்திரம் என எங்களுக்கு விளங்க வைத்தவர் சாருமஜூம்தார். நிலபிரபுத்துவ கட்டுமானத்தை பாதுகாக்கும் ஏகாதிபத்தியத்தை லெனினை காட்டி எங்களுக்கு விளங்கவைத்தார் சாருமஜூம்தார். ஏகாதிபத்தியத்திற்கு அடிமை வேலை செய்யும் தரகு முதலாளிகளை அம்மணமாக எங்களுக்கு அடையாளம் காட்டியவர் சாருமஜூம்தார். தத்துவ வழிகாட்டல் மட்டுமின்றி, போர்த்தந்திரத்தையும் கற்றுத்தந்தவர் சாருமஜூம்தார். மாவோவின் போர்த்தந்திரங்களை கற்று வந்த சாரு, எங்களிடம் கொரில்லா போரின் துவக்கத்தை எளிமையாக எங்கள் கிராமங்களில் பொருந்தும் நிலையில் பொருத்தி கூறினார். விளங்கிகொண்டோம். கொடுமை மிகு பண்ணையார்களை அழித்தொழிக்கும் கொரில்லா போரின் துவக்கத்தை எளிமையாக புரிய வைத்தார். அழித்தொழிப்பு இல்லாவிட்டால் எதிரியான எங்கள் ஊர் பண்ணையார்கள் எங்களை அழித்து, எங்கள் படையணியான கூலி மக்களின் முன்னோடிகளை அழித்துவிடுவர் என்ற யதார்த்த உண்மையை புரிந்து கொண்டோம். வர்க்கப்போரின் உச்சகட்டம் அது என அழகாக சாரு எடுத்து சொன்ன அறிவுரையை புரிய முடியா அறிவுஜீவிகள், கிராமத்தில் கூலி மக்களுடன் இணைய முடியாமல் ஓடி போனதையும் நாங்கள் கண்டோம். ஓடிபோனவர்கள் சாரு பற்றி புரிதல் இன்மையால், புரட்சி பற்றிய பயத்தின் காரணமாய், தியாகம் செய்ய அஞ்சி நடுங்கியதால், கிராமங்களை விட்டு, கூலி மக்களை விட்டு ஓடிச்சென்றனர். ஓடுகாலிகள் எப்போதுமே அதிகமாக நியாயம் பேசுவர். அதனால் எங்கு நோக்கினும் சாரு பற்றிய விமர்சனகளை அள்ளிவிட்டனர். அவதூறு செய்தனர். அது எல்லா நாட்டு புரட்சியிலும் நடக்கின்ற துரோக வரலாறுதான்.சாருவை நம்பியவர்கள், சாரு கூற்றை ஏற்றவர்கள், சாரு வரிகளை உணர்ந்து கொண்டவர்கள், அதை கிரகித்தவர்கள், புரட்சியில் நின்றார்கள். சாருவை தரித்தது தத்துவம் பேசியவர்கள், ஓடிச்சென்று சமரச பாதையில் பயணம் ஆனார்கள். மக்கள் திரள் அமைப்பு பற்றி பேசிவிட்டு மக்களை திரட்டாமலே எழுதியும், பேசியும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். சாரு நடைமுறையின், நடைமுறைக்கான தத்துவம். அதை விளங்கிகொண்டவர் மட்டுமே புரட்சிகர வாழ்க்கையை தொடர முடிந்தது. 1972 ஆம் ஆண்டு ஜூலை பதினாறில், மேற்குவங்க அரசு சாருவை கைது செய்தது. பன்னிரண்டு நாட்கள் சிறையில் இருந்தவரை, இருபத்திஎட்டாம் நாள் கொலை செய்தது. இதுதான் அரச பயங்கரவாதத்தின் செயல்பாடு. அதனால் இந்த நாள் இந்திய புரட்சியின் தந்தை கொல்லப்பட்ட நினைவு நாள். அதையே இந்திய புரட்சியாளர்கள் தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.

அமெரிக்கர்களைக் கொல்ல அமெரிக்கப் பணம்

2008ம் ஆண்டு ஆகஸ்ட் ஆவணம் என்ற பெயரில் விக்கிலீக்ஸ் மூலம் பல ரகசியங்களை நியூயார்க் டைம்ஸ் இணையத்தளத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. இங்லாந்தைச் சேர்ந்த கார்டியன் ஏடும், ஜெர்மனைச் சேர்ந்த தெர் ஸ்பிகல் ஏடும் இதேபோல செய்திகளை அம்பலப்படுத்தியது. அவையெல்லாமே பாகிஸ்தான் அரசின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. ஆப்கானிஸ்தானிற்கு எதிராகவும், இந்தியாவிற்கு எதிராகவும் சதி செய்ததாக ஆவண ரகசியங்களை வெளியிட்டிருந்தன. அதில் ஆப்கான் போர் பற்றி 92,000 அமெரிக்க ராணுவ ஆவணங்களை வெளியிட்டிருந்தன. அவை அனைத்துமே ரகசிய ஆவணங்கள். ஐ.எஸ்.ஐ.யைச் சேர்ந்த ஒரு அதிகாரி, தாலிபன் அதிகாரியுடன் சேர்ந்து ஆப்கான் அதிபர் ஹமீது கார்சாயை கொலை செய்ய சதி செய்ததற்கான ஆவணமும் இருக்கிறது.
பாகிஸ்தான் அரசுக்கு நேச நாடாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் ஆப்கான் போருக்கு பாகிஸ்தான் அரசின் உதவியையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த போர் தாலிபனை எதிர்த்த போராக இருக்கிறது. அதே சமயம் பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை, ஆப்கானிலிருக்கும் தாலிபன் சக்திகளுக்கு உதவி செய்தால் அதுவே அமெரிக்க ராணுவத்திற்கு எதிரான செயலாக அமைகிறது. இவ்வாறு அமெரிக்க ராணுவத்திற்கு எதிரான சதிச் செயல்களையும், அவற்றை அமெரிக்க அரசின் நேச நாடான பாகிஸ்தான் அரசே தனது உளவுத்துறை மூலம் செய்ததையும், அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் இணையதளத்தையும் கண்டு, அமெரிக்க அரசின் வெள்ளை மாளிகை கொதித்துப் போய்விட்டது. ஆனால் அதை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்காரர்கள் அது வெளிப்படைத் தன்மை கொண்டது என்பதாகவும், அதீத ரகசியத்திற்கு எதிரான போராட்டம் என்பதாகவும் விளக்கமளிக்கிறார்கள்.
ஆப்கான் தலைநகரான காபூல் நகரில் 2008ம் ஆண்டு ஜூலை 7ம் நாள் இந்திய தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது. அதில் 58 பேர் மரணமடைந்தனர். போலந்து நாட்டின் உளவுத்துறை இப்படிப்பட்ட தாலிபன் தாக்குதல் நடக்கும் என்று முன்கூட்டியே கூறியதாக, வெளியான அமெரிக்க ராணுவ ஆவணங்கள் கூறிப்பிட்டுள்ளன. சரியாக தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்பு இத்தகைய செய்தி கூறப்பட்டதாம். உடனடியாக அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் துணை இயக்குனர் ஸ்டீபன் ஆர். காப்பஸ், பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு சென்று அத்தகைய தாக்குதலுக்கு உதவி செய்வதாக ஐ.எஸ்.ஐ. உடன் சண்டையிட்டதாக அந்த அமெரிக்க ராணுவ ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் அத்தகைய தாக்குதல் பற்றி இந்திய அரசுக்கு கூறப்பட்டதா என்பது பற்றி அதில் தகவல்கள் இல்லை.
இப்போது ஆவணங்களில் உள்ள ரகசியங்கள் பற்றி வாய் திறக்காத அமெரிக்க அரசு, ரகசிய ஆவணங்கள் கசிந்தது எப்படி என்று ஆய்வு செய்கிறதாம். அதற்காக ஒரு விசாரணை தொடங்கியுள்ளது. அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் இந்த அம்பலப்படுத்தும் வேலையை செய்ததாகவும் தெரியவருகிறது. ஆப்கானில் நடக்கும் போரில் பல அப்பாவி குடிமக்களை நேட்டோ படைகள் கொலைச் செய்துள்ளன என்றும், அவை வெளியிடப்படவில்லை என்றும் இந்த ஆவணங்களிலிருந்து அம்பலமாகியுள்ளது. மேலும் ஆப்கானில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடும் தாலிபன்களுக்கு, பாகிஸ்தானும், ஈரானும் உதவி செய்துள்ளன என்ற ஆதாரங்களும் அதில் உள்ளது. நேட்டோ படைகளின் தாக்குதலில், 195 அப்பாவி ஆப்கான் மக்கள் அனாவசியமாக கொல்லப்பட்டனர் என்றும், 174 அப்பாவி மக்கள் காயமடைந்தனர் என்றும், மோட்டார் சைக்கிள் ஒட்டிய அப்பாவிகள் அல்லது ஒட்டுநர்கள் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டார்கள் என்றும் அது கூறுகிறது. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நேவடாவிலிருந்து, ரிமோட் மூலம் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கை குழுவிற்கு பணிக்குழு 373 என்று பெயர். அவர்கள் பயங்கரவாதிகளை தாக்கும் போது, அப்பாவி மக்கள் பலரையும் கொலைச் செய்திருக்கிறார்கள் என்ற உண்மையும் வெளியாகி உள்ளது. முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள கூட்டு செயல்பாடுகள் பட்டியல் என்ற பெயரில் 2000 மூத்த தாலிபன் மற்றும் ஆல்கெய்தா காரர்களை அமெரிக்கா குறிவைத்தது என்பது தெரியவந்துள்ளது. அதேபோல ஈரான் அரசும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக செய்திகள் உள்ளன. 100 ஆப்கான் தாலிபன்கள், ஈரானிலிருந்து தற்கொலைப் படைகளாக தாக்குதலுக்கு ஆப்கான் சென்றனர் என்ற செய்தியும் அதில் உள்ளது. இந்த அம்பலப்படுத்தலை செய்த விக்கிலீக்சின் நிறுவனர் ஜூலியன் அஸாங்கே கூறுகையில், ஆயிரக்கணக்கான போர் குற்றங்கள், ஆப்கானில் இழைக்கப்பட்டுள்ளன என்றும் அவை நீதிமன்றம் முன்னால் கொண்டுவர வேண்டும் என்றும், அதற்கான ஆதாரங்கள் இந்த ஆவணங்களில் இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
போர்க் குற்றங்கள் பற்றி இலங்கையிலும், இந்தியாவிலும் விவாதங்கள் நடக்கின்ற இன்றைய சூழலில் இத்தகைய ஆவண அம்பலப்படுத்தல் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது. ஆப்கானில் உள்ள பயங்கரவாத்தை எதிர்த்து போராடுவதற்காகவே, அமெரிக்க அரசு பாகிஸ்தான் அரசுக்கு ஆண்டுதோறும் ஒரு பில்லியன் டாலர் கொடுத்துவருகிறது. அந்த பணத்தை பயன்படுத்தி, பாகிஸ்தான் அரசு தனது உளவுத்துறையின் மூலம் தாலிபன்களுக்கு கொடுத்து வருகின்றது என்ற செய்தி இப்போது அம்பலமாகின்றது. அதன் மூலம் ஆப்கான் போரில் அமெரிக்க ராணுவ வீரர்களை கொலைச் செய்வதற்கு, அமெரிக்க நிதியே உதவிகரமாக இருந்துள்ளது என்ற அதிர்ச்சி செய்தி உலகத்திற்கு தெரிந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் போர் தந்திர செயல்பாடுகள், மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளன என்பது வெளிப்படையாக தெரிவருகிறது.
அதில் இங்கிலாந்து ராணுவம் செய்த கேள்விக்குறிய துப்பாக்கிச் சூடுகளும் அம்பலமாகியுள்ளன. 2008ம் ஆண்டின் பிரான்ஸ் நாட்டு ராணுவம் ஆப்கானில் குழந்தைகள் பயணம் செய்த பேருந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, 8 குழந்தைகளை காயப்படுத்தியதையும் இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. அதேபோல அமெரிக்க ராணுவம் பொது மக்கள் சென்ற பேருந்து மீது சுட்டு, 15 பயணிகளை கொலைச் செய்ததும் குறிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் ஒரு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்குள் நுழைந்த போலந்து நாட்டு ராணுவம் சுட்டதில் பிரசவ வேதனையுடன் ஒரு பெண் உட்பட கொலைச் செய்யப்பட்டதும் குறிக்கப்பட்டுள்ளது. 2007 அக்டோபர்நவம்பர் மாதங்களில் காபூலில் தெருக்களில் இங்கிலாந்து ராணுவம் கண்டபடிச் சுட்டதும் பதிவாகியுள்ளது. ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஆங்கிலேயர்கள் விசாரணையை தங்கள் கைகளில் வைத்துக் கொண்டதால், அமெரிக்க ராணுவம் உண்மைச் செய்திகளை பெற முடியவில்லை என்றும் எழுதப்பட்டுள்ளது.
மேற்கூறியது போன்ற ஆதாரபூர்வமான செய்திகள், அனைத்து நாட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவதற்கான பல போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ள ஆப்கான் போரை நம் முன்னே வெளிப்படுத்துகின்றன. ஆயுத வியாபாரிகளை ஊக்குவிக்கும் நேட்டோ அரசுகள், ஆயுதம் தாங்கிய தாலிபன்களுடன் ஊடுருவி செயல்பட, பாகிஸ்தான் உளவுத்துறையை உற்சாகப்படுத்தினார்கள். அது தான் எரிகின்ற கொள்ளியை வைத்து தலையை சொறிந்து கொள்ளும் அணுகுமுறையின் எதிர் விளைவை இங்கே காட்டியுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்க்கும் போர் என்ற பெயரில், பணக்கார நாடுகள் அதிபயங்கரவாதிகளாக மாறியுள்ள வரலாறுதான் இது.

பெருசு சுறு, சுறுப்பு நாடகமா?

அவர் அடிக்கடி அங்கும், இங்கும்
ஒவ்வொரு நாளும் போய் வந்தாரே?
அவ்வளவு வேகமா வேலையா?
அசந்து கேட்டோம். ஆமாம் ஆனால்
என்று சம்பந்தப்பட்டோர் குரல்.
அதென்ன ஆனால்? அவ்வளவு
சுறு, சுறுப்புன்னு சொல்லிட்டீங்களே
அதுக்குதான். அப்படின்னா? நடிப்பா?
அய்யா. வயசாயி போச்சு, விலகுனு
அந்த ஒபக்கம் எழுதிச்சா? அதுக்கு
பதில்தர பொண்ணு கூட்டம் போட
அய்யா அங்கீகரிக்க, அப்போ தொடங்கி
இதுதான் பிரச்னை. அதனாலே.............
புது சட்டசபையா? தினசரி போய்
பார்க்க. அய்யா நீங்க வரும்போதெல்லாம்
இரண்டு மணி நேரம் வேலை செய்ய
முடியல்ல.. இந்த உண்மையை யாரும்
சொல்லல்லே. ..மூவாயிரம் தொழிலாளியும்
ஒவ்வொரு வருகையிலும் முடங்கி போனாங்க.
பெருசுக்கு புளகாங்கிதம். தினசரி அய்யா
பார்த்தாருன்னு பேபர்ல வந்திச்சே....
படத்தோட வந்த்திச்ச்சே. போதும்,
போதுமுன்னு பெருசுக்கு பெருமை.
இப்போ நடு சாலையில் மக்கள்
தவிக்க பெருசு நடமாட்டம் ஒரே
தொல்லையா போச்சு......
சுத்தி இருக்கறவக பொரிஞ்சு
தள்ளறாக இரவுனா சினிமா
அதிகாலை கைபேசில ஒரே
தொல்லை. இதுதான் இன்றைய
மன்னர் நிலைமை. இப்போ
சொல்லுங்க. சுறு,சுறுப்புதானே