Wednesday, September 29, 2010

அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்? ராமர் பிறந்தது எங்கே?-மக்கள் மன்றம் தீர்ப்பு வழங்குமா?

இந்தியாவில் ஒரு பிரச்சனையில்லா பிரச்சனை உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு அதுவே மத நம்பிக்கையாக கற்ப்பிக்கப்பட்டு, பிற மத நம்பிக்கையுடன் மோதல் இருப்பதாக வரலாறு கூறப்பட்டு, அந்த வரலாற்றை மீண்டும் படைக்க வந்ததாக தங்களை தாங்களே சிலர் வர்ணித்துக்கொண்டு, இன்று நாடே அந்த மத மோதல் சகதியில் விழா இருப்பதாக அரசால் கூறப்படுகிறது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் அதற்க்கான வழக்கில் தீர்ப்பு கூறப்போவதனால் இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது என அரசு கூறுகிறது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறப்போகும் வழக்கு, அங்குள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது பற்றியது. அதாவது அந்த சர்ச்சைக்குரிய அயோத்யா நிலம் ராமர் பிறந்த இடமா? அல்லது பாபர் மசூதி கட்டப்பட்ட இடமா? என்பதுதான் அந்த வழக்கின் சர்ச்சை. இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், மூன்று கேள்விகளை முன்வைக்கிறார்கள். ஒன்று, ராமர் பிறந்த இடம் என்பதற்கான ஆதாரம் என்ன உள்ளது? இரண்டாவது, ராமர் கோவில் ஒன்று இருந்ததை இடித்துவிட்டுத்தான் அதே இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரம் உள்ளதா? கோவில் இருந்ததாகவோ, அது இடிக்கப்பட்டதாகவோ, ஒரு பிரபல கருத்து அன்றைய காலத்தில் இருந்ததா? அல்லது சமீபத்தில் உருவாக்கப்பட்டதா? இப்படிப்பட்ட மூன்று கேள்விகளை ஆராய்ச்சியாளர்கள் அடிப்படையாக எடுத்துக்கொள்கிறார்கள்.
மகாராஜா விக்ரமாதித்தன் ராமர் கோவிலை கட்டினான் என்று ஒரு கருத்து உள்ளது. விக்ரமாதித்தன் என்ற பெயர் கொண்ட அரசன் ஒருவன் அல்ல ; பலர் இருந்திருக்கிறார்கள். எந்த விகிரமாதித்த அரசன் என்று சரியாக கூறுவதற்கு இந்துத்துவாவாதிகளிடம் சான்று இல்லை. வால்மீகி தனது ராமாயணத்தில், அயோத்தி மன்னர் ராமர் என்று குறிப்பிட்டுள்ளதும், எந்த அயோத்தி என்பதற்கான ஆதாரத்தை இந்துத்துவா சக்திகளால் கொடுக்க முடியவில்லை. கிருத்து பிறப்பதற்கு முன்பு 3102 ஆம் ஆண்டில் காலி யுகத்திற்கு முன்பு என்று அயோத்தி நகரை குறிப்பிட்டுள்ளார்கள். அதுவும் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தாரால் ஆதாரமாக கொடுக்கப்பட முடியவில்லை. வால்மீகி ராமாயணம் ஒரு கற்பனைக்கதை என்றும் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அயோத்தி என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது ஒரு வளர்ச்சி அடைந்த நகரம் என்பதாக காவியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு வளர்ந்த நகரை நம்மால் இந்தியாவில் காண முடியவில்லை. மிகவும் பின்னுள்ள ஒரு காலத்தை சேர்ந்ததாக அந்த அயோத்தி நகர் பற்றிய கதை எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிகிறது. சகேடா நகர் என்பதைத்தான் அவர்கள் அயோத்தி என்று கூறுகிறார்கள் என்பதாகவும் தெரிகிறது.
ஸ்கந்த குப்தா என்ற விகிரமாதித்தனைத்தான் இவர்கள் அயோத்தி நகரை உருவாகியதாக குறிப்பிடுவதாக தெரிகிறது. கிருத்து பிறந்த பின்பு ஐந்தாவது நூற்றாண்டின் கடைசியில் சூரியவம்ச அரசு அயோத்தியில் இருந்தது. அந்த அயோத்தியில் புத்திசம், சமண மதம், இந்து மதம் ஆகியவை இருந்துள்ளது. ராமர் வழிப்பாடு என்பது மிக அண்மைகாலத்தில் தான் வந்துள்ளது. ஒன்றாவது மற்றும் நான்காவது சமண தீர்த்தகாரன் மரபு என்பது அங்கே இருந்திருக்கிறது. பர்ஷ்வனாதா, மகாவீரா ஆகியோரது வருகை அயோத்தி நகரில் நிகழ்ந்துள்ளது. இரண்டாவது நூற்றாண்டு வரை அந்த இடத்தில் ராமர் வழிபாடு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் யாரிடத்திலும் இல்லை. பதினோராவது மற்றும் பன்னிரெண்டாவது நூற்றாண்டுவரை ராமர் என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை. இதுதான் வரலாற்று உணமையாக இருக்கிறது.
1528 இல் பாபர் மசூதி இந்தியாவில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டிருக்கிறது. அயோத்தி நகரம் எந்த நதிக்கரையில் இருந்தது என்ற ஆதாரம் வேறு புதிய குழப்பத்தை ஏற்ப்படுத்துவதாக இருக்கிறது. கங்கை நதிக்கரையில்தான் இந்தியாவில் உள்ள அயோத்தி இருக்கிறது... . ஆனால் சகேடா என்ற நகர் சரயு நதிக்கரையில் இருக்கிறது. அன்றைய அயோத்தியும் சரயு நதிக்கரையில்தான் இருந்தது.. அந்த சரயு நதி இன்றைய ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. இந்தியாவின் அயோத்திக்கு புத்தர் இரண்டு முறை வருகை புரிந்துள்ளார். இவ்வாறு வரலாறு கூறும் எந்த ஆதாரமும் இவர்கள் இன்று கூறுகின்ற அயோத்தியை ராமர் பிறந்த இடம் என்று சொல்வதற்கான ஆதாரமாக இல்லை. அப்படியானால் இவர்கள் கூறும் ராமர் பிறந்த இடமான அயோத்தி என்ற பெரிய நகரம், சராயு நதிக்கரையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அயோத்தியாக இருக்கலாம். அதை கேள்விப்பட்டதனால், ஆத்திரம், மதரீதியான பகைமை ஆகியவற்றால் உந்தப்பட்டு, இந்திய அயோத்தியை சர்ச்சைக்குரிய இடமாக மதவாதிகள் ஆக்கியிருக்கலாம் அதுவே பின்னாளில் மதத்தை வைத்து அரசியல் செய்யவேண்டும் என்று எண்ணியவர்களுக்கு சாதகமாக போய் இருக்கலாம். அதனாலேயே இந்தியாவில் உள்ள அயோத்தி இப்போது பெறும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்தியாவெங்கும் பெரும் வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பெயர் பெற்றவர் முன்னாள் குடியரசு தலைவரான டாக்டர் ராதாகிரிஷ்ணனின் மகனான சர்வபள்ளி கோபால், இந்த பாபர் மசூதி சர்ச்சை பற்றி எழுதியுள்ளார். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர், " மோதலை பற்றிய உடல்கூறு". அதில் பணிக்கர், ஸ்ரீவத்சவா, நூரானி ஆகியோர் எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கட்டுரைகள் நேரடியாக மசூதி--கோவில் விவகாரத்தை பற்றி எழுதப்பட்டுள்ளன.அதில் பணிக்கர் கூறும்போது, வால்மீகியின் அயோத்தியா இன்றைய அயோத்தியா அல்ல என்று எழுதுகிறார். கிருத்துவின் முதல் நூற்றாண்டிற்கு பிறகுதான் ராமர் வழிபாடு தொடங்கப்பட்டது என்றால், ராமர் வழிபாட்டின் மையமாக அயோத்தியா உருவானது பதினெட்டாம் நூற்றாண்டில்தான் என்கிறார் அவர். அதேபோல பாபர் ஆட்சி மத சகிப்புதனமையற்று நடந்துகொண்டதாகவோ, கோவில் இடிப்பில் ஈடுபாட்டதாகவோ எந்த ஆதாரமும் வரலாற்றில் இல்லை என்பதை அவர் உறுதி செய்கிறார். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முந்திய காலத்திய இந்து மத நூல்கள் எதிலுமே, கோவில்கள் எதுவும் இடிக்கப்பட்டதாக எழுதப்படவில்லை. இவ்வாறு வரலாற்று உண்மைகள் வித்தியாசமாக இருக்கும்போது, மத உணர்வுகளை வைத்து அரசியல் செய்யவேண்டும் என்று என்னுபவர்கல்தான் இந்த சர்ச்சையை பெரும் சிக்கலாக ஆக்கிவிட்டார்கள்.
ஆகவே அலஹாபாத் உயர்நீதிமன்றம், செப்டம்பர் முப்பதாம் நாள் எந்த தீர்ப்பை கொடுத்தாலும், இந்திய மக்கள் தங்களுக்குள் உள்ள ஒற்றுமையை உடைக்க எந்த மத உணர்வுகளையும் அனுமதிக்க கூடாது என்று நாமும் கேட்டுக்கொள்வோம்.

Tuesday, September 28, 2010

விவசாயம் பற்றிய அறிவு இன்றியே நெல்லுக்கு பெயர் வைப்பதா?

இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதாரம் விவசாய பொருளாதாரம். அதை பற்றிய அறிவு ஆள்வோருக்கு இருக்கவேண்டும் என்பது ஒரு எதிர்பார்ப்பு. சரி. விவசாயத்தை பற்றிய நேரடி அறிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அதை பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுதானே ஆழ வந்தோர் திட்டமிடுவார்கள்? அப்படி ஒரு நிகழ்வு தமிழ்நாட்டில் நடக்க மாட்டேன் என்கிறதே? இங்கே பாசன நிலங்களின் அளவு, நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே? பாசனத்திற்கு தஞ்சை டெல்டா மாவட்டங்களில் உள்ள நிலத்திற்கு தேவையான நீரை தருகின்ற காவேரி ஆற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவது பற்றி போதுமான அக்கறை இல்லையே? முல்லை பெரியார் அணை தண்ணீர் வந்தால்தான் தேனீ, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று ஆள்வோருக்கு அக்கறை இல்லையே? ஆந்திராவில் கட்டப்படும் தடுப்பணைகள் நிறுத்தப்பட்டால்தான், பாலாறு தமிழ்நாட்டிற்குள் சரியாக பாயும் என்பதும், அதனால் மட்டும்தான் காஞ்சி, வேலூர், கடலூர், மாவட்டங்களில் உள்ள விவசாயத்திற்கு பயன் கிடைக்கும் என்பதும் ஆளும் கூட்டத்திற்கு புரிவதில்லையே? இதற்கெல்லாம் காரணம் நாட்டை மாநிலத்தில் ஆளவந்தோர் விவசாயம் பற்றி அறியாதவர்கள். அக்கறையில்லாதவர்கள் என்று கூறினால் கோபம் கொள்கிறார்கள். ஆனால் இப்போது உண்மை பையிலிருந்து வெள்யே வந்த பூனை போல வெள்யே தெரிந்துவிட்டது
தமிழக முதல்வர் கலைஞர் தனது வாழ்நாள் சாதனையாக ராஜ ராஜ சோழனின் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு என்ற மாபெரும் விழாவை நடத்தி சாதனை புரிந்துள்ளார். அதில் மிகவும் நீடித்த தன்மை உள்ள சாதனை என்று அவர் நினைப்பது, தமிழக விவசாயத்தில் தனது தலையீடு என்று அவர் நினைக்கலாம். ராஜராஜன் 1000 என்ற பலமான ஒரு பெயரை, தான் செம்மை நெல்லுக்கு வழங்குவதாக அப்போது அறிவித்துள்ளார். அதற்கு விளக்கமும் கூறியுள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் என்ற விவசாயத்துறை அமைச்சர் தன்னிடம் அந்த நெல் அதிகமான விளைச்சலை தருவதாக கூறினார் என்கிறார் முதல்வர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இதற்க்கு செம்மை நெல் என்று பெயரிட்டதாகவும் கூறியுள்ளார். அப்படி ஒரு விசேசமான நெல் எது என்று நாம் ஆராய்ந்தோம். சி.பி.ஐ. கட்சியின் விவசாய சங்கத்தின் தலைவர் துரைமாணிக்கம் ஒரு அறிக்கையை இன்றைய ஜனசக்தி ஏட்டில் கூறியுள்ளார். அதில் அப்படி ஒரு நெல்லே கிடையாதே ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதனால் இந்த விவகாரம் மேலும் சிக்கலாக மாறுகிறது.
உண்மை என்ன என்று பார்ப்போம். Systamatic Rice Intensification என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் "நெல் உற்பத்தியை தீவிரமாக துரிதப்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட முறை" என்பது நெல் உற்பத்தியில் புதிதாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் பழைய முறையிலிருந்து பல மாறுதல்கள் உள்ளன. அதாவது ஒரு ஏக்கர் நிலத்தில் கொத்து,கொத்தாக விதைகளை போடவேண்டியது இல்லை. மாறாக ஒன்றேகால் அல்லது ஒன்றரை கிலோ விதையை ஒரு ஏக்கருக்கு விதைத்தால் போதும். வழமையாக நாற்று பயிரை முப்பது அல்லது நாற்பத்தைந்து நாட்களுக்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக இந்த முறைப்படி ஏழு நாட்களிலிருந்து பதினைந்து நாட்களிலேயே நாற்றுகளை பிடுங்கி நட்டு விடலாம். அப்படி நடும்போது அது அதிகமாக வேர் பிடிக்கும். அதை அடி மண்ணுடன் சேர்த்து பிடுங்கி நடவேண்டும். வழக்கமாக நாற்றுகளை இரண்டிற்கு மேல் நடும் பழக்கம் போல இல்லாமல், இந்த முறையில் ஒரு அடிக்கு, ஒரு நாற்று என்று நடவேண்டும். அதை ஒற்றை நாற்று முறை என்று அழைக்கிறார்கள். இந்த ஒற்றை நாற்று முறையைத்தான் செம்மை நெல் முறை என்கிறார்கள். இந்த முறையிலான நாற்று நடுதலில் தண்ணீரை மூன்றடிக்கு நிற்கவைக்க வேண்டியது இல்லை. காய்ச்சலும், பாய்ச்சலுமாக காய்கறிகளுக்கு ஊற்றுவதுபோல தண்ணீரை பாய்ச்சினால் போதும். அதேபோல அறுவடையை 120 நாட்கள் காத்திருக்க வேண்டியது இல்லை. 110 நாட்களிலேயே அறுவடை செய்து விடலாம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், விவசாய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், இந்த ஒற்றை நாற்று முறை எந்த அளவுக்கு அதிக விளைச்சலை கொடுக்கிறது என்று முதல்வரிடம் கூறினார் போல தெரிகிறது. விவசாயம் பற்றி கிஞ்சித்தும் தெரியாத முதல்வரோ, அப்படியானால் அதற்கு செம்மை நெல் என்று பெயர் வைத்து விடலாமே என்று கூறினார் போலும். இதை கேட்டு சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் விவசாயத்துறை அதிகாரிகள் அதையே " செம்மை நெல் சாக்படி முறை" என்று கூறத்தொடங்கியுள்ளனர். தான் ஒரு நெல்லுக்கு என்று பெயர் வைத்ததை இந்த விவசாய அமைச்சர்கள் சாகுபடி முறை என்பதாக கூறுகிறார்களே என்று முதல்வருக்கு மறுபரிசீலனை வந்திருக்க வேண்டும். வீரபாண்டியருக்காவது புரிந்திருக்க வேண்டும். தாங்கள் செய்வது எல்லாமே சரியானது என்று எதிர்க்கட்சிகாரர்களிடம் வாதாடுவதுபோல, இதிலும் இவர்கள் நடந்து கொண்டுள்ளார்கள். அதன் விளைவே இப்போது இந்த சாகுபடிமுரையை ஒரு நெல் என்று நினைத்துக்கொண்டு, தமிழக முதல்வர் அடஹ்ர்க்கு புதிய பெயராக ராஜராஜன் 1000 என்று பெயரிட்டுவிட்டார். அவருக்கு விவசாயம் பற்றி இருக்கும் அறிவை மட்டுமல்ல, அக்கறையையும் இது அம்பலப்படுத்தி விட்டது.

Monday, September 27, 2010

உயர் கல்வி இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட சமூகத்தால் கைப்பற்றப்படுமா?

இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டிலிருந்துதான் இந்திய துனைக்கண்டத்திற்க்கே எடுத்து சொல்லப்பட்டது என்பது நாம் பெருமையாக கூறிக்கொள்ளும் ஒரு வரலாறு. தந்தை பெரியார் வழி வந்தவர்கள்தான், இட ஒதுக்கீட்டின் தேவையை உணர்ந்தவர்கள் என்று அரசியல்வாதிகளும், சமூக சிந்தனையாளர்களும், பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர்களும் கூறி வரக்கூடிய கூற்றுக்கு ஒரு அழுத்தமான கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஏற்கனவே மற்ற பிற்படுத்தப்பட்டோர் என்று இந்திய அளவில் கூறப்படும், பிற்படுத்தப்பட்டோர் சமுதாயம் தனது இட ஒதுக்கீட்டை பெறுவதில் ஒரு நீண்ட கால போராட்டம் தேவைப்பட்டது. அதை தமிழகம்தான் தொடங்கிவைத்தது. தொடர்ந்து நடத்தி வைத்தது.

அப்படி இருக்கையில் சமீபத்தில் மூன்று ஆண்டுகளாக சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான உயர் கல்விக்கான இட ஒதுக்கீடு என்பது முதலில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங்கால் கொண்டுவரப்பட்டதாகவும், பிறகு சில மத்திய அமைச்சர்களால் மறுக்கப்பட்டதாகவும், பிறகு உச்சநீதிமன்றம் சென்ற ஆதிக்க சாதியினரின் வேண்டுகோள்படி அது தடை செய்யப்பட்டதாகவும் செய்திகள் தமிழ்நாடு போன்ற இட ஒதுக்கீடு ஆதரவு பகுதிகளை உலுக்கியது. ஐ.ஐ.டி. போன்ற கல்விச்சாலைகளிலும், மருத்துவ கழகத்திலும், ஜே.என்.யு. [ ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம்] போன்ற உயர் கல்வி பல்கலைக்கழகங்களிலும், இந்த ஒ.பி.சி. என்ற மற்ற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பது தடைகளையே தொடர்ந்து சந்தித்து வந்தது.
மத்திய அரசு சில சமூகங்களை, அவர்களது சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளை கணக்கில் எடுத்து அவர்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்வி பெறுவதற்கான மற்றும் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது என முடிவு செய்தது. சுதந்திரம் பெற்ற பின்பு ஏற்ப்படுத்தப்பட்ட காகா கலேல்கர் ஆணையம், மற்றும் மண்டல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் ஆய்வின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக அங்கீகாரம் பெற்றது. அனால் அதை அமுல்படுத்தும் போது ஒவ்வொரு கட்டத்திலும் வருகின்ற தடைகளை நீக்குவது என்பதுதான் பெரும் கடினமான விஷயம் என்பது இப்போது புரியப்படுகிறது. தாழ்த்தப்பட்ட, மற்றும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு என்பது ஆரம்பத்திலேயே சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பது நீண்ட காலமாக ஆளும் வர்க்கத்தினரால் கவனிக்கப்படவில்லை. மண்டல் ஆணையம் அதை வலியிறுத்தியும்கூட, கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
அதை வெள்யே கொண்டு வந்தவர் வி.பி. சிங் என்பதால் அவர் முற்ப்பட்டோர் வகுப்பிலிருந்து வந்தவர் என்றாலும் பெரிதும் பிறபடுத்தப்பட்ட மக்களால் பாராட்டப்பட்டார்.
அதன் பின்பும், உயர் கல்வியில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற செய்தி தாமதமாக உணரப்பட்டது. அதற்கும் உச்சநீதிமன்றம் 2007 மார்ச்-29 அன்று இடைக்கால தடை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது. 27 விழுக்காடு உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு என்பதே அந்த கோரிக்கை. 1985 க்கு முன்னால் பிற்படுத்தப்பட்டோருக்கான விவகாரம், உள்துறையில் இருந்த பிற்படுத்தபட்டோர் செல் மூலம் கவனிக்கப்பட்டது. அதன் பின் புதிதாக உரூவாக்கப்பட்ட தனி பிறபடுத்தப்பட்டோர் நல த்துறை, அதை கவனித்தது.. 1998 இல் அதுவே சமூக நீதி மற்றும் அதிகார மேம்படுத்தல் அமைச்சகம் என்று பெயர் பெற்றது. பிறகு 2008 ஆம் ஆண்டு ஏப்ரல்--10 அன்று உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில், மற்ற பிற்படுத்தப்பட்டோருக்கான 27 % இட ஒதுக்கீட்டை ஆதரித்து கூறியது. ஆனாலுல் கிரிமி லேயர் என்ற ஒரு பொருளாதார கணக்கை நிபந்தனையாக கொடுத்தது. அதேசமயம் அரசு உதவி பெறும், மற்றும் தனியார் கல்விச்சாலைகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று கூறியது.

சமீபத்தில் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு விசயத்தில் ஒரு சதி நடந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மார்ச்-18 இல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அகடமிக் கவுன்சில் கூட்டத்தில் ஒரு முடிவு நிறைவேற்றப்பட்டது. அது பொதுநுழைவு தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்ணில், எது குறைவான மதிப்பெண்ணாக இருக்கிறதோ அதைவிட பத்து எண் குறைவாக எடுத்த பிறபடுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே இடம் தர முடியும் என்ற முடிவே. இது கடுமையாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களாலும், பிற மாணவர் சங்கங்களாலும் எதிர்க்கப்பட்டது. இதை எதிர்க்கும் பட்டினிப்போராட்டம் அந்த வளாகத்திர்க்குள்ளேயே நடத்தப்பட்டது..

ஜே.என்.யு. வில் உள்ள ஐசா என்ற அகில இந்திய மாணவர் கழகம் எனும் சி.பி.ஐ.எம்.எல்.[விடுதலை] அமைப்பின் மாணவர் அமைப்பும், எஸ்.எப்.ஐ. என்ற இந்திய மாணவர் கூட்டமைப்பு என்ற சி.பி.எம்.இன் மாணவர் அமைப்பும், டி.எஸ்.யு. என்ற ஜனநாயக மாணவர் சங்கம் என்ற புரட்சிகர சிந்தனை உள்ள மாணவர் அமைப்பும், பி.எஸ்.யு. என்ற முற்ப்போக்கு மாணவர் சங்கம் என்ற இன்னொரு எம்.எல். கட்சியின் மாணவர் அமைப்பும், எதிர்ப்பிற்கான மாணவர் அமைப்பும், இட ஒதுக்கீட்டை பாதுக்காக்கும் மற்றும் அமுல்படுத்துவதர்க்கான கூட்டமைப்பும், சேர்ந்தது போராட்டங்களை அந்த வளாகத்திற்குள் நடத்தியுள்ளனர். அதை அடுத்து ஒரு மாணவர் டில்லி உயர் நீதிமன்றத்திற்கு இந்த பிரச்னையை கொண்டு சென்றுள்ளார்.

அபூர்வா என்ற அந்த வடகிழக்கு மாநில மாணவனின் கோரிக்கைக்கு செவி மடுத்த டில்லி உயர்நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை கொடுத்துள்ளது. நீதியரசர் ராஜீவ் சஹாய் என்பவர் கொடுத்த அந்த தீர்ப்பில் நடைமுறையில் வந்துள்ள தடங்கல்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்திய அரசையும், ஜே.என்.யு. நிர்வாகத்தையும் பிரதிவாதிகளாக சேர்த்து இந்த தீர்ப்பை 2010 ஆம் ஆண்டு செப்டம்பர்-7 ஆம் நாள் நீதியரசர் கொடுத்துள்ளார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கு அதாவது மாணவர்களுக்கு எங்குமே இந்தியாவில் வெட்டு மதிப்பெண் என்று ஒன்று பார்க்கப்படுவதில்லை. அப்படி இருக்கையில் அதே காரணமான சமூக ரீதியில், மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், பிற பிற்படுத்தப்பட்டோருக்கும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்குவது என்ற அணுகுமுறையில் எப்படி வெட்டு மதிப்பெண் என்று ஒன்று புதிதாக வர முடியும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். இப்படியாக நீதியரசர் வைக்கும் வாதங்கள்தான் சதி எண்ணத்துடன் அரசின் மற்றும் பல்கலைகழகங்களின் உயர்பதவிகளில் இருக்கும் ஆதிக்க சாதிவெறி படைத்தோரின் முகத்திரையை கிழிக்க உதவும்.
நுழைவு தேர்வ்களில் எத்தனை மதிப்பெண் பெற்றாலும், அவரவர்களுக்கு உள்ள அதாவது அந்த, அந்த சமூகங்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதுதானே கல்விச்சாலைகளின் வேலை? இந்த வழக்கை தொடுத்தவர்கள் தனி இட ஒதுக்கீட்டை, தனி வெட்டு மதிபெண் மூலம் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கவேண்டும் என்றுதான் கோரியிருந்தனர். நுழைவு தேர்வின் பொது மதிப்பெண்களில் எப்படி ஒரு குறைந்தபட்ச மதிப்பினை எடுத்துக்கொண்டு அதற்கும் பத்து மதிபெண் குறைவாக பெரும் பிற பிற்படுத்தப்பட்டோரை மட்டுமே சேர்த்துக்கொள்வோம் என கூறமுடியும் என்ற மாணவர்களின் வாதம் நன்றாக நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டு மாணவர்களும், ஏற்கனவே ஜே.என்.யு.வின் நிர்வாகத்தால் மறுக்கப்பட்டவர்கள் உள்ளே நுழையலாம் என்ற முயற்சி இப்போது செய்யப்படுகிறது.

இந்தியாவின் எதார்த்தத்தில் இருக்கின்ற சாதி பாகுபாடும், சாதி இழிவும், சாதிரீதியான ஒடுக்குமுறையும் ஒழிக்கப்படவேண்டுமானால், அதற்கு ஒடுக்கப்பட்ட சாதிகளைச்சேர்ந்த மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேறாமல் இந்த சாதிரீதியான ஏற்றத்தாழ்வை போக்கமுடியாது. அகவே பெரியாரால் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநித்துவம் உணமையாக நடைமுறையாக, நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. இன்று நீதிமன்றங்களின் மூலம் நடத்தப்படும் சமூக நீதிக்கான இந்த போர், ஆதிக்க சாதிகளின் கரங்களில் சிக்கியுள்ள கல்வியையும், கல்விச்சாலைகளையும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் கைகளில் எடுக்க வேண்டும். அதை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் இன்னமும் போதுமான அளவுக்கு கண்டுகொள்ளாதது கவலையளிக்கிறது. இனியாவது பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இத்தகைய பிரச்சனைகளை கையில் எடுப்பார்களா?

Sunday, September 26, 2010

திலீபன் தியாகம் இன்றுவரை சில செய்திகளை அறைந்து சொல்கிறது

திலீபன் தியாகம் இன்றுவரை சில செய்திகளை அறைந்து சொல்கிறது.
திலீபன் பெயர் தெரியாத தமிழின உணர்வாளர்கள் இந்த பூவுலகில் இருக்க முடியாது. நேற்று அதாவது செப்டம்பர்-26 , திலீபன் நினைவை திரும்பி பார்க்கும் நான். அது நடந்தது 1987 இல். திலீபனின் இயற்பெயர் ராசையா பார்த்திபன், அவர் ராசையா என்ற பள்ளி ஆசிரியரின் மகன். யாழ்ப்பணத்தில் பிறந்தவர். குழந்தை பருவத்திலேயே தாயை இழந்தவர் திலீபன். யாழ்ப்பாணத்தின் பிரபலமான இந்து கல்லூரியில் பயின்றவர். தாய் தமிழீழத்தை அடைவதற்காக, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில், 1983 ஆம் ஆண்டு, அதன் கருப்பு ஜூலை நிகழ்ச்சியின் போது இணைந்தவர்.. அந்த கருப்பு ஜூலை படுகொலை நிகழ்வு, தமிழர்களுக்கு எதிரான படுகொலை நிகழ்வு மாத்திரமல்ல, தமிழினத்திற்கு எதிரான இன அழிப்பின் அடையாள நிகழ்வு என்பதை அன்றே புரிந்திருந்ததால்தான் திலீபன், புலிகள் இயக்கத்தில் சங்கமமானார். தமிழீழம் விடுதலை அடைவதே தங்கள் இலட்சியமாக கொண்ட விடுதலை புலிகள் இயக்கத்தில் அதனால்தான் இணைந்தார். யாழ் குடாநாட்டின் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக திலீபன் உயர்வு பெற்றார்.
1987 ஆம் ஆண்டு இந்திய அரசு, இலங்கை அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. அதாவது இந்தியாவில் ஆறரை கோடி தமிழ் மக்கள் வாழும் போது, அந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லாமல், அந்த தமிழ் மக்களின் கலந்தாலோசித்தல் அல்லது பங்களிப்பு என்று எதுவும் இல்லாமல், அதேசமயம் இலங்கை தீவில் வாழும் ஈழத்தமிழர்களின் கலந்தாலோசனையோ, பங்களிப்போ, இல்லாமல், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்களான தோட்டத் தொழிலாளர்களான, மலையக தமிழர்களின் கலந்தாலோசனையோ, அல்லது பங்களிப்போ இல்லாமல், கிழக்கு மாகாணங்களில் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் கலந்தாலோசனையோ, பங்களிப்போ இல்லாமல், ஒரு ஒப்பந்தம் தயாரானது. அந்த ஒப்பந்தத்தை தயாரித்தவர்கள், இந்தியாவின் அரசியல் தலைமையில் வீற்றிருந்த தமிழர் அல்லாதவர்களாகவும், இலங்கையில் ஆட்சியில் இருந்த தமிழர் அல்லாதவர்களாகவும் இருந்தார்கள்.
இப்படி ஒரு ஒப்பந்தம் உலக அரங்கில் ஒரு குறிப்பிட்ட தேசிய இன பிரச்சனையைதீர்ப்பதற்கானஆவணமாகஎங்காவது ஏற்றுக்கொள்ளப்படமுடியுமா? அது இங்கே முடியும்,. அதுதான் இந்தியா. அதுதான் இலங்கை. ஒவ்வொரு நாட்டிலும் தேசிய இன பிரச்சனை என்பது பலமுறை, பல காலங்களில் வந்திருக்கிறது. காலம், காலமாக தேசிய இன பிரச்சனை என்பது பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலை, முடிக்கிலும், எழுந்து கொண்டே இருக்கும் ஒரு உரிமை பிரச்சனைதான். அப்போதெல்லாம் அத்தகைய தேசிய இன பிரச்னையை, கையாளும் ஆளும் கூட்டங்கள் தங்கள் இழுப்புக்கு வரக்கூடிய ஒரு சக்தியை தேசிய இன போராட்ட இயக்கத்திருந்து தேர்ந்தெடுத்து அதை வைத்து, மேசைப்பேச்சு என்று ஒன்றை நடத்தி, அதன்மூலம் ஒரு தீர்வை முன்வைத்து, அதில் அதிகாரம் செலுத்தும் சக்தியின் கையெழுத்தையும், அடிமைப்பட்டிருக்கும் சக்தியின் சார்பாக ஒரு பிரதிநிதியின் கையெழுத்தையும் பெற்று, உலகின் முன்னால் ஒரு தீர்வை அந்த குறிப்பிட்ட தேசிய இன பிரச்சனையில் எட்டிவிட்டோம் என்பதாக அறிவிப்பார்கள். நாமும் அதை அப்படியே நம்பி அதையே வரலாறாகவும், அதையே தீர்வாகவும் எண்ணி, அதை எட்டுவதற்கு பாடுபட்டவர்கள் என்று கருதப்படும் மென்மை முகம் கொண்ட ஆதிக்க சக்திகளின் கையாள்களை பாராட்டி, வரலாற்றில் ஏற்றி , பாடப்புத்தகத்தில் சேர்த்துவிடுவோம்.

இதுவே பாலஸ்தீன பிரச்சனைக்கும் நடந்தது. அங்கே பி.எப்.எல்.பி . என்ற ஜார்ஜ் ஹப்பாஸ் தலைமையிலான அமைப்பு போன்ற கருத்தியல் தெளிவான அமைப்புகள் ஆயுதப்போரில் இருந்தன. ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுடன் பேச, யாசர் அரபாத் தலைமையிலான பி.எல்.ஒ. என்ற ஒருங்கிணைப்பு என்று சொல்லி, அல்-படாஹ் அமைப்பை மட்டுமே மேசை பேச்சுக்கு உற்சாகப்படுத்தியது. அதன் விளைவு ஒரு நகராட்சி அளவுக்கு உள்ள இடத்தை விடுதலை பகுதி என்று பாலஸ்தீன மக்களுக்கு கொடுத்து விட்டு, அதிலும் வெள்யே வர, உள்ளே போக ஒரு பாதையை போட்டு அதை கண்காணிக்கும் பொறுப்பை இஸ்ரேல் நாட்டு ராணுவத்தின் கையில் கொடுத்ததே நடந்திருக்கிறது.
இவ்வாறு உலக ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு, தேசிய இன பிரச்சனைகளை தங்கள் கையை விட்டு சென்றுவிடாமல் பார்த்துக்கொண்டு பிறகு அதற்கு ஒரு தீர்வு என்ற பெயரில் சரணாகதி ஒப்பந்தங்களை செய்வது வழக்கம்,. இதுதான் காஷ்மீர் பிரச்சனையில், இந்திய அரசாலும், பாகிஸ்தான் அரசாலும் தொடர்ந்து செயல்பாட்டில் செய்யப்படும் தந்திரமாகும். அதாவது மதச்சார்பற்ற அமைப்பாக விடுதலை உணர்வோடு போராடிய ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவரை மக்பூல் பட்டை தூக்கிலிட்டு விட்டு, அங்கே மத அடிப்படையிலான பிரச்சனையாக மாற்ற முயற்ச்சித்து, தங்களுக்கு ஒத்துவரும் சில தலைவர்களுடன் பேச இந்திய அரசு முயற்ச்சிப்பதும் இதே வரிசையில்தான்.. இந்த வகையில்தான் இந்திய அரசு இலங்கை தமிழர்களாக அடையாளம் காட்டப்படும் ஈழத்தமிழர் பிரச்சனையிலும் கையாண்டுள்ளது.

அதாவது 1987 இல் செய்யப்ப்பட்ட இந்திய--இலங்கை ஒப்பந்தம், ராஜீவ்--ஜெவர்தனே ஒப்பந்தம் என்றுதான் அழைக்கப்பட்டது. அதிலேயே நாம் சம்பத்தப்பட்ட சக்திகளை அடையாளம் கண்டுகொள்ளலாம். அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாத புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை கூட்டிவந்து வற்ப்புறுத்தி அவர்கள் அந்த ஒப்பந்தப்படி, பெயர் அளவுக்கு ஆயுதங்களை ஒப்படைப்பது போல நடந்து கொள்ளசொன்னதும், அப்படியே பிரபாகரன் நடந்துகொண்டதும், அதை ஒட்டி இந்திய அமைதி படை என்ற பெயரில் ஒரு தமிழர் விரோத மனப்பான்மையை மனதிலும், கொள்கையிலும் கொண்ட தமிழர் அல்லாத படையை இந்திய அரசு அனுப்பியதும் அம்பலமான பழைய செய்திகள். ஆனாலும் தமிழர் விடுதலைக்காக தியாகம் செய்ய போர்க்களம் இறங்கிய பிரபாகரனோ, புலிப்படையோ, ஆக்கிரமிப்பு பாணியில் ஈழமண்ணில் இறங்கிய இந்திய அரசப்படைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய ஒரு வரலாற்று திருப்புமுனையை, சாதித்த நிகழ்வுதான் திலீபனின் தியாகம். அதை போர்க்களம் கண்டுவந்த பிரபாகரன், பிரபல காந்தீய வழியான பட்டினி போராட்டத்தின்மூலம் சரியாகவே கையாண்டார். போராட்டம் எப்போதுமே பல முனைகளிலும் நடத்தப்படவேண்டும். விடுதலை போர் என்பது அதையே நிரூபித்து காட்டுகிறது. தேசிய இன விடுதலை போராட்டங்கள் மட்டுமே, நேரடியாக இன்று உலகை ஆளும் ஏகாதிபத்தியவாதிகளை உடைப்பதற்கான வழிமுறையாகும். ஏகாதிபத்தியங்கள் எப்போதுமே தங்களுக்கான சந்தைகளை தேடுபவர்கள். அவற்றை தக்கவைத்து கொள்பவர்கள். அவர்களுக்கு அப்படிப்பட்ட சந்தைகளாக இருக்கும் நிலங்களை, தேசிய இன போராட்டங்கள் மட்டுமே உடைக்கின்றன . அதனால் அவர்கள் தேசிய இன விடுதலை போராட்டங்களுக்கு எதிராகவே தங்களது காய்களை நகர்த்துவார்கள். இதை தேசிய இனங்கள் அடிப்படையில் புரிந்துகொள்ளவேண்டும்.

இதே சிக்கல்தான் இந்திய அரசின் அணுகுமுறையிலும் நடந்தது. டில்லியை ஆளும் சக்திகள் நாகா, மிசோ, மணிப்பூர், அஸ்ஸாம், காஷ்மீர், போன்ற பல சிக்கலான தேசிய இன பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள். அவற்றில் பலவற்றை அடக்கியதிலும் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களிடம் அந்த அனுபவம் அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் ஈழப்பிரச்சனையில் தலையிட்ட காலங்களில், தமிழ்நாட்டில் இரு பெரும் கருத்துக்கள் இருந்து வந்தது. ஒன்று இந்திய அரசை சார்ந்து தங்கள் போராட்டத்தை ஈழ போராளிகள் பெற்றுவிடலாம் என்ற கருத்து. அதற்காக இந்திய அரசப்படையை இலங்கைக்கு அனுப்பி விடுதலைக்கு உதவ செய்வது என்று அந்த கருத்து உள்ளவர்கள் அபிப்பிராயப்பட்டாகள். அதில் தமிழ்நாட்டு ஆளும்வர்க்க கட்சிகள் தொடங்கி, தமிழ் இன உணர்வாளர்கள் வரை பலரும் வரிசைப்பட்டார்கள். தமிழ் நாட்டு அப்பாவி மக்களின், உணர்வுகளும், ஏன் ஈழ தேசத்து தமிழ் மக்களின் உணர்வுகளும் கூட, அப்படியே இந்திய அரசை நம்பும் போக்கையே வெளிப்படுத்தியது. .இன்னொரு கருத்து இந்திய உதவி பற்றி எச்சரித்து வந்தது. அது புரட்சியாளர்களின் கருத்து.
இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் இந்திய அரசை நம்புகிறார்களோ இல்லையோ, தமிழீழ மக்கள் இந்திய அரசின் மீது, அப்படி ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்து இருந்தார்கள். அந்த நம்பிக்கையை உடைத்த முதல் நிகழ்வு என்பதால்தான் திலீபனின் நினைவு இன்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்ற இந்திய அமைதிப்படை அங்கே சிறிது, சிறிதாக போராளிகளின் போக்குகளையும், நடமாட்டங்களையும், நடவடிக்கைகளையும் கண்காணிக்கும், மற்றும் கட்டுப்படுத்தும் செய்களில் ஈடுபட தொடங்கினார்கள். அப்போது இந்திய அமைதிப்படையை எதிர்த்த பிளாட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரனும், பாபி தலைமையில் இருந்த டெலோவும் ,டெலா அமைப்பின் சிறு பிரிவும் களத்தில் போர் புரிந்தார்கள். நிர்ப்பந்தத்தின் காரணமாக சுடுமலையில் ஒரு கூட்டம் ,அதில் பெயரளவுக்கு ஆயுதம் ஒன்றை ஒப்படைத்த பிரபாகரன் அடுத்தட கட்ட அதிகார கைப்பற்றலுக்கு தயாராகி கொண்டிருந்தார்.

அதற்க்கான பேச்சுவார்த்தையில், எழுப்பப்பட்ட கோரிக்கைகளை திலீபனின் பட்டினிப்போர் மூலம், புலிகள் இயக்கம் முன்வைத்தது. அதில்தான் 1 ] பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்ப்பட்ட எல்லா தமிழ் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முதல் கோரிக்கையாக வைத்தது. 2 ] மறுவாழ்வு என்ற பெயரில் தமிழர் பகுதிகளில், சிங்களர்களை கொண்டுவந்து குடியேற்றும் காலனிமயப்படுத்தல் என்ற இன அடையாள அழிப்பு எதிர்ப்பு என்பதை இரண்டாவது கோரிக்கையாக முன்வைத்தது. 3 ] ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவும்வரை அத்தகைய காலனிமயப்படுத்தும் நடவடிக்கைகளை தடை செய்ய வலியுறுத்தி மூன்றாவது கோரிக்கையாக வைக்கப்பட்டது . 4 ] வட-கிழக்கு மாகாணங்களில் புதிய காவல் நிலையங்களை திறப்பதிலிருந்து சிங்கள அரசை தடுக்க வேண்டும் என்பது நான்காவது கோரிக்கை. 5 ] தமிழர் கிராமங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள , இலங்கை ராணுவத்தையும், இலங்கை காவல்துறையையும், திரும்ப அழைக்கவேண்டும். இந்திய ராணுவத்தின் மேற்பார்வையில், இலங்கை அரசால், ஊர்காவல் படைக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆயுதங்களை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் தனது பட்டினப்போரை தொடங்கினார். அதாவது புலிகளின் அரசியல்பிரிவின், யாழ் குடாநாட்டு தலைவர் மேற்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தனது பட்டினிபோரை நடத்தினார் என்பது புலிகளின் அரசியல் போராட்டமாக காணப்படவேண்டும்.
மேற்கண்ட ஜனநாயக ரீதியான கோரிக்கைகளை ஏற்காமல் இந்திய அரசு திலீபனின் மரணத்தை அனுமதித்தது என்றால், அதன் போரும் என்ன என்பதை இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்போதாவது உலக தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை போட்டவர்கள், அன்றைய நிலையில் தமிழர்களின் அடிப்படை கோரிக்கைகளான திலீபனின் கோரிக்கைகளை ஏற்க்கவில்லை என்பதை அரசியல்ரீதியாக புரிந்து கொள்ளவேண்டும். அன்றைய சூழலில் ஈழத்தமிழர்கள் இந்திய அரசின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கைகளில் ஒரு பகுதியையாவது, புலிகளும் வைத்திருந்ததால்தான், கடைசி கோரிக்கையில் இந்திய ராணுவத்தின் மேற்ப்பார்வையில் என்பதாக திலீபனின் கோரிக்கையும் அமைந்தது. இத்தகைய கோரிக்கைகளை ஏற்காத இந்திய அரசு, திலீபனின் காந்தீய முறை போராட்டத்தை கூட ஏற்காத நிலையில், அவரது தியாகம் அங்கே எழுதப்பட்டது. அதுவரை டில்லியை நம்பிய தமிழ் உள்ளங்கள் கூட அப்போதுதான் முதல்முறையாக டில்லி எதிர்ப்பு மனோபாவம் கொண்டனர். அதன்விளைவே புலிகளின் படைகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் மோதல்கள் வெடித்தன. அதேசமயம் ஈ.பி.ஆர்.எல்.எப்.பும், செல்வம் தலைமையில் டெலோவும், ஈ.என்.டி.எல்.எப்.பும் த்ரீ ஸ்டார் என்ற பெயரில் இந்திய அரசு செயல்களுடன் சேர்ந்துகொண்டார்கள். தற்க்காலிக அரசை இந்திய அடிவருடி அரசாக அமைத்தார்கள்.
இதுவே திலீபனின் மரணம், அதாவது தியாகம் நமக்கு கொடுக்கின்ற பாடம். உலகத்தமிழர்கள் இந்த பாடத்தையும் இன்றாவது புரட்டிப்பார்ப்பார்களா?

Friday, September 24, 2010

கச்சதீவு மட்டுமல்ல; கடலும் மீனவருக்கே சொந்தம்.

இப்போது கச்சதீவை இந்த்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, இலங்கை தீவை ஆண்டுவரும் சிங்கள அரசுக்கு தாரை வார்த்து கொடுத்ததற்காக, கடும் விமர்சனங்களை மத்திய அரசு எதிர்கொண்டுவரும் வேளை. இந்த கைமாற்றி கொடுக்கப்பட்ட தீவு பிரச்சனை ஒரு அரசியல் முடிவாக எதிர்க்கப்படுவதைவிட, ஒரு சமூகத்தின் வாழ்நிலை பிரச்சனையாக இப்போது பார்க்கப்படுகிறது. அதாவது சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கச்சதீவு இந்தியாவால் திரும்பப்பெறபடவேண்டும் என்று ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதை கொண்டுவந்தவர் தி.மு.க. நாடாளுமன்ற கட்சியின் தலைவரான டி.ஆர்.பாலு. தி.மு.க. கொடுத்த தீர்மானத்தில், அ.இ.அ.தி.மு.க., இடது சாரிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருமே 1974 ஆம் ஆண்டு இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் நடந்த ஒப்பந்தந்த்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பேசினர். அதன்மூலம் கச்சதீவை திரும்ப பெறவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட விவாதப்பொருள், தொடர்ந்து இந்தியாவின் தமிழக மீனவர்கள் கச்சதீவை தாரைவார்த்ததனால், அதன் அருகே செல்லும்போதெல்லாம் இலங்கை கடற்ப்படையால் தாக்கப்படுகிறார்கள் என்பதே.
அதை பேசும்போது டி.ஆர்.பாலு, கச்சதீவை தாரை வார்த்தபிரகுதான், தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள கடல்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள் என்றார். அதேபோல அ.தி.மு.க.வின் தம்பிதுரையும் பேசினார். ம.தி.மு.க.வின் கணேச முர்த்தி ஒரு கட்டம் மேலே போய், தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்கள்தானே? என்றும், அவர்களை இந்திய அரசு ஏன் அங்கீகரிக்க மறுக்கிறது? என்றும், தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது? என்றும் கேட்டார். அதையும் தமிழிலேயே கேட்டார். இடது சாரி கட்சி உறுப்பினர்களும் மீனவர் கொலைகளுக்கு கச்சதீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களை மீன் பிடிக்க விடுவதில்லை என்றும், அதனால் அந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கூறினார். இந்த அளவுக்கு அவர்கள் கேட்கும்போது, இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் நிரூபமா ராவ், இலங்கை பயணத்தில் இருந்தார். கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற தமிழ்நாட்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல எத்தனித்த எஸ்.எம்.கிருஷ்ணா, நிரூபமா ராவ் எல்லாவற்றையும் இலங்கை அரசிடம் பேசுவார் என்று கூரிமுடித்துவிட்டார்.
மேற்கண்ட நாடாளுமன்ற குரல்களுக்கு பிறகும், இந்திய அரசு பக்கத்திலிருந்து எந்த ஒரு ஆக்கபூர்வமான முன்முயற்சியும் தெரியவில்லை. ஏற்கனவே கச்சதீவை இந்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று ஒரு வழக்கு ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர்கள் பெயரில் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் இந்தியா இலங்கைக்கு கொடுத்த கட்சதீவு ஒப்பந்தம் சட்ட ரீதியாக செல்லத்தக்கதல்ல என்பதே முக்கிய அடிப்படையாக இருக்கிறது. அதாவது இதற்க்கு முன்னால் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, ஒரு இந்திய பகுதியை பாகிஸ்தானிற்கு கொடுப்பதற்கு அரசு முடிவெடுத்த போது, அத்தகைய ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதலையும், மூன்றில் ஒரு பங்கு உள்ள இந்திய சட்டமன்றங்களின் ஒப்புதலையும் பெறாததனால் செல்லாது என்ற பழைய வழக்கு ஒன்றின் தீர்ப்பை எடுத்துக்காட்டி, அதேபோல கட்சதீவு ஒப்பந்தமும் இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவையும், மூன்றில் ஒரு பங்கு சட்ட மன்றங்களின் ஒப்புதலையும் பெறவில்லை என்று அந்த வழக்கில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்னமும் நிலுவையில்தான் உள்ளது.
இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் 11 ஆம் நாள், ராமேஸ்வரம் மீனவர் சங்கங்கள் ஆயிரக்கணக்கில் தாங்களே கச்சதீவை நோக்கி போகப்போகிறோம் என்றும் உலகுக்கு அறிவித்துள்ளனர்.
கச்சதீவை ஒருகாலத்தில் ராமநாதபுரம் ராஜாவாக இருந்த சேதுபதி மன்னர் வைத்திருந்தார். அவர் அதை குத்தகைக்கு கொடுத்த ஆவணங்கள் இன்னமும் இருக்கிறது,. அப்படிப்பட்ட கச்சதீவை இந்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்த பிறகு அதன் அருகே செல்வதற்க்கே தமிழ்நாட்டு மீனவர்கள் அஞ்சினர். அதேபோல சம்பவங்களும் நடந்துவரூகின்றன. முப்பத்தாறு ஆண்டுகளுக்கு பிறகு நாம் கொடுத்த கட்ச தீவை நாமே திரும்ப கேட்கும் நிலை வந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்னால், செப்டம்பர் 22 ஆம் நாள், இரவில் வழமை போல, ஒரு இலங்கை கடற்படை கப்பல் ராமேஸ்வரம் தீவு அருகே வந்துவிட்டது. இதுபோல பலமுறை இலங்கை கடற்படையின் சிங்கள வீரர்கள் நமது கரை ஓரத்தில் அத்துமீறி நுழைந்திருக்கிறார்கள். அப்படி நுழைபவர்கள் இங்குள்ள இந்திய மீனவர்களை அடிப்பதும், சுடுவதும் போன்ற வன்முறைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்திய அரசின் கடற்படையும், தமிழக கடலோர காவல்படையும் அந்த இலங்கை கடற்படைக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டிருக்கிறார்கள். எத்தனை முறை கேட்டும்கூட, அத்துமீறி நுழையும் இலங்கை கடற்படை மீதோ, வன்முறையை கட்டவிழ்த்து விடும் சிங்கள படை வீரர்கள் மீதோ எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுத்தது இல்லை. அதுமட்டுமின்றி குறைந்த பட்சம், சட்டத்தை மீறும் இலங்கை கடற்படையினர் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்பதை தொடர்ந்து மீனவ இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், தமிழின உணர்வாளர்களும் எடுத்து சொல்லியும் தமிழக காவல்துறையின் செவிகளில் விழுந்ததாக தெரிய வில்லை.
சமீபத்தில் வேதாரண்யம் அருகே செல்லப்பன் என்ற மீனவர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட போது, ஓடிவந்து உதவிய தமிழக அரசு கூட, சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படையினர் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்ற விமர்சனம் பெரிதாக கிளம்பியது. இப்போது முதல்முறையாக இந்த இருபத்தேழு ஆண்டுகளாக நடக்கும் துப்பாக்கி சூடுக்கு பிறகு, கடந்த செப்டம்பர் 22 இரவில் நடந்த இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு, ராமேஸ்வரம் காவல்துறை ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். இதற்க்கு மீனவர் சங்கங்கள் நன்றி சுவரொட்டியும் ஒட்டியுள்ளனர்.
இந்த அளவுக்கு கட்சதீவு பிரச்சனை ஒரு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு கச்சதீவு பிரச்சனையில், இந்திய அரசோ, இலங்கை அரசோ செய்கின்ற செயல் தவறு என்ற புரிதல் இருக்கிறது. கச்சதீவில் இந்திய மீனவர்கள் வலைகளை காயப்போடவும், மீன்களை உலர்த்த போடவும், ஒப்பந்த்தப்படி உரிமை இருக்கிறது என்றாலும் அதை சிங்கள கடற்படை வீரர்கள் ஏற்றுக்கொள்ளாமல், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை பார்ப்பதுபோல பார்த்து, அத்துமீறுகிரார்கள் என்பதும் தமிழக மக்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதேசமயம் இந்திய மீனவர்கள் கடலில் எல்லை மீறி செல்கிறார்கள் என்றும் அதனால்தான் இலங்கை கடற்படை இவர்களை சித்தரவதை செய்வதும், சுட்டு கொள்வதும் நடக்கிறது என்றும் தொடர்ந்து இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டு, இந்திய அரசும் சொல்லி வருவதால், அதை மக்கள் நம்புகிறார்கள். இதுபோன்ற சால்ஜாபுகளால் அரசு இதுவரை தப்பித்து வருகிறது. உண்மை அவ்வாறு இல்லை.
கடலில் இரு நாடுகளுக்கு இடையில் உள்ள எல்கையில் எப்படி சுவர் எழுப்ப முடியாதோ, அதேபோல மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது அவர்கள் இத்தகைய எல்கைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.
இரு நாடுகளுக்கு நடுவே உள்ள எல்கைகளை கடலில் வரைவது என்பது இரு நாட்டு அரசுகளுக்கும் சாத்தியமான ஒன்றே. இரு நாட்டு கடல் படைகளும், தங்கள் திசைகாட்டும் கருவிகளுடன் தான் கடலில் நகர்வார்கள். அவர்களுக்கு அவ்வாறு அடுத்த நாட்டு எல்கைகள் என்பது கவனிக்கப்பட முடியும். ஆனால் அதுவே மீனவர்களுக்கு சாத்தியமில்லை. அதுமட்டுமல்லாது மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும்போது, அதிகமான மீன் கிடைக்கும் இடம் நோக்கிதான் நகர முடியும். அப்போது அவர்கள் மீன்களுக்கு பின்னே செல்லும் வழிகளைத்தான் வழிகாட்டிகளாக கொள்ளமுடியும். அப்படி மீன்களுக்கு பின்னால் பயணமாகும் மீனவர்கள் தங்களது படகுகளை, எல்கை பார்த்துக்கொண்டு ஓட்டமுடியாது. ஆகவே மீனவர்களுக்கு கடலில் எல்கை கிடையாது என்பதையும், மீனவர்களுக்கு கடலில் எல்கை இருக்க முடியாது என்பதையும் மீனவர்கள் அல்லாதவர்கள் புரிந்துகொள்வது இயலாததாக இருக்கிறது. இதுவே நடைமுறையாகவும் இருக்கிறது.
அதாவது 1983 ஆம் ஆண்டிற்கு முன்பு, அதாவது இலங்கை தீவில், ஈழத்தமிழருக்கும், சிங்களவர்களுக்கும் ஒரு ஆயுதம் தாங்கிய போர் நடப்பதற்கு முன்பு இந்தியா பக்கம் இருக்கும் தமிழ் மீனவர்களும், இலங்கை தீவில் இருக்கும் தமிழ் மீனவர்களும் இருபுறமும் கரைகளுக்கு வருவதும், மீன் பிடித்தலை இரு புறமும் செய்வதும், பரஸ்பரம் பழகிக்கொள்வதும், சர்வ சாதாரணமாக நடந்து வந்தது.
அவ்வாறு பரஸ்பரம் இரு நாட்டு கரைகளுக்கும், எதிர் கரைகளில் உள்ள மீனவர்கள் செல்வதும், அந்த கரையோரத்தில் மீன் பிடிப்பதும், அங்கேயே சில நேரங்களில் தங்கி இருந்து ஒய்வு எடுப்பதும், பின் திரும்பி வருவதும் சாதாரணமாக இரு நாடுகளுக்கு இடையில் நடக்கின்ற விஷயம். அதற்குமேலும் சொல்லப்போனால், யாழ்ப்பாண மீனவர்களில் சிலர், தாங்கள் ராமேஸ்வரம் கரைக்கு வந்து தங்கும்போது, இங்கேயே குடும்பமாக வாழ்வதற்கு சில ஏற்பாடுகளை செய்துகொண்டவர்களும் உண்டு. அதேபோல தமிழக மீனவர்களில் சிலரும், ஈழப்பகுதியில் தங்கி வாழ்ந்ததும் உண்டு. ஆகவே இரு நாட்டு மீனவர்கள் மத்தியில் உள்ள உறவு என்பது ஒரு வரலாற்று தொடர்பு என்பதை உலகம் உணர்ந்துகொள்ளவேண்டும். இதில் தமிழ்நாடு வரை வந்து மீன் பிடிப்பதில், சிங்கள மீனவர்களும் உள்ளடக்கம் என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
அதனால்தான் சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை நாட்டு மீனவர்கள் அதாவது தமிழ் மற்றும் சிங்கள மீனவர்கள் தங்களுக்குள் பேசும்போது இரு புறமும் பரஸ்பரம் மீன் பிடிக்க அனுமதிவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவ்வாறு மீனவர்கள் பற்றியும், மீன் பிடிக்கும் தொழில் பற்றியும் சரியாக புரிந்து கொள்ளவேண்டியது மீனவர் அல்லாத மக்களுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது.
ஏன் என்றால் உலகம் முழுக்கவே நிலத்தில் வாழும் மக்களுக்கு, நீரில் வாழும் மீனவர்கள் பற்றி எதுவும் தெரிவதில்லை. தெரியாத விசயத்தின் மீது அவர்கள் கருத்து வைத்திருக்கிறார்கள் எனபதுதான் மிகவும் கொடுமையானது. நிலம் சார்ந்த உலகம் என்பது வேறு. நீர் சார்ந்த உலகம் என்பது வேறு. நிலம் சார்ந்த உலகில் ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்கள் .ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடுகிறார்கள். அவர்கள்தான் அரசியலிலும், அதிகார வர்க்கத்திலும், ஊடகங்களிலும் கோலோச்சுகிறார்கள். அவர்கள் தங்களது அனுபவங்களில் இருந்து மட்டுமே உலகை காண முடியும். அவர்களுக்கு நீரில் வாழும் ஒரு உலகம் பற்றி எதுவுமே தெரியாது. அப்படி இருக்கும்போது அவர்கள் எப்படி நீரில் வாழும் மக்கள் பற்றிய சட்டங்களையோ, சாதகங்கலையோ, இடைவெளிகளையோ, தேவைகளையோ, பொருளாதார உறவுகளையோ, உற்பத்தி முறைகளையோ புரிந்துகொள்ள முடியும்? முடியாத ஒன்றை எப்படி தீர்மானிக்க முடியும்?
கடல் சார்ந்த உலகில் அரசர்களாக வாழும் மீனவர்கள் ஆதிவாசிகளாக இருக்கிறார்கள். அவர்களை கடல் சார்ந்த பழங்குடியினர் என்று அழைக்கவேண்டும். கடல் சார்ந்த பழங்குடியினருக்கு கடல் சொந்தம். கரையும் சொந்தம். அதை அவர்கள் உரிமையாக பெறுவதற்கு அவர்களை கடல் சார்ந்த ஆதிவாசிகளாக அறிவித்து, அவர்களுக்கு உரிய கல்வி ஒதுக்கீடு, வேலை ஒதுக்கீடு, அரசியல் தொகுதி ஒதுக்கீடு ஆகியவை கொடுக்கப்ப்படும்போதுதான், அவர்களது பிரதிநிதிகள் தக்க இடங்களில் அமர்ந்து தனகளுக்கான திட்டங்களை தீட்டும்போது, தாங்களே பங்கு கொண்டு, அவற்றை தீர்மானிக்கமுடியும். அப்படிப்பட்ட ஒரு சூழல் மட்டுமே அவர்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை கொடுக்க முடியும். அகவே மீனவர்களின் முழக்கமான கடல், கடலாளிக்கே, கடற்கரை மீனவனுக்கே என்பதை உண்மையாக்க போராடுவோம்.

Thursday, September 23, 2010

கல்மாடிக்கு கல்தா. களவாண்டதற்கு மன்னிப்பா?

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் மரியாதையை உலக அரங்கில் அசிங்கப்படுத்திவிட்டதா? இந்தியாவின் கௌரவத்தை காலி செய்துவிட்டதா? இந்திய நாட்டிற்கு இது தலைகுனிவா? இதை செய்தவர்கள் தேச துரோகத்தை செய்துள்ளனரா? இப்படிப்பட்ட பட்டிமன்றம் நாடெங்கும் உள்ள ஊடகங்களில் நடந்து வருகிறது. அக்டோபர்- 3 ஆம் நாள் டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கான தயாரிப்புகள் நடந்து வருகின்றன. சென்ற ஆண்டே இந்த விளையாட்டு போட்டிகள் பற்றி கூறும்போது, டில்லியின் முதல்வர் ஷீலா தீட்ஷித், ஒரு கடுமையான சோதனையாக அது இருக்கும் என்று கூறியிருந்தார். விளையாட்டு போட்டிக்கான நாட்கள் நெருங்க, நெருங்க பல்வேறு பிரச்சனைகள் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டன. முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர், இந்த விளையாட்டு போட்டிக்கு இத்தனை கோடி ரூபாயை செலவழிப்பதா என்று கேள்வி எழுப்பினார். அதையே காங்கிரசு கட்சியின் இன்னொரு மூத்த தலைவரான திக் விஜய்சிங்கும், பிரதிபலித்தார். மணிசங்கர் ஐயர் ஒரு கட்டம் மேலே சென்று, காமன்வெல்த் போட்டி நடக்குமானால், அந்த நேரம் டில்லியில் இருக்க பிடிக்காமல் தான் வெளிநாடு சென்று விடுவதாக கூறினார். அதன் பிறகு இந்த விளையாட்டு போட்டிக்கான செலவுகள் செய்யப்ப்பட்ட புள்ளி விவரங்கள் வெளிவந்தன. அதில் தேவையற்று அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கும் பொருள்கள் ஒவ்வொன்றும் பற்றி பட்டியல் போடப்பட்டது. அதுவே புதிய தலைவலியாக ஆட்சியாளர்களுக்கு ஆனது.
வழமையாக நமது அரசாங்க திட்டங்களுக்கு முதலில் செலவு கணக்கு ஒன்று போடப்படும். பிறகு திட்டம் நடைமுறைக்கு வரும்போது, அதிக செலவு ஆகிவிட்டது என்றும், அதிக செலவு ஆகும் என்றும் ஒரு புதிய கணக்கை கூறுவார்கள். இத்தகைய போக்கு இங்கே காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் நடந்தது. அதாவது ரூ. 655 கோடி செலவாகும் என்று முதலில் கூறப்பட்டது. அதையே மனிசங்கரையர் போன்றவர்கள் கேள்வி கேட்டனர். அந்த அளவுக்கு விளையாட்டு போட்டிக்கு செலவழிப்பதற்கு பதில், அதையே இந்த நாட்டில் வறுமையில் வாடும் மக்களுக்கு உணவளிக்க பயன்படுத்தலாம் என அவர்கள் கூறினார். ஆனால் காலம் ஆக, ஆக செலவு கணக்கு அதிகரிக்கத்தொடங்கியது. 11490 கோடி ரூபாய் வரை செலவு கணக்கை கூட்டினார்கள். பகிரங்கமாக இந்தியா வறுமையிலும், வேலையில்லா திண்டாட்டத்திலும் உழன்று கொண்டு இருக்கும் போதே, இவர்கள் விளையாட்டு போட்டிக்காக பல ஆயிரம் கோடிகளை செலவழிப்பது நாட்டு மக்களை எரிச்சலடைய செய்தது.காமன்வெல்த் போட்டிக்கான செலவு இவ்வளவு என்று அதன் ஒருங்கிணைப்பு குழு கூறும்போதே, இந்த விளையாட்டு போட்டிக்காக, டில்லி பெருநகருக்குள், அரசு அதாவது டில்லி யூனியன் பிரதேச அரசு உள்கட்டுமான ஏற்பாடுகளை செய்யவேண்டி வந்தது. அதற்க்கான செலவாக டில்லி அரசு 17000 கோடியை செலவு செய்துள்ளது. அது டில்லியின் எதிர்கால தேவைகளுக்கும் பயன்படும் என்பது அவர்களது வாதம்.
கல்மாடி தலைமையின் மீது பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகள் வந்தபோதும், வாங்கிய கருவிகள் விசயத்தில், கருவிகளின் விலையைவிட அதிகமான அளவு கொடுத்து வாடகைக்கு கருவிகளை வாங்கினார் என்ற விமர்சனம்கூட வந்த போது அவர் கலங்கவே இல்லை. அந்த அளவுக்கு அவருக்கு காங்கிரசு தலைமையின் அழுத்தமான ஆதரவு இருந்தது தெரியவந்தது. அதேநேரம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக தீம்பாடல் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பாட, பகிரங்கமாக மேடை போட்டு, கல்மாடி டிஷர்ட் போட்டுக்கொண்டு வெளிட்டதை நாம் காட்சி ஊடகங்களில் காண முடிந்தது. .இப்படிப்பட்ட கல்மாடி அராஜகத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று பலரும் காங்கிரஸ் கட்சிக்குள் விரும்பினர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்குமிடங்களில், பல்வேறு விளையாட்டு அரங்கங்கள் கட்டவேண்டி வந்தது. அதில் நேரு, இந்திராகாந்தி, என்று ஒவ்வொரு விளையாட்டு அரங்கிற்கும் பல நூறு கோடி ரூபாய்க்கு கட்டுமானப்பணிக்காகவே செலவழித்துள்ளார்கள். ஆனாலும் அவ்வாறு கட்டப்பட்ட விளையாட்டு அரங்கங்கள் ஒவ்வொரு நாளும், ஒரு அரங்கம் என்று உடைந்து விழுவதை கண்டு ஊரே சிரிக்கிறது. உதாரணமாக ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில், நடைமேடை பாலம் உடைந்து விழுந்தது. அதில் இருபத்தேழு பேர் தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளார்கள் என்ற செய்தி இன்னொரு இடியாக வந்து விழுந்தது. அதற்கு மறுநாளே, பளு தூக்கும் போட்டி நடைபெற இருந்த அரங்கில், செயற்கை கூரை ஒரு பகுதி உடைந்து விழுந்தது. இவையெல்லாம் எல்லா ஊடகங்களிலும் உலகெங்கிலும் பெரிதாக காட்டப்பட்டது. அதன்விளைவாக பல பங்குபெறும் நாடுகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். காமன்வெல்த் நாடுகள் என்று பெயர் பெற்ற பெரிய நாடுகளான இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, போன்ற நாடுகள், விளையாட்டு போட்டிகளில் தாங்கள் கலந்துகொள்ளப்போவது இல்லை என்றும் அறிவித்தனர். அதில் சில நாடுகள் தாங்கள் பொறுமையாக தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களை செப்டம்பர் கடைசியில் இந்தியாவிற்கு அனுப்புவோம் என்றும் கூறி உள்ளனர். தங்கள் நாட்டு குடிமக்களையும், விளையாட்டு வீரர்களையும், எந்த ஒரு பயங்கரவாத தாக்குதல்களிலும் மாட்டாமல் இருப்பதற்காக எச்சரிக்கையாக இருக்குமாறு இந்த நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் நாடுகளின் கூட்டமைப்பு தலைவர் மைகேல் ப்பேணல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான கிராமம், சுத்தமாக இல்லைஎன்றும், கட்டி முடிக்கப்படவில்லைஎனவும், கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
இத்தனை விமர்சனங்களுக்கு பிறகும் ஒருபுறம் முதல்வர் ஷீலா தீட்ஷித் தாங்கள் எல்லா குறைபாடுகளையும் சரி செய்து விடுவோம் என்றும், இப்போது எழுகின்ற குறைபாடுகள், விளையாட்டு போட்டிகளை ஒருபோதும் தடுத்து விடாது என்றும் கூறினார். இன்னொருபுறம் அந்நிய நாடுகள் பார்க்கும் தரம் என்பது வேறு என்றும், இந்த நாட்டில் தரம் என்று நாம் பார்ப்பது வேறு என்றும் பதில் கூறிக்கொண்டிருந்தனர். அசுத்தம், சுகாதாரம் பற்றிய விமர்சனகளுக்கு இப்படி பதில் சொல்ல இந்த நாட்டு அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் முடிகிறது என்று சொன்னால், இந்த நாட்டின் மரியாதை உலக நாடுகள் மத்தியில் எந்த நிலையில் இருக்கும் என்பது சொல்லாமலேயே தெரியமுடியும். இப்படி சூழலில்தான் நேற்று தலைமை அமைச்சர் மன்மோகன், ஒரு தீவிர நடவடிக்கையாக கல்மாடியை இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து ஓரங்கட்டிவிட்டு , ஜெயபால் ரெட்டியையும், எம்.எஸ்.கில்லையும் பொறுப்பில் போட்டு, அமைச்சர்கள் குழுவை முழு பொறுப்பையும் கவனிக்க அந்த இடத்தில் நியமித்தார்.. அதுபற்றி கூறிய மணி சங்கர் ஐயர் இந்த விளையாட்டு போட்டி நடத்துவதில் உள்ள குறைகளை தான் ஏற்கனவே நாலு ஆண்டுகளுக்கு முன்பே கூறியதாகவும், இப்போது ஒருங்கிணைப்பாளரை மாற்றியதால் இனி விளையாட்டு போட்டி சரியாக நடைபெறும் என்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு காங்கிரசு கட்சிக்குள் பிளவுகள் இருப்பது பகிரங்கமாக வெளிவந்துள்ளது.
இப்போது நமக்கு எழுகின்ற கேள்வி என்னவென்றால், கல்மாடியை நீங்கள் நீக்கலாம் அல்லது ஓரங்கட்டலாம். ஆனால் கலமாடியின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டுள்ள குளறுபடிகள், வீண்செலவுகள், மற்றும் ஊழல்கள் ஆகியவை அப்படியே எடுத்துக்கொள்ளப்படுமா? அவற்றை நீக்குவதற்கோ, போக்குவதர்க்கோ, அல்லது ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ காங்கிரஸ் கட்சி தலைமை என்ன செய்யப்போகிறது? அல்லது ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணமாவாது அவர்களுக்கு இருக்கிறதா? இந்தநாடு ஒரு பெரிய பஞ்சத்தை, எதிர்நோக்கி இருக்கும்போது, பெரும் அளவில் வறுமையை தாங்கிக்கொண்டு இருக்கும்போது, இவ்வாறு 77000 கோடி ரூபாய் பணத்தை உலக நாடுகளிடம் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக செலவழிக்கலாமா? இது இந்த நாட்டிற்கு இழுக்கா? அல்லது பெருமையா என்பது அவரவர் கண்ணோட்டத்தில் இருக்கிறது.

Wednesday, September 22, 2010

முருகன் கொலைக்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும்

இன்று 22.09.2010 காலை 10.00 மணிக்கு புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் நிறுவனர் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் அளித்தப் பேட்டி வருமாறு.

தூத்துக்குடி நகரில் குடிமைப் பொருள் விநியோக உதவி தரக்கட்டுபாடு அதிகாரி முருகன் 25 ஆண்டுகலமாக பணியாற்றி வருகிறார்.குடிமை பொருள் கிட்டங்கியில் கடத்தல் நடக்குமானால் அதை மேலதிகாரிகளுக்கு புகாராக தெரிவித்து வந்துள்ளார் இறந்த முருகன் சென்ற மாதமே குடிமை பொருள் விநியோக துறையில் நடந்துவரும் கள்ள கடத்தல் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப்புகாரை மேலதிகாரிகளின் வலியுறுத்தலில் திரும்பப் பெற்றதாக அவரது மனைவி கூறியுள்ளார்.

இந்நிலையில் விஷம் அறுந்தியதாக 7.9.2010 அன்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை கொண்டுவந்து சேர்த்தவர்கள் அவர் பாலிடால் குடித்து தற்கொலை செய்ய முயன்றதாக கூறியிருக்கிறார்கள் அரசு ஊழியராக இருகின்ற முருகனது தொழிலை கூலி என்று எழுதி பிறகு அதை அடித்து பணம் கட்டும் நோயாளி என்பதாக எழுதி விபத்து பதிவு ஏட்டில் நிரப்பியிருக்கிறார்கள் இது தொடக்கம் முதலே அவரை கொண்டுவந்து சேர்ந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் பதிவு செய்தோர் உட்பட பலர்மீதும் பல கேள்விகளை எழுப்புகிறது.

அந்த பதிவேட்டில் நாடிதுடிப்பு,இரத்த அழுத்தம் ஆகியவை கேள்விக்குறியாக குறிக்கப்பட்டுள்ளது. அப்படியானல் அவரது உயிர் அப்போது இருந்ததா?பிரிந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது அது தவிர அப்போது அவர் நினைவற்று இருந்ததாக முதலில் எழுதப்பட்டு பிறகு அதுவே அரை நினைவில் இருந்ததாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் இதேபோல மாற்றப்பட்ட ஆங்கில எழுத்துக்களை பதிவேட்டில் பார்க்கமுடிகிறது. அதனால் திட்டமிட்டு தவறாக பதிவு செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது. அவர் உடலில் வேறு எந்த காயமும் இருந்ததாக விபத்து பதிவேட்டில் குறிக்கப்படவில்லை செப்டம்பர் 11-ஆம் நாள் முருகன் இறந்துவிட்டதாக அரசு மருத்துவமனை அறிவித்தது. செப்டம்பர் 12 ஆம் நாள் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் 10 இடங்களில் அவரது உடலில் காயம் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இடது பாதத்திலும்,இடது கையிலும், கழுத்தின் இடபுறமும், தோளின் இடது புறமும், இடது முழங்கையிலும் இடது கையின் பின்புறமும், உதட்டின் கீழ்புற மத்தியிலும் கடுமையான காயங்கள் அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட காயங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களில் முருகன் அடித்து கொல்லப்பட்ட்டுள்ளார் என்பதை நிருபிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

இதுபற்றி நேற்று 21.9.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் பிரகாசிடம் நேரடியாக கேட்டபோது, அவரால் எந்தவொரு பதிலையும் கொடுக்க முடியவில்லை. இறந்த முருகனின் மனைவி செல்வி ஒரு வாரகாலமாக நியாயம் கேட்டு குடும்பத்துடன் ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்னால் பட்டினி போராட்டம் நடத்தி வருகிறார். அவரது புகாரில் கூறப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரையுமே இதுவரை காவல்துறை விசாரனைகூட செய்யவில்ல்லை.

இறந்த முருகன் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்ராக இருப்பதனால் அவரது மரணம் பற்றிய வழக்கில் 1989-ன் எஸ்.சி/எஸ்.டி தாழ்த்தப்படோர் மற்றும் பழங்குடி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யவேண்டும். அதையும் இந்த அரசு செய்யவில்லை ஆகவே இந்த மரணத்திற்கு பின்னால் தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் மட்டுமின்றி மாநில மெங்கும் நடக்கும் ரேஷன் பொருள் கடத்தல் என்ற மாபெரும் சதி இருப்பதாக சந்தேகம் எழுகிறது. அரிசி மட்டுமின்றி உழுந்தும் பருப்பும் கடத்தப்படுகின்றன் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இவ்வாறு முருகனின் மரணத்திற்கு பின்னால் பெரிய அளவில் ஒரு சதி வலை பின்னல் இருக்கக்குடிய நிலைமை இருப்பதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்.

அதேபோல இதற்கான போராட்டத்தை மாநிலம் தழுவிய ரீதியில் நடத்துவதற்காக எதிர்கட்சியான் அ.இ.அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரை நான் கேட்டுக் கொள்ள இருக்கிறேன். அனைத்துக்கட்சிகளையும் இணைத்து ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி முருகன் மரணத்திற்கான பின்னனியை வெளிக் கொண்டு வரவும், உண்மை குற்றவாளிகளை தண்டிக்கவும், சட்டரீதியான முயற்சிகளை புதிய தமிழகம் மேற்கொள்ளும். இவ்வாறு புதிய தமிழகம் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி பேட்டியின்போது கூறினார்.