Tuesday, July 7, 2015

தென்சென்னை நொச்சிக்குப்பத்தில் மீனவர் வீடுகள் இடிப்பு.அராஜகம்???


      இன்று [ 07-07-2015] காலை 10 மணிக்கு திடீரென 100 ஆயுதங்களுடன் காவல்துறையினர், மயிலாப்பூர் நொச்சிக் குப்பம் வந்திறங்கினர்.அவர்களை,மயிலாப்பூர் உதவி ஆணையர் ரவிசேகரும்,ஆய்வாளர் சிபுகுமாரும் தலைமை தாங்கினர்.அவர்களுக்கு "சம்பளம்" கொடுப்பவர்களாக "குடிசை மாற்றுவாரியம்" நிர்வாக இயக்குனர் நாகேஷ், உதவி பொறியியலாளர் காளியப்பன் அங்கெ வந்திருந்தனர். காவல்துறை அதிகாரிகளுக்குதான் தமிழக அரசாங்கம் "சம்பளம்" கொடுக்குமே? எதற்காக "குடிசை மாற்ற்ய்வாரிய" அதிகாரிகள் "சம்பளமோ,கிம்பலமோ" கொடுக்கவேண்டும்? என்று நீங்கள் வினவலாம். அதுதானே நாங்களும் கேட்கிறோம் என்று நொச்சிக்குப்பம் மக்களும் கூறுகின்றனர்.இவையெல்லாம் ஏன் நடக்கிறது? அந்தக் கதையைத்தான் நாம் கண்டுபிடிக்கவேண்டும்.

        நொச்சிக்குப்பம் மீனவர்களது வீடுகளை கட்டிக்கொடுக்க,1969 ஆம் ஆண்டு அங்குள்ள கடலோர நிலம் "குடிசைமாற்றுவாரியதுக்கு" கடலோர பாரம்பரிய மீனவ மக்களால் "இலவசமாக" கொடுக்கப்பட்டது.மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கிறோம் என்ற அன்றைய தி.மு.க. அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி மீனவ மக்கள் அங்குள்ள நிலத்தை ஒப்படைத்தார்கள்."கடலோரமும்,கடலும்" மீனவனுக்கே "சொந்தம்" என்ற முழக்கத்தை மட்டுமே புரிந்திருந்த "கடல்சார் பழங்குடி மக்களான" மீனவர்கள்,"நிலம் சார்ந்த"மக்களைப்போல,தங்கள் நிலங்களுக்கு "தாங்கள் பட்டா"வாங்கி வைக்கவேண்டும் என்ற புரிதல் இன்றியே வாழ்ந்து வருகிறார்கள். அதுவே அவர்கள்,"பழங்குடி ஆதிவாசி" மனோபாவம் கொண்டவர்கள் என்பதற்கு சான்று.

அதனால்தான் 1984 ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். ஆட்சியில், மெரினா கடற்கரை ஓரத்தை "அழகுபடுதப்போகிறோம்" என்ற பெயரில், அதிகாரிகளின் ஆலோசனைப்படி, அரசு மீனவ மக்களின் "கட்டுமரங்களையும்,வலைகளையும்"
அகற்ற்யபோது, "பெருங்கலவரம்" ஏற்பட்டது. நடுக்குப்பம் மீனவர்களை தேவாரம் ஐ.பி.எஸ்.தலைமையில் தாக்கியபோது, இதே நொச்சிக்குப்பம் மீனவர்கள் தேவாரம் தலைமையிலான காவலர்களை "விரட்டி,விரட்டி" அடித்தனர்.மாட்டிக்கொண்ட தேவாரத்தின் உயிரை அன்று காப்பாற்றியது அங்குள்ள மீனவப்பெண்களே ஆனாலும் "சூடு"பட்ட தேவாரம் மீண்டும் ஒரு ஆயுதப்படையை திரட்டி வந்து "துப்பாக்கி சூடு" நடத்தியதும், அதில் "ஆறு மீனவர்கள்" கொலை செய்யப்பட்டதும், நாடறிந்த வரலாறு. அவர்களுக்கான "நினைவுச் சின்னம்" இன்னமும் "அயோத்தியாகுப்பத்தில்" இருக்கிறது.இவாறாக எம்.ஜி.ஆர்.காலத்திலேயே "போராடி தங்களது கடற்கரை மீதான உரிமையை"நிலை நாட்டியவர்கள் அங்குள்ள மீனவர்கள்.இன்னமும் கூறப்போனால், அன்று காவல்துறையை எதிர்த்து போராடியதற்கு தலைமை ஏற்றவர் "கட்டுமர மீனவர் சங்க" செயலாளரான அ.இ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.விஸ்வநாதன். இவ்வாறு  ஆளும் கட்சிக்காரர்களே "அநியாயமான காவல்துறை அராஜகத்தை" எதிர்த்து, போராடி வென்ற வரலாற்றை  கொண்டவர்களாக இருக்கின்றனர்.

      1969 இல் மீனவர்களால் இலவசமாக கொடுக்கப்பட்ட நிலத்தில் அவர்களுக்கு "அடுக்குமாடி வீடுகளை" கட்டிக்கொடுக்க தி.மு.க. அரசு திட்டமிட்டது. அதுவரை அந்த மக்கள் குடிசை போட்டு வாழ்வதற்கு,"வீட்டிற்கு நாற்பது ரூபாயை" குடிசை மாற்று வாரியம் வழங்கியது.அவாறு "தற்காலிக குடிசைகளை" போட்டுக்கொண்ட மீனவ மக்கள்,1973 இல் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் 1974 வரை குடியேறினர். 2006 ஆம் ஆண்டு, ஆட்சிக்கு வந்த தி.மு.க.தலைவர் கருணாநிதி, " நான் 1974 இல் கட்டிக்கொடுத்த வீடுகள் நொச்சிக்குப்பத்தில் இப்போது "சிதிலமடைந்த நிலையில்" உள்ளது.சிதிலமடைந்த நிலை என்றால் உடைந்துவிழும்  நிலை என்று அர்த்தம்" என்பதாகவும் கூறி, அதனால் நான் முதலில் அவர்களுக்கு வீடுகள் காட்டிக்கொடுப்பேன்" என்றார். 2006 முதல் 2011 வரை ஆண்ட தி.மு.க  புதிய வீடுகளை கட்டவும் இல்லை.கொடுக்கவும் இல்லை.மாறாக அருகே உள்ள "நொச்சி நகரில்" 600 வீடுகளை ஒரு வீடு 250 சதுர அடி என்பதாக கட்டி முடித்துஉள்ளது. நொச்சிக்குப்பதிற்கு தி.மு.க. ஆட்சி 1200 வீடுகள் கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தது.

   ஆனால் அ.தி.மு.க. அரசு வந்த பிறகு, நான்கு ஆண்டுகள் இழுத்தடித்து,சமீபத்தில், 540 வீடுகளை கட்டிக் கொடுப்பதாக கூறியுள்ளது. அவற்றை ஒரு வீடு 400 சதுர அடி என்று கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது.இதுவரை நொச்சிக்குப்பம் வீடுகள் கட்டத் தொடங்க வில்லை..நொச்சிநகர் வீடுகளை திறக்க இதனை காலம் கழித்து அரசு சமீபத்தில்தான் திறந்துள்ளது.அதிலும் "மீனவர் அல்லாத சமூகங்களுக்கு பெரும்பான்மையும், மீனவர்களுக்கு 150 வீடுகளும்" இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்னமும் 30 வீடுகள் யாருக்குமே ஒதுக்காமல் "காலியாக" இருக்கிறது. அந்த 30 வீடுகளை இங்கே "இடிக்கப்படும் மீனவர்களது" வீடுகளுக்கு பதிலாக "ஒதுக்கி கொடுங்கள்" என்ற மீனவர் சங்கங்களின் கோரிக்கையை குடிசை மாற்று வாரியம் செவி மடுக்கத தயாராக இல்லை.

      இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், இன்று காவல்துறையும், குடிசை மாற்று வாரியமும் இணைந்து வந்து "காசு செலவழித்து" மீனவ மக்களின் 10 வீடுகளை அராஜகமாக இடித்து தள்ளியுள்ளனர்.அதில் அ.இ.அ.தி.மு.க. மாநகராட்சி உறுப்பினர்  ராஜலட்சுமி வீடும் உள்ளடக்கம்."சிறிது காலம் கொடுங்கள் காலி செய்துவிடுவார்கள்" என்று மீனவர் சங்க தலைவர் கபடி.மாறன் கேட்டதற்கு, "உனக்கு ஒரு வாரம் நேரம் கொடுத்தோமே?" என்று அதிகாரிகள் பதில் கூறியுள்ளனர்.அதற்கு மாறன்," குடிசை மாற்று வாரியத்ம்தளைவரும், அமைச்சரும் ஊரிலில்லை" என்று கூறியும், தென்னிந்திய மீனவர் நலச் சங்க தலைவர் கு.பாரதி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க தலைவர் கபடி.மாறன் ஆகியோரை மிரட்டிவிட்டு, காவல்திரை வீடுகளை இடித்து தள்ளியிருக்கிறார்கள்.அப்போது, குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியியலாளர் நாகேஷ், உதவி பொறியியலாளர் காளியன்னனிடம் "காசைகொடு" என்று கூற,ஆய்வாளர் சிபு.குமாருக்கு ஒரு "ஆயிரம் ரூபாய் நோட்டுக்க்கட்டை"  காளியண்ணன் மக்கள் முன்னாலேயே கொடுக்கிறார்.உதவி ஆணையருக்கும் அதேபோல பணக்கட்டு கொடுக்கப்பட்டுள்ளது என்பதே மக்களது கூற்று. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையாக இது இருந்தால்  எதற்காக  குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஏதோ "கூலிப்படைக்கு" கொடுப்பதுபோல, "காசு கொடுத்து வீடுகளை இடிக்க சொல்லவேண்டும்?".அதற்கும் அங்கு வந்த குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியியலாளரான நாகேஷ் தெளிவாகவே," பலகோடி ரூபாய்க்கான திட்டம் இது". "இதை செயல்படுத்த இந்த அதிகாரப்பதவியைப்பெற தான் 50 லட்சம் செலவழித்து இந்த பதவிக்கு " வந்துள்ளதாக கூறியுள்ளார். இது என்ன வெளிப்படையான அறிவிப்பு?

          குடிசை மாற்று வாரிய தலைவரான ஒரத்தநாடு தங்கமுத்துவும், வீட்டுவசதி அமைச்சரான ஒரத்தநாடு வைத்தியலிங்கமும் ,இணைந்து, அதே உறவு கொண்ட ஒரு மயிலாப்பூர் உதவி ஆணையர் ரவிசேகர் மூலம் இந்த "அராஜக இடிப்பு வேலையை" செய்யவைக்கிரார்களா? ஏற்கனவே "நொச்சிநகரில் மீதம் உள்ள 30 வீடுகளை" 6 லட்சம், 8 லட்சம் என்ற விலைக்கு விற்பது உண்மைதானா?அதனால்தான் ஆளும்கட்சியின் மாநகராட்சி உறுப்பினர் வீடடியும்கூட இப்படி இடித்து தள்ளுகிறார்கள்.அந்த பெண் கவுன்சிலரின் மருமகன் அங்கேயே ஆளும்கட்சியின் பகுதி செயலாளாராக இருக்கிறார் என்றாலும்கூட, இந்த அதிகாரிகளும், அமைச்சரும் செய்யும் வேலை, "ஜெயலலிதா ஆட்சி மீனவர்களுக்கு ஆதரவானது" என்ற கருத்தை உடைக்க வேறு யாராவது இவர்களை இயக்குகிறார்களா? அல்லது உண்மையில் இந்த ஆட்சி மீனவர்களுக்கு எதிரானது என்பதை, தலைநகர் சென்னையிலிருந்தே "ஆதாரம்" காட்டுவதன்மூலம் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் உள்ள கரையோர மக்களை "புறக்கணிக்கிறோம்" என்பதை இந்த அரசு "வெளிச்சம்" போட்டு காட்டுகிறதா?

Sunday, June 28, 2015

பிரபுல் பிட்வாய் அஞ்சலி கூட்டம்

ஊடகவியலாளர்-பத்தி எழுத்தாளர்- அணு சக்தி எதிர்ப்பாளர்
                   பிரபுல் பிட்வாய் அஞ்சலி  கூட்டம்
                 ---------------------------------------------------
 இன்று "மக்கள் சிவில் உரிமக் கழகம்" {பி.யு.சி.எல்], சென்னை பெருநகரக் குழு, எழும்பூர் "இக்சா" மையத்தில், 23 ஆம் நாள் ஆம்ஸ்டர்டாம் நகரில் மரணமடைந்த "பிரபுல் பிட்வாய்" இந்திய ஊடக உலகிலும், அணு உலை, அணு ஆயுத ஒழிப்பு இயக்கங்களிலும், ஆற்றிய சீறிய பங்களிப்பையும்,அவருடன் களப்பணியாற்றிய தங்களது அனுபவங்களையும், மூத்த ஊடகவியலாளர்களும், மனித உரிமையாளர்களும் பகிர்ந்துகொண்டனர்.
       
      முன்னாள் யு,என்.ஐ.செய்தி நிறுவனம்,லண்டன் பி.பி.சி,ஆம்னஸ்டி இன்டர்நேசனல்  ஆகியவற்றின் செயல்பாட்டாளர், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பை மீனவர் தலைவர் ஆண்டன் கோமேஸ் தலைமையில் நிறுவியவருமான கோ.ரமேஷ், நியு இந்தியன் எக்ஸ்ப்ரஸ் தலைமை செய்தி ஆசிரியர் பாபு ஜெயகுமார், ஊடகவியலாளரும்,30 ஆண்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பின் செயல்பட்டாலருமான டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் , பிரபுல் பிட்வாய் பயணித்த எழுத்துக்கள், கருத்துக்கள், செயல்பாடுகள் பற்றி விரிவாக உரையாற்றினர்.பேரா.சங்கரலிங்கம் நன்றி கூறினார்..

Friday, June 26, 2015

தமிழர் வாக்குகள் சிங்களத்துக்கு கிள்ளுகீரையா?-2 ஆம் கட்டுரை.


நேற்று வெளியிட்ட முதல் கட்டுரையில் மைத்திரிபால சிரிசேனா ஏன் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நாடி செல்கிறார் என்பதை பார்க்க தொடங்கினோம்.ஒருபுறம் "சிறிலங்கா சுதந்திரா கட்சியை உடைய விடாமல் மகிந்தாவுடன் சமரசமும்", மறுபுறம் ரணில் விக்கிரமசிங்கேவின் "ஐக்கிய தேசியக் கட்சி"[ யு.என்.பி] ஆலோசனைப்படிதான் கலைத்தேன் என்று கூறும் "பக்குவம்" நிறைந்த கெட்டிக்கார சிங்கள அரசியல்வாதி என்பதை நிரூபித்துள்ளார். மைதிரிபாலா அதிபராக வெற்றிபெற்று வந்தவுடன், அதற்கு பெரிதும் உதவிய "ஈழத்தமிழர்களின் வாக்குகளை" பெற்றுக் கொடுக்க உதவிய தமிழ்நாட்டின் மக்களது உணர்வும், புலம் பெயர்ந்தோரின் உணர்வுகளும்,இந்திய அரசின் உற்சாகப்படுதலால் ஏற்பட்டது என்பதாலேயே, முதலில் "தான் வருகை புரியும் நாடு இந்தியா என்று டில்லியை குளிர வைத்தார்.அதனால்தான் அன்று "மகிந்தா இந்திய அரசின் உளவு நிறுவனமான "ரா" தான் தனது தோல்விக்கு காரணம்" என்று கத்தினார்.

                       அப்படியாக ஆட்சிக்கு வந்த மைத்திரிபாலா, இந்தியா வந்தபோது "ஹம்பன்தொட்டா துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகை கொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம் என்று கூறியவர்" அடுத்த மாதமே சீனா சென்று அதை முழுமையாக சீன அரசுக்கே கொடுத்துவிட்டார் அப்படியானால் "தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவி வரும் இந்திய அரசுக்கே" அல்வா கொடுக்கும் திறமையுள்ளவரா இந்த மைதிரிபாலா? அதனால்தான் தனக்கு வாக்களித்து வெற்றி பெற காரணமாக இருந்த ஈழத் தமிழருக்கு சில சலுகைகளை கொடுத்து அவர்களில் ஒரு "சாராரை" தன்னுடன் இழுத்துக் கொள்வது என்ற "தந்திரத்தை" இப்போது எடுத்து வருகிறார். அதனால்தான் சில தமிழ் அரசியல்வாதிகளும், ஊடவியலாளர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும்,இன்று மைத்திரி கூறும்,"ஒன்றுபட்ட இலங்கைக்குள்" என்ற கருத்தாக்கத்தை "தூக்கிப்பிடிக்க" கிளம்பியிருக்கிறார்கள்.

.          இன்று மைதிரிபாலாசிறிசெனாவை ஆதரிக்கும் சில தமிழர்கள் தங்கள் வாதங்களை இப்படி முன்வைக்கிறார்கள்.

 இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ...
(1) வலிகாமம் வடக்கில் இராணுவத்தினால் பறிக்கப்பட்ட 1,033 ஏக்கர் காணி மக்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. {இரண்டு லட்சம் ஏக்கர் பறிக்கப்பட்ட தமிழர் நிலங்களில்,10,000 ஏக்கரை முதலில் மீட்டு தருகிறோம் என்று கூறியவர்கள்தான் இந்த 1033 ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொடுத்துள்ளனர்.}

(2) சம்பூரில் இராணுவம் பறித்த 1,055 ஏக்கர் நிலம் "கொள்கையளவில்" மக்களுக்கு மீள்கையளிக்கப்பட்டுள்ளது. இதில் கடற்படை கைப்பற்றிய 237 ஏக்கரும் உள்ளடக்கம்.

(3) வட கிழக்கில் ஆளுநராக இருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளார்கள். திருகோணமலையில் 10 ஆண்டுகள் அரச அதிபராக இருந்த முன்னாள் இராணுவ அதிகாரி ரி.ஆர்.டி சில்வா மாற்றப்பட்டுள்ளார். {மக்களது எழுச்சி தெருவுக்கு வந்தபிறகு,அதுவே உலக அரங்கில் எதிரொலிக்கும்போது,இதையாவது செய்யவேண்டும் அல்லவா}

(4) இராணுவத்துக்கு முன்னைய அரசு கையளித்திருந்த பொலிஸ் அதிகாரம் பிடுங்கப்பட்டுள்ளது. [வடக்கு மாகாண முதல்வர் பகிரங்கமாக பிபிரவரி 10 அன்று, நடந்த போர் ஒரு "இன அழிப்பு போர்" என்று தீர்மானம் போட்ட பிறகு இதையாவது செய்து "அல்வா"கொடுக்கவேண்டும் அல்லவா?}

(5) கடந்த சுதந்திர நாள் மும்மொழியிலும் மூன்று இனத்தவரும் பங்கு கொண்ட சுதந்திர நாளாக கொண்டாடப்பட்டது. {அப்போதுதானே தமிழீழமே தீர்வு என்ற அனைதுநாட்டு சமூக உணர்வுகளுக்கு பதிலாக "ஒன்றுபட்ட இலங்கைக்குள்" என்ற உதாரை சந்தையில் விற்கமுடியும்?}

(6) மலையகத் தமிழர்களுக்கு வீட்டுத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. {தமிழ்நாட்டு தமிழர்களான இந்திய வம்சாவளியை சமாதனப்படுத்த ஏதாவது செய்யவேண்டும் அல்லவா?}

(7) மலையகத் தமிழர்களது பிள்ளைகள் தமிழில் படிக்க மேலதிகமாக தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் கட்டப்படும். {இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு ஒரு இனிப்பு மிட்டாய்}

(8) வட மாகாண சபை முதலமைச்சர் நிதியம் தொடங்குவதற்கு சனாதிபதி சிறிசேனா அனுமதி வழங்கியுள்ளார். { தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்த ஏதாவது "கேரட்" காட்டவேண்டாமா?}

மேலே காட்டியவை மகிந்த இராஜபக்சாவினால் மறுக்கப்பட்ட உரிமைகளாகும். அவர் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்திருந்தால் ஒரு ஏக்கர் காணிதானும் ஏழைத் தமிழ்மக்களுக்கு கிடைத்திராது. [ முழு உரிமை மறுப்பாளருக்கும், பட்டினி கிடப்பவனுக்கு ரொட்டி கொடுத்து வேலை வான்குபவ் அணுக்கும் உள்ள வேறுபாடு}

ஐநாமஉபே இல் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் புலம்பெயர் தமிழர்களது அழுத்தத்தால் கொண்டுவரப்பட்டது என்று ஆய்வாளர் சொன்னது படுபொய். புலம்பெயர் அமைப்புகளில் உலகத் தமிழர் பேரவை நீங்கலாக அந்தத் தீர்மானத்தின் படியை தெருவில் போட்டு கொளுத்தினார்கள். அந்தத் தீர்மானத்தில் ஒன்றம் இல்லை என்று ஒப்பாரி வைத்து அழுதார்கள். அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு முக்கிய காரணியாக இருந்தது ததேகூ மட்டுமே! { சுதந்திரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தைக்கு வக்காலத்து வாங்க இப்படி ஒரு தயாரிப்பு}
   
      இப்போது நமக்கு "தலை சுற்றும்" அளவுக்கு இந்த "நாளுமன்ற கலைப்பு" நாடகம் தனக்கே உரிய "பின்னணி தகவல்களை" கொண்டுள்ளது என்பது புரிகிறதா? அதனால்தான் "பிரிட்டிஷ் தமிழர் மன்றமும்,உலக தமிழர் பேரவையும்" இலங்கையின் "ஒன்றுபட்ட தீவிற்குள் இரண்டு தேசிய இனங்களும் சுமுகமாக வாழ,ஆள வழி உண்டு" என்ற ஒரு "பழைய, கிழிந்துபோன, கந்தலான தத்துவத்தை மீண்டும் சந்தையில் விற்க" வந்திருக்கிறார்கள். அதை எதிர்கொள்ள உண்மையான தீர்வை "ஈழத் தமிழர்களின் சுதந்திர நிலத்தை மீட்டுக்க" என்ன செய்யப் வேடனும் என்பதை அடுத்த கட்டுரையில் மேலும் காண்போம்.
...

தமிழர்களின் வாக்குகளை சிங்களவர் கிள்ளுக்கீரையாக எண்ணுகிறார்கள்.


   இலங்கையில் அதிபர் மைதிரிபாலா சிறிசேனா இன்று "நாடாளுமன்ற கலைப்பை" அறிவிக்கிறார், ஆகஸ்டில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த இருக்கிறார்கள்.அப்படியானால் "சிங்களர்கள்,தமிழர்கள்" என அனைவரின் வாக்குகளும் வேண்டும் என்று என்னவேண்டும் அல்லவா? அப்படிப்பட்ட பார்வை சிங்கள அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக மைதிரிபாலா சிறிசெனாவிற்கு இருப்பதாகத் தெரியவில்லை.ஏன் என்றால்,மைதிரிபாலா சிறிசேனா, முதலில் சிங்களத் தலைவரான " ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான,கட்சியுடன்"கூட்டணி வைத்துக் கொண்டு, "அதிபர் தேர்தலை"சந்தித்தார்.ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கே, மஹிந்த ராஜபக்சேவை எதிர்த்து அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டு "தோல்வி"கண்டவர்.

    மஹிந்த ராஜபக்சே ரணிலை வெல்லும்போது, அவர் "சிறிலங்கா சுதந்திரக் கட்சி"யின் வேட்பாளர்.அதே "சிறிலங்கா சுதந்திரக் கட்சி"யை சேர்ந்தவர்தான், மைதிரிபாலா சிறிசெனாவும், சந்திரிகா குமாரதுங்காவும். .மகிந்தாவை வேட்பாளராக முதலில் நிறுத்தியதே,சந்திரிகா குமாரதுங்காதான்  வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, மகிந்தா தனது சகோதரர்களான கோத்தபாயே,பசில் ஆகியோருடன் சேர்ந்துகொண்டு, ஆட்சியை தங்களது குடும்ப சொத்தாக மாற்றி, "சிறிலங்கா சுதந்திரக் கட்சியை" கைப்பற்றிவிட்டார்.ஓரங்கட்டப்பட்ட சந்திரிகா,அரசியலில் பல ஆண்டுகள் அமைதியாக ஆனார். அவருக்கு இந்திய அரசின் "மென்மையான நட்பு" உண்டு.ஆட்சிக்கு வந்த மகிந்தா "சீன அரசுடன்" நெருக்க உறவை வைத்துக் கொண்டு தங்களது பெருமையை தென்னிலங்கையின் சிங்களவர் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார்.  .

      இலங்கை அரசின் தலைமை "சீன அரசுடன்"நல்லுறவு வைத்துக்கொள்வது என்பது இலங்கையின் வரலாற்றில் "புதிய ஒரு செய்தியல்ல". ஏன் என்றால் சந்திரிகாவின் "தாயாரான திருமதி பண்டாரநாயகா" சீன அரசுடன் நல்லுறவு கொண்டிருந்தார்.மேற்கத்திய நாடுகளுக்குத்தான் "சிங்கள அரசு" நெருக்கமின்றியே இருந்துவந்தது.அதனால் மகிந்தா எடுத்த நிலைப்பாடு தென்னிலங்கை சிங்களவர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதும் புதிய எதிர்பாராத செய்தியல்ல.மஹிந்தா தனது "மேற்கத்திய எதிர்ப்பு" என்ற முழக்கத்தை வைத்துக் கொண்டே தென்னிலங்கையிலும்,உலக அரங்கிலும் தனது "பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரிலான தமிழின எதிர்ப்பை" நியாயப்படுத்த முடிந்தது.அதுவே ஐ.நா.மனித உரிமை கழகத்தில்,அமெரிக்கா  கொண்டுவந்த "இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை" என்பதை "மேற்கு நாடுகளுக்கு எதிரான சீனா,ரஷிய,கியூபா,பாகிஸ்தான்" போன்றவற்றின் ஆதரவை பெற முடிந்தது.

          ஆகவே மகிந்தா எதிர்ப்பில் அரசியல் நடத்தும் "ரணில் விக்கிரமசிங்கேவிற்கு ,  அமெரிக்கா அதரவு" கொடுப்பதும் ஆச்சரியமான செய்தியல்ல.உலக சமூகத்தில் தனிமைப்படுத்தி இலங்கையை கொண்டுவந்தது மகிந்தா குடும்ப ஆட்சியால்தான் என்ற உணர்வே, சிங்களர் மத்தியில், சிறிசேனா மகிந்தா அமைச்சரவையிலிருந்து வெளியே வந்து, "ரணிலுடன் சேர்ந்துகொண்டு அதிபர் தேர்தலில் மகிந்தாவை தோற்கடித்ததை" செயலாக்கியது.ஆனால் அதே "சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சந்திரிகாவும்" சேர்ந்துகொண்டு, ரணில் பேசும் "அதிபர் அதிகாரத்தை குறைத்து, பிரதமர் அதிகாரத்தை அதிகப்படுத்தும்" தந்திரத்தை,மைதிரிபாலவை ஏற்கச் செய்துவிட்டார்கள். அதுவே "மகிந்தாவின் அதிகாரக் குவிததலை" இறக்கி "அமெரிக்காவும், இந்திய அரசும் பேசும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை"நிறுவ உதவும் என்றும், அதனால் மகிந்தா மீண்டும் வர இயலாது என்றும் வாஷிங்கடனும், டில்லியும் "மனப்பால்" குடித்தன.

      ஆனால் மகிந்தாவிற்கு ஆதரவாக "சிங்கள தேசம் என்ற இன உணர்வு" வேலை செய்கிறது. அது எப்போதுமே "தமிழர் தேசத்தை" கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. பேருக்கு வேண்டுமானால் "பசப்பு"காட்டலாம்.அப்படிப்பட்ட "சிங்களம்" "சிறிலங்கா சுதந்திரக்கட்சியில்" பெரிய அளவில் செல்வாக்கு செலுத்துகிறது. இரு தேசங்கள் இருக்கின்றன என்பதையும், "இரு தேசிய இன உணர்வுகள்தான் மக்கள் மத்தியில் இருக்கிறது" என்ற உண்மை நிலைமையையும் காணத்தவறியவர்களால் இந்த "சிக்கலான இடமாற்ற அரசியலை"புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் சிங்கள அறிவுஜீவிகளின் ஆலோசனைப்படி, "மைத்திரிபால சிறிசேனா இன்று மகிந்தாவுடன்"சமரசத்திற்கு வந்து,"சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்" தான் "தனிமைப்பட்டுவிடக் கூடாது"என்பதற்காக ஒரு புதிய ஏற்பாட்டுக்கு வந்துவிட்டார்.அதுதான் "ரணிலை கைவிட்டுவிட்டு, மகிந்தாவுடன் இணைந்துகொள்வது".

     இப்போது நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டார்.தேர்தலை அறிவித்து விட்டார்.மகிந்தாவுடன் சமரசம் செய்துகொண்டு, "மைதிரிபாலா அதிபராகவும், வருகிற தேர்தல மூலம் மகிந்தா பிரதமாராகவும்"ஆட்சியில் அமரப்போகிரார்கள்.அதனால் சிங்களத்தை பொறுத்தவரை, "தமிழர்களின் வாக்குகள், அதிபர் தேர்தலுக்கு தேவை", ஆனால் "நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையில்லை". இப்போது புரிகிறதா? தமிழன் அங்குள்ள "தேர்தல் முறையில்கூட " சிங்களவனுடன் சேர்ந்துவாழ முடியாது.

Thursday, June 25, 2015

குயிலு எச்சம் இத்தாலி உணவின் சந்தையை வளர்க்குமா?

குயிலு எச்சம் இத்தாலி உணவின் சந்தையை வளர்க்குமா?
-------------------------------------------------------------------------------------
   அந்தப் படைப்பு  எளிதானதுதான். ஆனால் நெம்புகோல் தத்துவம் நல்லா வேலை செஞ்சிருக்கு. கொஞ்சம் காசு, விவரமான புத்தி. எளிமை வடிவம்.சாதாரண பெயரில் "அசாதாரண படைப்பு". எல்லா முற்போக்கும் தமிழ்கூறும் நல்லுலகில், பேச்சையும், எழுத்தையும் பார்த்து வரும் முடிவுகளே. செயலை யாரும் கண்டுகொள்வதில்லை. செயல்பாடுகளை யாரும் கவனிப்பதில்லை. இந்த பொதுப் புத்தி இருக்குமானால்,அதை பயன்படுதுபவனே சிறந்த "வணிகன்". யார் சிறந்த வணிகன் என்பதே இங்கே போட்டி. திறம்பட  விளம்பரமாவதும், திறமையாக காசு அள்ளுவதுமே வெற்றியின் அறிகுறிகள்.

   அந்த தத்துவங்களை அறிந்தவர் மட்டுமே கெட்டிக்காரர்கள். முற்போக்கு என்பது அவசர உலகத்தில் அள்ளித் தெளித்துவிட்டு, அள்ளுவதையே அடிப்படையாகக் கொண்டது. அப்படி அந்த படைப்பும் அள்ளியது. அதனாலேயே அது வெற்றி படைப்பு. குயிலின் எச்சம் அப்படி வந்த படைப்பு. கடைசி வசனம் நம்மூர் எளிய மக்களின் வசதிக் கொப்ப  பேசினால் சரி. அதற்கும் உள்ளே, அதற்கும் மேலே என்று எண்ணிப்பார்ப்போருக்கு அதிகம் விளங்கும்.இத்தாலி சுவையின் "சந்தை" முக்கியமப்பா. அந்த "சந்தையை" இந்த எளிய மக்களிடம் எப்படி எடுத்து செல்வது? மேட்டுக் குடிக்கான உணவு என்று முதலில் விளம்பரம். எடுபடமாட்டேன் என்கிறதே ? மேட்டுக் குடி இந்த நாட்டுலே அதிகம் இல்லையே? மேட்டுக் குடி மட்டுமே அந்த உணவை சுவைக்க முடியும் என்றால் அங்காடிகள் "காலியாக"இருக்குதே? விளம்பரம் மட்டுமே போதும் என்றார்களே? நிறைய விளம்பரமும், அதற்கு பல லட்சம், பல கோடி என்று வீணாக்கியாச்சே?

                         எடுபடலையே எங்கள் "சரக்கு"? ஆகா. இந்த எளிய மக்கள்தான் இனி நமது குறி. எளிய மக்கள்தான் பெரும்பான்மை வாக்காளர்கள். எளிய மக்கள்தான் எந்தக் கதைக்கும் " நாயகர்கள்".  எளிய மக்கள் தங்களுக்கு தெரிந்தும் விலை போவார்கள். தெரியாமலும் விலை போவார்கள். இங்கே நமக்கு "சந்தையில் எங்கள் சரக்கு" போகணும். வேகமா போகணும். விற்பன்னர்களுக்கும் புதிய "அறிவை" கத்துக் கொடுக்கணும்.எளிய மக்களை வெறுக்காதே.எளிய மக்களிடம் ,ஓதினால் "சட்டம்"கூட குறுக்கே வரும். லாபம் பெற நினைத்து "நட்டம்"கூடிவிடும்.மனித உரிமை மீறல் என்று "கூச்சல்"போடுவார்கள்.ஊடகங்களும்,அரசியல்வாதிகளும்,"நியாயம்"பேசி காசு கறப்பார்கள்.

                         அதற்கு உரிய வழி ஒன்றே ஒன்றுதான்.எளிய மக்களின் "வாய்ப்புக்கு" ஒப்ப, "வசதிக்கு" ஒப்ப, அளவைக் குறைத்து "அளந்து  விடு" அய்யா.   இது எப்படி? நல்லா விக்குமே? இந்த புத்திய "எடுத்துக்கோங்க" என்பதுதான் அந்த படைப்பின் "அடிப்படை" உணர்தல் என்பது அந்த மக்களுக்கு விளங்காமல் போனால் அதுதானே "பெரிய வெற்றி"? 

Tuesday, June 23, 2015

மோடியின் நகலுக்கு சங்க பரிவாரம் எதிர்ப்பா?


மோடி மிகவும் கவனமாக கொண்டுவந்த மசோதா "நில கையெடுப்பு"மசோதா.அதை "நிலபறிப்பு"மசோதா என்று பலரும் நக்கல் செய்தாலும், அதை ச்ட்டமாக்குவதில் விடாப்பிடியாக இருந்து வருகிறார்.மக்களவையில் இருக்கும் மிரூகததனமான எண்ணிக்கையை பா.ஜ.க. பெற்றிருந்தாலும், இந்தியாவில் இயங்கும் "நாடாளுமன்ற பாதை" தந்துள்ள விதிகளின்படி,மக்களவையில் நிறைவேறிய ஒரு நகல், மாநிலங்களவையிலும் நிறைவேறினால்தான், குடியரசு தலைவரின் ஒப்பந்தம் பெறுவதற்கான "சட்டமாக" மாறும், இந்த விதிதானே இப்போது உதைக்கிறது என்று பா.ஜ.க.வினர் நொந்து கொள்வது நமக்கு புரிகிறது.ஏன் என்றால் நாளுமன்றத்தில் உள்ள மக்களவையில் பா.ஜ.க. பெரும்பான்மையாக இருந்தாலும், மாநிலங்களவையில் பா.ஜ.க.வும்,அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்தாலும் பெரும்பான்மை இல்லை. மாறாக காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும்சேர்ந்துதான் பெரும்பான்மை இருக்கிறது.அதனால்தான் ஒருமுறைக்கு, இரண்டுமுறை,மூன்றாம் முறை
 என்று "அவசரச்சட்டம்"மூலம் இந்த "நில பறிப்பு"மசோதாவுக்கு "சட்ட" அங்கீகாரம் கொடுக்க பா.ஜ.க.சிந்தித்து செயல்பட்டது.ஆனாலும் ஒரு "நாடாளுமன்ற கூட்டுகூட்டதை"கூட்டிதான் அந்த "அவசரச்சட்டதையும்" சட்டமாக மாற்ற முடியும். இந்த "இந்திய ஜனநாயகத்தின் விதிமுறைகள்" மோடி அரசாங்கம் விரும்பும் கார்பொரட்"நலன்களை  முழுமையாக செயல்படுத்த இடையூறாகத்தான் இருக்கிறது.அதேநேரம் இந்த குறிப்பிட்ட "நில பறிப்பு"மசோதாவிற்கு "சங்க பரிவாரத்தை"சேர்ந்த முக்கிய அமைப்புகள் எதிராக இருக்கிறார்கள்.

                அதாவது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணைப்பில் உள்ள "பாரதீய கிசான் சங்கம்",என்ற லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டும் சக்திகொண்ட வட இந்தியாவில் பெரும் தளம் கொண்ட விவசாயிகள் அமைப்பு, "பாரதீய மஸ்தூர் சங்கம்" என்ற தொழிலாளர்களை திரட்டும், "தொழிற்சங்க"அமைப்பு, "அகில இந்திய வநாச்சல் அமைப்பு" என்ற "ஆதிவாசிகள் அமைப்பு" ஆகியவை இந்த மேற்கண்ட "நில எடுப்பு"மசோதாவிற்கு கடும் எதிர்ப்பை தந்து வருகிறார்கள்.அதை மீறி இந்த மசோதாவை "சட்டமாக்குவது"என்பதற்கு சாதியப்படுகளே குறைவு.அப்படிப்பட்ட ஒரு சூழலில் சிக்கியுள்ள மோடி அரசாங்கம், தங்களுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியை வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற வைத்துவிட்டு, தாங்கள் இந்தியாவின் மக்களவையில் அதிகப்பெரும்பான்மை வந்த பிறகும், சிறிய மாநிலக் கட்சிகளையும் கூட தங்கள் பக்கம் இழுப்பதில் வெற்றி அடைந்து வரும்போது, இடதுசாரிகளையும் ஓரங்கட்டுவதில் சாதித்துள்ள நேரத்தில், தங்களது வரலாற்று அடித்தளமான "சங்க பரிவாரம்"மூலமே ஒரு பெரும் தடங்கல் வருகிறது என்றால் அதை எப்படி எதிர்கொள்வார்கள்?

     கார்பொரேட் காரர்களும் இத்தகைய ஒரு நெருக்கடியை சமாளிக்க மோடி அரசாங்கத்திற்கு எத்தகைய "ஆலோசனையை"கூறுவார்கள்? மோடி அரசாங்கத்தை தங்களது சொந்த உறவுகாரர்களாக அமெரிக்கா நினைப்பது உண்மையானால் அவர்களும் இந்த நெருக்கடியை சமாளிக்க எத்தகைய ஆலோசனையை வழங்குவார்கள்? எல்லாமே உண்மையான "தடையாக"இருக்கும் "இந்திய நாடாளுமன்ற விதிகளை" அதாவது நேரடி தேர்தலில் வென்றாலும், மறைமுக தேர்தல் மூலம் நிரப்பப்படும் மாநிலங்களைவையின் எண்ணிக்கையை பெறமுடியாததால் "திணறும்"ஒரு அரசாங்கத்தை "விதிகளை மீறு,வெளியே வா"என்றுதானே கூறுவார்கள்? அதாவது  "உங்கள் நாட்டு நாடாளுமன்ற விதிகளை மீறு.வெளியே வா"என்றுதானே கூறமுடியும்? அதுதானே "அவசர நிலையை" அறிவித்துவிடு என்ற ஆலோசனை?.அதுதானே "நெருக்கடி நிலையை"அறிவி என்ற கருத்து.

      இதைத்தானே இந்திரா காந்தி இதுபோன்ற ஒரு சூழலை எதிர்கொண்டபோது, ஆளும்வர்க்க அறிவுஜீவிகள் எடுத்து கூறினார்கள்? அதில் கடுமையாக பதிக்கப்பட்டது மட்டுமின்றி, அதை எதிர்த்து போராடியதில் முன்னால் நின்ற "லால் கிஷன் அத்வானி" இன்று அதேபோன்ற "அபாயத்தை" உணர்வதாக கூறியதன் உள்அர்த்தம் புரிகிறதா?  இதுதான் இன்றைய இந்திய சூழல்.

Thursday, April 16, 2015

ஹைதராபாத் நீதிமன்றத்தில் இரண்டாவது வெற்றி உத்தரவு.

ஹைதராபாத் நீதிமன்றத்தில் இரண்டாவது வெற்றி உத்தரவு.
-------------------------------------------------------------------------------------------------
      திருப்பதி படுகொலைகளை நடத்திய ஆந்திர மாநில காவல்துறை,குறிப்பாக "செம்மரக்கடதடத்தல் தடுப்பு அதிரடிப்படை" திட்டமிட்டு, முன்கூட்டியே கைது செய்த தமிழ் தொழிலாளர்களை,பிடித்து சித்திரவதை செய்து பிறகு, சேஷாசலம் ரிசர்வ் காடுகளுக்கு கொண்டுவந்து, படுகொலைகளை செய்துள்ளனர் என்ற "உண்மையறியும் குழு"வின் கண்டுபிடிப்பை நிருபிக்கும் முயற்சியில், ஏற்கனவே 20 உடல்களையும் "உடற்கூறு ஆய்வு"செய்த ஆந்திர அரசின் செயல்பாட்டில், அதன் கீழ் பணியாற்றும் மருத்துவர்களின் செயல்பாட்டில் "முழு நம்பிக்கை" இல்லாத "சொந்தங்களை பறிகொடுத்தோர்" போட்ட "மறு உடற்கூறு ஆய்வு" வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை அன்று "ஹைதேராபாத் உயர்நீதிமன்றம்" சென்று நீதி கேளுங்கள் என்று கூறியதால், பா.ம.க.வழக்கறிஞர் பாலு,தான் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவான "ஏப்ரல் 17 ஆம் தேதிவரை" எரிக்கப்படாத உடல்களான திருவண்ணாமலை போளூர் வட்டம் 6 உடல்களுக்கும் "மறு உடற்கூறு ஆய்வு" கேட்டு, செவ்வாய்கிழமை ஆந்திராவின் ஒன்றுபட்ட உயர்நீதிமன்றமான ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்.

 அது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்ட நீதியரசர், ஒரு உத்தரவை வழங்கினார்."ஆந்திராவோ,தமிழ்நாடோ, இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்டிருப்பதால்" அவை இரண்டும் இல்லாத "மூன்றாவது மாநிலம் ஒன்றில் வேறு சிறப்பு தன்மை உள்ள மருதுவமனையின் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை வேண்டும்" என்ற கோரிக்கையை வழக்கறிஞர் பாலு வாதாட அதை ஏற்று, "ஆந்திராவும் வேண்டாம்.தமிழ்நாடும் வேண்டாம். மூன்றாவது மாநிலமான தெலுங்கானாவில்  சிறப்பு தன்மை உள்ள நிஜாம் மருதுவமனியின் சிறப்பு மருத்துவர்களை கொண்டு மறு உடற்கூறு ஆய்வு" செய்ய உத்தரவிட்டார். அதேநேரம் 6 உடல்களுக்கு என்று ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்ற வாரம் வழக்கறிஞர் பாலு கேட்டிருந்த வேண்டுகோளின் அடிப்படையில், இந்த வழக்கு தொடர்வதால், அந்த ஆறு பேருக்கும் மறு உடற்கூறு ஆய்வு வேண்டும்" என்று பாலு வாதிட்டார். ஆனால் என்ன காரணத்தாலோ, நீதியரசர் "நேரில் வந்த மனு செய்த சசிகுமார் என்பவரது உடலுக்காக போராடிய அவரது மனைவி முனியம்மாளின் மனு மீது மட்டும் தனது உத்தரவு" என்று தீர்ப்பு கொடுத்தார்.

                           எப்படியும் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில், நேற்று சந்திரகிரி காவல் நிலையத்தின் "முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை அதிகாரிகள் மீது 302, 364 ஆகிய கொலை,கடத்தல் பிரிவுகளில் இந்திய தண்டனைஉ சட்டம் 34 இன் கீழ் வழக்கு பதிவு செய்த" முதல் வெற்றியை கண்டோம்.இன்று "இறந்தவர்களின் உடலில் மறு உடற்கூறு ஆய்வு" என்பதும் முதலில் ஒரு உடலுக்கு கிடைத்த வெற்றியை காண்கிறோம்.நமக்கு கிடைத்த தகவ்லகளின்படி, "காவல்துறையினர், மருத்துவர்களின் உதவியோடு, உடற்கூறு ஆய்வில் சில தில்லுமுல்லுகளை செய்வது பழக்கமாம்".அதாவது "எந்த கோணத்தில் காணொளிக் கருவியை[ கேமராவை] வைப்பது, எந்த அளவுக்கு விளக்கின் வெளிச்சத்தை உடல் மீது எந்த இடத்தில செலுத்துவது" என்பதில் கூட சில தில்லு முல்லுகளை செய்யமுடியுமாம். அப்படி செய்வது சில "கருப்பு ஆடுகளுக்கு கை வந்த கலையாம்". இதை கேள்விப்பட்டதனால்தான் நமக்கு, "மூன்றாவது மாநிலத்தில், சிறப்பு மருத்துவமனையில், சிறப்பு மறுத்தவர்களை வைத்து சோதனை" என்ற கருத்தே உருவானது.