Wednesday, July 22, 2015

ஜூலை -23, 1999 தந்த படிப்பினைகள்.

ஜூலை -23, 1999 தந்த படிப்பினைகள்.
-------------------------------------------------------------
        அன்று  நெல்லை சந்திப்பிலிருந்து கிளம்பிய "மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை "பேரணி அமைதியாகத்தான் சென்று கொண்டிருந்தது. முந்தியநாள் வரை அனுமதி மறுத்த காவல்துறை கடைசியாக அனுமதி தந்தது. சந்திப்பு புகைவண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டு, அம்பேத்கர் சிலை, அன்றைய பேருந்து நிலையத்தை சுற்றி, எட்டப்பனாயகர் சாலை வழியாக, சுலோச்சனமுதலியார் பாலம் வழியாக கொககிரகுளம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அடைவது என்பதுதான் பேரணியின் பாதை. அதிக தூரம் இல்லை. தொடர்ந்து நடந்துவந்த மாஞ்சோலை தோட்டத் தொழிலாளரது போராட்டங்கள், "தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு" தலைவரும், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. யுமான டாக்டர் க.கிருஷ்ணசாமியால் தலைமை தாங்கப்பட்டது. அப்போது சட்டமன்றத்தில் "தேவேந்திர சங்கம்" என்ற பெயரில்தான் அவர் சட்டமன்ற உறுப்பினராக பதிவாகி இருந்தார்..

           1995 ஆம் ஆண்டு கொடியங்குளம் கிராமத்தில் காவல்துறை புகுந்து நடத்திய அட்டூழியத்தால், கிளர்ந்து எழுந்த தேவேந்திர மக்கள்,மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில், மாநிலமெங்கும் ஒரு பெரும் எழுச்சியாக மாறி, அதுவே ஒரு பெரும் இயக்கமாக ஆனது. 1996 இல் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் நின்ற கிருஷ்ணசாமி வெற்றி பெற்று, சட்டமன்றம் சென்றார்.நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில், அருணாச்சலத்தை எதிர்த்து நிற்கும்போது, அம்பாசமுத்திரம் தொகுதியில் உள்ள மாஞ்சோலைக்கு வாக்கு கேட்டு சென்றார். அப்போது அங்கிருந்த தேவேந்திர மக்கள் தங்கள் சமுதாயத் தலைவரிடம் வைக்கும் கோரிக்கையாக, தாங்கள் எப்படி "கொத்தடிமைகளாக" தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்கிறோம் என்பதை
விளக்கினார்கள்.அவர்களிடம் அப்போது கொடுத்த வாக்குறுதிப்படி அவர்களது "கூலி உயர்வு, வேலை நேரம்,பிரசவ விடுப்பு, சுதந்திரமான நடமாட்டம்" போன்ற கோரிக்கைகளை அடிப்படையாககே கொண்டு, முதலில் ஒரு "நடைப்பயணம்" மலையிலிருந்து, கீழே வந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை நடததப்பட்டது. இவ்வாறு அறவழியில், தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களை, "பாம்பே-பர்மா ட்ரேடிங் கார்பரேசன்" என்ற ஆளை நிர்வாகம் எந்த கோரிக்கைக்கும் இறங்குவதாக இல்லை.

               அன்று நடந்த தி.மு.க. ஆட்சியில், உள்ளபடியே கிருஷ்ணசாமிக்கு நல்ல மரியாதை இருந்தது. காரணம் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எரித்ததில், தி.மு.க. ஆட்சியை கொண்டு வந்ததில், இந்த இயக்கத்திற்கு நல்லதொரு பங்கு இருந்தபோதும், முதல்வர் கருணாநிதி "தோட்ட நிர்வாகத்துடன்" மிக நெருக்கமாக இருந்ததால், மருத்துவருக்கு எதிரான "தவறான கருத்துகளை" அன்றைய எதிர்க்கட்சி தலைவரான, மூப்பனார் கட்சியை சேர்ந்த சோ.பாலகிருஷ்ணனிடம் முதல்வர் கலைஞர் கூறியுள்ளார். இதை சோ.பாலகிருஷ்ணனே பிறகு கூறியதால் தெரிய வந்தது. அதனால் மாஞ்சோலை தோட்டத் தொழிலலர்களது க்நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வில்லை. கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் இருந்த மாஞ்சோலை தொழிலாளர்களை விடுதலை செய்யவும் சேர்த்தே அந்த பேரணி நடத்தப்பட்டது.

       சென்னையில், மாரிஸ் விடுதியில், கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ஜி.கே.மூப்பனார், நல்லகண்ணு,சி.பி.ஐ., சி.பி.எம்.தலைவர்கள், என பல கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவுப்படியே அன்றைய நெல்லை பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. பேரணிக்கு முந்திய நாளே, முதல்வரது உத்தரவுப் படி,"பேரணியில் அணைத்து தலைவர்களையும்" கைது செய்யக் கூறி, வந்த வழிகாட்டலை, மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திட்டமிட்டது என்பது பிறகு தெரிய வந்தது. அதன்படியே பேரணியில் வருவோரை, கற்கள் கொண்டும், துப்பாக்கி கொண்டும் "தாக்குவது என்ற திட்டம் போடப்பட்டது தெரியவருகிறது. பேரணி புறப்படும்போது அப்படி எதுவுமே நமக்கு தெரியவில்லை. பேரணியில் முன் வந்த "ஜீப்"இல் 7 எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி,சோ.பாலகிருஷ்ணன், அப்பாவு, சேர்மாதேவி எம்.எல்.ஏ., ஜே.எம்.ஹாரூன், ஈஸ்வரன்,உட்பட சி.பி.எம்.கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் பழனி, ஆகியோருடன், நானும்,நடிகர் மன்சூர் அலி கான் போன்றோரும் இணைந்து சென்றோம். ஜீப்பில் இருந்து இரங்கி சென்ற என்னை,"முழக்கம்" போடா  தொண்டர்கள் வாகனம் மீது ஏற்றிவிட, மன்சுரையும் கீழே இறக்கி கூட்டத்தை வாகனத்திலிருந்து குறைக்க, ஜே.எம்.ஹாரூன் கீழே இறங்கி கூட்டத்தை ஒழுங்கு படுத்த சென்று விட்டார்.  முழக்கங்களை "ராகத்துடன்" நான் போட, தோழர்கள் அனைவரும் முறையாக ஆடி,பாடிக் கொண்டு, முழக்கங்களை எழுப்பினார்கள்.இப்படித்தான் அமைதியாக ஆனால் உற்சாகமாக பேரணி சென்று கொண்டு இருந்தது.

     "  மாஞ்சோலை தொழிலாளி, காரு,பங்களா கேட்டானா? உங்கப்பன் சொத்தை கேட்டானா? கூலி உயர்வு கேட்டதற்காக கைது செய்வது நியாயமா?--"என்பதுபோன்ற முழக்கங்களை எழுப்பி வந்தோம். அப்பாவு உற்சாகத்தில், "தனியார் ஊடகத்தில் பங்கு கேட்டானா?" என்ற பொருளில் முழக்கம் போட கூறினார். அதையும் போட்டோம்.இவாறு மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்த பேரணி, மேம்பாலத்தை தாண்டி, சென்றது. கொக்கிரகுளம் முக்கில்,எம்.ஜி.ஆர். சிலை அருகே சிறிது நின்று விட்டு, ஆற்றுக்கு அருகே செல்லும் சாலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி சென்றது. அப்போது பேரணிக்கு இருபுறமும்,"காவலர் படை" வரிசையாக நிறுத்தப்பட்டது. அதன் சூட்சுமத்தை நாங்கள் அப்போது எண்ணிப் பார்க்க வில்லை.அந்த சிறிய சாலைக்குள்,ஒருபுறம் "ஆறு " ஓடுகிறது. இன்னொரு புறம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்னே உள்ள சுவர். இடையில் வருகின்ற பேரணிக்கு, இருபுறமும் குறிப்பாக சுவர் பக்கத்தில், {தமிழ்நாடு ஓட்டல் அங்கே இருக்கிறது} எதற்காக காவலர்கள் நிறுத்தப்பட வேண்டும்? பேரணி மக்களை "நதியை நோக்கி" தள்ளிவிட அப்போதே அவர்களிடம் ஒரு "சதித் திட்டம்" இருண்டஹ்து என்பது பிறகு புரிய முடிந்தது.

    [ தொடர்ந்து நடந்ததை நாளை எழுதுகிறேன்.மன்னிக்கவும். நேரமில்லை.]

          

No comments:

Post a Comment