Monday, July 5, 2010

விடுதலை அரசியலை அழிக்க வருகிறார்கள்

அவர்கள் வருகிறார்கள். விடுதலை அரசியலை அழிக்க அவர்கள் வருகிறார்கள். ஆந்திர மாநிலத்தில் அடிலாபாத் மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்த மாவோயிஸ்ட் தலைவரின் பெயர் விடுதலை. அதாவது அவரது கட்சிப் பெயர் ஆசாத். ஆசாத் என்றால் விடுதலை என்று உருது மொழியில் பொருள் கூறுவார்கள். அதையே இந்தி மொழியிலும் புழங்குவார்கள். கடந்த வெள்ளிக்கிழமை ஆசாத் கொல்லப்பட்டதாக அரசு கூறியது. அவர்தான் மாவோயிஸ்ட் கட்சியின் மூன்றாவது தலைவர் என்பதாகவும் அரசு கூறியது. அவர் இயற்பெயர் சருக்குரி ராஜ்குமார் என்றும் அரசு கூறியுள்ளது. 1980ம் ஆண்டு கடைசியாக அவர் வெளியே தெரிந்தார் என்றும் அரசு கூறியது. ரூ.12 லட்சம் அவர் தலைக்கு விலை வைத்தோம் என்றும், 16 வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் என்றும் அரசு அறிவித்தது.
ஆசாத் கொல்லப்பட்டது துப்பாக்கிச் சண்டையில் அல்ல என்று மாவோயிஸ்ட்கள் கூறினார்கள். ஆந்திராவின் புரட்சிக் கவிஞரான வரவராவ், இதுபற்றி ஒரு விளக்கமே கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாகபுரி நகரில் சிதாபார்டி என்ற சந்தைப் பகுதியில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, ஆதிவாசிகள் தலைவர் சகாதேவுடன் ஆசாத் கைது செய்யப்பட்டார் என்கிறார் வரவராவ். சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் காடுகளில் இருக்கும் தண்டகாரண்யா பகுதியில் தனது கட்சி ஊழியர்களுக்கு வகுப்பு எடுப்பதற்காக ஆசாத் செல்லயிருந்தார். அவரை அழைத்து வருவதற்காக ஆதிவாசிகள் தலைவர் சகாதேவ், சிதாபார்டி சந்தைப் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அவரை கைது செய்து, ஆந்திர மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டத்திற்கு கூட்டி வந்து மறுநாளே சுட்டுக்கொன்றிருக்கிறார்கள் என்பது தான் கவிஞர் வரவராவின் விளக்கம். கொல்லப்பட்ட ஆசாத்தின் படம் ஊடகங்களில் வெளியானது. அதில் அவர் முழுக்கைச் சட்டை அணிந்திருந்தார். தனது சட்டையை தான் அணிந்திருந்த முழுக் கால்ச் சட்டைக்குள் செருகியிருந்தார். ஒரு நடுத்தரவர்க்க அறிவுஜீவியின் தோற்றத்தில் அவரது உடல் காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் மாவோயிஸ்ட் தலைவர்கள் என்று சொன்னாலே, அதிகமான பீதி உண்டு. அதாவது ஒரு தலைவர் பிடிபட்டார் என்றால், அவர் அருகே செல்வதற்குக் கூட தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் அஞ்சுவார்கள். அதனால் அவர்களை சங்கிலியால் பிணைத்து அமரவைத்து, தள்ளி நின்றுக்கொண்டே விசாரிப்பார்கள். அதன் காரணமாக பிடிபட்ட நிலையில், அதே உடுப்புகளுடன் அந்த தலைவர் அடைக்கப்பட்டிருப்பார். இத்தகைய நிலைதான் ஆசாத் என்ற தலைவருக்கும் நடந்திருக்க வேண்டும். அதனால் தான் அவர் பிடிபட்ட நிலையிலேயே, அதே உடுப்புகளுடன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். காவல்துறை கூறுவது போல, அடிலாபாத் காடுகளில் துப்பாக்கி ஏந்தி போராடும் ஆசாத்தை, எதிர்கொண்டு துப்பாக்கிச் சண்டையில் மரணமடைந்தார் என்றால், இத்தகைய உடுப்புகளுடன் இருப்பதற்கான சாத்தியப்பாடு இல்லை. ஆகவே அவர் கைது செய்யப்படும் போது,போர்க்களத்தில் துப்பாக்கி ஏந்தி நிற்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆகவே வரவராவின் கூற்று உண்மையெனத் தெரிகிறது.
அரசு தரப்பிலும் ஆசாத் பற்றி செய்தித் தொடர்பாளர் என்றும், அரசியல் தலைமைக்குழுவின் மூன்றாவது மட்டத்திலுள்ள தலைவர் என்றும் விளக்குகிறார்கள். அதாவது அவர் மாவோயிஸ்ட் கட்சியின் பரந்துபட்ட தொடர்புகளையும், வெளிவட்டார பணிகளையும், ஊடக தொடர்பு போன்ற வேலைகளையும் கவனித்து வந்த அறிவுஜீவி என்பது புலனாகிறது. அதாவது அரசியல்ரீதியாக மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஒரு முக்கியப் பிரதிநிதியாக, ஆசாத் விவரிக்கப்படுகிறார். அப்படிப்பட்ட ஒரு அறிவிஜீவி தளத்தில் பணியாற்றக்கூடிய தலைவரை கைது செய்தால், அவரை சட்டரீதியான விசாரணைக்கு உட்படுத்தல் என்ற வேலையை அரசுத்தரப்பு ஏன் செய்யவில்லை என்ற வினா எழுகிறது. காடுகளில் அல்லது மலைகளில் துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட்கள் கொல்லப்படுவது என்பது வேறு. நகரத்தில் முக்கியத்தலைவர்கள் பிடிபடும் போது, அவர்களை அரசுத்தரப்பு அராஜகமாக, சட்டவிரோதமாக படுகொலை செய்வது என்பது வேறு. 2வது வகையில் நடத்தப்பட்ட இந்த படுகொலைக்கான காரணம் என்ன என்பது ஆராயப்பட வேண்டும்.
ஆசாத்துடன் கொலை செய்யப்பட்ட இன்னொரு நபர் ஹேமசந்திர பாண்டே என்ற பத்திரிகையாளர் என்பது தெரியவந்துள்ளது. அவர் உத்ராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரும் மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்த அறிவுஜீவி என்பதாக அறிவிக்கப்படுகிறது. இந்த 2 அரசியல் முதிர்ச்சிப் பெற்ற அறிவுஜீவி தலைவர்களை, அரசு தெரிந்தே கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. இந்த ஆண்டு மே மாதம் சமூக ஆர்வலரான சுவாமி அக்னிவேஷ், மாவோயிஸ்ட்களுக்கும், அரசுக்கும் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முயற்சிகளில் ஈடுபட்டார். அதற்காக ஆசாத் மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மத்தியில் பல கடித பரிமாற்றங்களை அக்னிவேஷ் செய்து வந்தார். பரந்துபட்ட அளவில் ஒரு போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்வதற்காக, மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, ஆசாத் மூலம் ஏற்பாடு செய்து வரும் வேளையில் இந்த படுகொலை நடத்தப்பட்டுள்ளது. இதுவே அரசு தரப்பின் சதியாக, சூழ்ச்சியாக கருதப்பட முடியும். 2010ம் ஆண்டு மே 11ம் நாள் தேதியிட்ட ஒரு கடிதத்தில் அமைச்சர் சிதம்பரம், ஜுன்1 என்பது போல, ஒரு குறிப்பிட்ட நாள் முதல் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடமாட்டோம் என்று மாவோயிஸ்ட்கள் கூற வேண்டும் என எழுதியிருந்தார். அதையொட்டி மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். 72 மணி நேரம் குறிப்பிட்ட காலத்திலிருந்து மாவோயிஸ்ட்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்களா என்று அரசு கண்காணிக்கும் என்றும், அந்த நேரத்தில் அரசு தரப்பும் வன்முறையில் ஈடுபடாது என்றும் அந்த கடிதத்தில் மத்திய அமைச்சர் எழுதியிருந்தார்.
அதற்கு ஆசாத் கையெழுத்திட்ட மாவோயிஸ்ட்களின் பதில் கடிதம் மே 31ம் நாள் அனுப்பப்பட்டது. போர்நிறுத்தமும், ஒரு பக்கம் மட்டும் வன்முறையை கைவிட வேண்டும் என்று இல்லாமல், இருபுறமும் ஒரே நேரத்தில் பகையை நிறுத்திக் கொள்ளலும் நடக்குமானால், பேச்சுவார்த்தைக்கு விருப்பம் இருப்பதாக அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்ற அணுகுமுறையில் மாவோயிஸ்ட் தலைவர்களை விடுதலை செய்யவும், போரை விரிவுபடுத்தாமல் இருக்கவும், போர் பகுதியிலிருந்து துணை ராணுவப்படையினரை திரும்பப்பெறவும் செய்யுமாறு அந்த கடிதத்தில் ஆசாத் கோரியிருந்தார். ஜுன் 18ம் நாள் இதைத் தெரிவிக்க அக்னிவேஷ் ஒரு ஊடகவியலாளர் கூட்டத்தை அழைத்திருந்தார். கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. அதுகூட, மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் நடந்ததாக தெரிகிறது. சமாதான பேச்சுவார்த்தைக்கு முழு முயற்சியில் ஈடுபட்ட ஆசாத்தை, இந்த நேரத்தில் பிடித்து கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன?
மத்திய அரசு உண்மையில் போரைத் தான் விரும்புகிறது; சமாதானத்தை அல்ல என்ற அருந்ததி ராய் போன்றவர்களின் கூற்று இப்போது உண்மையாகிறது. வழமையாக ஆதிக்கவாதிகள் ஆயுதம் தாங்கிய புரட்சியாளர்களை அழிப்பதைவிட, சமாதானம் பேசக்கூடிய புரட்சியாளர்களை அழிப்பதில் அதிக கவனமாக இருக்கிறார்கள். விடுதலை அரசியலை மேற்கூறிய அரசியல் தலைவர்கள் பேசி வருவதால், குறிப்பாக சமாதான முயற்சிகளுக்கும், அவர்கள் வித்திடுவதால், தங்கள் செல்வாக்கில் ஈர்க்கப்படும் பொதுமக்கள் இத்தகைய புரட்சிகர அரசியல் தலைவர்களின் அணுகுமுறையால், முகாம் மாறி சென்று விடுவார்கள் என்று ஆதிக்கவாதிகள் எண்ணுகிறார்கள்.
அத்தகைய எண்ணங்கள் தான் சமாதான அரசியல் தளத்தில் பணியாற்றிய, புரட்சியாளரான விடுதலைப்புலிகளின் அரசியல் அணித்தலைவர் சுப.தமிழ்செல்வனுக்கும், அடுத்த அரசியல் அணித் தலைவராக பொறுப்பெடுத்த நடேசனுக்கும், விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவனுக்கும் கிடைத்த தோட்டாக்கள் என்பதை வரலாற்றிலிருந்து நாம் நினைவுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நடுநிலை கருத்துள்ள பொதுமக்களும், அரசு சார்பு கருத்துள்ள மக்கள் தொகையினரும், சமாதான நடவடிக்கைகளில் இறங்கும் புரட்சிகர தலைவர்களின் சொற்களை செவிமடுத்து விடுவார்கள் என்றும், செல்வாக்கு செலுத்தப்பட்டு விடுவார்கள் என்றும், ஆதிக்கவாதிகளும், பிற்போக்குவாதிகளும் கருதுவது வரலாற்றிற்கு புதிய செய்தியல்ல. இதுதான் ஆசாத் படுகொலையிலும் நடந்திருக்கிறதா என்பதை நமக்கு மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

Sunday, July 4, 2010

“ஐ.நா. பெண்கள்” உருவானது உலகம் புரிந்துகொள்ளுமா?

ஐ.நா. சபையின் பொது செயலாளர் பான்கிமூன், ஐ.நா.வின் 64வது பொதுச்சபை எடுத்த முடிவை பாராட்டியிருக்கிறார். ஐ.நா. சபையின் கீழ் செயல்பட்டு வந்த 4 பாலினத்திற்கான அமைப்புகளை இணைத்து, “ஐ.நா. பெண்கள்” என்று உருவாக்கியிருக்கிறார்கள். இது பாலின சமத்துவத்தின் ஐ.நா. அடையாளமாக இனி இருக்கும். இது பெண்களுக்கான அதிகார மேம்பாடுத்தலுக்காக செயல்படும். உலக பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஆதரவான ஒரு பெரிய முடிவை எடுத்ததற்காக, ஐ.நா. பொதுச்சபையின் உறுப்பினர் நாடுகளை, பான்கிமூன் பாராட்டியுள்ளார். எஸ்டோனியாவை சேர்ந்த டினா இன்டல்மன், டுனிசியாவைச் சேர்ந்த காசி ஜோமாவையும் குறிப்பாக பாராட்டியுள்ளார். இனி ஐ.நா. பெண்கள் பாலின சமத்துவத்தையும், வாய்ப்பு விரிவுப்படுத்தலையும், உலகம் தழுவிய பாலின பாரபட்சங்களை கையாள்வதையும் வலுப்படுத்த முயற்சிகளை செய்யும். ஐ.நா. பெண்கள் என்பது ஒரு எளிமையான உண்மையை அங்கீகரிப்பது. பெண்களுக்கான சமத்துவம் என்பது அடிப்படை மனித உரிமை மட்டுமல்ல; அது ஒரு சமூக, பொருளதார அங்கீகாரம். எங்கெல்லாம் பெண்கள் கல்வி கிடைக்கப்பெற்று, அதிகார மேம்படுதலுக்கு உட்படுகிறார்களோ, அங்கெல்லாம் பொருளாதாரம் வலுவாகவும், அதிக உற்பத்தியுடன் கூடியதாகவும் மாறும். பெண்கள் எங்கெல்லாம் முழுமையாக பிரதிநிதித்துவப்படுகிறார்களோ அங்கெல்லாம் சமூகங்கள் அதிக அமைதியுடனும், நிலையாகவும் இருக்கும். மேற்கண்டவாறு தனது பாராட்டுரையில் கூறியுள்ள பான்கிமூன், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவுகட்ட தான் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவதாகவும், மூத்த பதவிகளுக்கு அதிகமான பெண்களை தான் நியமிப்பதாகவும் கூறினார்.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் கடந்த ஒரு வாரமாக 50 அரசாங்க பிரதிநிதிகள் அமர்ந்து தயாரித்த முயற்சி தான் இது. 2010ஆம் ஆண்டின் எகோசோக் என்ற பொருளதார மற்றும் சமூக கவுன்சிலிகளின் உயர்மட்ட பிரிவு, தனது அமைச்சக பரிசீலணையை செய்தது. அனைத்து நாட்டளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலின சமத்துவத்திற்கான, பெண்களை அதிகார மேம்படுத்துவதற்கான இலக்குகளையும், கொள்கைகளையும் அமுல்படுத்துவது அதன் நோக்கமாக இருந்தது. இந்த ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் 63/311 என்பதாக பதிவானது. அதில் 90 செயல்பாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான ஒரு நிர்வாக வாரியத்தின் தலைவராக ஐ.நா. பொதுச் செயலாளர் இருப்பார். நிர்வாக வாரியத்தின் 41 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து 10 பேரும், ஆசிய நாடுகளிலிருந்து 10 பேரும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து 4 பேரும், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளிலிருந்து 6 பேரும், மேற்கு ஐரோப்பா மற்றும் நாடுகளிலிருந்து 5 பேரும், நிதி உதவி செய்யும் நாடுகளிலிருந்து 6 பேரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். பெரியளவில் நிதி உதவி செய்யும் 4 நாடுகளும், 2 வளரும் நாடுகளும் கடைசி 6ல் அங்கம்பெறும். பெண்களுக்கான ஐ.நா. வின் வளர்ச்சி நிதி கலைக்கப்படும். பெண்கள் முன்னேற்றத்திற்கான அனைத்து நாட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான நிறுவனம் என்ற பொருளாதார, சமூக கவுன்சிலின் அமைப்பும் கலைக்கப்படும். அவற்றிற்கு பதில் ஒட்டுமொத்த பாலின சமத்துவத்திற்கான மற்றும் பெண்களின் அதிகார மேம்படுத்தலுக்கான பொது அடையாளம் இடம் பெறும். மேற்கண்ட தீர்மானத்தை ஐ.நா. வின் 66வது மற்றும் 67வது அமர்வுகளில், நிறுவன ஏற்பாட்டளவில் வலுப்படுத்தப்படும். 68வது அமர்வில் அதன் செயல்பாடு பரிசீலிக்கப்படும். இவை எல்லாமே பெய்ஜீங் பிரகடனம் மற்றும் 12 சிக்கலான பகுதிகளை உள்ளடக்கிய நடவடிக்கைக்கான திட்டம். ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட புதிய அடையாளத்தினை ஏற்படுத்த கடுமையாக உழைத்த, எய்ட்ஸ் இல்லாத உலகம் என்ற பெண்கள் அமைப்பு போன்றவை இதில் சில குறைகளை காண்கிறார்கள். தலைமை பிரதிநிதிகளை நியமிக்கக்கூடிய அணுகுமுறையில் வெளிப்படைத் தன்மையும், சரியான நோக்கும் இல்லை என்கிறார்கள். முக்கியமான நிதி பிரச்சனையில் உறுப்பினர் நாடுகள் மேலோட்டமாக இருந்ததாக கூறுகிறார்கள். இந்தியாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் மாநிலங்களவை அமைச்சர் பிரிநித் கவுர் இந்த முயற்சியை பாராட்டியுள்ளார்.
சாதாரண குக்கிராமத்தில் தொடங்கி, ஐ.நா. சபையின் உயர் தளம் வரை, பாலின சமத்துவம் என்பது அங்கீகரிக்கப்படாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் இப்படியொரு தீர்மானத்தை, ஐ.நா. பொதுச்சபையே நிறைவேற்றி, அமுல்படுத்த முயற்சியெடுப்பது வரவேற்கத்தக்க ஒன்று.
அதே சமயம் உலகம் முழுவதும் நடந்து வரும் ஆதிக்கச்சக்திகளின் அடக்குமுறைகளை எதிர்த்து, போர்களத்தை சந்திக்கின்ற பகுதிகளில் அடக்கப்படும் சக்திகள் உரிய அங்கீகராம் பெறுகின்றன. இது பாலினச் சமத்துவம் வேண்டி நிற்கும் பெண்களுக்கும் உரித்தான ஒன்றுதான். இந்த நேரத்தில் இதே நாளையொட்டி நடந்த இன்னொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகின்றது. தங்களுடைய இன விடுதலைக்காக போராடிவரும் ஈழத் தமிழர்களில், தங்களையே மாய்த்துக் கொண்டு எதிரிகளை சமரில் தோற்கடித்த கரும்புலிகளின் நினைவும் வருகிறது. அதில் குறிப்பாக பெண்கரும் புலிகள் நடத்திய தாக்குதல்கள் நினைவு கூறத்தக்கவை. முதல் கடல் கரும்புலிப் பெண் கேப்டனான அங்கையற்கண்ணியின் தியாகம் பெரும்பதிவை ஏற்படுத்தியுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் 45 அடி அழம் கொண்ட நீர் பரப்பில் இருந்த வட பகுதி சிங்கள கப்பற்படை தலைமையகத்தை தகர்த்தெறிந்த பெண்புலியின் வரலாறுதான் அது. கடல் புலிகளுக்குள் பெண், ஆண் போராளிகளிடையே நடத்தப்பட்ட போட்டியில் அங்கயற்கண்ணி முதலாவதாக வெற்றி பெற்றார். இவ்வாறு போர்களத்தில் தங்களது திறமையை காட்டிய தமிழ்ப் பெண்களின் அறுதியிடல் நமக்கெல்லாம் வழிக்காட்டியாக நிற்கிறது.
ஐ.நா. வின் தீர்மானம் மகத்தான ஒன்றாக இருந்தாலும், களத்தில் இறங்கி பாடுபடும் அல்லது போராடும் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் மட்டுமே அதற்கு உயிர் கொடுக்க முடியும். மேற்கண்ட உண்மைகளை இந்த உலகம் உணர்ந்துகொள்ளுமா அல்லது ஆணாதிக்க மிச்சச்சொச்சங்களுடன் இனிமேலும் அடம்பிடிக்குமா என்பதுதான் நமக்கு முன் எழுகின்ற கேள்வி.

Friday, July 2, 2010

சாதிகளின் நியாயக்குரலை டில்லி செவிமடுக்குமா?

சாதி கணக்கெடுப்பையும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் இணைத்துக்கொள்ளுமாறு இந்திய மக்களின் பெரும்பான்மையோர் குரலாக, பல பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் அடித்தளம் கொண்ட அரசியல் கட்சிகள் சத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் மத்திய அமைச்சரவை செவி மடுத்ததாகத் தெரியவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது இந்த நாட்டில் மிக முக்கியமான ஒரு தேவையாக உள்ளது. எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மக்கள் தொகையை கணக்கெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதிலும் வளரும் நாடுகளில் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பதன்மூலம், அந்த நாட்டு மக்கள் மத்தியில் உள்ள வறுமை, வேலையின்மை, அத்தியாவசிய பொருள்கள் இன்மை, குடிநீர் வாய்ப்புகள், கழிவு நீர் ஏற்பாடுகள், வீடுமனை வாய்ப்புகள், இன்னபிற வசதிகள் இன்மை பற்றிய ஒரு சரியான புள்ளிவிவரம் கிடைக்கப்பெறும். அதன்மூலம் ஒரு அரசாங்கம் தனது மக்களில் எத்தனை பேருக்கு தான் போட்டிருக்கின்ற நல்வாழ்வு திட்டங்கள் அந்த மக்களிடம் போய் சேர்ந்தது என்று கணக்கு பார்த்துக்கொள்ள முடியும், அப்படி போய் சேராத நல்வாழ்வு திட்டங்களை குறிப்பிட்ட பகுதியில் உள்ள குறிப்பிட்ட மக்களிடம் சென்று சேர்வதற்கு ஒரு அரசு ஏற்பாடு செய்ய முடியும். இவ்வாறு இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு அரசாங்கத்தின் அடிப்படையான தேவையாக அமைகிறது. அப்படி அமைகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பில் இப்போது உள்ள மத்திய அரசாங்கம், எவ்வளவு தூரம் அக்கறையுடன் இருக்கிறது என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி வாரியான கணக்கெடுப்பை சேர்க்க வில்லை என்பதே இப்போது எழும்பியிருக்கும் முக்கிய சர்ச்சை. இது ஏன் சர்ச்சைக்குள் ஆக்கப்பட்டுள்ளது என்பது கேள்வியாக இருக்கிறது. ஏற்கனவே இந்திய நாட்டில் 1931 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அப்போது இந்தியாவை ஆண்டுவந்தது, ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கவேண்டிய தேவையை அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பது தெரிகிறது. அத்தகைய உணர்தலைக்கூட இப்போது ஆண்டுவரும் இந்திய ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டுள்ளார்களா என்பது இப்போது கேள்விக்கு உள்ளாகி உள்ளது. அந்த அளவுக்கு சாதிவாரி கணக்கெடுப்பில் என்ன முக்கியத்துவம் உள்ளது? சாதிவாரி கணக்கெடுப்பு என்பது பிற்போக்கானதா? சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதனால் சாதிகள் வளர்ந்துவிடுமா?
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காவிட்டால் சாதிகள் ஒழிந்துவிடுமா? இப்படிப்பட்ட கேள்விகளை நாம் எழுப்பி பதில் காணவேண்டும். ஏன் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று லாலு யாதவும், முலாயம் யாதவும், சரத் யாதவும், நாடாளுமன்றத்திலும் , மக்கள் மன்றத்திலும் தொடந்து குரல் எழுப்பி வருகின்றனர். இதை மூன்று யாதவர்களின் குரல் என்று ஊடகங்கள் வெளியிடுகின்றனர். ஏன் இந்த யாதவர் தலைவர்கள் இப்படி குரல் எழுப்புகின்றனர்? சென்னையில் சமீபத்தில் பா.ம.க. நடத்திய ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. .அது சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்பதற்காக நடத்தப்பட்டது. அதில் லாலு பிரசாத் யாதவை அழைத்துவந்திருந்தார்கள். அந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது பா.ம.க. நிறுவனத்தலைவரான டாக்டர் ராமதாஸ் ஒரு செய்தியை கூறினார். அதாவது இந்திய மக்கள் தொகையில் தலித் மக்களுக்கு அடுத்தபடி இரண்டாவது அதிகமான அளவில் இருப்பது யாதவர்கள்தான் என்பதை நிரூபிக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு கேட்க வில்லை என்றும், தமிழகத்தில் தலித் மக்களுக்கு அடுத்து இரண்டாவதாக இருப்பது வன்னிய மக்கள்தான் என்பதை நிருபிப்பதற்காக நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை கேட்கவில்லை எனவும் கூறினார். அதாவது தாங்கள் கேட்பது எல்லா சாதிகளுக்கும் அவரவர் மக்கள் தொகை எவ்வளவு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்காக என்று தெரிவித்தார். அதற்கு ஏற்றாற்போல அந்தந்த சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்பதை விளக்கினார். இது இன்றைய இந்தியாவில் அடிப்படையான ஒன்று என்பது நமக்கும் புரிகிறது.
அதேநேரத்தில் இன்னொரு செய்தியையும் ராமதாஸ் அங்கே நமக்கு கூறியுள்ளார். அதாவது இந்திய நாட்டில், யாதவர்கள் தலித்துகளுக்கு அடுத்தாற்போல் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்டவர்களாக உள்ளார்கள் என்பதே அந்த செய்தி. இது இந்திய நாடு தழுவிய செய்தி என்பதால், தமிழ் நாடும் அதற்குள் அடங்கவே செய்யும். அப்படியானால் தமிழ்நாட்டில், யாதவர் மக்களின் நியாயமான இட ஒதுக்கீட்டுக்காக போராடும் இயக்கங்களின் கோரிக்கையும் இங்கே உறுதிசெய்யப்படுகிறது. ஆகவே இதுவரை சரியாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படாத சாதிகளுக்கும் சரி, அதை ஒட்டி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஒதுக்கீடு கல்வியில், வேலைவாய்ப்பில், மற்றும் அரசியலில் கிடைக்காத நிலமையும்சரி, இந்த சாதிவாரி கணக்கெடுப்பை சார்ந்துதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளில், ஆளும் பிற்படுத்தப்பட்டோர், ஆளப்படும் பிற்படுத்தப்பட்டோர், என்ற ஒரு நிலைமை இருக்கிறது.இங்குஏகப்பெரும்ப்பான்மையானவர்கள் நிலம் வைத்துக்கொண்டு இருக்கும் ஒரு சாதியான கொங்குவெள்ளாளர் என்ற சாதியினர், முற்பட்டோரின் வாழ் நிலைக்கு சென்றபோதும், அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பாட்டிலில் சேர்த்துள்ள நிலைமை உள்ளது. இவ்வாறு இருக்கும் யாதார்த்த நிலைமையை, அமுலாகும் இட ஒதுக்கீடு பிரதிபலிக்காமல், கிடைக்கவேண்டிய சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் இருக்கின்ற ஒரு நிலைமையை மாற்றி அமைக்க, இந்த சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக உதவும். ஆளப்படும் பிறபடுத்தப்பட்டோர் என்று நாம் வர்ணிக்கும் சாதிகளில் யாதவர் உட்பட பல சாதிகள் வருவார்கள். அதேபோல மிகவும் பிற்படுத்தபட்டோரில், ஆளப்படும் சாதிகளாக முத்தரையர்களும், மீனவர்களும் இன்ன பிறரும் வருவார்கள். இவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஒதுக்கீடு நியாயமாக கிடைக்கப்பெறவே சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு கட்டாயத்தேவையாக இருக்கிறது.
இப்போது டில்லியில் நடந்த அமைசச்சரவைகுழு கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக சில அமைச்சர்கள் ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்கள். அவர்களை நாம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். ஏன் என்றால் அதே கூட்ட்டத்தில், சமூக நீதிக்கான மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக்,சாதிவாரி கணக்கெடுப்பு இணைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தினார். ஆனாலும்கூட மூத்த அமைச்சர்கள் சிலர் பிரதமரது வாக்குறுதிக்கே எதிராக பேசுவது என்பதும் அந்த குழுவில் நடந்துள்ளது. சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், சமூக நீதி அமைச்சர் முகுல் வாஸ்னிக்கை,
ஆதரித்து பேசியுள்ளார். ஆனாலும் மூத்த அமைச்சர்களாக உள்ள ஏ.கே. அந்தோணி, கபில்சிபல் போன்றோர் சற்றும் கவலை கொள்ளாமல் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து பேசியுள்ளனர். அப்போது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாயை திறந்துள்ளார். நேரு எப்போதோ கூறியதை மேற்கோள் காட்டி, சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து பேசியுள்ளார்.
எண்பது ஆண்டுகளாக எடுக்கப்படாத சாதிவாரி கணக்கெடுப்பை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பதில் எடுக்கவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் ஏற்றுக்கொண்டு வாக்குறுதி கொடுத்த பின்னாலும், இந்த மூத்த அமைச்சர்கள், சிதம்பரம் உட்பட ஏன் இதை எதிர்க்க வேண்டும் என்பதே கேள்வி. அதாவது தங்கள் அமைச்சரவையின் தலைவரான பிரதமரைவிட, உயர்வாக அவர்கள் கருதுவது யாரை என்ற கேள்வி எழுகிறது. இந்திய மத்திய அமைச்சர்வையையே ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டது கார்பரேட் என்று அழைக்கப்படும் பெருவணிக குழுமங்கள். அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்கவில்லை. ஏன் என்றால் அதிக எண்ணிக்கை உள்ள சாதிகள் நாளை அரசு வேலை கிடைக்காத சூழலில், தனியார்துறை இட ஒதுக்கீட்டை கேட்பார்கள். ஆகவே அந்த வணிககுழுமங்கள் சாதிவாரி இட ஒதுக்கீட்டையும், அதற்கான அடித்தளமாக இருக்ககூடிய சாதிவாரி கணக்கெடுப்பையும் எதிர்த்து நிற்கிறார்கள். ஆகவே இன்று பெரியார் பிறந்த மண்ணில் வாழும் நாம், சாதிவாரி கணக்கெடுப்பை மறுக்ககூடிய சக்திகளை அடையாளம் காண்பதும், அவர்களை எதிர்த்த ஒரு பெரூம் பேரெழுச்சியை ஏற்படுத்துவதும் தேவையாக உள்ளது.

Wednesday, June 30, 2010

பழங்குடி நிலப்பறிப்பும், ராணுவ உயிர்பறிப்பும்

செவ்வாய் கிழமை சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில், மத்திய சிறப்பு காவல் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் அரசுப் படையினர் பலியாகினர். இது போன்ற தொடர்ந்த உயிரிழப்புகள் இந்திய அரசை உலுக்கிவருகிறது. தனது தளபதிகளையும், அதிகாரிகளையும் இழந்தார் துணை ராணுவம் மனஉறுதியை இழக்கத் தொடங்கியுள்ளது. அபுஜ்மத் என்ற 40,000 சதுர கி.மீ. உள்ள காடுகளின் வாயில் பகுதியாக கருதப்படும் நாராயண்பூர்ஒர்சா சாலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அந்த காட்டுபகுதியை நக்சல்பாரிகளின் விடுதலைப் பகுதி என்று அழைக்கிறார்கள். பஸ்தர் பகுதியில் உள்ள தங்கள் முகாமிற்கு திரும்பி வரும் போது அந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதியம் 3 மணிக்கு நடத்தப்பட்ட அந்த தாக்குதலில், நவீன ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த மாவட்டத்தின் காவல் துறை அதிகாரிகள் வேறு ஒரு கதையை சொல்கிறார்கள். முக்கிய இடமான ஜரகதியில் ஒரு ராணுவ முகாமை நிறுவ வேண்டும் என்று தாங்கள் கூறியதாகவும், அதை துணை ராணுவம் மறுத்துவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் துணை ராணுவத்தினர் அந்த இடத்தில் முதலில் ஒரு கட்டிடத்தை உருவாக்கி அதில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும் என்று விரும்பியதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள். மத்திய சிறப்பு காவல்படையை, தொடர்ந்து மாவோயிஸ்டுகளிடம் பலியாகி வருவதாக காவல் துறையினர் அந்த மாநிலத்தில் குறைக் கூறுகின்றனர். காடுகளில் பணியாற்ற அனுபவம் இல்லாமல் இருக்கிறார்கள் என்றும் துணை ராணுவத்தினரை காவல்துறையினர் விமர்சிக்கிறார். பஸ்தர் பகுதியில் உள்ள காடுகளில் சோதனை நடவடிக்கைகளுக்கு செல்லும் போது, துணை ராணுவத்தினர் உளவுத்துறையினர் கூறும் கருத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் மோதல் பகுதிகளிலிருந்து, நேரடியாக பஸ்தர் பகுதிக்கு பெருவாரியான மத்தியச் சிறப்பு காவல்படையினர் கொண்டுவந்து தள்ளப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு இடைக்காலத்தில் ஒய்வு கூட கொடுக்கப்படவில்லை என்றும், அதனால் ஓய்வின்றி சோர்வாக வந்திறங்கியுள்ளனர் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.
சத்திஸ்கர் மாநிலத்தில் இருக்கும் காவல்துறைக்கும், துணை ராணுவத்திற்கும் இடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. கண்ணிவெடி புதைக்கப்பட்ட இடங்களில், அவற்றை அகற்றாமல் உள்ளே நுழைவது அவர்களுக்கு பழக்கமாகயிருக்கிறது. பஸ்தர் பகுதி, 5 மாவட்டங்களை கொண்டது. பஸ்தர், நாராயண்பூர், கான்கெர், பிஜபூர், தன்டேவாடா ஆகிய மாவட்டங்களை கொண்டது. அது தான் மாவோயிஸ்டுகளுடைய மைய பகுதியாகவும் இருக்கிறது. 80ன் கடைசியில் இருந்து கொரில்லா போராட்டப் பகுதியாக அது இருக்கிறது. பஸ்தர் பகுதியின் 40,000 சதுர கி.மீ. காட்டுப்பகுதியில், 25,000 சதுர கி.மீ. வரை மாவோயிஸ்டுகள், கண்ணி வெடிகளை புதைத்துள்ளனர் என்று சத்திஸ்கர் மாநில காவல்துறை தலைவர் விஸ்வரன்ஜன் கூறியுள்ளார். இதுவரை அந்த மாநிலத்தில் மத்திய சிறப்பு காவல்படையை சோர்ந்த 14 பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தெற்கேயுள்ள பஸ்தர் பகுதியில் மட்டும் 13 நிறுத்தப்பட்டுள்ளன. சுர்குஜா என்ற ஜார்கன்த் எல்லையை ஒட்டிய வடக்கு மாவட்டத்தில் ஒரு பட்டாலியன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு ஆயுதம் தாங்கிய அரசுப்படைகள் குவிக்கப்பட்டாலும் பழங்குடி மக்களின் காட்டுப்பகுதிக்குள் செல்வது என்பது எளிதாகயில்லை.
மேற்கண்ட பகுதிகளில் பழங்குடி மக்களுக்கு சொந்தமான காடுகளையும், நிலங்களையும் அவர்களிடம் இருந்து பறித்து, தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்பதற்கு துணைபோனவர்கள் யார் என்பது இப்போது அம்பலமாகிறது. இந்தியாவின் சுற்றுசூழல் மற்றும் வன இலாக்கா தான், காட்டுநிலங்களை பழங்குடி மக்களிடமிருந்து பறித்தெடுக்க உதவிகரமாக இருந்திருக்கிறது.
காட்டு நிலங்கள் மீதான மத்திய வன அமைச்சரவையின் கட்டுப்பாடு, லட்சக்கணக்கான மக்களின் வீடுகள், வாழ்வாதாரம், வாழ்க்கை ஆகியவற்றின் மீது அதிகமான அதிகாரத்தையும் அதன் மூலம் அநிதியையும் இழைத்துள்ளது. 1980 ஆம் ஆண்டின் காடு வளர்ப்புச் சட்டம், இந்தியாவில் இருக்கின்ற நிலங்களில் 23% காடுகள் என்று பதிவு செய்துள்ளது. 2006ம் ஆண்டிலிருந்து இன்று வரை அன்றைய மத்திய பிரதேசத்திலும், இன்றைய சத்திஸ்கரில் மட்டும் கொள்கை ரீதியாக, சட்ட விரோதமாக பல்வேறு திட்டங்களுக்கு 15,411 ஹெக்டேர் காட்டு நிலங்களை இந்த அமைச்சகம் கொடுத்துள்ளது. அந்த வட்டாரத்தில் வாழும் பழங்குடி மக்கள் உட்பட, குடியிருக்கும் மக்களிடம் அவர்கள் பயன்படுத்தும் அல்லது சார்ந்து இருக்கும் நிலங்களை பறித்துக் கொடுப்பது பற்றி கலந்தாலோசிக்க வில்லை. 2009ம் ஆண்டு ஆகஸ்டு 3ம் நாள் இந்த வனஇலாகா அமைச்சகம் நடந்ததெல்லாம் சட்ட விரோத மென்றும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையை வெளி யிட்டது. ஆனாலும் வனப்பகுதிகளில் நிலப்பறிப்பு நின்றபாடில்லை. ஒவ்வொரு ஹெக்டேர் நிலம் வனங்களிலிருந்து மாற்றப்படும் போதும், அதற்கு சமமாக வருவாய் நிலத்திலிருந்து ஒரு ஹெக்டேரோ அல்லது கைவிடப்பட்ட வனப்பகுதிகளிலிருந்து 2 ஹெக்டேரோ, புதிய மரங்களை நடுவதன் மூலம் திருப்பி அளிக்கப்படவேண்டும் என்பதாக அந்த வனப்பாதுகாப்பு சட்டம் கூறுகிறது. இது ஆவண அளவில் நல்லதாக தோன்றினாலும், இயற்கை வனங்களுக்கு மாற்றாக ஒரு மரத்தை நடுவது என்பது பல்லுயிர் சூழலின் இழப்பை சரிகட்டாது. அதே போல நீர் நிலைகளின் இழப்பை ஈடுகட்டாது. தோட்டங்களும் கூட புதிய நிலப்பறிப்பை ஏற்படுத்தவே செய்யும். அது திட்டங்கள் பெயரில் இல்லாமல், வனத்துறை பெயரில் நடைபெறும். எந்த வகையிலும் வாழ்ந்து வரும் மக்கள் தங்களது நிலங்களை இழப்பார்கள்.
புதிய தோட்டங்கள் வனவாழ் மக்களது அல்லது கிராம பொது நிலத்தையோ பறிப்பதன் மூலம் தான் நடைபெறும்.
1980 முதல் 2009 வரை இது போன்ற ஈடுகட்டும் தோட்டங்கள் 11,83,472 ஹெக்டேர் நிலத்தில் உருவாக்கப் பட்டுள்ளன. அதில் 5,54,635 ஹெக்டேர் வருவாய் துறை நிலத்தி லிருந்து வனத்துறைக்கு எடுக்கப் பட்டது. இவை அனைத்துமே மத்திய பிரதேசத்திலும், சத்திஸ்கரிலும் நடந்த சட்ட விரோத திருப்பங்கள். கூட்டு வன மேலாண்மை என்ற முறையின்படி அதிகமான நிலங்களை கிராம மக்களிடமிருந்து பறித்து எடுத்தல் தொடர்கிறது. வன இலாகா காவலர்களால் தலைமை தாங்கப்பட்டு, பங்களிப்பு திட்டத்தின்படி வனச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சட்டமாக் கியுள்ளனர். ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு மரத்திலும், வருமானத்திலும் பங்கு கொடுப்பதற்கு பதில், அவர்களது இலவசமான உழைப்பை பெற்றுக் கொள்கிறார்கள். கூட்டு வன மேலாண்மைக் குழுக்கள் முழுமையாக ஒப்பந்தக்காரர்களையும், வர்த்தகர்களையும், மேட்டுக்குடி களையும் மற்றும் வனத்துறைக்கு வேண்டியவர் களையும் கொண்டதாக உருவாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் வனங்களில் வாழ்ந்து வரும் மக்கள் நிலங்களிலிருந்து அந்நியப்படுத்தப் படுகிறார்கள். அந்த திட்டத்திற்காக 2008 லிருந்து 2010 வரை கொடுக்கப்பட்ட ரூ. 1056.74 கோடிகள் மேற்கண்ட லாபநோக்க சக்திகளால் கொள்ளை யடிக்கப் பட்டுள்ளது.
காடுகளை அழிப்பது மீண்டும் வனவாழ் மக்களது வாழ்க்கை அழித்து வருகிறது. 2009ம் ஆண்டு மாநில அரசாங்கங்களால் ரூ.5000 கோடி அனைத்து நாட்டு கடனாக பெறப் பட்டுள்ளது. அவற்றை அமுல் படுத்த கூட்டு வன மேலாண்மை பயன்படுத்தப் படவேண்டும். அது முழுமையாக வட்டார மக்களுக்கு எதிராகவே பயன்படுகிறது. இவ்வாறு வனத்துறை அமைச்சகம் பறிக்கப்பட்ட நிலங்கள் பழங்குடிகளை, மாவோயிஸ்டுகளிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது. அதன் விளைவாக அங்கே செல்லும் துணை ராணுவத்தினரின் உயிர்கள் பறிக்கப் படுகின்றன. நிலங்களை பறி கொடுத்த பழங்குடிகள், அரசப்படைகளின் உயிர்களை பறித்தெடுக்கிறார்கள் என்ற எதார்த்த உண்மையை எப்போது அரசு புரிந்து கொள்ளும் என்று தெரியவில்லை.

காதல் புரியுமா?

இளையவளே
அவன் உன்னுடன்
பேசிக்கொண்டிருக்கும்போது
வெயில் வந்துவிட்டதே
அதிகாலை முதல்
அவனுடன் கடற்கரையில்
பேசி, பேசியே நேரம்
போனது தெரியவில்லையே
கடற்கரை மணலில்
ஏறும் சூடு உனக்கு
தெரியாதுதானே
அதை புரிந்து கொண்டால்
உலகம் திருந்தி விடும்
என்கிறாயா?

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து தாக்குதலா?

ஒரு வாரமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வருகின்ற செய்திகள் எதுவுமே ஆரோக்கியமாக இல்லை. காட்சி ஊடகங்களுக்கு சுடச் சுட செய்திகள் கிடைக்கின்றன என்பது தவிர, வன்முறையற்ற எந்த ஒரு செய்தியும் அங்கிருந்து வரவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள சோப்பூர் என்ற நகரில் ஒரு இளைஞர் மத்திய சிறப்பு காவல்படையின் தோட்டக்களுக்கு பலியானார். அதையொட்டி அந்த நகரின் அருகே இருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் சோப்பூர் நகரை நோக்கி கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கினர். இதற்கிடையில் மத்திய சிறப்பு காவல்படை ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ள பகுதிகளில், அந்த குறிப்பிட்ட நேரத்தில் யார் வெளியே வந்தாலும் உடனடியாக சுட்டுக் கொல்வார்கள் என்பது இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் பழக்கம். ஆனால் ஹூரியத் மாநாடு என்று சொல்லப்படும், தேர்தல் போட்டியிடாமல் காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைக்காக போராடக்கூடிய மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு, இந்த ஊரடங்கை எதிர்த்து தெருவுக்கு வந்து போராட மக்களை அறைகூவியிருந்தது. அதையொட்டியே மக்கள் ஆயிரக்கணக்கில் தெருவுக்கு வந்தார்கள் என்பது அரசாங்கத்தின் குற்றச்சாட்டு. ஊர்வலமாக வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டவுடன் துணை ராணுவப்படையினர் ஷாகார் சினிமா கொட்டகை அருகே, ஊர்வலத்தைப் பார்த்து பகிரங்கமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதையொட்டியே எதிர்ப்பாளர்கள் கலக்கமடைந்து கலவரமாக வெடித்துள்ளது.
இதே போல 20 ஆண்டுகளுக்கு முன்னால் அஸ்ஸாம் மாநிலத்தில், வங்காளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து மாணவர்கள் ஆசு என்ற மாணவர் அமைப்பின் மூலம் அணி திரண்டு போராடினார்கள். அப்போது அங்கே அனுப்பப்பட்ட துணை ராணுவப்படை ஊரடங்கு உத்தரவு ஒன்றை அறிவித்திருந்தது. அதை எதிர்த்து அனைத்து அஸ்ஸாம் மாணவர் அமைப்பு என்று கூறப்படும் ஆசு அமைப்பினர், மக்கள் ஊரடங்கு என்ற எதிர்முழக்கத்தை முன்வைத்தனர். வயோதிகர்கள் முதற்கொண்டு குழந்தைகள் வரை, தெருவுக்கு வந்து அமைதியான வழியில் ஊர்வலமாக சென்றனர். அதிர்ச்சியடைந்த துணை ராணுவத்தினரோ, பின்வாங்கிக் கொண்டனர். அதுவும் கூட ஒரு தேசிய இனத்தின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் தான். அதிலும் பெரும்பான்மை மக்கள் தான் திரண்டு தங்களுடைய நிலத்தை காப்பாற்ற தெருவுக்கு வந்தார்கள்.
அதே போல காஷ்மீரிலும் பெரும்பான்மை மக்கள் தங்களுடைய நிலத்தை காப்பாற்றுவதற்காக, ஆக்கிரமிப்பு போல வந்திருக்கும் துணை ராணுவப்படையை எதிர்த்து ஊரடங்கை மறுத்து தெருவுக்கு வந்துள்ளனர். ஆனால் காஷ்மீர் பிரச்சினை இந்திய ஆட்சியாளர்களுக்கு கவுரப் பிரச்சினையாக வும், அண்டை நாடான பாகிஸ்தானுடன் பகைத்துக் கொள்வதற்கான துருப்புச் சீட்டாகவும், டெல்லி மனோபாவத்தில் விட்டுக் கொடுக்க முடியாத பிரச்சினையாகவும் இருக்கிறது. அதனால் தானோ என்னவோ, டெல்லியின் விரல் அசைப்பு, துணை ராணுவப்படையில் பகை முகம் காட்டும் நிலைக்கு தொடர்ந்து தள்ளி வருகிறது. ஹூரியத் மாநாடு அறிவித்தவுடன் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் தெருவுக்கு வருகிறார்கள் என்றால், பொதுமக்களுடைய உணர்வுகளை அந்த அமைப்புதான் சரியாக பிரதிபலிக்கிறது என்று அர்த்தம்.
தேர்தல் மூலம் காஷ்மீரில் முதலமைச்சராக இருக்கும் உமர் அப்துல்லாவோ, மத்திய காங்கிரஸ் தலைமையோ கொண்டுள்ள மக்கள் செல்வாக்கை விட, ஹூரியத் மாநாடு மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பது இதன் மூலம் தெரிகிறது. ஹூரியத் மாநாடு அமைப்பினர் ஆயுதம் தாங்கி போராடுபவர்கள் அல்ல. ஆனாலும் காஷ்மீரின் சுய நிர்ணய உரிமைக்காக அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். அவர்கள் பின்னால் மக்கள் நிற்பதால், காஷ்மீர் மக்களும் சுய நிர்ணய உரிமையை வேண்டி நிற்கிறார்கள் என்பது புலனாகிறது.
காஷ்மீர் மாநிலத்தின் சட்டத்தையும், நாடளுமன்ற விவகாரத்தையும் கவனிக்கின்ற அமைச்சர் அலி முகமது சாகர், ஞாயிற்றுக் கிழமை நடந்த வன்முறைகளை வித்தியாசமாக வர்ணிக்கிறார். மத்திய சிறப்பு காவல் படையினர் சரியான தலைமைக் கட்டளை இல்லாமல், கட்டுப்பாட்டை இழந்து போய்விட்டனர் என்று அந்த முக்கிய அமைச்சர் கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காஷ்மீருக்கு வருகை தந்து, மத்திய சிறப்பு காவல் படையை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார். மீண்டும் சிதம்பரத்தின் அமைச்சரவையின் கீழே உள்ள அரசப்படைகளின் கட்டுப்பாடின்மை அம்பலமாகியுள்ளது. 4 மாதங்களுக்கு முன்னால் காஷ்மீர் சென்ற ப.சிதம்பரம், காவல்துறை கைகளில் சட்ட ஒழுங்கு கொடுக்கப்பட்டு, துணை ராணுவம் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது புதிய ஊடக பேட்டியில், ஹூரியத் மாநாட்டிற்கும், மத்திய உள்துறைக்கும் உள்ள பேச்சுவார்த்தைப் பற்றி சில செய்திகளை அம்பலப்படுத்துகிறார். அமைதியான வழியில் தூதரகப் பேச்சு என்ற பெயரில் ப.சிதம்பரம் அழைத்த பேச்சு வார்த்தைப்பற்றி கூறுகிறார். அத்தகைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஹூரியத் மாநாடு அமைப்பினர், பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக் கொண்டுதான் செயல்படுகிறார்கள் என்று உமர் அப்துல்லா ஒருபுறம் முத்திரைக் குத்தினாலும், இன்னொரு புறம் பாகிஸ்தான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடைய முயற்சிக்குப் பிறகு, காஷ்மீர் பேச்சு வார்த்தையும் பலன் தரும் என்று கூறுகிறார். தற்போது உள்துறை அமைச்சருடன் ஹூரியத் மாநாடு அமைப்பினர் பேச்சு வார்த்தை தொடர்கிறார்களா என்ற கேள்விக்கு மௌனம் சாதிக்கிறார். மத்திய அரசின் பேச்சு வார்த்தை அணுகுமுறைப் பற்றியும், அதற்கு வருகின்ற தடங்கல்கள் பற்றியும் இருக்கும் ரகசியங்களை அரசியலிலிருந்து ஓய்வு பெற்றப்பின் எழுதுவேன் என்கிறார். அதே சமயம் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, காஷ்மீர் காவல்துறைதான் முன்னால் நிற்கவேண்டும் என்றும், துணை ராணுவம் பின்னால்தான் நிற்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கு எதிரான செயல்பாடுகள்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்து வருகின்றன.
சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கிலானி இதுபற்றி பேசினார். அவர் நாடாளுமன்ற தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலையானவர். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அறிவுஜீவி. அவர் இந்தியாவில் மக்கள் எப்படி சிந்திக்கவேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் தீர்மானித்து, அதற்கு தகுந்தாற்போல் செய்திகளை திருப்பி விடும் ஊடகங்களின் காலம் இது என்று கூறுகிறார். காஷ்மீரில் ஜம்மு பகுதி இந்து மதச்சார்பான மக்கள் அதிகம் வாழும் பகுதி. அங்கே அரசாங்கம் கிராம பாதுகாப்பு குழுக்களை கட்டியுள்ளது. அவர்கள் ராணுவத்திற்காக வேலை செய்கிறார்கள். அவர்களில் யாரையாவது காஷ்மீர் போராளிகள் தாக்கி விட்டால், உடனடியாக இந்து மக்களை போராளிகள் தாக்கி விட்டார்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அதன் மூலம் சுய நிர்ணய உரிமைக்கான இயக்கத்தை, இந்து மக்கள் எதிர்ப்பு இயக்கம் போல சித்தரித்து விடுகிறார்கள் என்று கூறினார். அந்த கிராம பாதுகாப்பு குழுக்களிலும் முக்கியமாக முன்னாள் ராணுவத்தினர் இருக்கிறார்கள். அவர்களை அரசு ஆயுதம் தாங்கியவர்களாக மாற்றி விடுகிறது. காஷ்மீரில் இறங்கி இருக்கும் அரச படையில் 99% கவனமாக இந்துக்களாக இணைக்கப் பட்டுள்ளனர். 40 ஆண்டுகள் அமைதி வழி போராட்டத்தின் மூலம் சுயநிர்ணய உரிமைக்கான இயக்கம் நடந்தது. மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்ததாதனால், இளைஞர்கள் எல்லா நாட்டிலும் நடப்பது போல, ஆயுதம் தாங்கிய வழியை தேர்வு செய்தார்கள். தங்களது குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகியவற்றை விட்டு விட்டு, காடுகளுக்கு சென்று கொரில்லா போராளிகளாக மாறியுள்ளார்கள் என்று பேராசிரியர் அப்போது கூறினார். தங்கள் மக்கள் மதிப்புடன் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்காக, போராளி ஆணும், பெண்ணும் தங்கள் உயிரைக் கொடுக்க தயாராக இறங்கியிருக்கிறார்கள் என்று அப்போது கூறினார். இந்தியாவில் நீதித்துறை உட்பட அனைத்து நிறுவப்பட்ட அதிகார நிறுவனங்களும் உடைந்து போனப்பிறகு, ஜனநாயக மதிப்பீடுகளை எங்கிருந்து எதிர்பார்க்கிறீர்கள் என்று சூடாகவே அப்போது பேராசிரியர் சென்னைவாசிகளைப் பார்த்து, கேள்வி கேட்டார். நீதி கிடைக்காமல் அமைதி எப்படி வரும் என்று வினவினார். சுடுகாட்டில் நிலவும் அமைதிதான் இவர்களது எதிர்பார்ப்பா என்று கேட்டார்.
2005ம் ஆண்டிலிருந்து இப்போது வரை காஷ்மீரில் அரசப்படைகள் நடத்திய 350 மீறல் குற்றங்களை வழக்குப்போட, அங்குள்ள அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. இதுவரை கிடைக்கவில்லை அதே சமயம் சுதந்திரமாக கருத்துச் சொல்பவர்களுக்கு எதிராக யு.ஏ.பி.ஏ. என்ற சட்ட விரோதமாக கூடுதல் தவிர்ப்பு சட்டம் என்பது பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற தவறுகளை எதிர்த்து, மற்ற மாநிலத்தில் உள்ள மக்கள் கேள்வி கேட்காவிட்டால், அவர்களது மௌனம் அத்தகைய தவறுகளுக்கு கொடுக்கின்ற ஆதரவு என்றும் பேராசிரியர் கடுமையாகவே கூறினார். இதுதான் நமக்கு நினைவுக்கு வருகிறது. ஈழத்தில் இன அழிப்பை அனுபவித்து துவண்டு போன தமிழ் நாட்டு மக்கள், காஷ்மீரில் நடத்தப்படும் இன ஒடுக்கலை எதிர்த்து கேள்வி கேட்கப் போகிறோமா? அல்லது மௌனத்தின் மூலம் ஆதரிக்கப் போகிறோமா? இதுதான் நமக்கு எழும் கேள்வி.

Monday, June 28, 2010

நாம் வாழும் காலத்திலேயே தாய் மொழிக் கல்விக்கு வேலை உத்தரவாதம்

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளில், தமிழக முதல்வர் ஒரு அறிவிப்பை அளித்துள்ளார். தாய்மொழித் தமிழில் கல்வி கற்றவர்களுக்கு, தமிழக அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க சட்டம் ஒன்று புதிதாக இயற்றப்படும் என்று அறிவித்துள்ளார். செம்மொழி மாநாடு பற்றி ஆயிரம் பாராட்டுகளும், ஆயிரம் விமர்சனங்களும், கடுமையான இடித் துரைகளும் இருக்கலாம். அத்தனையையும் தாண்டி இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்படும் போது, யாருமே உள்ளம் குளிராமல் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியை நாடிச் செல்வதற்கான சூழல், நாளுக்கு நாள் குறைந்து வந்துகொண்டிருந்தது. அத்தகைய நிலையில் இந்த அறிவிப்பு, அதன் அமுலாக்கல் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
உலகம் முழுவதும் தாய்மொழிக் கல்வி மட்டுமே எந்த ஒரு இனத்தையும் மேம்பட வைத்துள்ளது. அதற்கு உதாரணமாக ஜப்பான், ஜெர்மன், சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து என்று நாடுகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த நாடுகளில் கல்விக்கான பயிற்று மொழியே, தாய் மொழியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதாவது பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் இன்று அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்றுக் கொடுக்கிறார்களே, அதற்கு பதில் தாய் மொழியிலேயே அனைத்து பாடங்களும் கற்றுக் கொடுக்கப்படும். அதாவது சோசியல் சயின்ஸ் என்ற பாடத்தை முறையாக, சமூக அறிவியல் என்ற தமிழ் பேசும் மக்களுக்கு புரிகின்ற முறையில் கற்றுக் கொள்ளலாம். அது போல பிஸிக்ஸ் என்ற பாடத்தை, பௌதிகம் என்பதாகவும், கெமிஸ்டிரியை வேதியல் பாடமாகவும், மேதமெடிக்ஸ்சை கணிதமாகவும், சுவாலஜீயை விலங்கியலாகவும், பாட்டனியை தாவரயியலாகவும் கற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தாய்மொழியிலேயே பாடத்திட்டங்களை கற்றுக் கொள்வதால், படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு தாங்கள் வீட்டில் பேசுகின்ற மொழியிலேயே பாடங்கள் இருப்பதால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
பழக்கத்திலும், புழக்கத்திலும் எந்த மொழியில் ஒரு மனிதன் அனுபவம் பெற்றிருக்கிறானோ, அந்த மொழியில் தான் படிக்கும் பாடம் இருக்குமானால், அது எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கும் மேலாக படித்த பாடம் தானாகவே நினைவிலும் நிற்கிறது. தாய்மொழியில் தான் அல்லது அதிகமாக புழங்கும் மொழியில் தான், ஒருவர் சிந்திக்க முடிகிறது. தனது தாய் மொழியில் பாடத்தை படிப்பவர்கள், அதே மொழியில் சிந்திக்கும் போது புதிய கருத்துக்களை உருவாக்க எளிதாகிறது. அதாவது தான் படித்த பாடத்தின் மீது, புதிய படைப்பாற்றலுடன் கூடிய கருத்துகளை ஒருவர் உருவாக்கி கொள்ள முடிகிறது. அதில் தான் எந்த ஒரு மனிதரும், அறிவுஜீவியாக மேம்பட முடிகிறது.
மேற்கண்ட அறிவியல் சிந்தனை கல்விக்கு அடிப்படையான தளமாக இருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாக இருந்து விட்ட நாம், அவர்கள் நடத்தி வந்த காலனிய பண்பாட்டு சூழலில் சிக்கிக் கொண்டதால், ஆங்கில மொழியின் மீது ஒரு விதமான அடிமை புத்தியை கொண்டிருந்தோம். அதாவது அந்நியமொழியான ஆங்கிலம், நமது தாய் மொழியான தமிழை விட உயர்ந்தது என்ற மாயையில் கட்டுண்டிருந்தோம். அதனால்தான் ஆங்கிலேயன் அறிமுகப்படுத்திய உடுப்புகளையும், அலங்காரங்களையும் ஏற்றுக் கொண்டது போல, அவர்களது மொழியையும் நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டோம்.
1938ம் ஆண்டு தமிழ்நாட்டிற்குள் இந்தி மொழி திணிக்கப்பட்ட போது, தந்தை பெரியார் தலைமையில் அதற்கு எதிரான போராட்டம் தொடங்கியது. அதுவே 1965ம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி தலைமையிலான மத்திய அரசால் இந்தித் திணிக்கப்படும் போது, எதிர்ப்பு போராக தொடர்ந்தது. அதுவே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கும் அடிப்படையானது. ஆனாலும் கூட இந்தி வருவது தடுக்கப்பட்ட அதே நேரம், அந்த இடத்தில் தமிழ் அரியணை ஏறவில்லை. மாறாக ஆங்கிலமே கோலோச்சியது. இந்தி என்ற வாள் தமிழின் மீது பாயமல் தடுப்பதற்கு, ஆங்கிலம் என்ற கேடயம் தேவைதானே என்ற கருத்து செல்வாக்கு செலுத்தியது. அதன் விளைவு குழந்தைகள் பள்ளிகள் முதல் உயர் கல்வி வரை, ஆங்கிலமே பயிற்று மொழியாக ஆகிவிட்டது.
நர்சரிபள்ளிகளில் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவது பெருமையாக பார்க்கப்பட்டது. தொழிலாளர் குடும்பங்களிலும், விவசாய குடும்பங்களிலும் உள்ள பெற்றோர்கள், தங்கள் தாய்மொழி தமிழை மறுத்துவிட்டு, தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கற்க வேண்டும் என்று விரும்பினார்கள். இத்தகைய பண்பாட்டு ஆக்கிரமிப்பு தமிழ்நாடெங்கும் பரவியது. ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே, பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூட, பெற்றோர்கள் சிந்திக்க தொடங்கினர்.
இந்தி படித்தால் தமிழ்நாட்டிற்கு வெளியே இந்தியா எங்கும் வேலைக்கு போகலாம் என்ற கருத்தும் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கியது. அதனால் இந்தி எதிர்ப்பு போராட்டம், தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைப்பதை கெடுத்துவிட்டது என்று தமிழ் பெற்றோர்கள் எண்ணத் தொடங்கினர். வேலையை மட்டுமே, அதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை மட்டுமே தனித்து சிந்திப்பதன் மூலம், தாய் மொழியின் முக்கியத்துவத்தை அறிவியல் ரீதியில் உணராமல், உடனடி தேவைகளில் நின்று, தமிழர்கள் தங்களது சிந்தனையை கீழே இறக்கிக் கொண்டனர். இதற்கெல்லாம் காரணமாக புறநிலையில் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற ஒரு பூதம் தமிழ்மக்களை ஆட்டிப் படைத்தது.
இந்தியநாட்டின் பொருளாதார கொள்கைகளினால், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுகிறது என்ற உண்மை நம் மக்களுக்கு உரைக்கவில்லை. அதுவே தாய் மொழியின் தேவையையும், அதையொட்டிய நீடித்த தன்மை கொண்ட வளர்ச்சியையும் நம் மக்களுக்கு தெரியவிடாமல் செய்துவிட்டது. அதனால் தமிழ்மொழி சார்ந்த தேசிய இனத்தின் முன்னேற்றம் உளவியல் ரீதியாக தடுக்கப்பட்டது.
ஆங்கிலத்தை பயிற்று மொழி ஊர்தியாக கொண்ட தனியார் கல்வி நிறுவனங்கள் லாப நோக்கங்களுக்காக செயல்படத் தொடங்கின. அதுவே கல்வியை வணிகமயமாக்கிவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்களை எதிர்த்த கருத்து இப்போது தான் அரசாங்கத்திற்கு முளைவிடத் தோன்றியுள்ளது. அதேபோல தாய்மொழி தமிழ் வழிக் கல்வியும் இப்போது தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தொழில் படிப்புகளில் பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழி பயிற்று மொழி இப்போது தொடங்கப்படுவது போல, மருத்துவ படிப்பிலும் தொடங்கப்பட வேண்டிய தேவையுள்ளது.
தமிழ்வழி பயிற்று மொழியில் படித்தவர்களுக்கு வேலை உத்திரவாதம் இல்லை என்ற கூக்குரலை நிறுத்துவதற்கு, அரசுப் பணிகளில் தமிழ் பயிற்று மொழி படித்தவருக்கே முன்னுரிமை தரவேண்டும் என்ற கோரிக்கை நிண்ட காலமாக, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்கு செவிமடுத்து இப்போது தமிழ்வழி படித்தோருக்கே, அரசுப் பணிகளில் முன்னுரிமை என்பது இப்போது அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாராட்டத்தக்க செயலாகும். வேலைக்காக கல்வியை தேடும் இன்றைய சமூகத்தில், வேலை உத்திரவாதம் கிடைக்கும் போது மட்டுமே, தாய்மொழிக் கல்விக்கு மக்கள் திரும்பமுடியும் என்ற உண்மை இங்கே வெற்றிபெறுகிறது.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலை போராட்டம் ஆயுதம் தாங்கிய கட்டத்தை எட்டியபோது தமிழர்கள் உவகை கொண்டனர். அது தோல்வியில் முட்டியபோது தமிழர்கள் துவண்டனர். அதுவே உலகம் தழுவிய அரசியல் போராட்டமாக இப்போது எழுந்து நிற்கும் போது, மாற்றார் அது கண்டு அதிர்ச்சியுறுகின்றனர். ஆறரை கோடி தமிழ்மக்கள் வாழும் தமிழ்நாட்டில், தமிழ் வழிக் கல்விக்கு அரசுப் பணியில் உத்தரவாதம் கிடைக்கும் போது, அதுவே தமிழர்களின் தனித்த அறுதியிடலை உறுதி செய்யும். இத்தகைய மகத்தான பாய்ச்சல் தமிழர் உலகிற்கு ஒரு இனிப்பு செய்தியாக பரிமாறப்படும்.